Tuesday, October 19, 2010

விஷ்ணு புராணம் - 114

05_34. இந்தக் கதையைக் கேட்ட மைத்ரேயர் ஆச்சர்யமுற்று இது போல் தேவர்களை வென்ற வேறு கதைகள் இருந்தால் அவற்றையும் கூறும்படி வேண்டிக் கொள்ள, பராசரர் காசி தஹனத்தைக் கூறலானார். பௌண்ட்ரக தேசத்தை கர்வம் கொண்ட ஓரரசன் ஆண்டு கொண்டிருந்தான். கல்லாதோர் பேச்சையும், புகழுரைகளையும் கேட்டு அவன் தன்னை வாஸுதேவனாகவே நினைத்துக் கொண்டிருந்தான். அப்படியே தன்னை எவரும் அழைக்கவும், நடந்து கொள்ளவும் வேண்டுமென்று எவருக்கும் உத்தரவுமிட்டான். போலியாக சங்கு, சக்ரம் முதலிய ன்னங்களையும், இரு பொம்மைக் கைகளையும், மார்பில் மறுவையும் வைத்துக் கொண்டு உண்மையான க்ருஷ்ணனோடு பொறாமையும், பகைமையும் பாராட்டத் தொடங்கிவிட்டான். தினமும் புதிதாக புனைந்த வனமாலையையும் அணிந்து கொண்டு அனைவரிடம் க்ருஷ்ணனின் லீலைகளைத் தானே செய்ததாக ப்ரசாரம் செய்து கொண்டிருந்தான். தன் மந்த்ரிகளுக்கும் தேவர்களின் பெயர்களைச் சூட்டி போலி கருட வாஹனத்தையும், ஆதிஸேஷனையும் உண்டாக்கி உபயோஹித்துக் கொண்டிருந்தான்.இவன் ஒரு ஸமயம் தன் சின்னங்களையும், பெயரையும் வேறு எவரும் தரிக்கக் கூடாதென்று உண்மையான வாஸுதேவனுக்கே தூது விடுத்தான். அவனிடம் க்ருஷ்ணன் 'நானே அங்கு வந்து சக்ரத்தை அரசரிடம் செலுத்தி விட்டு, சரணமடைகிறேன். பயமில்லாத நிலையை ஏற்படுத்துகிறேன்" என்று சிரித்துக் கொண்டே பல பொருள் பட கூறி அனுப்பிவிட்டு, அவ்வாறே கருடன் மீதேறி பௌண்ட்ரகமும் வந்து சேர்ந்தான். இதையறிந்த பௌண்ட்ரக வாஸுதேவனின் நண்பனான காசி தேசத்தரசன் தானும் தன் படைகளோடு வந்து போரில் சேர்ந்து கொள்கிறான். பௌண்ட்ரக வாஸுதேவனின் தேர்க் கொடி, தேர், க்ரீடம், குண்டலம் முதலான ஆபரணங்கள், நான்கு கைகள், ஆயுதங்கள், மறு என அனைத்தையும் கண்ட கண்ணன் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்து சிரித்துக் கொள்கிறான். சிறிது நேரத்திலேயே பௌண்ட்ரகனையும், காசிராஜனையும் சேனையோடு அழித்து, பௌண்ட்ரகனை நோக்கி "உன் தூதனிடம் நீ சொல்லியனுப்பியபடியே இப்போது என் சின்னங்களான கதை, கருடன், சக்ரம் இவைகளை உன்னிடம் விடுகிறேன்" என்று கூறி அவைகளை ஏவினான். சக்ரம் அவனைப் பிளக்க, கதை அவனை கீழே தள்ள, கருடன் அவன் கொடியை வீழ்த்த பௌண்ட்ரகன் உயிரிழந்தான். அதன் பின் காசி ராஜனின் படைகளையும் நாசமாக்கி, அவன் தலையையும் அறுத்து அதனை காசியில் போய் விழுமாறு செய்து விட்டு, மக்கள் வியப்பும், மகிழ்வும் கொண்டாட த்வாரகை திரும்பினான் கோபாலன். அங்கே காசியில் திடீரென விழுந்த தலையைக் கண்ட மக்கள், அது தங்கள் மன்னன் தலையென அறிந்து அதிர்ச்சியுற்றனர். காசிராஜனின் மகன் உடனே கோபம் கொண்டு தன் புரோஹிதர் ஆலோசனையின் படி, ஜப, ஹோம, யாகாதிகளால் விச்வநாதரை வழிபட்டான். அவற்றால் மகிழ்வுற்று அவன் முன் தோன்றிய சிவபெருமானிடம் க்ருஷ்ணனைக் கொல்ல ஒரு பூதத்தை உண்டாக்கித் தருமாறு வரம் வேண்ட, சிவனும் தக்ஷிணாக்னியிலிருந்து அப்படி ஒரு பூதத்தை உண்டாக்கி அருள்கிறார். (இவன் வரம் வேண்டும் இந்த ச்லோகத்திற்கு "என் அப்பாவைக் கொன்ற க்ருஷ்ணன் என்னைக் கொல்வதற்கு பூதம் உண்டாகட்டும்" என்றும் ஒரு மாற்றுப் பொருள் உண்டு என்று என் தாத்தா கூறுவார், நிர்தேவத்வம் என்று கேட்பதற்கு பதில் நித்ராவத்வம் என்று வாய் குழறி கும்பகர்ணன் கேட்டதைப் போலுள்ளது இது).க்ருஷ்ணனை நோக்கி த்வாரகைக்கு இந்த நெருப்பு பூதம் சென்ற போது, கண்ணன் தன் தேவியர்களுடன் கோழிச் சண்டை, சொக்கட்டான் என்று விளையாடிக் கொண்டிருந்தான். இந்த பூதத்தைக் கண்டஞ்சிய த்வாரகாவாஸிகள், க்ருஷ்ணனை சரணடைந்தனர். அவன் விளையாடல்களை நிறுத்தாமலேயே அந்த பூதத்தைக் கொல்ல தன் சக்ரத்தை ஏவினான். அதனிடம் தோற்றோடிய அந்த பூதத்தைத் துரத்திச் சென்றது சக்ரமும். காசியில் அதனைக் காக்க வந்த சிவ சைன்யத்தையும், அரசனின் சைன்யத்தையும், யானை, குதிரை, கஜானா, வீடுகள், மதில்கள் என காசி நகரத்தையே சக்ரம் பொசுக்கி விட்டு, அந்த உக்ரத்தோடேயே மீண்டும் கண்ணன் கைகளை வந்தடைந்தது.

விஷ்ணு புராணம் - 113

05_33. பாணாஸுரன், ஆயிரம் கைகள் கொண்டவன். அவன் ஒரு ஸமயம் சிவபெருமானை வணங்கி "இத்தனை கைகளும் பயன் படுமாறு ஏதாவது யுத்தம் கிடைக்குமா? இல்லையேல் இந்தக் கைகள் வீணாகுமே" என்று வருந்தி கேட்டுக் கொண்டான். சிவபெருமானும் புன்சிரிப்புடன் "உன் மயிற்கொடி எப்போது முறிந்து விழுகிறதோ அப்போது அப்படி ஒரு வாய்ப்பு உனக்கு உண்டாகும்" என்று கூறினார். இதைக் கேட்டு அஸுரனும் மகிழ்வுற்று, அந்த நாளை எதிர்பார்த்திருந்தான். ஒரு நாள் அப்படி அந்த கொடியும் முறிந்து விழுந்தது. அந்த ஸமயத்தில் தான் சித்ரலேகையும் அனிருத்தனை தன் மாயையினால் மயக்கி த்வாரகையிலிருந்து உஷையின் கன்னிமாடத்தில் சேர்த்திருந்தாள். அனிருத்தனும் உஷையும் கூடிக் களித்திருந்தான். சில நாளில் இது காவலாளிகளுக்குத் தெரிந்து, அவர்களால் செய்தியறிந்த பாணாஸுரன் கிங்கரர் எனும் அஸுரக் கூட்டத்தாரை அனுப்பி அனிருத்தனைக் கொல்லக் கட்டளையிட்டான். ஆனால் அனிருத்தனை அவர்களனைவரையும் தடியாலேயே அடித்துக் கொன்றான். பாணாஸுரன் வந்தும் அனிருத்தனை வெல்ல முடியவில்லை. இறுதியில் தன் மந்திரியின் ஆலோசனையுடன் மாயப்போர் செய்தான் பாணாஸுரன். நாகாஸ்த்ரத்தால் அனிருத்தனை கன்னிமாடத்திலேயே கட்டிப் போட்டான்.

இந்த ஸமயம் த்வாரகையில் அனிருத்தனைக் காணாது தவித்த யாதவர்கள், பாரிஜாத மரத்தின் அபஹரிப்பு காரணமாக தேவர்கள் தான் அனிருத்தனை கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். நாரதர் அங்கு தோன்றி நடந்தவையனைத்தையும் அவர்களுக்குக் கூறினார். அதைக் கேட்ட க்ருஷ்ணன் கருடன் மீதேறி பாணாஸுரனின் சோணிதபுரம் நோக்கிப் பறந்தார். பலராமனும், ப்ரத்யும்னனும் அவனைப் பின் தொடர்ந்தனர். சோணிதபுரத்தை பரமேச்வரன் பக்தனுக்காக தன் ப்ரதம கணங்களைக் கொண்டு காவல் புரிந்து கொண்டிருந்தார். அவைகளை வென்று நகருக்குள் சென்ற க்ருஷ்ணன் சைன்யத்தின் மேல் பரமேச்வரனால் மூன்று கால்களும், தலைகளும் கொண்டதாக ஸ்ருஷ்டிக்கப்பட்டிருந்த ஜ்வர தேவதை சாம்பலையே ஆயுதமாக ப்ரயோகித்தது. அதனால் துன்பப்பட்ட பலராமர் க்ருஷ்ணன் மீது சாய்ந்தார். க்ருஷ்ணன் மீதும் படர்ந்த அந்த தேவதையை, க்ருஷ்ணனால் அதற்கு ப்ரதியாக படைக்கப்பட்ட ஜ்வர தேவதை வென்றது. க்ருஷ்ணன் கோபத்தை ப்ரஹ்மா அங்கு தோன்றி தணித்தார். அடங்கிய ஜ்வரதேவதையும் "இந்த யுத்தத்தை நினைப்பவர்களுக்கு ஜ்வர பீடை அனுகாமல் அனுக்ரஹிக்க வேண்டும்" என்று வரம் வேண்டிச் சென்றது.

மேலும் தொடர்ந்து வந்த கார்ஹபத்ய, ஆஹவனீய, தக்ஷிண, ஸப்ய, ஆவஸத்ய என்ற பஞ்சாக்னிகளையும், சிவ சைன்யங்களையும் க்ருஷ்ணன் வென்றான். இதற்கு மேல் போரில் பாணாஸுரனும், சிவபெருமானும், அவர் மகன் ஸுப்ரஹ்மண்யனும் சேனைகளோடு தோன்றினர். பரமேச்வரனுக்கும், க்ருஷ்ணனுக்கும் நேரிடையாக நடந்த அந்த உக்ரமான ப்ரளயம் போல் தோன்றிய யுத்தத்தை தேவர்களும், மற்றெவரும் அச்சத்துடன் கண்டு கொண்டிருந்தனர். இந்த ஸமயத்தில் தொடர்ந்து கொட்டாவி விடும்படி செய்யும் ஜ்ரும்பகாஸ்த்ரம் என்பதனை பரமேச்வரன் மேல் ஏவி அவரை அயர்ச்சியோடு தேர்த் தட்டில் உட்காரச் செய்து விட்டான் க்ருஷ்ணன். இந்த நிலையைக் கண்டு அஸுரனின் ஸேனை அஞ்சியது. ஸுப்ரமண்யரின் மயிலை, கருடன் அடித்து வீழ்த்தினான். ப்ரத்யும்னன் ஸுப்ரமண்யரை பாணங்களால் ச்ரமப்படுத்தினான். க்ருஷ்ணன் செய்த ஒரு ஹூங்காரத்தால் முருகனின் வேலும் ஒடிந்து விழவே, அவனும் யுத்தத்திலிருந்து விலகினான். சங்கரன் கொட்டாவி விட்டுக் கொண்டு நின்றான்! அஸுர ஸேனைகள் ஓடி ஒளிந்தன! குஹன் தோற்றான்! ப்ரதம கணங்கள் ஒழிந்தன!

இவற்றைக் கண்ட பாணாஸுரன் இறுதியாக நந்தியை ஸாரதியாகக் கொண்டு ஒரு பெரிய தேரில் தானே தலைமையேற்று யுத்தத்தை நடத்தினான். அவனது ஸேனைகள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பலராமர் கலப்பையாலும், உலக்கைகளாலும் சிதறி ஓடின. க்ருஷ்ணனுக்கும், பாணனுக்கும் நேருக்கு நேர் யுத்தம் மூண்டது. இருவரது கவசங்களும் பிளக்கப் பட்டன. அஸ்த்ரங்கள் பயனற்றதாக்கப்பட்டன. ஆயுதங்கள் ஒடிக்கப்பட்டன. ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி போர் புரியலாயினர். க்ருஷ்ணன் வேறு வழியின்றி அவனைக் கொல்ல முடிவு செய்து சக்ரத்தை எடுத்தான். அப்போது அவனெதிரே கௌரீதேவியின் சக்தியும், அஸுரர்களின் தேவதையுமான கோடரீ என்பவள் நிர்வாணமாகத் தோன்றினாள். பெண்களை ஆடையின்றி பார்க்கக்கூடாது என்ற சாஸ்த்ரத்தையொத்து க்ருஷ்ணனும் வேறு வழியின்றி கண்களை மூடிக் கொண்டான். வித்யாரூபிணியான அவள் நோக்கத்தையும் உணர்ந்து, பாணாஸுரனைக் கொல்லாது, அதிகமாயிருக்கும் அவனது கைகளை மட்டும் வெட்டி விடுமாறு தன் சக்ரத்தை ஏவினான் க்ருஷ்ணன். தோள்களை இழந்து மீதமிருக்கும் நான்கு கைகளுடன் மீண்டும் க்ருஷ்ணனோடு போரிட ஆரம்பித்தான் பாணன்.

இப்போது மீண்டும் அவனைக் கொல்வதற்காக சக்ரத்தை எடுப்பதைக் கண்ட சிவன் தன் பக்தனைக் காப்பதற்காகத் தானே கண்ணனிடம் வந்து "க்ருஷ்ணா! உன்னை மனிதனாக நினைத்து போரிட்டேன். என்னைத் தோற்கடித்து, அவன் கைகளையும் அறுத்த போதே உன்னை ஜகன்னாதனென்று அறிந்து கொண்டேன். உன் இந்த அவதாரமும் திருவிளையாடலேயன்றி, கர்ம பந்தத்தாலன்று. பாணாஸுரனைக் காப்பதாக நான் அபயம் கொடுத்துள்ளேன். எனவே பொறுத்தருள். அவன் அபராதத்தை நான் செய்ததாக நினைத்துக் கொள்" என்று வேண்டுகிறான். க்ருஷ்ணனும் முகம் மலர்ந்து "பார்வதிபதே! உன் வேண்டுகோளாலும், வரத்தாலும் அவன் பிழைத்தான். சக்ரத்தைத் திரும்பப் பெறுகிறேன். நானும், நீயும் வேறன்று. தேவர்கள், அஸுரர்கள், மனிதர்கள் என வேறுபட்டிருக்கும் இந்த உலகும் நானே. என்னை விட வேறு பொருளில்லை. நீ அவனுக்குத் தந்த வரம் நான் தந்ததே. அக்ஞானிகளே என்னையும், இந்த ப்ரபஞ்சத்தையும் வேறாகப் பார்கிறார்கள். சொல்கிறார்கள். அப்படியே உனக்கும், எனக்கும் வேற்றுமை காண்கிறார்கள். உன்னை எனக்கு ஆத்மாவாகவும், சரீரமாகவும் நினைப்பதில்லை. ஆகவே கவலையில்லை. பாணாஸுரனுக்கு அபயம் அளித்தேன்" என்றான்.

இதன் பிறகு அனிருத்தன் இருக்குமிடம் சென்றான் க்ருஷ்ணன். கருடனின் காற்று பட்டதுமே நாகாஸ்த்ரங்கள் தளர்ந்து போயின. அவனையும், உஷையையும் கருடனில் ஏற்றிக் கொண்டு பலராமன், ப்ரத்யும்னன் இவர்களோடு த்வாரகை திரும்பிய க்ருஷ்ணன் புத்ர, பௌத்ரர்களுடன் ஆனந்தித்துக் கொண்டிருந்தான்.

Monday, October 18, 2010

விஷ்ணு புராணம் - 112

05_32. பானு, பௌமன், இரிகன் இவர்கள் ஸத்யபாமாவின் புத்ரர்கள். தீப்திமான், தாம்ரபக்ஷன் முதலானோர் ரோஹிணியின் புதல்வர்கள். ஸாம்பன் முதலானோர் ஜாம்பவதிக்கும், பத்ரவிந்தன் முதலானோர் நாக்னஜிதிக்கும், ஸங்க்ராமஜித் முதலானோர் சைப்யைக்கும், வ்ருகன் முதலானோர் மாத்ரிக்கும், காத்ரவான் முதலானோர் லக்ஷ்மணைக்கும், ச்ருதன் முதலானோர் காளிந்திக்கும், என இன்னும் மற்ற தேவிமார்களின் புத்ரர்களையும் சேர்த்து, க்ருஷ்ணனுக்கு ருக்மிணியின் மகனான ப்ரத்யும்னனை முதலாகக் கொண்டு மொத்தம் எண்பதாயிரத்து நூறு புதல்வர்கள். ப்ரத்யும்னன் மகன் அனிருத்தன். இவன் மஹாபலியின் பௌத்ரியும், பாணாஸுரனின் புத்ரியுமான உஷையை மணந்து கொண்டான். இவன் மகன் வஜ்ரன். இந்தத் திருமணம் காரணமாகத்தான் க்ருஷ்ணன் பாணாஸுரனின் ஆயிரம் கைகளையும் வெட்டி எறிந்தான். இந்த உஷை திருமணப் பருவம் எய்தியபோது, ஒரு உத்யான வனத்தில் பார்வதி, பரமேச்வரனுடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டாள். தானும், எப்போது இப்படி ஒருவனுடன் விளையாடுவது என்ற எண்ணம் கொண்டாள்.

ஜீவராசிகளின் உள்ளக் கருத்தை உள்ளபடி அறியும் பார்வதி, இவளது இந்த எண்ணத்தையும் அறிந்து, உஷையை அழைத்து, "வருந்த வேண்டாம், நீயும் இதேபோல் உனக்கேற்ற கணவனுடன் கூடிக் களிக்கப் போகிறாய்" என்றாள். உடனே உஷையும் "யார் அவன்? எப்போது கிடைப்பான்" என்று கேட்டும் விடுகிறாள். பார்வதி தேவி, "குழந்தாய், வைகாசி சுக்ல பக்ஷ த்வாதசியன்று நீ யாரோடு சேர்ந்து விளையாடுவதாகக் கனவு காணப் போகிறாயோ, அவனையே நீ மணம் முடிப்பாய்' என்று அனுக்ரஹிக்கிறாள். அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்த அவளது கனவில், குறிப்பிட்ட நாளில் அதே போல் நடக்கவும் நடந்தது. கனவில் ஸுகம் அனுபவித்து, திடுக்கென்று விழித்தெழுந்த அவள், நிஜத்தில் அவனைக் காணாது, "நாதா, எங்கு சென்று விட்டீர்" என்று பிதற்றத் தொடங்கி விட்டாள். பாணாஸுரன் மந்த்ரி கும்பாண்டன் என்பவனின் மகள் சித்ரலேகை என்பவள் உஷையின் ஆருயிர்த் தோழி. அவள் உஷை இவ்வாறு பிதற்றுவதைக் கண்டு, "அம்மா! யாரைத் தேடுகிறாய்? உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன் எவன்?" என்று கேட்டாள். வெட்கத்தால் தலை குனிந்த அவளை மிகுந்த நம்பிக்கைக் கொள்ளச் செய்து நடந்தவை அனைத்தையும் தெரிந்து கொண்டாள் சித்ரலேகை. அவனை மணம் முடிக்க உதவுமாறு உஷையும் அவளிடம் வேண்டிக் கொண்டாள்.

உருவம் தெரியாது, ஒரு விஷயமும் தெரியாது. எப்படி ஒருவரைக் கண்டு பிடிப்பது. ஏழுநாள் கழித்து அப்போதைய அரசர்கள், இளவரசர்களில் சிறந்தவர்களைச் சித்திரமாக வரைந்து கொண்டு வந்து காண்பித்தாள் சித்ரலேகை. தேவ, கந்தர்வ, அஸுர, மனுஷ்யர்கள் என ஒவ்வொருவராக ஒதுக்கிக் கொண்டு வந்ததைக் கண்டு சித்ரலேகை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது, பலராம, க்ருஷ்ணர்களின் படங்களைக் கண்ட உஷையின் முகத்தில் சிறிது மாற்றம் தெரிந்தது. அடுத்து ப்ரத்யும்னன். இதைக் கண்டும் வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்ட உஷை அடுத்ததாக அனிருத்தனைக் கண்டாள். வெட்கத்தை விட்டு, "இவனே அவன்" என்று கத்தினாள். சித்ரலேகை அவனைப் பற்றிய விவரங்களைக் கூறலானாள். "இவன் க்ருஷ்ணனின் பௌத்ரன். ப்ரத்யும்னனின் மகன். பார்வதி உனக்கு அனுக்ரஹித்தவன் இவனே. இவன் பெயர் அனிருத்தன். இவன் அழகு உலக ப்ரஸித்தம். இவனை நீ அடைந்தால் ஸகல ஸௌபாக்யங்களையும் பெறுவாய். ஆனால், க்ருஷ்ணனால் பாலனம் செய்யப்பட்டு வரும் த்வாரகையினுள் சென்று, இவனை எப்படி உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பது? எனினும் நான் இதற்கு முயற்சி செய்கிறேன். நீ இந்த ரஹஸ்யத்தை யாரிடமும் அதற்குள் சொல்லி விடாதே" என்று கூறி ஆகாய மார்க்கமாக த்வாரகை சென்று சேர்ந்தாள்.

விஷ்ணு புராணம் - 111

05_31. தேவேந்த்ரனின் ஸ்துதியைக் கேட்டு, அர்த்தத்துடன் அமர்க்களமாகச் சிரித்தான் கண்ணன். ஒவ்வொரு முறையும் சண்டை செய்வதும், பிறகு தோற்றதும் துதிப்பதும் இந்த்ரனிடம் முதல் அனுபவமல்லவே. "தேவராஜரே! நீங்களோ தேவன். நானோ சாதாரண மனிதன். என் தவறை
தேவர்களான தாங்கள் தான் மன்னிக்க வேண்டும். என்னைப் பொறுத்தருளுங்கள். இந்த மரம் எனக்கு வேண்டாம். ஸத்யபாமா கேட்டதால் தான் நான் இதைப் பறித்தேன். இதையும், என் மீது நீங்கள் ஏவிய, சத்ருக்களை அழிக்கும் உங்கள் வஜ்ரத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று ஏளனமாகக் கூறினான் கண்ணன். மிகுந்த வெட்கம் கொண்ட இந்த்ரன், "க்ருஷ்ணா! என்னை மேலும் மயக்காதே. ஏன் இப்படிச் செய்கிறாய். உன்னை நானறிவேன். ஆனால் இப்போதுள்ள உன் நிலையில் தான். உன்னுடைய ஸூக்ஷ்ம ரூபத்தையல்ல. இந்த மரத்தை நீயே த்வாரகைக்
கொண்டு செல். நீ பூலோகத்தில் இருக்கும் வரை இதுவும் அங்கு இருக்கும். நீயே உலகைப் படைத்துக் காப்பவன். துஷ்டர்களை சிக்ஷிப்பவனும் நீயே. தேவராஜனும் நீயே. நானல்ல. நீயே ஜகன்னாதன். விஷ்ணுவும் நீயே. பஞ்சாயுதன் கொண்ட பரமனும் நீயே. என் அபராதத்தைப்
பொறுத்தருள்" என்று வேண்டிப் பணிந்தான்.

க்ருஷ்ணனும் அதையேற்று பாரிஜாத வ்ருக்ஷத்துடன் அனைவரும் புகழ கருடனுடன் த்வாரகை திரும்பினான். த்வாரகைக்கு மேலே வந்ததும் தன் சங்கத்தை முழக்கி, மக்களைத் தன் வரவால் மகிழச் செய்தான். பாரிஜாத மரத்தை ஸத்யபாமையின் தோட்டத்தில் நட்டான். மூன்று யோஜனை தூரம் மணம் பரப்பும் அதன் அழகில் மயங்கி எவரும் அதனருகில் சென்று ரஸிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் அதன் சக்தியால் முற்பிறவியும் ஞாபகத்திற்கு வருகிறது. சரீரம் தேவசரீரம் போல் பொலிவு பெறுகிறது. இப்படி கொண்டாட்டத்திலிருக்கும் த்வாரகையில், க்ருஷ்ணன் தான்
ப்ராக்ஜ்யோதிஷத்திலிருந்து வெற்றி கொண்ட யானை, குதிரை என செல்வங்களைத் தன் பந்துக்களோடுப் பங்கிட்டுக் கொள்கிறான். நரகாஸுரனின் சிறையில் இருந்து விடுவித்த பதினாறாயிரம் பெண்களையும் அவர்கள் விரும்பியபடியே ஒரு சுப வேளையில் தானே விதிப்படி விவாஹம் செய்து கொண்டான் க்ருஷ்ணன். திருமண முஹூர்த்தத்தின் போதும், அதன் பின்னும் ஒவ்வொருவருடனும் அவரவர் மனம் விரும்பியபடி உருவங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் மாளிகைகளில் மகிழ்வித்துக் கொண்டிருந்தான்.

விஷ்ணு புராணம் - 110

05_30. வருணனின் குடை, மணி பர்வதம், ருக்மிணி, ஹ்ருஷிகேசன் இவர்களை ஏற்றிக் கொண்டு அனாயாஸமாக இந்த்ர ஸபையை நோக்கிப் பறந்தான் கருடன். வாசலையடைந்ததும் ஹரி தன் சங்கத்தை எடுத்து ஊதினான். இதைக் கேட்டதும் தேவர்கள் ஸமர்ப்பணங்களுடன் க்ருஷ்ணனை வரவேற்பதற்கு வந்தனர். அவர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்ட க்ருஷ்ணன், தேவமாதாவான அதிதியின் மாளிகைக்குச் சென்றான். வெண் மேகங்களை ஒத்திருந்த ஒரு மாளிகையில் வஸித்து வந்த அதிதியை இந்த்ரனுடன் சேர்ந்து நமஸ்கரித்து, அவள் குண்டலங்களையும் ஒப்படைத்து, நரகாஸுரன் வதம் செய்யப்பட்டதையும் கூறினான். பெரிதும் மகிழ்ந்த தேவமாதா ஜகத்கர்த்தாவான ஹரியைத் துதிக்கலானாள்.

"தாமரைக் கண்ணா! உன்னைத் துதிப்போர்க்கு ஒரு பயமும் இல்லை. சாச்வதமானவன், லோகரூபமானவன், ஆத்மா, அனைத்திற்கும் ஆதாரம், முக்குணமும், அதற்கு அப்பாற்பட்டவனும், தூய்மையானவன், வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன், அனைவரின் இதயத்தும் நிறைந்தவன், நிறம், வளர்ச்சி முதலிய மாறுபாடுகளில்லாதவன், பிறப்பு, இறப்பு, உறக்கம், விழிப்பு இவைகளால் பாதிப்பில்லாதவன் நீ. பகலும், இரவும், மாலையும், பூமியும், வானும், காற்றும், நீரும், நெருப்பும், மனமும், புத்தியும், குணங்களும், ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ, தேவ, யக்ஷ, தைத்ய, ராக்ஷஸ, சித்த, கூஷ்மாண்ட, பிசாச, கந்தர்வ, நர, ஸ்தாவர, புல், புதர், ஊர்வன, தாவுவன, பெரிது, மத்யமானது, சிறிது, உயர்ந்தது, தாழ்ந்தது என அனைத்தும் நீ.

உன் மாயையில் மோஹித்தே பலரும் உண்மையறியாமல் ஆத்மா அல்லாததை ஆத்மா என்றும், நான், எனது என்றும் கூறி வருகிறார்கள். இந்த மாயையே ஸம்ஸாரத்தை வளர்க்கும் தாய். ஸ்வதர்மங்களை அனுஷ்டித்து, உன்னைத் துதித்து வருபவர்கள் இந்த மாயைகளைக் கடந்து மோக்ஷத்தை அடைகிறார்கள். ப்ரஹ்மா முதல் அனைத்து தேவ, மனுஷயர்களும் உன் மாயையாகிற இந்த இருட்டினால் சூழப்பட்டவர்களே. மோக்ஷத்தைத் தரும் உன்னைத் துதிப்பவர்களும் தங்கள் ஆசை, பாதுகாப்பு இவைகளையே உன்னிடமும் யாஸிக்கிறார்கள். சாச்வதமானதை விடுத்து தங்கள் வம்சங்களின் வளர்ச்சி, எதிரிகளின் நாசம் இவைகளையே இவர்கள் உன்னிடம் வேண்டுவது உன்னுடைய விளையாட்டே.

எதையும் அருளும் கற்பக வ்ருக்ஷத்திடம் போய், தன் அரையை மறைக்க ஒரு துணி வேண்டுவது போல இவர்கள் இப்படி வேண்டுவது தங்கள் பாபங்களால் தானே. இப்படி அக்ஞானத்தாலுண்டாகும் மாயைகளான பாபங்களிலிருந்தும் நீயே காக்க வேண்டும். நானும் அப்படியே. ஹே சங்கு, சக்ரதாரி! சார்ங்கபாணி! கதாயுதத்தைத் தரிப்பவனே! உன் ஸ்வரூபத்தை நானும் அறியேன். என் மீது கருணை கொள். காத்தருள்" என்று துதித்தாள் அதிதி. இப்படித் துதிக்கப்பெற்ற விஷ்ணு தேவமாதாவிடம் "என்னை ஆசித்து அருளுங்கள்" என்று புன்னகையுடன் வேண்டினான். அதிதியும் "அப்படியே ஆகட்டும். தேவர்கள், அஸுரர்கள் என்று எவராலும் வெல்லமுடியாத புருஷோத்தமனாயிருப்பாய்" என்று க்ருஷ்ணனை ஆசிர்வதித்தாள்.

அதன் பின் இந்த்ராணியுடன் தன்னை வணங்கிய ஸத்யபாமையை "நிலையான அழகும், யௌவனத்தோடும் இருப்பாய்" என்று ஆசிர்வதித்தாள். தாயின் அனுமதியோடு இந்த்ரன் இந்த்ராணியோடு கூடி ஜனார்த்தனருக்கும், ஸத்யபாமைக்கும் வேண்டிய உபஸரிப்புகளைச் செய்து, அவர்களை தேவலோகத்து நந்தவனங்களுக்கு அழைத்துச் சென்றான். அங்கே கேசவர் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கிடைத்த, இந்த்ராணிக்கு மிகவும் ப்ரியமான பாரிஜாத மரத்தைக் கண்டார். அங்கிருந்த வேலைக்காரர்கள் பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்து சசீயினிடம் தந்தனர். மனிதப் பிறவியைச் சேர்ந்தவள் என்பதால் ஸத்யபாமைக்கு அந்தப் பூக்களைக் கொஞ்சமும் தராமல் தானே சூட்டிக் கொண்டாள் இந்த்ராணி. தங்க மயமான மரப்பட்டைகளோடும், தாம்ரத்தையொத்த இளந்தளிர்களோடும், மணம் மிக்க பழங்கள் பூத்துக் குலுங்கும் இந்த பாரிஜாத மரத்தைக் கண்ட ஸத்யபாமா ஆசையோடு கண்ணனிடம், "நாதா! ருக்மிணி, ஜாம்பவதி இவர்களை விட நான் தான் உங்களுக்கு எப்போதும் மிகவும் ப்ரியமானவள் என்று அடிக்கடி கூறுவீர்களே, நினைவிருக்கிறதா? அந்த வார்த்தைகளை முகஸ்துதிக்காக அப்போதெல்லாம் கூறினீர்களா, இல்லை உண்மையா?" என்று ஆரம்பித்தாள். க்ருஷ்ணன், "ப்ரியே! நான் ஒரு போதும் பொய் கூறுவதில்லை. அதுவும் உன்னிடம், உன்னைப் பற்றி ஏன் பொய் கூறுவேன்" என்றார்.

இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்த ஸத்யபாமா, "அப்படியானால், இந்த மரத்தை எடுத்துச் சென்று த்வாரகையில் என் வீட்டுத் தோட்டத்தில் நட வேண்டும். இதன் பூக்களை என் சக்களத்திகளின் மத்தியில், அவர்கள் ஏங்க, நான் என் தலையில் அழகாக சூட்டிக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும்" என்றாள். அவ்வளவுதான், உடனேயே க்ருஷ்ணன் அந்த பாரிஜாத மரத்தைப் பிடுங்கி, கருடனின் சிறகுகளின் மத்தியில் வைத்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டு விட்டார். இதைக் கண்ட தோட்டத்துக் காவலர்கள், "ஏ கோவிந்தா! இது உன்னால் முடியாதது. இந்த மரம் அம்ருதம் கடைந்த போது பாற்கடலில் கிடைத்தது. தேவராஜனுக்கென்று கொடுக்கப்பட்ட இதை, அவர் தன் மனைவிக்கு மலர்களைக் கொண்டு அழகு படுத்திக் கொள்வதற்காகக் கொடுத்து விட்டார். சசிதேவிக்கு மிகவும் பிடித்த இதை நீ எடுத்துக் கொண்டு வீடு செல்ல முடியாது. மனைவியின் மனம் கோணாமல் நடந்து வரும் தேவராஜர், கையில் வஜ்ரத்தோடும், தேவர்களோடும் உன்னிடம் போர் புரிய வந்து விடுவார். கேடு விளைவிக்கும் செயலை புத்திசாலிகள் செய்ய மாட்டார்கள். இந்த மரத்தை இங்கேயே விட்டு விட்டுச் செல்" என்று அவமதித்துத் தடுத்தனர். இவர்களுக்குக் கண்ணன் பதில் கூறுவதற்குள்ளாகவே, ஸத்யபாமா "யாரிந்த இந்த்ரனும், சசியும். இது கடலைக் கடைந்த போது கிடைத்தது தானே. அம்ருதம், காமதேனு, சந்த்ரன் எனக் கடலில் கிடைத்த எல்லா பொருளும், பொதுவாயிருக்கையில், இதை மட்டும் அந்த சசிதேவி எடுத்துச் செல்வதைத் தடுத்தால், அது அவள் கணவனின் பலத்தில் கொண்ட கர்வத்தினால் தான் இருக்க வேண்டும். இப்போது அவளை விட கர்வம் கொண்டுள்ள நான் சொல்வதை உங்கள் ராணியிடம் சென்று சொல்லுங்கள். என்று பின் வருமாறு கூறினாள்.

"சசி தேவியே! என் நாதன் இப்போது உன் தோட்டத்திலிருந்து பாரிஜாத மரத்தை அபகரித்துச் செல்கிறார். நீ உன் பர்த்தாவுக்கு வேண்டியவளாயிருந்து, அவனும் உனக்கடங்கி இருப்பவனாயிருந்தால் இதைத் தடுத்து, மரத்தைக் காத்துக் கொள். உன்னையும், உன் கணவனையும், அவன் தேவர்களை ஆளும் திறனையும் அறிவேன். நான் சாதாரண மனுஷ்ய ஸ்த்ரீ என்று தானே, எனக்கு இந்தப் பாரிஜாதத்தின் பூக்களைத் தராமல் அவமதித்தாய். இப்போது அதே மனுஷ்ய ஸ்த்ரீ, தன் பர்த்தாவைக் கொண்டு இந்தப் பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்கிறாள். முடிந்தால் உன் கணவனை வந்து தன் பராக்ரமத்தைக் காட்டச் சொல்" என்று அலக்ஷ்யமாகக் கூறினாள். இதை அந்தக் காவலர்களும், சசியிடம் சொல்ல, அவள் இந்த்ரனை மரத்தை மீட்டு வருமாறு உற்சாகப்படுத்த, அவனும் சேனையுடன் புறப்பட்டு விட்டான் கண்ணனிடம் போரிட.. மூண்டது போர். எல்லா தேவர்களும் க்ருஷ்ணன் மீது அஸ்த்ரங்களை ப்ரயோகிக்கத் தொடங்கி விட்டனர். வருணனின் பாசங்களை கருடன் மூக்கால் துண்டிக்க, யமனின் கால தண்டத்தை கண்ணன் ஒடித்து, குபேரனின் பல்லக்கைப் பொடித்து, ஏகாதச ருத்ரர்களின் சூலங்களைத் தன் சக்ரத்தால் நாசமாக்கி, தேவர்களனைவரையும் இவ்வாறே கருடனும், க்ருஷ்ணனும் தோற்கடிக்கின்றனர். தானுட்பட அனைவரின் முயற்சியும் தோல்வியுறவே, இந்த்ரன் வேறு வழியின்றி வஜ்ராயுதத்தை ஏவி விடுகிறான். க்ருஷ்ணன் அதை விளையாட்டாகத் தன் கையில் பற்றிக் கொண்டு, சக்ரத்தை எடுத்துக் கொண்டு தேவேந்த்ரனைத் துரத்தலானான். கருடனும் ஐராவதத்தை அடித்து அயரச் செய்தான்.

அப்போது ஸத்யபாமையும், "ஏ இந்த்ரா! ஓடாதே, நில். இந்த மரத்தை எடுத்துக் கொள். கணவனின் பலத்தில் கர்வம் கொள்வது பெண்களின் இயற்கை. இதில் நானும், உன் மனைவியும் விலக்கல்ல. வீடு தேடி வந்த என்னை உன் மனைவி கௌரவப் படுத்தவில்லை. ஆனால் தன் அழகில் கர்வம் கொண்டு, என்னை மனுஷ்ய ஸ்த்ரீ என அவமதித்தாள். உன் மனைவிக்குப் பாடம் புகட்டவே நான் இவ்வாறு செய்தேன். இந்த மரத்தில் தானே உன் பெருமை இருக்கிறது. இப்போது மனுஷ்ய ஸ்த்ரீ தருகிறேன். மீண்டும் இதன் பூக்களை உன் மனைவியை சூடச் சொல். எனக்குப் பிறர் பொருளான இந்த மரத்தாலும், இதன் பூக்களாலும் ஆக வேண்டியதொன்றுமில்லை. என் பர்த்தாவின் பெருமையைக் காட்டவே, அவரைப் போருக்குத் தூண்டினேன். இதை இப்போது நீயே எடுத்துச் செல்" என்று கூறினாள். வஜ்ரத்தையிழந்து தோல்வியுற்றிருக்கும் போது, இவ்வாறு ஸத்யபாமா கூறிய கடுஞ்சொற்களைக் கேட்டு மனம் நொந்த இந்த்ரன், "கொடியவளே! இது எனக்குத் தோல்வியல்ல. அவமானமுமல்ல. உங்களின் நண்பனான என்னை அவமதித்தது போதும். ஜகத்காரணனிடமல்லவா நான் தோற்றிருக்கிறேன். மஹான்களாலும் அறிய முடியாதவனிவன். ஸூக்ஷ்மமானவன். உற்பத்தியில்லாதவன். கர்ம சம்பந்தமற்றவன். சாச்வதமானவன். இவனை யார்தான் ஜயிக்க முடியும்" என்று துதிக்கலானான்.

Sunday, February 28, 2010

விஷ்ணு புராணம் - 109

05_29. மூவுலகிற்கும் அதிபதியான தேவேந்த்ரன் ஒரு ஸமயம் அவனது மூர்க்கமான ஐராவதத்தின் மீதேறி சௌரியை சந்திப்பதற்காக த்வாரகை வந்தான். ஹரியால் வரவேற்கப்பட்ட அவன் நரகாஸுரனின் கொடுமைகளைப் பற்றிக் கூறலானான். "மதுஸூதனா! தேவதேவ! நீரே எங்களுக்குத் துயர் நேர்ந்த போதெல்லாம் அவற்றிலிருந்து எங்களைக் காத்தீர். மனிதனாகப் பிறந்தும் அரிஷ்டன், தேணுகன், சாணூரன், முஷ்டிகன், கேசினி, கம்ஸன், குவலயாபீடம், குழந்தைகளைக் கொல்லும் பூதனை இப்படி உலகைத் தங்கள் தீச்செயல்களால் அடக்கியாளும் அனைவரையும் அழித்தீர். உங்கள் பராக்ரமத்தாலும், அறிவாலுமே மூவுலகும் காக்கப்பட்டு, தேவர்களும் யாகப் பங்குகளைப் பெற்று த்ருப்தியோடிருக்கின்றனர். ஆனால் இப்போது மீண்டும் உங்களால் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒரு விஷயத்தோடு நான் இங்கு வந்திருக்கிறேன்.

பூமாதேவியின் புத்ரன், நரகனென்பவன் எல்லா உயிர்களுக்கும் பெரும் தீங்குகளை உண்டாக்கிக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷ நகரத்தை ஆண்டு வருகிறான். தேவலோகத்துக் கன்னிகைகளையும், சாதுக்களையும், அரசர்களையும் அடக்கித் தன் அரண்மனையில் சிறை வைத்திருக்கிறான். எப்போதும் நீரைப் பொழிந்து கொண்டிருக்கும் வருணனின் குடை, மந்தர மலையின் மணி பர்வதமென்னும் சிகரம், என் தாய் அதிதி அணிந்திருந்த அமுத குண்டலங்கள் இப்படி அனைத்தையும் அபஹரித்துச் சென்றுள்ள அவன், இப்போது என் ஐராவதத்திற்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறான். விஷயங்களை உங்களிடம் கூறி விட்டேன். நீங்கள் தான் செய்ய வேண்டியதைத் தீர்மானித்து, இவனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும். இதற்கு முன் தோன்றிய ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன், மதுகைடபன் ஆகியோரை விட, உங்களிடம் தோன்றிய இவன் மிகவும் துஷ்டனாக, கொடியவனாக இருக்கிறான்" என்றான்.

இந்த்ரனின் குறைகளைக் கேட்ட க்ருஷ்ணன் புன்சிரிப்போடு ஸிம்ஹாஸனத்திலிருந்து எழுந்தான். இந்த்ரனைக் கையில் பிடித்துக் கொண்டு, ஸர்ப்பங்களை உணவாய்க் கொள்ளும் கருடனை மனதால் நினைத்தான். உடனே தோன்றினான் அவனும். ஸத்யபாமாவையும் தன் பின்னால் ஏற்றிக் கொண்டு, உடனே பறந்தான் க்ருஷ்ணன் ப்ராக்ஜ்யோதிஷ நகருக்கு. இந்த்ரன் த்வாரகா வாஸிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஐராவதத்தின் மீதேறி தன்னகருக்குச் சென்றான். ப்ராக்ஜ்யோதிஷம் நரகாஸுரனுடைய மந்த்ரி முரன் என்பவனால் கத்திகள் செருகப்பட்டிருந்த பாசக் கயிறுகளால் சுற்றிலும் காக்கப்பட்டிருந்தது. அதைத் தன் சக்ராயுதத்தால் அறுத்து விட்டு, தன்னை எதிர்த்து வந்த முரனையும், அவன் பிள்ளைகள் ஏழாயிரம் பேரையும், ஹயக்ரீவன், பஞ்சஜனன் என்பவர்களையும் பூச்சிகளைப் போல் சக்ரத்தாலேயே கொன்று விட்டு வேகமாக நகரத்திற்குள் நுழைந்தான் க்ருஷ்ணன்.

ஆயிரக்கணக்கில் நரகாஸுரனின் படைகளை வேகமாகக் கொன்று கொண்டிருந்த க்ருஷ்ணனை எதிர்த்து வந்த நரகாஸுரன் பல விதமான பாணங்களால் அடித்தான். அஸுரர்களைப் பூண்டோடு அழிக்கும் சக்ரதாரி அவனை இரு துண்டுகளாக அறுத்தெறிந்தார். நரகாஸுரன் மாய்ந்து வீழ்ந்ததும், பூமாதேவி(இப்போது ஸத்யபாமா) அவனிடமிருந்த அதிதியின் குண்டலங்களை எடுத்துக் கொண்டு லோகநாதனிடம் வந்தாள். "ப்ரபோ! தாங்கள் வராஹ மூர்த்தியாய் அவதரித்த போது, உங்கள் ஸம்பந்தத்தால் இவனை என்னிடம் உண்டாக்கினீர். நீங்களே அவனை அனுக்ரஹித்து, இப்போது மீண்டும் நீங்களே அவனை கொல்லவும் செய்தீர். இதோ இந்த குண்டலங்களை எடுத்துக் கொண்டு, அவன் ஸந்ததியை விட்டு விடுங்கள். பரம்பொருளின் அம்சமே, என் பாரத்தைக் குறைப்பதற்காக இந்த பூலோகத்தில் அவதரித்தீர்கள்.

நீங்களே படைத்து, காத்து, அழிப்பவர். உலகிற்கு ஆதாரமும், உலகமும் தாங்களே. என்னால் உங்கள் பெருமைகளைத் துதிக்க முடியுமா. எங்கும் வ்யாபித்திருப்பதும் தாங்களே. செயல், அதைச் செய்பவன், செயலின் பயன் அனைத்தும் நீங்களே. அழியாத ஆத்மாவும் தாங்களே. உன்னை முழுதும் உணர்ந்து துதிக்க என்னால் இயலாது. கருணை கொள்ளுங்கள். நரகனின் குற்றங்களை மன்னித்தருளுங்கள். பல பாவங்கள் செய்திருந்தும் உங்கள் புத்ரனான இவன் உங்களாலேயே அழிக்கப்பட்டதால் பாபமற்றவனானான்" என்று துதித்தாள். வேண்டிக் கொண்டாள். அனைத்துயிர்களுக்கும் ஸாரமான தேவதேவனும் அப்படியே அனுக்ரஹித்து விட்டு, பின்னர் நரகாஸுரனால் அடைத்து வைக்கப்பட்டிருந்தவைகளை விடுவிப்பதற்காக அவன் அரண்மனையில் ப்ரவேஸித்தான்.

நரகாஸுரனின் அந்தப்புரத்தில் பதினாறாயிரத்து நூறு கன்னிகைகளைக் கண்டான். மேலும் நான்கு தந்தங்கள் கொண்ட ஆறாயிரம் உயர்ந்த யானைகளையும், இருபத்தோரு லக்ஷம் காம்போஜத்துக் குதிரைகளையும், இன்னும் மேன்மையான இனங்களையும் கண்டான். இவைகள் அனைத்தையும் நரகாஸுரனின் சேவகர்களைக் கொண்டே த்வாரகைக்கு அனுப்பி வைத்தான் க்ருஷ்ணன். பின் வருணனின் குடை, மணி பர்வதம் இவைகளையும் கைப்பற்றி கருடன் மீதேற்றி, தானும், ஸத்யபாமையோடு ஏறிக் கொண்டு, அதிதியின் குண்டலங்களைத் திரும்பக் கொடுப்பதற்காக தேவலோகம் நோக்கிச் சென்றான்.

Friday, February 26, 2010

விஷ்ணு புராணம் - 108

05_28. ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன், சாருதேஹன், ஸுஷேணன், சாருகுப்தன், பத்ரசாரு, சாருவிந்தன், ஸுசாரு, சாரு ஆகிய பிள்ளைகளையும், சாருமதி என்ற பெண்ணையும் ருக்மிணி க்ருஷ்ணனுக்குப் பெற்றுத் தந்தாள். ருக்மிணி முதலாக மித்ரவிந்தை, ஸத்யை, ஜாம்பவதி, ரோஹிணி, ஸுசீலை, ஸத்யபாமை, லக்ஷ்மணை என்ற எழுவரோடு க்ருஷ்ணனுக்கு மொத்தம் அஷ்ட மஹிஷிகள். இவர்களைத் தவிர அவனுக்கு வேறு பதினாறாயிரம் மனைவிகளும் உண்டு. இதில் மித்ரவிந்தை களிந்த ராஜனின் புதல்வி என்பதால் காளிந்தி என்றும் அழைக்கப் படுவாள். ஸத்யை நக்னஜித்தின் மகள். ஜாம்பவதி ஜாம்பவானின் மகள். ரோஹிணி இஷ்டப்படி ரூபமெடுத்துக் கொள்வாள். நல்ல குணமுள்ள ஸுசீலை மத்ர தேசத்து இளவரசி. ஸத்யபாமா ஸத்ராஜித்தின் மகள். லக்ஷ்மணைத் தன் அழகான சிரிப்பால் சாருஹாஸினி என்றும் அழைக்கப்பட்டாள்.

தன்னிடம் விருப்பமுள்ள, வீரனான ப்ரத்யும்னனை, ருக்மியின் மகள் ஸுயம்வரத்தில் விரும்பி மணந்து பலமும், பெருந்தன்மையுமுள்ள அனிருத்தனைப் பெற்றெடுத்தாள். கவனமாகவும், விருப்பத்துடனும் யுத்த முறைகளைப் பயின்று தேர்ச்சி பெற்றிருந்த இவன் எவராலும் தடுக்க முடியாத பராக்ரமத்துடன், எதிரிகளின் படைகளை உடைப்பவனாயிருந்தான். ருக்மியின் மகன் வழி பேத்தியை இந்த அனிருத்தனுக்கு மனைவியாகக் கொடுக்குமாறு தானே ருக்மியிடம் சென்று பெண் கேட்டான் க்ருஷ்ணன். க்ருஷ்ணனிடம் பகையிருந்தாலும், அவனே நேரில் வந்து கேட்டதால் ருக்மி தன் மகன் வழிப் பேத்தியை, மகள் வழிப் பேரனுக்கு மணம் முடிக்க சம்மதித்தான். நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணத்திற்கு பலராமனும், மற்ற யாதவர்களும் க்ருஷ்ணனோடு சேர்ந்து ருக்மியின் நகரமான போஜகடத்திற்கு வந்தனர். க்ருஷ்ணனின் பேரனுக்கும், ருக்மியின் பேத்திக்கும் திருமணம் வெகு விமர்சையாக நடந்தேறியது.

அதன்பின் அரசர்கள் பலரும் களிங்கன் என்பவனின் தலைமையில் ருக்மியிடம் வந்து "கலப்பையைக் கையாளும் இந்த பலராமனுக்கு முறையாக சூதாடத் தெரியாது. ஆனால் சூதாட்டத்தில் ஆசையுண்டு. இதையே அவன் துரத்ருஷ்டமாகப் பயன்படுத்தி நாம் அவனை வெற்றி கொள்ளலாம், அவனைச் சூதாட அழை" என்று கூற, சக்தியுள்ள ருக்மியும் அழைக்க, பலராமனும் ஒப்புக்கொண்டு வர, அரண்மனையில் தொடங்கியது சூதாட்டம். ஆயிரம் வராகன் பொன்னை ருக்மியிடம் முதலில் இழந்தான் பலராமன். மறுமுறை, மறுமுறை என்று மூன்று முறை சூதில் வல்லவனான ருக்மியிடம் ஆயிரமாயிரம் வராகன்களாகப் பொன்னை இழந்தான்.

பலராமன் தொடர்ந்து இப்படித் தோற்பதைக் கண்ட களிங்கன் சத்தமாகச் சிரித்தான். கர்வங்கொண்ட ருக்மியும் "கொஞ்சம் கூட ஆடத் தெரியாத இந்த பலராமன் வெறும் கர்வத்தாலும், ஆசையாலும் மிகவும் விளையாடத் தெரிந்தது போல் ஆடி மீண்டும், மீண்டும் என்னிடம் தோற்கிறான்" என்று பலராமனைப் பார்த்துக் கூறினான். களிங்க தேசத்தரசனின் ஏளனமாக சிரிப்பாலும், ருக்மியின் இறுமாப்பான பேச்சாலும் அவமானமும், கோபமும் கொண்ட ஹலாயுதர் பொறுமையிழந்து ஒரு கோடி வராகனை மீண்டும் பந்தயமாக வைத்தார். பந்தயத்தை ஏற்று காய்களை உருட்டிய ருக்மி இம்முறை தோற்றான். ஆட்டத்தில் வெற்றி பெற்ற பலராமர் இப்போது நானே வென்றேன் என்று சத்தம் போட்டுச் சிரித்தார்.

ஆனால் ருக்மி, பலராமரின் வெற்றியை ஒப்புக் கொள்ளாது "ராமா, பொய் சொல்லாதே. இது செல்லாது. பந்தயத்தை இருவரும் ஒப்புக் கொண்டால் தானே அது செல்லும். உங்கள் கோடி வராகன் பந்தயத்தை நீங்கள் தான் சொன்னீர். நான் அதை ஒப்புக் கொள்ளவே இல்லை. எனவே இது செல்லாது. நானே வென்றவன்" என்றான். அப்போது அசரீரி ஒன்று "பலராமனே இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றவன். ருக்மியே தவறாக, பொய் பேசுகிறான். வாயால் பந்தயத்தை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், செய்கையால் ஒப்புக்கொண்டிருக்கிறான். பந்தயத்தை ஒப்புக்கொள்ளாதவன் காய்களை உருட்டுவானா" என்றது.

அசரீரி வாக்கைக் கேட்டதும் பலராமர் கண்கள் சிவக்க மேலும் பெருங்கோபம் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்த சூதாட்டப் பலகையாலேயே ருக்மியை அடித்து, அங்கேயே கொன்று போட்டு விட்டார். இவர் தோற்றபோது பற்களைக் காட்டிச் சிரித்த களிங்கன் இப்போது பயத்தில் உறைந்து போயிருந்தான். அவனையும் பிடித்திழுத்து அந்தப் பலகையாலேயே அவன் பற்களனைத்தையும் தகர்த்தெறிந்தார். மேலும் எதிர்த்து வந்த இளவரசர்களையும் அங்கிருந்த ஒரு தங்க மயமான தூணைப் பிடுங்கியெடுத்து, அதையே ஆயுதாகக் கொண்டு அடித்துப் போட்டார். உயிர் பிழைத்த மீதம் பேர்களனைவரும் இவரது கோபத்தைக் கண்டு அழுது கொண்டும், அலறிக் கொண்டும் ஓடி விட்டனர். பெரும் சப்தமும், ஆரவாரமும் எழுந்தது அங்கு. இப்படி கல்யாணத்திற்கு வந்த இடத்தில் மணமக்களின் தாத்தா ருக்மி, தன் அண்ணனால் கொல்லப்பட்டதை அறிந்த க்ருஷ்ணன், ஒரு பக்கம் மனைவி ருக்மிணிக்கும், மறுபக்கம் பலராமனுக்கும் பயந்து இதைப் பற்றி ஒன்றும் கருத்து கூறாமல், புது மண தம்பதிகளோடும், யாதவர்களோடும் த்வாரகைக்கு வந்து சேர்ந்தான்.

Thursday, February 25, 2010

விஷ்ணு புராணம் - 107

05_27. மைத்ரேயர்: எப்படி ப்ரத்யும்னன் சம்பரனால் தூக்கிச் செல்லப் பட்டான். பலம் பொருந்திய அவனை எப்படி ப்ரத்யும்னன் கொன்றான். பராசரர்: ருக்மிணிக்கும், க்ருஷ்ணனுக்கும் பிறக்கும் குழந்தையே தன்னைக் கொல்லப் போகிறவன் என்பதை முன்னமே அறிந்திருந்த யமனை ஒத்த அந்த ஸம்பராஸுரன், ப்ரத்யும்னன் பிறந்து ஆறே நாட்களாயிருந்த போதே, ப்ரஸவ அறைக்குள் புகுந்து, குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய், கடும் உயிரினங்கள் நிறைந்த, கொடுங்கடலில் வீசியெறிந்து விட்டான். ஒரு பெரும் மீன் அதை விழுங்கியும், குழந்தை அந்த மீனின் வயிற்றில் இறக்காமலேயே இருந்து வந்தது. ஒரு ஸமயம் மீனவர்கள் பிடியில் சிக்கிய பல மீன்களில் இந்த மீனும் ஒன்றாகக் கிடைக்க, அவர்கள் அவையத்தனையையும் கொண்டு போய் ஸம்பராஸுரனிடம் ஸமர்ப்பித்தார்கள்.

ஸம்பராஸுரன் அந்த மீன்களை சமையல் வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த தன் மனைவி மாயாதேவியிடம் கொடுத்தான். அவள் அந்த மீனை நறுக்கிய போது, மன்மதனையொத்த இந்த அழகான குழந்தையை அதன் வயிற்றில் கண்டாள். இது யாராக இருக்கும், இது மீனின் வயிற்றுக்குள் எப்படி வந்தது என்றெல்லாம் அவள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த போது, கருணையுள்ள அவளிடம் வந்த நாரதர் "உலகையே படைத்து, அழித்துக் கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவின் குழந்தை இது" என்று தொடங்கி குழந்தை பிறந்தது முதல் இவள் கைக்குக் கிடைத்தது வரையிலான விஷயங்களை விளக்கமாகக் கூறி, குழந்தையையும் அவளையே கவனமாக வளர்த்து வரும்படியும் கூறிச் சென்று விட்டார்.

குழந்தையின் அழகில் மயங்கிய அவளும் நாரதர் சொல்படி பொறுப்பாகவும், கவனமாகவும் அதை வளர்த்து வந்தாள். குழந்தை வளர்ந்து இளமைப் பருவம் எய்தியபோது, இவளது அன்பு காதலாக மாறியது. குலத்தில் சிறந்த ப்ரத்யும்னனிடம் மனதையும், கண்களையும் பறிகொடுத்த வைத்த மாயாவதி, முழு மதிப்புடன் அவனுக்கு எல்லா மாயைகளையும் கற்றுக் கொடுத்தாள். பெரும் உணர்ச்சி வயப்பட்ட இவளது அன்பைக் கண்ட க்ருஷ்ணனின் புத்ரன், ஒரு நாள் தாமரைக் கண்கள் கொண்ட மாயாவதியிடம் "அம்மா! உங்கள் ஆசை, தாயான தங்களுக்குத் தகாததே" என்று கூற, அவள் "நீங்கள் என் மகனல்ல, விஷ்ணுவின் மகன். காலஸம்பரன் உங்களைக் கடலில் எறிய, அங்குக் கிடைத்த ஒரு மீனின் வயிற்றிலிருந்து உங்களை எடுத்து வளர்த்து வருகிறேன். அன்பிற்குரியவரே, உங்கள் உண்மையான தாய் இன்னும் உங்களுக்காக அழுது கொண்டுதானிருப்பாள்" என்று பதிலுரைத்தாள்.

மாயாவதியின் இந்த பதிலைக் கேட்ட, துணிவுள்ள ப்ரத்யும்னன் கோபத்துடன் ஸம்பராஸுரனைப் போருக்கழைத்தான். அந்தப் போரில் ஸம்பராஸுரன் ஏழு மாயைகளை மாதவனின் புதல்வன் மேல் ஏவ, ப்ரத்யும்னன் அவைகளை அழித்து எட்டாவதான ஒரு மாயையால் அவனையும், அவன் ஸேனைகளையும் கொன்றான். பின் அதே வேகத்தில் மாயாவதியுடன் புறப்பட்டு, அப்பாவின் அந்தப் புறத்தில் வந்து குதித்தான். அவனைக் கண்டதும் அங்கிருந்த க்ருஷ்ணனின் மனைவியர்கள் க்ருஷ்ணனென்று நினைத்து விட்டனர். ஆனால், அவனைக் கண்ட ருக்மிணி கண்களில் கண்ணீர் மல்க "உன்னைப் போல் இப்படி யௌவனமாய் ஒருவனைப் பெற உன் தாய் தவம் செய்திருக்க வேண்டும். என் மகன் ப்ரத்யும்னன் உயிரோடு இருந்திருந்தால், அவனுக்கும் உன்னை ஒத்த வயதே இருக்கும். உன்னைப் பெற்ற அந்தப் புண்யவதி யாரோ.

உன் தோற்றத்தையும், எனக்கு உன் மீது உண்டாகும் பாசத்தையும் நோக்கும் போது, நீ நிச்சயமாக ஹரியின் மகனாகத் தானிருக்க வேண்டும்" என்று கனிவோடு அவனிடம் பேசினாள். அந்த ஸமயத்தில் க்ருஷ்ணன் நாரதருடன் அங்கு வந்தான். நாரதர் ருக்மிணியிடம் "குழந்தையாயிருக்கும் போது ப்ரஸவ அறையிலிருந்து ஸம்பராஸுரனால் கொண்டு செல்லப்பட்டு, அவனைக் கொன்று விட்டு இப்போது இங்கு வந்திருக்கும் இவன் உன் மகனே. மேலும், நற்குணமுள்ள மாயாவதி என்ற இந்தப் பெண், ப்ரத்யும்னனின் மனைவியே. ஸம்பராஸுரனின் மனைவியல்ல. நான் சொல்வதைக் கேள்.

மன்மதன் எரிந்து சாம்பலாகி விட்ட போது, அவன் மனைவி தன்னைக் காத்துக் கொள்ளவும், மன்மதன் திரும்பி வரும் வரை வாழவும் விரும்பி, தன் மாயைகளால் ஸம்பராஸுரனை மயக்கி ஆட்கொண்டிருந்தாள். அவனுடைய காம இச்சைகளிலிருந்து தன் கற்பைக் காத்துக் கொள்ள, வெவ்வேறு மாயா ரூபவதிகளை உண்டாக்கி, அவர்களிடமே அவனை மூழ்க வைத்திருந்தாள். இப்படி ஸம்பராஸுரனிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்ட இவளே ரதி தேவி. உன் மகனான இந்த ப்ரத்யும்னனே மீண்டும் அவதரித்திருக்கும் மன்மதன். எனவே இவள் ப்ரத்யும்னனுக்கு மனைவியே. ஸந்தேஹத்திற்கு எந்த இடமுமில்லை. இவள் உன் மருமகளே" என்று கூறி அவளுக்கும், மற்றவர்களுக்கும் இருந்த ஸந்தேஹங்களையும் தீர்த்து வைத்தார். நாரதரின் இந்த சொற்களால் ருக்மிணியும், கேசவரும் ஸந்தோஷம் கொண்டனர். தொலைந்து போன ருக்மிணியின் மகன் திரும்பக் கிடைக்கப் பெற்றதையறிந்த நகர மக்களும், த்வாரகையும் ஆச்சர்யங்களிலும், ஸந்தோஷத்திலும் மூழ்கித் திளைத்தது. விழாக் கோலம் பூண்டது.

விஷ்ணு புராணம் - 106

05_26. விதர்ப தேசத்தரசன் பீஷ்மகனென்பவன் குண்டினமெனும் தலைநகரப் பட்டணத்திலிருந்து கொண்டு ஆண்டு வந்தான். இவனுக்கு ருக்மி என்ற புத்ரனும், ருக்மிணி என்ற அழகான பெண்ணும் இருந்தனர். இவளை க்ருஷ்ணன் காதல் வயப்பட்டு மணம் புரிய விரும்பினான். ருக்மிக்கு ருக்மிணியை க்ருஷ்ணனுக்கு மணம் செய்து கொடுப்பதில் விருப்பமில்லை. ஜராஸந்தனின் கருத்துப்படியும், ருக்மியின் கட்டாயப்படியும் பலம் பொருந்திய பீஷ்மகன் தன் பெண்ணை சிசுபாலனுக்கு மணம் முடிக்க நிச்சயம் செய்தான். திருமணத்திற்கு ஜராஸந்தன், சிசுபாலனைச் சேர்ந்த அனைத்து அரசர்களும், இளவரசர்களும் அழைக்கப்பட்டு விதர்ப தேசத்திற்கு வந்திருந்தனர். க்ருஷ்ணனும், பலராமனும் யாதவர்களோடு திருமணத்தைக் காண குண்டினபுரிக்கு வந்திருந்தனர்.

தான் ருக்மிணியைக் கடத்திச் செல்லவும், மற்றவர்கள் அண்ணாவோடு சேர்ந்து எதிரிகளைச் சமாளிக்கவும் திட்டம் போட்டு வந்திருந்தான் க்ருஷ்ணன். அதைச் செய்தும் விட்டான். பௌண்ட்ரகன், சிறப்புமிக்க தந்தவக்ரன், விதூரதன், சிசுபாலன், ஜராஸந்தன், சல்யன், இன்னும் பல அரசர்கள் இந்த அவமானத்தால் கோபம் கொண்டு, க்ருஷ்ணனைக் கொன்று விடுவதற்காகப் புறப்பட்டனர். ஏற்பாட்டின் படி இவர்களனைவரையும் பலராமர், யாதவ சைன்யத்தோடு தோற்கடித்துத் துரத்தி விட்டார். ருக்மி மட்டும் க்ருஷ்ணனைக் கொல்லாமல் குண்டினபுரிக்குத் திரும்புவதில்லை என்ற உறுதியோடு துரத்திச் சென்றான். அந்தப் போரில் க்ருஷ்ணன் விளையாட்டாக தன் சக்ரத்தாலேயே அவனுடைய குதிரை, யானை, ரதம், காலாட்படை என அனைத்தையும் அழித்து, அவனையும் வென்று கீழே தள்ளினார்.

"ருக்மி என்னுடைய ஒரே ஸஹோதரன், கோபத்தைத் தணித்துக் கொள்ளுங்கள். தேவ! என் ஸஹோதரனை கருணை கூர்ந்து விட்டு விடுங்கள்" என்று ருக்மிணி ப்ரார்த்தித்ததற்கிணங்க ருக்மியைக் கொல்லாமல் விட்டான் க்ருஷ்ணன். செயல்களின் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்ட க்ருஷ்ணனின் கருணையால் இப்படி உயிர் பிழைத்த ருக்மி, அதன் பின் போஜகடம் என்ற நகரை உருவாக்கிக் கொண்டு, அங்கேயே வஸித்து வந்தான். ராக்ஷஸ விவாஹ(போர் செய்து கன்னிகையை அபஹரித்துச் சென்று திருமணம் செய்து கொள்வது) முறைப்படி இப்படியாக ருக்மிணி கல்யாணமும் த்வாரகையில் சிறப்பாக நடந்தேறியது. அவளிடம் மன்மதனின் அம்சமாக ப்ரத்யும்னன் என்ற பிள்ளையைப் பெற்றான் க்ருஷ்ணன். இந்த ப்ரத்யும்னனை சம்பரன் என்ற அஸுரன் தூக்கிச் சென்றான். ஆனால் ப்ரத்யும்னனால் கொல்லப்பட்டான்.

விஷ்ணு புராணம் - 105

05_25. உலகையே தாங்கும் ஆதிஸேஷன் தேவ கார்யங்களை சாதிப்பதற்காக, இப்படி பலராமராக அவதரித்து அவைகளைச் செய்து கொண்டு, இடையர்களோடு கானகங்களில் ஸஞ்சரித்து வந்தார். ஒரு ஸமயம் வருணன் மதுவர்க்கங்களுக்குத் தேவதையான மதிரை(வாருணி)யை அழைத்து "மதிரையே! நீ எப்போதும் அனந்தனுக்கு ப்ரியமானவள். ஆகவே நீ இப்போது அவர் ஸந்தோஷப்படும்படியான கார்யங்களைச் சென்று செய், அவர் அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்யப் போகிறார். அவரிடம் சென்று சேர்" என்று வேண்டிக் கொண்டான். அவளும் அதற்கிசைந்து வ்ருந்தாவனத்தின் ஒரு கடம்ப மரப் பொந்தில் ஐக்யமானாள்.
கடம்ப மரத்திலிருந்து மது வழிந்தோடிக் கொண்டிருந்ததை, அதன் வாசனையால் இழுக்கப்பட்டு அங்கு வந்த பலராமர் கண்டு மகிழ்ந்து, கோபர்களுடனும், கோபிகைகளுடனும் உடனே அதைப் பருகி, களிப்பில் பாடி, ஆடிக் மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது உடல் முத்து போன்ற வியர்வைத் துளிகளால் நிறைந்திருந்தது.

மது மயக்கத்தில் அருகில் ஓடிக் கொண்டிருந்த யமுனா நதியை, நீராடுவதற்காகத் தன்னருகில் வருமாறு அழைத்தார் பலராமர். மதுவில் மூழ்கியிருந்த இவரது உத்தரவை யமுனை நதி மதிக்காமல் இருந்தது. இதனால் கோபம் கொண்ட பலராமர் தன் கலப்பையால் யமுனையை அதன் போக்கிலிருந்து மாற்றி, தன்னருகில் இழுத்துச் சென்று, "துஷ்ட நதியே, கர்வம் கொண்டவளே, வரமாட்டாயா! இப்போது உன்னிஷ்டம் போல் போ, பார்க்கலாம். என் பலத்தைத் தெரிந்து கொண்டாயா. இனி என்னை அவமதித்தால் உன்னை என் கலப்பை நுனியால் நூறு வழிகளில் கொண்டு போய் விடுவேன்" என்று எச்சரித்தார். மிகவும் பயந்து போன யமுனா நதி, உருக்கொண்டு அவரிடம் மன்னிப்புக் கோரியது. அவரும் அதை விடுவித்தார். விடுதலையடைந்த யமுனை அந்த ப்ரதேஸத்தை நீரால் நிறைத்துச் சென்றது.

யமுனையில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த பலராமருக்கு அப்போது மஹாலக்ஷ்மி தோன்றி, ஒரு காதணியாக அல்லிமலரையும், இன்னொரு காதணியாக குண்டலத்தையும், வருணனால் அனுப்பப்பட்ட வாடாத ஒரு தாமரை மாலையையும், கடலின் நிறம் கொண்ட நீல நிறப்பட்டாடைகளையும் தந்தருளினாள். யமுனையில் நீராடி, மதிப்பற்ற இவைகளை அணிந்து கொண்ட பலராமர் முன்னிலும் பொலிவு பெற்று விளங்கினார். இப்படி இரு மாதங்கள் நந்த கோகுலத்தில் கழித்த பலராமர், மீண்டும் த்வாரகைக்குத் திரும்பி, அங்கு ரைவத மஹராஜனின் பெண் ரேவதியை மணந்து கொண்டு, நிசிதன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளையும் பெற்றார்.

விஷ்ணு புராணம் - 104

05_24. "எதிர்க்க முடியாத வல்லமை பொருந்திய அரசே! நீ விரும்பும் லோகங்களுக்கெல்லாம் சென்று போகங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் ஒரு உயர்ந்த குலத்திலே முன் ஜன்ம நினைவோடு நீ பிறப்பாய். அந்தப் பிறவியில் என் அருளால் முடிவில் மோக்ஷத்தை அடையப் போகிறாய்" என்று முசுகுந்த சக்ரவர்த்திக்கு பேரருள் புரிந்தான் க்ருஷ்ணன். இந்த நிச்சயத்தைப் பெற்றுக் கொண்ட முசுகுந்தன் அச்யுதனை நமஸ்கரித்து விட்டு குகையை விட்டு வெளியே வந்தான். யுகம் மாறிவிட்டது. மனிதர்களின் குள்ள உருவத்தைக் கண்டு கலியுகம் வந்து விட்டதை அறிந்து கொண்ட முசுகுந்த சக்ரவர்த்தி, மேலும் வைராக்யத்தை வேண்டித் தவம் புரிவதற்காக நர, நாராயணர்களின் இருப்பிடமான கந்தமாதனத்திற்குச் சென்று விட்டான்.

இப்படித் தந்திரமாக காலயவனனை ஒழித்துக் கட்டிய க்ருஷ்ணன், மதுராவை சூழ்ந்திருந்த யானைகள், குதிரைகள், ரதங்கள் நிறைந்திருந்த அவனது படைகளையும் கைப்பற்றி, அதை த்வாரகையில் இருந்த உக்ரஸேன மஹாராஜருக்கு அர்ப்பணித்தான். அதன் பின் யது வம்சம் அங்கு எந்த பகை பயமும் இன்றி வாழ்ந்திருந்தனர். இப்படியாக யுத்தம் முடிந்ததும் பலராமர் நந்தகோகுலத்தில் இருக்கும் உறவினர்களைப் பார்க்க விரும்பி, அங்கு சென்று பெரியோர்களால் தழுவப்பெற்று, சிறியோர்களைத் தழுவி, தனக்குச் சமமானவர்களோடு சிரித்துப் பேசியும் மகிழ்ந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் க்ருஷ்ணனிடம் ஊடல் கொண்டும், பொறாமையோடும் அவனைப் பற்றியும் பலராமரிடம் விசாரித்தனர்.

"எங்களைப் பிரிந்து போன கண்ணன் அங்கு மதுரை நகரத்துப் பெண்களுடன் நலமாக இருக்கிறானா. எங்கும், எவரிடமும் அவன் நிலைத்த அன்பு கொள்ள மாட்டானே அவன். அந்தப் பெண்களோடு அவர்களது செயல்களைப் பாராட்டும் போது, அவர்களை மகிழ்விக்க எங்களது பட்டிக்காட்டுப் பழக்கங்களைப் பரிஹஸிக்காமல் இருக்கிறானா. எங்களைப் பற்றி நினைக்கவாவது செய்கிறானா. அவனோடுப் பாட்டெல்லாம் பாடிக் கொண்டிருந்தோம். அவன் அம்மாவைப் பார்க்கவாவது இங்கு ஒரு முறை வருவானா. ஆனால் ஏன் இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். வேறு எதையாவது செய்து பொழுதைப் போக்கலாம். நாம் தான் அவன் நினைவாக வருந்திக் கொண்டிருக்கிறோம்.

அவனுக்காக அம்மா, அப்பா, ஸஹோதரன், புருஷன், உறவினர் என்று அனைத்தையும் மதிக்காதிருந்தோம். ஆனால் அவன் நன்றி மறந்தவர்களின் இலக்கணமாக இருக்கிறான். அதுதான் தாமோதரன், அதுதான் கோவிந்தன். நகரத்துப் பெண்களிடம் மனதைக் கொடுத்தவன், நம்மைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாதவன். நம்மை அலக்ஷ்யம் செய்தவன்" இப்படிக் கொஞ்சமும் பொறுமையின்றி, கோபத்தோடும், வருத்தத்தோடும், ஏக்கத்தோடும் தங்கள் நிலையை வெளிப்படுத்துகின்றனர். நிலை கடந்து பலராமரையே கண்ணனாக நினைக்கின்றனர். பின் அதையுணர்ந்து வெட்கத்தால் சிரிக்கின்றனர். இவர்களது பல நிலைகளை இப்படி கண்ட பலராமர் இவர்களிடம் மிகவும் குழைந்து போகிறார். க்ருஷ்ணனின் ஆறுதலான, ஏற்றுக் கொள்ளத்தக்க, ஆசையான, வசீகரமான, குணமான செய்திகளை அவர்களுக்குக் கூறி அவர்களைத் தேற்றுகிறார். இப்படியாக இடையர்களோடு பேசியும், விளையாடியும் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

விஷ்ணு புராணம் - 103

05_23. ஒரு நாள் யாதவ ஸபையில், ப்ரஹ்மசர்யத்தில் நிலை பெற்றிருந்த அவர்கள் புரோஹிதரான கார்க்யர் என்பவரை, அவர் மைத்துனர் ச்யாளன் என்பவன் அலி என்று எல்லோர் முன்னிலையிலும் கூறிக் கிண்டல் செய்தான். சபையோர் சிரிக்க, நடந்த இந்த அவமானத்தைப் பொறுக்காத கார்க்யர் யாதவர்களை அஞ்சச் செய்யும் பலம் பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற விரும்பி, விந்தியத்தின் தென் திசைக்குச் சென்று பனிரெண்டு ஆண்டுகள் இரும்புத் தூளை மட்டுமே ஆஹாரமாக உட்கொண்டு கடுந்தவம் இயற்றி, பரமேச்வரனை மகிழச் செய்து, தான் நினைத்த வரத்தையும் பெற்றுத் திரும்பினார். அப்போது பிள்ளைப் பேறு இல்லாமல் வருந்திக் கொண்டிருந்த யவன தேசாதிபதி கார்க்யர் இப்படி ஒரு வரத்தைப் பெற்றிருப்பதை அறிந்து, அவரிடம் நட்பு பூண்டு, நன்கு உபஸரித்து, தன் மனைவியிடம் தனக்கு ஒரு பிள்ளையை உண்டுபண்ணுமாறு வேண்டிக் கொண்டான்.

அவரும் அப்படியே செய்தார். பிறந்த பிள்ளை வண்டு போல கருமை நிறத்தில், வஜ்ராயுதம் போன்ற மார்புடன் இருந்தான். இவனுக்குக் காலயவனன் என்ற பெயரை வைத்து, பருவம் வந்ததும் இவனுக்குப் பட்டம் சூட்டி விட்டு, யவனராஜன் தவம் செய்ய கானகம் சென்று விட்டான். பெரும் பலத்தால் கர்வம் கொண்ட இவன் ஒரு ஸமயம் நாரதரிடம் தன்னுடன் போர் புரியத் தகுந்த பலம் கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டான். நாரதர் யாதவர்களோடு போர் செய். அவர்களே பலசாலிகள் என்று கூற, காலயவனன் வெகு வேகமாக அனேக கோடி ம்லேச்சர்களுடன் ரத, கஜ, துரக, பதாதிகள் என நால்வகைப் படைகளையும் தயார் செய்து கொண்டு, ஏராளமான போர்த் தளவாடங்களோடும் மதுரையை நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

தினம் ஒரு யானை, குதிரை, ரதம் என ஒவ்வொன்றும் களைப்படையும் போதும் வெவ்வேறு விலங்குகளை மாற்றிக் கொண்டு ரதங்களில் ஏறி விரைவாக மதுரை வந்து சேர்ந்து விட்டான் காலயவனன். காலயவனன் படையெடுப்பைக் கேள்விப்பட்ட க்ருஷ்ணன் "இவனோடு போரிட ஆரம்பித்தால் யாதவர்கள் மிகவும் பலம் குன்றி, அழிந்து விடுவார்கள். அப்போது ஜராஸந்தனும் வந்து யாதவர்களை பீடிக்கக் கூடும். எதிரிகள் வென்று விடக் கூடும். அல்லது ஜராஸந்தனும் இந்த கால யவனனுடன் சேர்ந்து யுத்தம் செய்யக் கூடும். இவர்களிருவரிடமிருந்தும் இந்த யாதவர்களைக் காக்க பகைவர்களால் நுழைய முடியாத கோட்டை ஒன்றை நிர்மாணிக்க வேண்டும். அங்குள்ள பெண்களும் போரிடுபவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த வ்ருஷ்ணி குலத்தவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

எந்த இடத்தில் இந்த யாதவர்கள் குடித்திருந்தாலும், கவனக்குறைவாகவும், உறங்கிக் கொண்டிருந்தாலோ, அல்லது வெளியூர் சென்றிருந்தாலும் எந்த வித பயமும் இருக்காதோ, அங்கு இவர்களை குடியேற்ற வேண்டும். இப்படி யோசித்த கண்ணன் ஸமுத்ர ராஜனிடம் பனிரெண்டு யோஜனை அளவு இடம் தருமாறு வேண்டிப் பெற்றான். அந்த இடத்தில் த்வாரகையை நிர்மாணித்தான். வீடுகளும், மாளிகைகளும் நிறைந்திருக்க இந்த்ரனின் தலைநகரைப் போலிருந்தது அது. புது நகருக்கு மதுரா வாஸிகளைக் குடியேற்றி விட்டு, தான் மட்டும் மதுரையில் காலயவனனுக்காக நிராயுதபாணியாகக் காத்திருந்தான். க்ருஷ்ணனைக் கண்டதும் அடையாளங் கண்டு கொண்ட காலயவனன் நிராயுதபாணியான அவனைப் பிடிக்க எண்ணினான்.

கண்ணன் ஓடத் தொடங்கினான். யோகிகளின் மனதிற்கும் கிட்டாத அவனைப் பிடிக்க இவனும் பின் தொடர்ந்து ஓடினான். கண்ணன் ஓடிச் சென்று ஒரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்து, அங்கு அவனைத் தேடிய காலயவனன் ஒருவன் அங்கு படுத்திருப்பதைக் கண்டு, அது கண்ணனாகத் தானிருக்க வேண்டும் என்று முடிவு செய்து, காலால் அவனை ஓங்கி ஒரு உதை விடுகிறான். படுத்துறங்கிக் கொண்டிருந்தவன் உடனே கண் விழித்து காலயவனனைக் கோபத்தோடு ஒரு பார்வை பார்த்தான். அந்தப் பார்வையிலுண்டான அக்னியால் காலயவனன் அந்த இடத்திலேயே வெந்து சாம்பலானான்.

அங்கு படுத்து, அப்படி உறங்கிக் கொண்டிருந்தது முசுகுந்த சக்ரவர்த்தி. தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் நடந்த ஒரு போரில் இந்த முசுகுந்த சக்ரவர்த்தி தேவர்கள் பக்கமிருந்து அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தான். வெகுநாட்களாக நடந்து முடிந்த இந்த யுத்தத்தில் தூக்கமின்றி மிகவும் களைத்துப் போயிருந்த சக்ரவர்த்தி, ஆழ்ந்த, நீண்ட உறக்கத்தைத் தேவர்களிடம் வரமாகக் கேட்டான். அவர்களும் அவ்வாறே வரத்தைக் கொடுத்ததோடு, "உன்னை எவன் தூக்கத்திலிருந்து எழுப்புகிறானோ அவன் உன் உடலில் இருந்து எழும் கோபாக்னியிலேயே சாம்பலாகி விடுவான்" என்ற வரத்தையும் தந்தனர். இந்த வரத்தைக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்த சக்ரவர்த்தியைக் கொண்டுதான் இப்போது காலயவனனை நிராயுதபாணியாக ஸம்ஹரித்துள்ளான் க்ருஷ்ணன்.

காலயவனன் இப்படி சாம்பலானதும், தன் கண் முன்னே இப்போது நின்றிருக்கும் க்ருஷ்ணனைப் பார்த்து "நீ யார்" என்கிறான் முசுகுந்தன். தன்னை சந்த்ர வம்சத்தின் யது குலத்தில் வஸுதேவனுக்குப் புத்ரன் என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான் க்ருஷ்ணன். இதையறிந்ததும் முதியவரான கர்க்கர் தன்னிடம் முன்பு கூறியிருந்தவைகளை நினைவு படுத்திக் கொண்ட முசுகுந்தன் ஹரியின் பாதங்களில் விழுந்து "இறைவனே! விஷ்ணுவின் அம்சமே! இருபத்தெட்டாம் த்வாபர யுகத்தின் இறுதியில் ஹரி யதுக்களின் குடும்பத்தில் பிறப்பார் என்பதை முன்னமேயே நான் கர்க்கரிடமிருந்து அறிந்துள்ளேன். நீயே தான் அது. சந்தேகமேயில்லை. மனிதகுலம் உய்யவே நீ அவதரித்துள்ளாய். உன் தேஜஸ்ஸை என்னால் தாங்க முடியவில்லை.

மழைமேகங்களின் கர்ஜனையை விட உன் குரலொலி மேம்பட்டிருக்கிறது. நீ நடக்கையில் பாரத்தால் பூமியே அசைகிறது. முன்பு தேவாஸுர யுத்தத்தில் அஸுரர்கள் என் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் திணறினார்களோ, அது போல் இப்போது நானே உன் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் இருக்கிறேன். நீ ஒருவனே இந்த உலகில் தத்தளிப்போருக்கு அபயமளிக்க வல்லவன். நீயே தீவினைகள் யாவையும் போக்குபவன். என் மீதும் கருணை காட்டு. என் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கிவிடு. ஸமுத்ரங்கள், பர்வதங்கள், ஆறுகள், காடுகள், பூமி, வானம், காற்று, நீர், நெருப்பு, புத்தி, ஆத்மா, மனம், வாழ்வாதாரம், ஆத்மாவிற்கு அப்பாற்பட்டவை, எங்கும் நிறைந்தது அனைத்தும் நீயே. உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் நீ,

பிறப்பால் வரும் வ்யவஹாரங்கள் உனக்கில்லை. அழிவற்றவன், அளவில்லாதவன், ஏற்ற, இறக்கமற்றவன், ஆதி அந்தமில்லா ப்ரஹ்மனும் நீ. தேவ, கந்தர்வ, சித்தர், விலங்கு, மனித, பறவை, தாவரங்கள் முதல் அனைத்து ஸ்தாவர ஜங்கமங்களும் உன்னிடமிருந்தே தோன்றுகின்றன. உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. தேவா! நான் இந்த உலக வ்யவஹாரங்கள் அனைத்தையும் நன்கு அனுபவித்து விட்டேன். மூவகைத் தாபங்களால் அலைக்கழிக்கப்பட்ட எனக்கு எங்குமே ஸுகமில்லை. பூமி, ராஜ்யம், படைகள், பொருள்கள், நண்பர், குழந்தைகள், மனைவி, சுற்றத்தார் இன்னும் நான் ஸந்தோஷத்தைத் தருபவை என நினைத்து அடைந்த எதுவுமே அவைகளின் இயற்கையான மாறும் குணங்களால் எனக்குக் கடைசியில் கானல் நீர் போல் விரக்தியையும், துன்பத்தையுமே உண்டு பண்ணின.

ஸ்வர்க்கத்திலிருக்கும் தேவர்களே யுத்தத்தின் போது, தாழ்ந்த மனிதப் பிறவியைச் சேர்ந்த என்னிடமல்லவா உதவி கோரினர். ஆக அதுவும் ஆபத்தானதே. பின், எங்குதான் நிலையான ஸுகம் உள்ளது. உலகிற்குக் காரணமான உன்னை ஆராதனை செய்வதே நிலைத்த ஸுகம் பெற வழி. உன் மாயையாலும், இயற்கையான அறியாமையாலுமே மனிதன் பிறப்பு, இறப்புகளால் தளர்ந்து, பின் நரகத்திலும் யமனுடைய பிடியில் கொடிய துன்பங்களை அனுபவிக்கிறான். நானும் அப்படியே தானே உன் மாயையால் சுயநலம், பொறாமை முதலியவைகளால் இவைகளில் உழன்று வருகிறேன். இறுதியில் விரும்பி எவரும் அடையத் தக்கது உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. உலகில் இப்படிப் பலவாறு துன்பப்பட்ட நான் இப்போது உன்னையே சரணமடைகிறேன். இந்தத் துன்பங்களிலிருந்து என்னை விடுவித்து எனக்கு மோக்ஷத்தைக் கொடு" என்று வேண்டிக் கொண்டான்.

Wednesday, February 24, 2010

விஷ்ணு புராணம் - 102

05_22. கம்ஸனின் மாமனார் ஜராஸந்தன் மகத தேசத்து அரசன். அவனது பெண்களான அஸ்தி, ப்ராஸ்தி இருவரையும் கம்ஸன் மணந்திருந்தான். தன் மருமகன் கம்ஸன் கொல்லப்பட்டதை அறிந்த இவன் கண்ணன் மீது கடுங்கோபங்கொண்டு அவனையும், மற்ற யாதவர்களையும் அழிக்க முற்பட்டான். இருபத்து மூன்று அக்ஷௌஹிணீ ஸேனையுடன் அவன் வருவதையறிந்த ராம, க்ருஷ்ணர்கள் தங்கள் பலத்தையே நம்பி, ஒர் சிறு படையோடு மதுரைக்கு வெளியே யுத்தத்திற்குத் தயாராக வந்தனர். எடுக்க, எடுக்கக் குறையாத இரு அம்பறாத் தூணிகளும், சார்ங்கமும், கௌமோதகியும்(கதை), அதேபோல் கலப்பையும், உலக்கையும் க்ருஷ்ணனுக்கும், ராமனுக்கும் நினைத்த மாத்ரத்தில் வானிலிருந்து வந்து சேர்ந்தன. பழைய திவ்யாஸ்த்ரங்களான இவைகளைக் கொண்டு ஜராஸந்தனின் படைகளை அழித்து, அவனை விரட்டி விட்டு, வெற்றியோடு மதுரைக்குள் புகுந்தனர் இருவரும்.

ஆனால், ஜராஸந்தன் மட்டும் உயிரோடு தப்பி ஓடிவிட்டதால், க்ருஷ்ணன் இதைக் கொண்டாடவில்லை. ஜராஸந்தனே வென்றதாக நினைத்தான். அவ்வாறே அவனும் சில நாளில் மீண்டும் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, மதுரை மீது படையெடுத்தான். இப்படிப் பதினெட்டு முறை மதுரை மீது படையெடுத்து, ஒவ்வொரு முறையும் ராம, க்ருஷ்ணர்கள் தலைமையிலான யாதவர்களிடம் தோற்றோடினான் ஜராஸந்தன். சக்ரதாரியான விஷ்ணுவின் அம்சம் தங்களிடம் இருப்பதனாலேயே போர் முறை எதுவும் அறியாத யாதவர்களும் பெரும் பலம் பொருந்திய ஜராஸந்தனை வென்று கொண்டிருக்கின்றனர். தன் ஸங்கல்பம் ஒன்றாலேயே எதையும் உண்டாக்கவும், அழிக்கவும் வல்லமை கொண்ட அவன் மனிதர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணப்படியே ஸாம, தான, பேத, தண்ட என்ற முறையில் ஒவ்வொரு இடத்திலும் நடந்து கொள்கிறான். சில இடங்களில் பகைவர்களைக் கண்டு பயந்து ஒளிந்து கொள்ளவும் செய்கிறான். இதெல்லாம் மனிதர்களைப் போல நடந்து கொள்ளும் அவனது லீலைகளே.

விஷ்ணு புராணம் - 101

05_21. இப்படி உண்மையறிவு பெற்று தன்னைத் துதித்த வஸுதேவ, தேவகியையும் மற்றும் அங்குள்ள மற்ற யாதவர்களையும் மீண்டும் மயங்குமாறுச் செய்தான் க்ருஷ்ணன். பெற்றோர்களிடம் "அம்மா! அப்பா! நானும் பலராமனும் வெகு நாட்களாகவே உங்களைத் தர்ஸிக்க எண்ணியும், கம்ஸ பயத்தால் அது கைகூடாமல் போய் விட்டது. இப்போது தான் அந்த பாக்யம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கொடியவர்களே இப்படி தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் காலத்தைக் கழிப்பார்கள். பெற்றோர்களையும், ஆசார்யர்களையும், ப்ராஹ்மணர்களையும், தேவதைகளையும் பூஜித்துப் பணிவிடை செய்பவர்கள் வாழ்க்கையே பலன் கொடுக்கும். கம்ஸனின் பலத்திற்கும், கொடுமைகளுக்கும் அஞ்சி, அயலாரிடம் வளர்ந்து வந்ததால் உங்களுக்கு இதுவரைப் பணிவிடை செய்ய முடியாமல் போய் விட்டது. இந்த அபராதத்தைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும்" என்று கூறி கண்ணீர் மல்க அவர்களையும், மற்ற யாதவப் பெரியவர்களையும் தகுந்த முறையில் பூஜை செய்து, மரியாதைகளைச் செய்தனர் இருவரும்.

இதன் பின் பூமியில் விழுந்து கிடக்கும் கம்ஸனின் சடலத்தைச் சுற்றிக் கதறி அழுது கொண்டிருக்கும் அவனது மனைவிமார்கள், தாயார்கள் என அனைவருக்கும் அனுதாபத்தோடு தானே கண்களில் நீர் ததும்ப, பல வகைகளில் ஆறுதல் கூறித் தேற்றினான் கண்ணன். அதன் பின் சிறையிலிருக்கும் கம்ஸனின் தந்தை உக்ரஸேனரை விடுதலைச் செய்து ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தான். தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் தகுந்த முறையில் ஈம க்ரியைகளைச் செய்து முடித்து, ராஜ்யம் செய்து கொண்டிருந்த யாதவ குல ச்ரேஷ்டரான உக்ரஸேனரிடம் ஒரு நாள் "மஹாராஜா! எனக்கு ஆணையிடுங்கள். தயக்கமின்றி கூறுங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை. அவற்றையெல்லாம் நிச்சயம் செய்து முடிக்கிறேன் நான்.

யதுவின் இந்த வம்சம் சாபத்தால் ராஜ்யமிழந்ததாயினும், என்னைப் பணியாளனாகப் பெற்ற நீர் எதற்கும் அஞ்சாமல், கவலையின்றி அரசாளுங்கள். தேவர்களே உங்களுக்குப் பணி செய்வர், அப்படியிருக்க இந்த அற்ப அரசர்கள் கீழ்ப்படிவதில் அதிசயமென்ன" என்று எளியோனாய் உக்ரஸேனரிடம் பணிந்து நின்ற க்ருஷ்ணன், உடனே வாயு பகவானை மனதால் நினைத்தான். உடனே அவனும் அங்கு தோன்றி, பணிந்து நின்றான். "வாயு பகவானே! இந்த்ரனிடம் சென்று இதைச் சொல். இது நாள் வரை கர்வம் கொண்டு திரிந்தது போதும். இப்போது உக்ரஸேனர் அரசாள்கிறார். எனவே உன்னிடமுள்ள ஸபைகளில் உயர்ந்ததான ஸுதர்மாவை உடனே உக்ரஸேனருக்குக் கொடுத்து விடு. இனி அதில் அவரும், யாதவர்களுமே அமர்ந்து, அலங்கரிப்பர்" என்று வாயு பகவானிடம் கட்டளையிட்டான் க்ருஷ்ணன்.

இந்தத் தகவலை வாயு சசியின் கணவனிடம் கூறியதும் அவனும் அதற்கு அடிபணிந்து உடனே அப்படியே செய்து விட்டான். அதை வாயுவிடமிருந்து பெற்று உக்ரஸேனருக்கு அர்ப்பணித்தான் க்ருஷ்ணன். நகைகளால் அலங்கரிக்கப் பெற்றிருந்த அந்த ஸபையில் அமர்ந்து யாதவர்கள் க்ருஷ்ணனின் புஜ பலத்தையே நம்பி, பல தேவ போகங்களையும் பெற்றுத் திளைத்தனர். இதன் பின் உபனயனம் செய்விக்கப் பெற்ற இரு குழந்தைகளும், காசியில் பிறந்து, அவந்தீயில் வாழ்ந்து வந்த ஸாந்தீபனி என்பவரிடம் குருமுகமாகக் கல்வி கற்கச் சென்றனர். அங்கு முறைப்படி நாள் தவறாமல் குருவிற்குப் பணிவிடை செய்து கொண்டு, முறைப்படி வேதங்கள், சாஸ்த்ரங்கள், தனுர்வேதம், உயர்ந்த அஸ்த்ரங்களின் ப்ரயோக ரஹஸ்யங்கள், ராணுவ விஷயங்கள் என அறுபத்து நான்கு கலைகளையும் அறுபத்து நாட்களிலேயே கற்றுத் தேர்ந்தனர்.

இப்படி மனித சக்திக்கு அப்பாற்பட்ட இவர்களது திறமையைக் கண்டு, ஸூர்ய, சந்த்ரர்களே தனக்கு சிஷ்யர்களாக வந்தது போல் சாந்திபனியே ஆச்சர்யமடைந்தார். தங்கள் படிப்பை முடித்துக் கொண்ட இருவரும் குருவிடம் வந்து விருப்பமான குரு தக்ஷிணையைக் கேட்டுப் பெறுமாறு வேண்டி நின்றனர். இவர்களது அமானுஷ்யமான திறமைகளை அறிந்திருந்த சாந்திபனியும் சாதுர்யமாக, முன்பு ப்ரபாஸ தீர்த்தத்தில் (ஸமுத்ரம்) இறந்து போன தன் மகனையே குருதக்ஷிணையாக மீண்டும் உயிருடன் வேண்டினார். ராம, க்ருஷ்ணர்களும் சிறிதும் தயங்காது அதை நிறைவேற்ற ஆயுதங்களோடு கடற்கரைக்குச் சென்றனர்.

இவர்களை இப்படி ஆயுதபாணிகளாகக் கண்ட ஸமுத்ரராஜன் தானே உருக்கொண்டு வெளியே வந்து இவர்களுக்கு அர்க்யாதிகளைக் கொடுத்து உபஸரித்து "சாந்தீபனியின் புதல்வனை நான் ஒன்றும் செய்து விட வில்லை. என்னுள் பஞ்சஜனன் என்ற அஸுரன் சங்கின் உருவில் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் தான் அந்தச் சிறுவனைக் கடத்திக் கொண்டு வந்தவன். இன்னும் அவன் இங்கு தான் இருக்கிறான்" என்று கூறினான். இதைக் கேட்டதும் கண்ணன் கடலினுள் சென்று பஞ்சஜனனைக் கொன்று, அவன் எலும்பினாலான பாஞ்சஜன்யம் என்ற சங்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். அதைத் தன் வாயில் வைத்து ஊதியபோது எழுந்த பேரொலி அஸுரர்கள் பலத்தைக் குறைத்து, தேவபலத்தை அதிகரித்தது. அதர்மங்களையும் அழித்தது. இந்த சங்கத்துடன் வெளிவந்த க்ருஷ்ணன், ஸமுத்ரத்தில் சிறுவன் கிடைக்காததால், அண்ணனோடு யமப் பட்டணம் சென்று, அங்கு நரகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனையும் முன்பிருந்த உடலோடு மீட்டுக் கொண்டு வந்து, தங்கள் ஆசார்யருக்குக் குருதக்ஷிணையாகக் கொடுத்து விட்டு, மீண்டும் உக்ரஸேனன் அரசாட்சியில் அனைவரும் ஸந்தோஷமாக வஸித்து வரும் மதுரை மாநகருக்கு வந்தருளினார்கள்.

விஷ்ணு புராணம் - 100

05_20. வழியில் சென்று கொண்டிருந்த ராம, க்ருஷ்ணர்கள் எதிரில் கையில் சந்தனக் கிண்ணங்களுடன், கூன் விழுந்த ஒரு இளம்பெண்ணைக் கண்டார்கள். கண்ணன் அவளிடம் "அழகிய பெண்ணே! யாருக்காக இந்த சந்தனங்களை எடுத்துச் செல்கிறாய். உண்மையாகக் கூறு" என்றான். அவன் வசீகரமான தோற்றத்தைக் கண்டு மயங்கிய அந்தக் கூனி "அன்பானவரே! உங்களுக்குத் தெரியாதா. த்ரிவக்ரா எனும் நான் கம்ஸனுக்குப் பணிவிடை செய்பவள். கூன் விழுந்துள்ளதால் இந்த வேலைக்குப் பணிக்கப்பட்டுள்ளேன். சந்தனக் கலவையில் நான் வல்லவள். என்னைத் தவிர வேறெவர் தரும் சந்தனத்தையும் அரசர் விரும்பமாட்டார். எனவே அவரது அன்பிற்குப் பாத்திரமானவள் நான்" என்றாள்.

"அழகிய முகம் படைத்தவளே! அரசர்கள் பூசிக் கொள்ளும் வாசனை பொருந்திய இந்த சந்தனத்தை எங்களுக்கு உடலெங்கும் பூசிக் கொள்ளத் தேவையான அளவு தா" என்று க்ருஷ்ணன் அவளிடம் கேட்டான். அவள் இவர்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று வெவ்வேறு சந்தனங்களைக் கொடுத்தாள். அவைகளையெல்லாம் செயற்கை மணம் சேர்த்தது இது, வாசனை இல்லாதது இது, எங்களுக்குத் தகுந்தது அல்ல இது என்று பல காரணங்களைக் கூறி அவளை ஆச்சர்யப்படுத்திய கண்ணன் மீண்டும் அவளிடம் வெண்ணிறத்திலும், கரு நிறத்திலும் இருக்கும் தங்களுக்குத் தகுந்த சந்தனத்தைத் தருமாறு யாசித்தான். எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி, அவளும் பெரு மகிழ்வோடு உயர்ந்த ரக சந்தனங்களை எடுத்து அவர்கள் உடலெங்கும் பூசிக் கொள்ளும் அளவிற்குத் தந்தாள்.

சந்தனங்களை உடலெங்கும் பூசிக் கொண்டு வெண் நிறத்திலும், கரு நிறத்திலும் இருக்கும் மேகங்கள் போன்றும், இந்த்ர தனுஸ் போன்றும் விளங்கினர் இருவரும். இதற்கு ப்ரதியாக க்ருஷ்ணன் அவள் கால்களைத் தன் கால்களால் மிதித்துக் கொண்டு, தன் கட்டை விரல், மேலும் இரு விரல்களால் அவள் தாடையைப் பிடித்து அவளை நிமிர்த்தினான். அவன் திருவருளால் கூன் நிமிரப் பெற்ற அவள் மேலும் அழகு பெற்று விளங்கினாள். நன்றியும், ஆசையும் கொண்ட உடனே அவள் க்ருஷ்ணனின் துணிகளைப் பற்றி இழுத்து அவனைத் தன் இல்லத்திற்கு வருமாறு அழைத்தாள். அண்ணாவை வெட்கத்தோடு நோக்கிய கண்ணன் அவளிடம் இன்னொரு ஸமயம் நிச்சயம் வருவதாக புன்சிரிப்போடு கூறி அவளை அனுப்பி விட்டு, மீண்டும் அண்ணாவின் முகத்தைப் பார்த்து உரக்கச் சிரித்துக் கொண்டான்.

இதன் பின் வில்லிருக்கும் அலங்காரமான சபையை அடைந்த அவர்கள் அங்கிருந்த காவலாளியிடம் எந்த வில்லை முயற்சிக்க வேண்டும் என்று விசாரித்தறிந்தார்கள். க்ருஷ்ணன் அதைக் லாவகமாகக் கையிலெடுத்து நாண் ஏற்றிய போது அது மதுரையே அதிர பெரும் சப்தத்துடன் இரண்டாக முறிந்து விழுந்து விட்டது. இதனால் கோபம் கொண்டு தங்களுடன் சண்டை போட வந்த காவலாளிகள் அனைவரையும் இந்த இருவரும் கொன்று போட்டு விட்டு சபையை விட்டு வெளியேறினர். அக்ரூரர் வந்து விட்டதையும், வில் ஒடிந்து விழுந்த செய்தியையும் கேட்டு குழந்தைகளின் வரவை நிச்சயித்துக் கொண்ட கம்ஸன் உடனே சாணூரனையும், முஷ்டிகனையும் அழைத்தான்.

அவர்களிடம் "என்னைக் கொல்வதற்காகவே இரு இடைச் சிறுவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களை நீங்களிருவரும் நடக்கவிருக்கும் மல்யுத்தப் போட்டியில் ந்யாயமாகவோ அல்லது அன்யாயமாகவோ கொன்று வீழ்த்தி விட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். நீங்கள் விரும்பும் எதையும் நான் உங்களுக்குத் தருவேன். அவர்கள் அழிந்து விட்டால் அதன் பின் நீங்கள் என்னோடு கூடி இந்த ராஜ்யத்தையே அனுபவிக்கலாம், இது நிச்சயம்" என்று கட்டளையிட்டு விட்டு, அதன் பின் நீர் கொண்ட மேகம் போல் இருக்கும் குவலயாபீடம் என்ற தனது யானையைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாகனை அழைத்து அந்த யானையை மைதானத்தின் வாசலில் நிறுத்துமாறும், ராம க்ருஷ்ணர்கள் மைதானத்துள் நுழையும் போது அந்த யானையை ஏவி விட்டு அவர்களிருவரையும் கொன்று விடுமாறும் கட்டளைகளைப் பிறப்பித்தான்.

அதன் பின் மைதானத்தில் ஆஸனங்கள் அமைப்பைச் சரிபார்த்து விட்டு, ஸூர்யோதயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் தன் இறுதிக் காலம் நெருங்குவதை அறியாத கம்ஸன். பொழுது புலர்ந்தது. மைதானத்தில் மக்கள் நிறைந்தனர். மக்களும், இளவரசர்களும், மந்த்ரிகளும், மல்யுத்த பரிக்ஷைக்கான அதிகாரிகளும், அரண்மனைப் பெண்களும், அந்தப்புரத்துப் பெண்களும், நகரத்துப் பெண்களும், வெளியூரிலிருந்து வந்திருப்பவர்களும் இப்படிப் பலரும் அவரவர்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில் அவரவர்களுக்குரிய ஆஸனங்களில் அமர்ந்தனர். பரிக்ஷாதிகாரிகளுக்கு அருகிலேயே உயர்ந்த ஒரு ஆஸனத்தில் கம்ஸன் அமர்ந்திருந்தான். நந்தனும், மற்ற கோபர்களும் அவர்களுக்கான இடத்தில் அமர்ந்தனர். அதன் கடைசியில் அக்ரூரரும், வஸுதேவரும் அமர்ந்து கொண்டனர்.

நகரத்தார்களின் மனைவிகளோடு, பிறந்ததிலிருந்தே தன் குழந்தையைத் தொலைத்துத் தவித்திருக்கும் தேவகியும், இறுதிக் காலத்திலாவது அதன் அழகு முகத்தைக் கண்டு விடவேண்டும் என்று துக்கத்தோடும், ஆசையோடும் அமர்ந்திருந்தாள். வாத்யங்கள் முழங்கின. சாணூரன் குதித்து எழுந்தான். முஷ்டிகனும் தன் தோள்களைத் தட்டிக் கொண்டு வந்தான். மக்களின் பெரும் ஆரவாரம் எழுந்தது. அப்போது இரு இளம் சிங்கங்களைப் போல் ராம, க்ருஷ்ணர்கள் அங்கே ம்ருகங்களுக்கு மத்தியில் உலவுவது போல், சிரித்துக் கொண்டே நுழைந்தனர். அப்போது அவர்களை நோக்கி வேகமாக குவலயாபீடம் பாகனால் ஏவப்பட்டு ஓடி வந்தது. இதைக் கண்டதும் பார்வையாளர்கள் பெரும் கூக்குரலிட்டனர்.

பலராமன் உடனே அதைக் கொன்று விடக் கூற, கண்ணன் அதன் தும்பிக்கையைப் பற்றி அதை பெரும் சப்தத்துடன் சுற்றினான். பின் அதனிடம் அகப்படாமல் அதன் தந்தங்களுக்கு நடுவில் சிறிது விளையாடினான். பின் அதன் இடது பக்க தந்தத்தை க்ருஷ்ணனும், வலது பக்க தந்தத்தை பலராமனும் பறித்தார்கள். அதனாலேயே அவர்கள் அதன் பாகர்களை அடித்துக் கொன்றார்கள். பிறகு பலராமன் உயர எழும்பி தன் இடக்காலால் குவலயாபீடத்தின் தலையில் ஒரு உதை விட்டான். அதைத் தாங்கவொண்ணாத அந்தப் பெரும் யானை இந்த்ரனால் வீழ்த்தப்பட்ட மலையைப் போல் விழுந்து இறந்தது. இதைக் கண்ட பார்வையாளர்கள் ஹா, ஹா என்று ஆரவாரம் செய்தனர். ராம, க்ருஷ்ணர்களின் மேனியெங்கும் அந்த மதயானையின் மதஜலமும், ரத்தமும் பூசியிருந்தது. அதன் தந்தங்களையே தங்களுக்கு சிறந்த ஆயுதமாகக் கொண்டு விளங்கினர் இருவரும்.

பார்வையாளர்கள் "இவர்கள் தான் அவர்கள், இது க்ருஷ்ணன், அது பலராமன். இவனால் தான் அந்த கொடும் ராத்திரி பிசாசு பூதனை கொல்லப்பட்டாள். இவர்களால் தான் அந்த சகடாஸுரன் கவிழ்க்கப்பட்டான். இரு மருத மரங்கள் தள்ளப்பட்டன. இந்தச் சிறுவன் தான் காளியன் மீது நடனமாடியவன். கோவர்த்தன கிரியை ஏழு நாட்கள் தூக்கிக் கொண்டிருந்தவன். விளையாட்டாக அரிஷ்டன், தேணுகன், கேசினியைக் கொன்றவன். நாம் பார்ப்பது அச்யுதன் தான்" என்று ராம, க்ருஷ்ணர்களைப் பற்றிப் பலவாறு வர்ணித்தனர்.

"கோபாலனான இவனே தாழ்ந்திருக்கும் நமது யாதவ குலத்தை மேம்படுத்தப் போகிறான். எங்கும் நிறைந்து, அனைத்தையும் படைக்கும் விஷ்ணுவின் அம்சமே இவர்கள், இவர்கள் நிச்சயம் தீயவர்களை ஒழித்து, பூபாரத்தைப் போக்குவார்கள்" என்று புராணமறிந்தவர்கள் பேசிக் கொண்டனர். அவர்களைக் கண்ட தேவகியின் நெஞ்சம் பாசத்தால் நிரம்பியது. வஸுதேவர் அவர் மூப்பையும் மறந்து மீண்டும் இளமையடைந்தது போல் அவர்களைக் கண்டு ஸந்தோஷித்தார். பலராமன் பெண்களின் மனதிற்கும், பார்வைக்கும் இனிமையாக இருந்தான். அந்தப்புரத்துப் பெண்களும், நகரத்துப் பெண்களும் கண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தனர். யானையோடு செய்த சண்டையால் அவன் முகத்தில் வியர்வைத் துளிகள் இருந்தது, பனித்துளிகள் தோய்ந்த தாமரைப் போலிருந்தது.

"சிவந்த கண்களோடு பொலியும் அந்த முகத்தைக் காணுங்கள், அவைகள் பயனைப் பெறட்டும்" என்று அருகிலிருக்கும் பெண்களுக்கும் அவனைக் காட்டுகின்றனர் அங்கிருக்கும் பெண்கள். "ஆச்சர்யமான மரு பொருந்திய, ஒளிரும் அவன் மார்பைப் பாருங்கள். பகைவர்களை அடித்துக் கொல்லும் அவன் திரண்ட புஜங்களையும் பாருங்கள். அவன் கூட இருக்கும் பலராமனைப் பாருங்கள். பால், சந்த்ரன், தாமரையின் தண்டு போன்று வெளுத்திருக்கும் அவன் மேனியைப் பாருங்கள். அவனுடைய நீல நிறப் பட்டாடையைப் பாருங்கள், சாணுரனையும், முஷ்டிகனையும் எப்படி அலக்ஷ்யமாக சிரித்து கொண்டே பார்க்கிறார்கள் பாருங்கள்" என்றெல்லாம் வர்ணித்துக் கொண்டிருந்த அவர்கள்,

"ஆஹா, சாணூரன் க்ருஷ்ணனை நோக்கி வருகிறானே. அவனோ வஜ்ராயுதம் போல் இருக்கிறான். க்ருஷ்ணனோ வெண்ணையையே தின்று, ம்ருதுவாக, சிறுவனாக இருக்கிறான். இந்த யுத்தம் சற்றும் பொருத்தமே இல்லாமல் இருக்கிறதே, இதை இந்த சபையில் பெரியவர்கள் யாருமே தடுத்து நிறுத்தவில்லையே, பலராமனும் அப்படியே. குழந்தைகளுக்கும், அஸுரர்களுக்கும் இடையே பொருத்தமில்லாதவாறு நடக்கும் இந்த யுத்தத்தை நடுநிலையாளர்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனரே, என்ன அன்யாயம் இது" என்று பரிந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது க்ருஷ்ணன் சாணூரனையும், பலராமன் முஷ்டிகனையும் எதிர்க்க ஆயத்தமாகத் தங்கள் வஸ்த்ரங்களை நன்கு இழுத்துக் கட்டிக் கொண்டு, மைதானத்தின் நடுவே பூமியே பிளந்து விடும்படி கூத்தாடினர்.

ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும், இழுத்துக் கொண்டும், அடித்துக் கொண்டும், ஒருவர் மீது ஒருவர் விழுந்தும், முழங்கை, மணிக்கட்டு, முட்டிக்கை, முழங்கால், கால் முட்டி இவைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளுதல் என மல்யுத்தத்தின் பல முறைகளைக் கொண்டு இவர்கள் யுத்தம் செய்து கொண்டிருந்தது மிகவும் பயங்கரமாகவும், கொடுமையானதாகவும் இருந்தது. எந்த வித ஆயுதங்களுமின்றி, மன பலம், உடல் பலத்தை மட்டுமே கொண்டு வாழ்வா, சாவா என அந்த யுத்தம் நடந்து கொண்டிருந்தது. க்ருஷ்ணன் பெரும் கோபத்துடன், அனாயாஸமாக உற்சாகத்துடன் சாணூரனைப் பலம் குறைந்தவனாக்கிக் கொண்டு வந்தான். தலைமயிர்கள் அங்குமிங்கும் அலைபாய பார்ப்போரைக் கவர்ந்து கொண்டு விளையாட்டாக யுத்தம் செய்து வந்தான் க்ருஷ்ணன்.

போட்டியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வரும் கம்ஸன் சாணூரன் பலம் குறைவதையும், க்ருஷ்ணன் பலம் அதிகரித்து வருவதையும் கண்டான். வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக முழங்கிக் கொண்டிருந்த வாத்யங்களை கோபம் கொண்டு நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டான். இவர்கள் வாத்யங்களை நிறுத்தியதும் வானிலிருந்து தேவர்கள் வாத்யங்களை உற்சாகமாக முழங்கிக் கொண்டு "க்ருஷ்ணா! கேசவா! உனக்கே வெற்றி, சாணூரனைக் கொன்று விடு" என்று ஜயகோஷமிட்டனர். வெகுநேரம் சாணூரனோடு விளையாடிக் கொண்டிருந்த க்ருஷ்ணன் அவனைக் கொன்று விடத் தீர்மானித்து, அவனைக் கடைசியாக ஆகாசத்திலே தூக்கி, நூறு முறைகள் சுழற்றி, அவன் உயிர் பிரிந்து காற்றில் கலந்ததும், அவன் உடலை பல கூறுகளாகச் சிதறும்படி கொடுமையான முறையில் தரையில் பல முறை துவைத்து, அவன் ரத்தத்தால் பூமி சேறாகும்படிச் செய்து அவனைக் கொன்று போட்டான்.

அதே ஸமயத்தில் பலராமனும் முஷ்டிகனைத் தலையில் முட்டியால் அடித்தும், மார்பில் முழங்காலால் இடித்தும், உயிர் போகச் செய்து, அவன் உடலைப் பிழிந்து, பூமியில் எறிந்தான். இவர்களை எதிர்த்து வந்த தோமலகன் என்பவனையும் கண்ணன் தன் இடக்கை முட்டியாலேயே கொன்றான். இவர்கள் மூவரும் இப்படி இறந்ததைக் கண்டு மற்றெவரும் அங்கு மைதானத்தில் நிற்கவில்லை. பறந்தோடி விட்டார்கள். எதிர்க்க எவருமே இல்லாத நிலையில் கண்ணனும், சங்கர்ஷணரும் மகிழ்ச்சியில் தங்கள் வயதொத்த இரு இடைச் சிறுவர்களை இழுத்துக் கூத்தாடி, கும்மாளமிட்டனர் அந்த அரங்கத்தில். இவர்கள் இப்படி அரங்கத்தில் இடைச் சிறுவர்களோடுக் கூத்தாடுவதைக் கண்ட கம்ஸன் கண்கள் சிவக்கப் பெருங்கோபம் கொண்டான்.

"ஆடு மேய்க்கும் இந்த இரண்டு சிறுவர்களையும் சபையை விட்டு வலுவாக வெளியேற்றுங்கள். இவர்களை இப்படி வளர்த்த அந்தக் கொடியவன் நந்தனையும் இரும்புச் சங்கிலியில் பிணைத்துச் சிறை பிடியுங்கள். கூட இருந்து கொண்டே எனக்குத் தீங்கிழைத்த அந்தக் கிழவன் வஸுதேவனையும் தயக்கமின்றி அவ்வாறே தண்டியுங்கள். இன்னும் க்ருஷ்ணனால் கர்வம் பிடித்துத் திரியும் இந்த இடையர்களிடமிருக்கும் பொருள்களையும், பசுக்களையும் சூறையாடுங்கள்" என்று உரக்கமாக அருகிலிருந்தவர்களிடம் கட்டளைகளைப் பிறப்பித்தான் கம்ஸன். இந்த கட்டளைகளைக் கேட்ட கண்ணன் சிரித்துக் கொண்டே கம்ஸன் அமர்ந்திருந்த உயர்ந்த மஞ்சத்தின் மேல் பாய்ந்தான். அவ்வளவு உயரத்திலிருந்த அவனிடம் பாய்ந்த க்ருஷ்ணன் அவன தலைமயிரைப் பிடித்திழுத்து, க்ரீடத்தைத் தள்ளி விட்டு, அவனைக் கீழே தள்ளி, தானும் அவன் மேல் குதித்தான்.

உலகையே தன் உதரத்தில் தரிக்கும் க்ருஷ்ணன் தன் மீது அப்படி குதித்த பாரம் தாங்காது, உக்ரஸேனனின் மகன், கம்ஸமஹாராஜனின் ஆவி அங்கேயே பிரிந்தது. அவனது இறந்த உடலையும் கோபத்தோடு க்ருஷ்ணன் அந்த மைதானமெங்கும் இழுத்துச் சென்ற வழியெங்கும் காட்டு வெள்ளம் உண்டாக்கிய அகழி போலானது. கம்ஸன் கதி இப்படியானதைக் கண்டு கோபத்தோடு ஓடி வந்த அவன் தம்பி ஸுநாமா என்பவனையும் பலராமன் எளிதில் அடித்துக் கொன்றான். இவர்கள் இப்படி அனாயாஸமாக கம்ஸனை வீழ்த்தியதைக் கண்ட, சூழ்ந்திருந்த ஜனத்திரள் பெரும் மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். அதன் பின் க்ருஷ்ணன், பலராமனுடன் சேர்ந்து வஸுதேவரையும், தேவகியையும் பாதம் தொழுது நின்றனர். பிறந்த போதே தங்களிடம் கண்ணன் கூறியவைகளை நினைவு கூர்ந்த அவர்கள், இருவரையும் தூக்கித் தழுவிக் கொண்டனர்.

வஸுதேவரும் தேவகியும் இப்போது ஜனார்த்தனனை வணங்கி "தேவதேவா! தேவர்களைக் கொடுத்த வரத்தைக் காக்க, எங்களிடம் அவதரித்து எங்களையும் அனுக்ரஹித்தாய். தீயவர்களை அழிக்க எங்கள் இல்லத்தில் பிறந்த உன்னை நாங்களும் கொண்டாடுகிறோம். எங்கள் குலம் புனிதமடைந்தது. நீயே அனைத்திற்கும் ஆத்மாவாகவும், அனைத்துமாகவும் இருக்கிறாய். உன்னிடமிருந்தே அனைத்துலகங்களும் உண்டாயின, உண்டாகப் போகின்றன. யாகமும், யாகதேவதையும், யாகம் செய்பவனும் நீயே. இப்படிப்பட்ட உன்னை பாசத்தால், மாயையால், தவறுதலால் குழந்தையாக, பிள்ளையாக நானும், தேவகியும் நினைக்கிறோம். எவனுக்கு முதலும், முடிவும் இல்லையோ, எவன் அனைத்தையும் படைக்கிறானோ அவனைத் தன் பிள்ளையாக எந்த மனிதனின் நாக்கு அழைக்கும்.

உலகே உன்னிடமிருந்து தோன்ற, நீ எங்களிடம் தோன்றியது மாயையால் தானே. அசையும் பொருளும், அசையா பொருள்களும் உன்னிடம் அடங்கியிருக்க நீ கருப்பையிலும், எங்கள் மடியிலுமாகத் தவழ்ந்து விளையாடினாயே. எங்களையும், இந்த உலகமனைத்தையுமே மாயையால் மோஹிக்கச் செய்கிறாயே. நீ எங்களுக்கு மகனல்ல. ப்ரஹ்மன் முதல் இங்கிருக்கும் மரம் வரை அனைத்தும் நீயே. மாயை கண்ணை மறைக்க, நான் உன்னை என் மகனென நினைத்தேன். எந்த பயத்தையும் போக்கவல்ல உன்னை, கம்ஸனிடமிருந்துக் காப்பாற்றுவதாக எண்ணி, கோகுலத்தில் சென்று சேர்த்தேன். அங்கு நீயே வளர்ந்தாய். எந்தப் பங்கும் இல்லாத நாங்கள் உன்னை எங்களுடையவன் என்று எப்படிக் கூற இயலும். நீயே விஷ்ணு, இந்த உலகைக் காப்பவன். உன் செயல்களை ருத்ரனும்,மருத்துக்களும், அச்வினிகளும், இந்த்ரனும், இன்னும் எவரும் செய்ய இயலார். அப்படிப்பட்ட உன் திருவிளையாடல்களை எங்கள் கண்களாலேயே கண்டோம். லோகக்ஷேமத்திற்காக எங்கள் புத்ரனாகப் பிறந்துள்ள உன்னை உள்ளபடி அறிந்தோம். எங்கள் அக்ஞானம் தொலைந்தது" என்று துதித்தனர்.

Tuesday, February 23, 2010

விஷ்ணு புராணம் - 99

05_19. யமுனையில் மூழ்கியிருந்தவாறே க்ருஷ்ணனைத் துதித்தார் அக்ரூரர். மானஸீகமாக புஷ்பங்களால் அர்ச்சித்து, தூப உபசாரங்களைச் செய்தார். மற்றதையெல்லாம் மறந்து வெகுநேரம் அவர் மனம் அந்த பரப்ரஹ்மத்தினிடமே நிலைத்திருந்தது. இப்படி த்யானத்தில் இருந்து விட்டுப் பின் ஆத்ம லாபம் பெற்றதை நினைத்துக் கொண்டே நீரிலிருந்து வெளியேறி தேரிருக்கும் இடத்தை அடைந்தார். ஒன்றுமறியாத குழந்தைகளாக அங்கே தேரில் பலராமனும், க்ருஷ்ணனும் இருக்கக் கண்டார். அவரது ஆச்சர்யமான பார்வையைப் பார்த்த கண்ணன் "அக்ரூரரே, உமது கண்கள் மலர்ந்திருக்கின்றனவே. ஏதோ அற்புதமான ஒன்றைப் பார்த்தால் தான் கண்கள் இப்படியாகும். யமுனை நீரில் என்ன அற்புதத்தைக் கண்டீர்" என்றான்.

அக்ரூரர் "கண்ணா! நீரினுள் நான் எந்த அற்புதத்தைக் கண்டேனோ அதுவேதான் இதோ என்னெதிரில் உருக்கொண்டிருக்கிறது. உலகையே உடலாகக் கொண்ட பரமாத்மாவாகவேதான் நீ காட்சி தருகிறாய். அங்கும் இங்கும் ஒரே பரம்பொருளுடன் தான் நான களித்திருக்கிறேன். ஆனாலும் இப்போது என்னை கம்ஸ பயம் வாட்டுகிறது. உன் விளையாட்டால் நேரமும் ஆகிவிட்டது. இனிமேல் கம்ஸன் நேரமாகிவிட்டதே என்று கோபிப்பான். அடுத்தவரிடம் வேலை செய்து அவர்கள் தருவதைக் கொண்டு ஜீவனம் செய்யும் எவர்க்கும் இதுதான் கதி. எனவே நாம் விரைந்து மதுரையை அடைவோம்" என்று கூறிக் கொண்டு, தேரிலேறி குதிரைகளை விரட்டினார்.

மாலைப் பொழுதில் மதுரை நகர எல்லையை வந்தடைந்ததும், அக்ரூரர் ராம, க்ருஷ்ணர்களிடம் "நீங்களிருவரும் நடந்தே கம்ஸன் மாளிகைக்கு வாருங்கள். நான் தேரில் செல்கிறேன். வாஸுதேவர் க்ருஹத்திற்குச் செல்லாதீர்கள். ஏற்கனவே அவர் உங்களால் பல துன்பங்களை கம்ஸனிடம் அனுபவித்து வருகிறார். எனவே நேராக கம்ஸன் மாளிகைக்கே வந்து விடுங்கள்" என்று கூறிவிட்டுத் தான் மட்டும் தேரில் கம்ஸனிடம் சென்றார். ராம, க்ருஷ்ணர்கள் ராஜ வீதியில் நடந்து செல்லலானார்கள். வழியெங்கிலும் ஆண்களும், பெண்களுமாக பலர் நின்று இவர்களைத் தர்ஸித்து ஆனந்திக்க, இரு இளம் யானைகள் போல இவர்கள் விளையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்தனர்.

வழியில் கம்ஸனுக்குத் துணிகளை எடுத்துச் செல்லும் வண்ணான் சென்று கொண்டிருந்தான். அவன் வைத்திருக்கும் உயர்ந்த வஸ்த்ரங்களைப் பார்த்ததும், தங்களுக்கு உடுத்திக் கொள்ள அவற்றில் இரண்டைத் தருமாறு அவனிடம் புன்சிரிப்புடன் கேட்டனர். கம்ஸனின் ஆதரவில் இருக்கும் அவன் இவர்கள் இருவரையும் வாயில் வந்தபடி தீய சொற்களால் அர்ச்சித்தான். இதனால் கோபம் கொண்ட கண்ணன் அவனை அங்கேயே அடித்துக் கொன்று போட்டான். பொன்னிறப் பட்டாடை ஒன்றை எடுத்து க்ருஷ்ணனும், நீல நிறத்தில் ஒன்றை பலராமனும் உடுத்திக் கொண்டு, ஒரு பூக்கடைக்காரனிடம் சென்றனர் இருவரும். அவன் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

இவர்கள் யாராக இருக்கக் கூடும், எங்கிருந்து வந்திருப்பார்கள் என்று திகைப்போடு யோசித்தான். இவ்வளவு அழகாக பொன்னிறத்திலும், நீல நிறத்திலும் பட்டாடைகள் அணிந்து வந்திருக்கும் இவர்கள் பூலோகத்திற்கும் வந்திருக்கும் தேவர்களோ என்று நினைத்தான். குழந்தைகள் அவனிடம் கொஞ்சம் பூக்கள் கேட்டதும் அவன் மகிழ்ச்சியில் துள்ளினான். கீழே விழுந்து கைகூப்பி, சிரஸால் அவர்களை வணங்கினான். "தெய்வங்கள் பெருங்கருணையோடு என்னை உய்விக்க என் வீட்டிற்கே வந்திருக்கின்றன. எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன் நான். இவர்களுக்கு நன்கு மரியாதை செய்வேன்" என்று கூறிக் கொண்டே அந்த பூக்காரர் பலமுறை அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கியபடி, ஸந்தோஷமான முகத்தோடு, குழந்தைகள் விரும்பியபடி, அவர்கள் த்ருப்தி அடையும்படி, உயர்ந்த, பல வண்ணங்களில், அழகழகாக, பல வாசனைகளில், புத்தம் புதிதாக பூக்களை எடுத்து, எடுத்து அவர்களிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி இந்த பூக்காரரின் உபஸரிப்பில் பெரிதும் மகிழ்ந்த க்ருஷ்ணன் "நண்பா, புண்யம் செய்தவனே, என்னை அர்ச்சித்த உன்னை நான் ஒரு போதும் கைவிடேன். லக்ஷ்மி உன்னிடம் எப்போதும் நிலையாக இருப்பாள். உனக்கு சோர்வோ, பொருட்குறைவோ ஒருபோதும் நேராது. உன் ஸந்ததிகள் மேன் மேலும் பெருகும். பூலோகத்தில் பல போகங்களையும் அனுபவித்து, இறுதியில் என்னையே த்யானத்து, என் அனுக்ரஹத்தால் உயர்ந்த லோகத்தை அடைவாய். உன் மனம் எப்போதும் தர்மத்திலேயே லயித்திருக்கும். நீயும் உன் ஸந்ததிகளும் எந்தவொரு இயற்கை உபாதைகளும் அண்டாது, நீண்ட ஆயுளோடு வாழ்வீர்களாக" என்று பல ஆசிகளை அவனுக்கு அருளிச் செய்து விட்டு, பலராமனோடு அங்கிருந்து சென்றான்.

விஷ்ணு புராணம் - 98

05_18. இப்படி மனதால் நினைத்தபடியே கண்ணனை நெருங்கிய அக்ரூரர் "நான் அக்ரூரன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, க்ருஷ்ணனின் கால்களில் விழுந்து வணங்கினார். ஆனால் க்ருஷ்ணன் உடனே அவரை கொடியும், தாமரைச் சின்னங்களும் பொறிக்கப் பெற்ற தன் கைகளால் வாரி அன்பாக அணைத்துக் கொண்டான். அதேபோல் பலராமனையும் வணங்கினார். அவர்கள் அக்ரூரரைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களோடு உணவு உட்கொண்டு கௌரவமாக நடத்தப்பட்டார் அக்ரூரர். அவர்களிடம் உக்ரஸேனன், வஸுதேவன், இளவரசி தேவகி ஆகியோருக்குக் கம்ஸன் செய்த தீமைகளை எல்லாம் கூறிக் கொண்டிருந்த அக்ரூரர் தான் வந்த காரணத்தையும் கூறினார்.

இவையனைத்தையும் கேட்ட கேசவர் "இவையனைத்தையும் நான் முன்னமே அறிவேன். செய்ய வேண்டியதை விரைவில் செய்வேன். ஏதாவது மாறாக நடந்து விடுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இப்போதே கம்ஸன் அழிந்ததாக நினையுங்கள். நாளை நானும், பலராமனும் உங்களோடு கூடி மதுரை செல்வோம். கோபர்களில் மூத்தவர்களும் காணிக்கைகளோடு வரட்டும். இன்றிலிருந்து மூன்று இரவுகளுக்குள் கம்ஸனை அவன் கூட்டத்தாரோடு அழிப்பேன். நீங்கள் கவலைகளை விட்டொழித்து நிம்மதியாக இங்கு எங்களுடனேயே உறங்குங்கள்" என்று கூறினார். இதன் பின் அக்ரூரர் கம்ஸனின் உத்தரவுகளை கோபர்களிடன் தெரிவித்து விட்டு ராம, க்ருஷ்ணர்களோடு நந்தகோபரின் மாளிகையிலேயே சுகமாகப் படுத்து உறங்கினார்.

பொழுது விடிந்தது. அக்ரூரர் காலைக்கடன்களை முடித்துக் கொண்டார். ராம, க்ருஷ்ணர்களும் மகிழ்வோடு மதுரைக்குப் புறப்பட்டனர். இதையறிந்ததும் கோபியர்கள் கண்ணீர் விடலாயினர். க்ருஷ்ணன் பிரிவை நினைத்ததும் அவர்கள் கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழுந்தன. "மதுரை சென்று விட்டால் அவன் எப்படி திரும்பி வருவான். ஒரு போதும் வர மாட்டான். அழகிய நாகரிக மங்கைகளின் அபிநயங்களோடு கூடிய தேன் மொழி வார்த்தைகளைப் பருகுவான். பட்டிக்காட்டுப் பெண்களான கோபியர்களிடம் இனி அவன் மனம் எப்படித் திரும்பும். நம்மை நினைக்கவும் மாட்டான். நம் அனைவருக்கும் ஸாரமான இவனை நம்மிடமிருந்து பிரித்து நகரத்துப் பெண்களின் நளினமான பேச்சு, வெளிப்படையான சிரிப்பு, அழகான தோற்றம், அர்த்தமுள்ள பார்வை இவைகளிடம் சேர்ப்பதால் அபலைகளான நம்மை இரக்கமில்லாத விதி அடித்து விட்டது.

மதுரை நகரத்துப் பெண்களின் பேச்சுக்கள் பாவங்கள் நிறைந்து, புன்சிரிப்போடு இருக்கும். அவர்கள் நடையும் அழகழகாயிருக்கும். பார்வைகள் கருத்தைக் கவர்ந்து விடும். க்ராமத்திலேயே பிறந்து வளர்ந்த கண்ணன் இவைகளைக் கண்டவுடன் மயங்கி, நம்மிடம் திரும்பப் போவதில்லை. இதோ, இதோ நம் கண் முன்னாலேயே கண்ணன் தேரிலேரி மதுரை செல்கிறானே. இந்த அக்ரூரர் என்பவர் நம்மை ஏமாற்றி விட்டார். இவருக்கு யார்தான் அக்ரூரர் (க்ரூரம் இல்லாதவர்) என்ற பெயரை வைத்தார்களோ. இவரை விட கொடியவர் யாரும் இருக்க மாட்டார்கள். நாமனைவரும் கண்ணனிடம் வைத்திருக்கும் அன்பை க்ரூரரான இந்த அக்ரூரர் அறியவில்லையா. கண்களுக்கு பரமானந்தத்தைத் தரும் இவனை நம்மிடமிருந்து பிரித்துச் செல்கிறாரே.

இந்தக் கண்ணனாவது நம்மீது தயை கொண்டு பிரியாமல் இருக்கக் கூடாதா. அவனும் சிறிதும் கருணையின்றி அண்ணனுடன் தேரிலேறிச் செல்கிறானே. யாராவது இவனைத் தடுக்கக் கூடாதா. நம் பெரியவர்களிடம் இவன் பிரிவை நம்மால் தாள முடியாது என்று சொல்லலாமா. அவன் பிரிவில் வாடும் நமக்கு அவர்களால் என்ன உதவி செய்ய முடியும். நந்தகோபன் தலைமையில் அவர்களும் தான் உடன் புறப்படுகிறார்கள். ஒருவரும் கோவிந்தனை இங்கேயே நிறுத்துவதற்கு முயலவில்லையே. இன்றைய இரவு கழிந்து, விடியும் பொழுது மதுரைப் பெண்களுக்கு மகிழ்வைத் தரப் போகிறது. தங்கள் கண்களாகிற வண்டுகளால் அச்யுதனின் முகமாகிற தாமரையைப் பருகிக் களிக்கப் போகிறார்கள் அவர்கள்.

மெய் மறந்து, கட்டுண்டு, கண்ணனோடு ஒரு தடையுமின்றி வழி நெடுக செல்லப் போகும் அவர்கள் பாக்யமுள்ளவர்கள். கண்ணனை நெருங்கி நின்று வணங்குவார்கள். நகரத்துப் பெண்களின் கண்கள் இமைக்காமல் க்ருஷ்ணனைக் கண்டு ஆனந்திக்கப் போகின்றன. ப்ரஹ்மன் ஒரு பெரும் நிதியை நம் கண்களில் காட்டி விட்டு அதை அனுபவிக்க விடாமல் பறித்து விட்டான். கண்ணனின் அன்பு எங்களை விட்டுப் பிரிவதைப் போல் வளையல்களும் எங்கள் கைகளை விட்டுக் கழலுகின்றனவே. இந்த க்ரூர அக்ரூரர் குதிரைகளை மெதுவாக ஓட்டக் கூடாதா. பெண்களை வருந்தவைக்கவே இந்த தயையில்லாத சதி நடக்கிறது. அந்தோ, தேர்ச் சக்ரங்களின் புழுதி மட்டும் தெரிகிறதே. வெகு தூரம் சென்று விட்டானே, புழுதியும் இப்போது காணவில்லையே" என்றெல்லாம் கோபியர் பொருமிக் கொண்டும், கதறிக் கொண்டும் இருக்க கேசவனும், ராமனும் சேரியின் எல்லையைத் தாண்டி சென்றார்கள்.

விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர் மதியம் யமுனைக் கரையை அடைந்தது. ரதத்தை நிறுத்தி விட்டுக் கீழிறங்கிய அக்ரூரர் "குழந்தைகளே! தேரிலேயே உட்கார்ந்து கொண்டிருங்கள். கீழே இறங்கினால் ஜலத்தில் விழுந்து விடுவீர்கள், நான் ஸ்னான, மாத்யாஹ்னிகங்களை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று ராம, க்ருஷ்ணர்களிடம் கூறிவிட்டு, "இந்தக் குழந்தைகள் எப்படி அந்த முரடன் கம்ஸனைக் கொல்வார்கள். வீணாக அழைத்து வந்து விட்டேனே" என்று மனதினுள் வருந்திக் கொண்டே, யமுனையில் இறங்கி, ஆசமனம் செய்து, பரப்ரஹ்மத்தைத் மனதால் த்யானித்து குளிப்பதற்காக நீரில் மூழ்கினார்.

அங்கே நீரினுள் ஆயிரம் தலைகளோடு ஆதிசேஷன் உருவில் பலராமனைக் காண்கிறார். மல்லிகை மலர் மாலைகளோடும், சிவந்து விரிந்த கண்களோடும், வாஸுகி, ரம்பை, மற்றும் மேலும் பல பலம் பொருந்திய ஸர்ப்பங்கள் சுற்றி நிற்க, கந்தர்வர்கள் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்க, வனமாலை மார்பை அலங்கரிக்க, அடர்ந்த நிறத்தில் ஆடைகளோடு, திருமுடியில் தாமரை மலர்கள் தாங்கி, அழகான குண்டலங்களோடு மனதை மயக்குமாறு அங்கே நீரினுள் பலராமனைக் காண்கிறார். அதன் மடியிலேயே ஒய்யாரமாக, கருமுகில் நிறத்தில், சற்று சிவந்த விரிந்த கண்கள், சக்ரம் முதலான பஞ்சாயுதங்களுடன் நாற்கரங்கள், பொன்னிறப் பட்டாடை, பல நிறப் பூக்கள் கொண்ட பூமாலைகள், இந்த்ரதனுஸ்ஸும், மின்னல்களும் பெற்றுப் பொலியும் மேகம் போன்று கண்ணன்.

மார்பில் ஸ்ரீவத்ஸம், ஒளிவீசும் அணிகலன்களோடு கரங்கள், மின்னிக் கொண்டிருக்கும் க்ரீடம், கொண்டையில் வெள்ளைத் தாமரை. சுற்றிலும் ஸனந்தாதி முனிவர்கள் மூக்கின் நுனியில் பார்வையைக் கொண்டு துதித்துத் த்யானித்துக் கொண்டு நிற்க இப்படி அவர்களைப் பார்த்ததும் ஆச்சர்யமடைந்தார் அக்ரூரர். ரதத்திலிருந்த இவர்கள் எப்படி இவ்வளவு சீக்ரமாக இங்கு வர முடியும் என்று வியந்த அவர் ஏதோ கேட்க வாயெடுத்தார். வார்த்தைகளொன்றும் வெளியேறாமல் மாயம் செய்து விட்டான் கண்ணன். நீரிலிருந்து வேகமாக வெளியேறி ரதம் நின்றிருக்குமிடத்திற்குச் சென்றார். அங்கு ராம, க்ருஷ்ணர்கள் மனித உருவிலேயே அமைதியாக ரதத்தில் அமர்ந்திருக்கக் கண்டார்.

குழப்பத்தில் மீண்டும் குளிக்கச் சென்று நீரில் மூழ்கினார். அங்கு மீண்டும் அவர்களையே கந்தர்வர்களும், முனிவர்களும், சாதுக்களும், ஸர்ப்பங்களும் துதித்திருக்கக் கண்டார். அவர்களின் இயற்கைக் குணங்களின் உண்மையைப் புரிந்து கொண்டார். அவர்களை துதித்துப் பாடினார். "ஒன்றானவன், பலவானவன், எங்கும் நிறைந்தவன், பரமாத்மா, சொல்ல முடியாத புகழுடையோன், எப்போதும் இருப்பவன், அறிவிற்கெட்டாதவன், உண்மைப் பொருள், உன் குணங்கள் யாருக்கும் தெரியாது, முதற்பொருள், நீயே ஆத்மாவாகவும், விஷயங்களாகவும், பொருள்களாகவும், அணுக்களாகவும், பரமாத்மாவாகவுமிருப்பவன். நீயே ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ மூர்த்தங்களாக இருக்கிறாய். உன்னையும், உன் கார்யங்களையும் யாரும் புரிந்து கொள்ள முடியாது.

உன் பெயர் கூட தெரியாது. நீயே அது. மாற்றமில்லாதவன், நீயே க்ருஷ்ணனாகவும், அச்யுதனாகவும், அனந்தனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கிறாய். பிறப்பில்லாதவன், நீயே உலகம். நீயே கடவுள், நீயே எல்லாமும். உலகிற்கு ஆத்மாவும், உன்னையன்றி வேறொன்றும் எதிலுமில்லை. நீயே ப்ரஹ்மா, பசுபதி, அர்யமன், தாத்ரி, விதாத்ரி, இந்த்ரன், நீர், நெருப்பு, காற்று, செல்வங்களுக்கு அதிபதி, வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன்" என்று இன்னும் பலவாறுத் துதித்து அவர்களை வணங்கினார்.

Monday, February 22, 2010

விஷ்ணு புராணம் - 97

05_17. அக்ரூரர் தேர் விரைவாகச் செல்கிறது. பரமாத்மாவின் அம்சமாய் அவதரித்த ஒருவனைத் தர்ஸிக்கத் தனக்குக் கிடைத்த உயர்ந்த வாய்ப்பை, தான் பெற்ற பெறும் பேற்றை எண்ணித் தன்னைத் தானே வியந்து கொள்கிறார் அவர். "மஹா பாவியான கம்ஸனின் பணியாளாக இருந்து கொண்டு, அவன் பாவச் சோற்றையே நிதமுண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த என் பிறவி, மலர்ந்த தாமரையை ஒத்த திருமுகத்தை தர்ஸிக்க இருப்பதால் சாபல்யமடைந்தது. இதுநாள் வரை கம்ஸனின் கோர முகத்திலேயே விழித்து வந்த எனக்கு, இப்போது கண்ணனின் திருமுகத்தில் விழிக்கும்படி நேர்ந்திருப்பதற்கு நான் என்ன தவம் செய்திருக்கிறேனோ. பாவத்தைப் பெருகச் செய்யும் பாவியின் முகத்தையே கண்டு வந்திருக்கும் நான் இப்போது பாவமனைத்தையும் போக்கக்கூடியவனின் திருமுகத்தைக் காணப் போகிறேன்.

எவன் உருவை மனதில் நினைத்தாலே பாபங்கள் அனைத்தும் தொலையுமோ அவனை நான் நேரிலேயே பார்க்கப் போகிறேன். இந்த முகத்திலிருந்தல்லவா வேத, வேதாந்தங்கள் வெளிவருகின்றன. ஒளிரும் பொருள்களுக்கெல்லாம் இந்தத் திருமுகமல்லவா ஆதாரம். சந்த்ர, ஸூர்யர் இரு கண்களாக இருப்பதும் இந்த முகத்திலல்லவா. எவனால் இந்த உலகம் படைக்கப்பட்டு நிலைகொள்ளச் செய்யப்பட்டிருக்கிறதோ, எவனை சாதுக்கள் கொண்டாடுகிறார்களோ, எவன் யாக, பூஜைகளில் கொண்டாடப்படுகிறானோ அவனையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். நூறு யாகங்களால் எவனை ஆராதித்து ஒருவன் தேவேந்த்ரனாகிறானோ, அந்த ஆதி அந்தமில்லா பரம்பொருளையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். எவன் குணங்களை ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, அச்வினி, வஸுக்கள், மருத்துக்கள் எவரும் அறியாரோ அந்த ஹரி இன்று என்னைத் தொடும் பாக்யம் பெறுவேன்.

உலகிற்கு ஆத்மாவாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும், அனைத்துமாக இருப்பவனும், மறைந்தும், நிறைந்தும் இருப்பவனும், அளவிட முடியாதவனும், அழிவற்றவனுமாக இருப்பவன் இன்று என்னோடு பேசப் போகிறான். பிறப்பறியாதவனும், மீனாக, ஆமையாக, பன்றியாக, குதிரையாக, சிங்கமாகப் பிறந்து உலகைக் காத்தவனும் இன்று என்னோடு பேசப் போகிறான். பூபாலன், விருப்பப்படி தோற்றங்களை எடுக்கக்கூடியவன் இன்று எதையோ மனதில் நினைத்து அவதரித்துள்ளான். இந்த உலகையே தன் தலையில் தரித்துக் காக்கும், அவன் அண்ணன் பலராமனோ என்னை அக்ரூர என்று அழைக்கப் போகிறான்.

அறிந்தவனும், அறிய முடியாதவனுமான அவனைத் தங்கள் உள்ளத்தில் வைத்தே, யோகிகள் அறியாமையும், மாயைகளும் நிறைந்த இந்த ப்ரபஞ்சத்தைக் கடக்கிறார்கள். யாகம் செய்பவர்கள் யக்ஞபுருஷனென்றும், பக்தி முறையோடு பூஜிப்பவர்கள் வாஸுதேவனென்றும், தத்துவமறிந்தவர்கள் விஷ்ணு என்றும் எவனைத் துதிக்கிறார்களோ அவனை நான் வணங்குகிறேன். இவ்வுலகில் காரணமும், காரியமுமாயிருக்கும் அவன் என்னோடு அனுகூலமாயிருக்க வேண்டும். எவன் பிறப்பில்லாத அந்த ஹரியை நம்பிக்கையோடு, மனதால் த்யானிக்கிறார்களோ, அவன் எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கிறான்" என்றெல்லாம் இப்படிப் பலவாறு க்ருஷ்ணனைப் பற்றி மகிழ்வோடு சிந்தித்துக் கொண்டு சென்ற அக்ரூரர் ஸூர்யாஸ்தமனத்திற்கு சற்று முன்பாக, பசுக்களிடம் கோபர்கள் பால் கறந்து கொண்டிருக்கும் வேளையில் கோகுலத்தை அடைந்தார்.

காடுகளிலிருந்து ஓட்டிக் கொண்டு வந்த மாடுகளைக் கொட்டில்களில் கட்டி விட்டு பால் கறப்பதற்காக அங்கு நின்றுக் கொண்டிருந்த கண்ணனை, பசுக்களுக்கு மத்தியில், அலர்ந்த அல்லியின் நிறத்து உடலோடு, தாமரைக் கண்களோடு, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் குறியோடு, நீண்ட கைகளோடு, அகன்ற மார்போடு, உயர்ந்த மூக்குடன் இப்படி எவரையும் கவரும் தோற்றத்துடன் புன்சிரிப்போடு பொலிந்து, சிவந்த நகங்களுள்ள கால்களால் பூமியில் அங்குமிங்கும் நடந்து கொண்டு, மஞ்சள் பட்டாடையும், வனமாலைகளும், கையில் அப்போதுதான் பறித்த கொடியோடு, தலையில் வெண்தாமரை மாலையணிந்திருக்கும் நிலையில் முதன் முதலாகக் கண்டார் அக்ரூரர்.

க்ருஷ்ணனை அடுத்து, அன்னப் பறவை, மல்லிகை, சந்த்ரன் இவைகளின் நிறத்தில் உடலோடு, நீலப்பட்டாடையுடுத்தி, பெருத்த பலம் பொருந்திய கைகளோடு, மேகங்கள் சூழ்ந்த கைலாஸ மலையைப் போல், ப்ரகாசமாய் நின்றிருந்த பலராமனையும் கண்டார். கண்டதும் உடல் மயிர் சிலிர்க்க, உடல் பூரித்து நின்ற அக்ரூரர் முகம் தாமரை மலர் போல் மலர்ந்து விரிந்தது. மனதிலேயே ரமித்து வந்த இந்த இரு வாஸுதேவர்களை நேரில் கண்டதும் பக்தி பொங்கியது. கண்கள் பெற்ற பேற்றை நினைக்கிறார். "இவன் என்னைத் தீண்டினால் என் உடலும் பேறு பெற்றதாகும். எல்லாப் பாபங்களையும், தீமைகளையும் போக்குவதல்லவா அந்தக் கை, அதன் ஸ்பர்சம்.

இந்தக் கரம் தானே சக்ராயுதத்தை ஏவி, அஸுரர்களை அழித்து, உலகிற்கு நன்மை தருகிறது. வேண்டுவதை எல்லாம் அளிப்பதும் இந்தக் கரம் தானே. இந்தக் கரத்தில் நீர் வார்த்துத் தானே தேவர்களுக்கும் மேலான போகங்களைப் பெற்று மன்வந்த்ரம் முடிய அனுபவித்தான் மஹாபலி. அந்தக் கைகளால் என்னை அணைப்பானா" என்றெல்லாம் நினைத்த அக்ரூரர் "ஆஹா! அந்தப் பாபி கம்ஸனுடன் எனக்குள்ள தொடர்பால் இவன் என்னை வெறுப்பானோ. இல்லை ஏற்று என் பாபங்களைப் போக்குவானா. நல்லோர் வெறுத்து விட்டால் இந்தப் பிறவி வீணல்லவா. ஆனால் எப்போதும், எல்லோர் உள்ளத்திலும் நிறைந்திருக்கும், களங்கமற்ற தூயவனான, உண்மைப் பரம்பொருளான இந்த க்ருஷ்ணனுக்கு இந்த உலகில் தெரியாதது ஒன்றுமில்லை. என்னையும் அவனறிவான். எனவே சிறிதும் ஸந்தேஹமின்றி முழுதாக என்னை பக்தியோடு அர்ப்பணித்து, முதலும், நடுவும், இறுதியுமில்லாத விஷ்ணுவின் அம்சமான இந்த தேவதேவனிடம் செல்வேன்" என்று நினைத்து க்ருஷ்ணனிடம் சென்றார்.

Sunday, February 21, 2010

விஷ்ணு புராணம் - 96

05_16. இதன்படியே கம்ஸனின் தூதன் கூறியபடி, வ்ருந்தாவனத்தில் கேசினி என்ற அஸுரன், தன் பலத்தில் கர்வங்கொண்டு குதிரை உருக்கொண்டு கண்ணனைக் கொல்வதற்காக மேகம் நடுங்கக் கனைத்துக் கொண்டு, ஸூர்ய, சந்த்ரர்களையும் தாண்டி விடுவது போல் தாவிக் கொண்டு, ஓடி வந்தான். அவன் கனைப்பைக் கேட்ட அனைவரும் பயந்து கொண்டு க்ருஷ்ணனிடம் ஓடினர். க்ருஷ்ணன் "நீங்கள் ஏன் இந்தக் கேசினிக்கெல்லாம் பயப்படுகிறீர்கள். கம்ஸனே நம்மைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் அவன் வராமல் இப்படி ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட வீரர்களான நீங்கள் இந்தக் குதிரைக்குப் பயப்பட்டால், உங்களுக்கு வீர்யமே இல்லையென்றாகிவிடும்.

மேலும் நானிருக்கையில் நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். அப்போதுதான் பலம் பொருந்திய தலைவன் இருப்பதால் தான் அவர்கள் பயப்படாமலிருக்கிறார்கள் என்று உலகம் கூறும். நீங்கள் இப்படிப் பயந்தால் இவர்கள் தலைவன் பலமற்ற கோழை போலும் என்று எவரும் இகழ்வார்கள். எனவே நீங்களும் பயப்பட்டு, என் பலத்தையும் அழிக்கப் பார்க்கிறீர்கள். உங்களைக் காப்பதற்காக இருக்கும் நான் வீரன் என்றால் நீங்கள் அஞ்சாதீர்கள், தக்ஷயக்ஞத்தில் வீரபத்ரன் பூஷாவின் பற்களை உதிர்த்தது போல், நானும் இவனைச் செய்வேன்" என்று அவர்களைத் தேற்றிக் கொண்டே முன் வந்தான் க்ருஷ்ணன்.

தன்னை நோக்கி வாயைப் பிளந்து கொண்டு ஓடி வந்த கேசினியின் வாயில் தன் கையை விட்டான் க்ருஷ்ணன். அந்தக் கை வளர்ந்து கொண்டே சென்றது. உடலை மாய்க்கும் வரை வளரும் நோய் போல் வளர்ந்த அந்தக் கையால் பற்கள் வெண் மேகம் போல் உதிரப் பெற்று, ரத்தத்தையும், நுரையையும் கக்கிக் கொண்டும், கண்கள் சுழல அலறிக் கொண்டும், சந்திகள் உடைய, உடல் இரு பாகமாய்க் கிழியப் பெற்றும், மின்னலால் தாக்குண்ட மரம் போல், பூமியதிர கீழே விழுந்து துடிதுடித்து மாண்டான் கேசினி. ஒவ்வொரு பகுதியும் இரு கால்கள், பாதிப் பின் பகுதி, பாதி வால், ஒரு காது, ஒரு கண், ஒரு மூக்கு என பாகங்களைக் கொண்டிருந்தது. தான் ஒரு பங்கமோ, சோர்வோ இன்றி சிரித்துக் கொண்டு நின்றான் கண்ணன். கோபர்கள் மீண்டும் மகிழ்ந்து கண்ணனைச் சூழ்ந்து கொண்டு, பாடிக் கொண்டாடிப் பரவசமானார்கள்.

கேசினியுடனான க்ருஷ்ணனின் யுத்தத்தை இதுவரை வானிலிருந்து மறைந்து பார்த்துக் கொண்டிருந்த நாரத முனிவர், அவன் ஜயிக்கப்பட்டதைக் கண்டு ஸந்தோஷத்துடன் கண்ணனிடம் வந்து "க்ருஷ்ணா! குதிரைக்கும், மனிதனுக்கும் இதுவரை நடந்த இந்த யுத்தத்தை வேறெங்கும் காண முடியாது. இதைக் காணவே நான் ஸ்வர்கத்திலிருந்து வந்தேன். இந்த கேசி தேவர்களையும் துன்புறுத்திக் கொண்டிருந்தவன். இவன் கனைப்பைக் கேட்டால் தேவேந்த்ரனே பயப்படுவானென்றால், மற்ற தேவர்களைப் பற்றி நான் சொல்வதற்கென்ன. அப்படிப்பட்ட இவனை நீ கொன்றொழித்தாய். இது மிகவும் நல்ல காரியம். நீ நிகழ்த்தும் இப்படிப்பட்ட அற்புதச்செயல்களைக் கேட்டு எப்போதும் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான். கேசினியைக் கொன்ற நீ இனி கேசவன் என்றழைக்கப்படுவாய்.

க்ஷேமம் உண்டாகட்டும் உனக்கு. நான் புறப்படுகிறேன். நாளை மறுநாள் நீ கம்ஸனோடு யுத்தம் செய்யும் போது மறுபடி உன்னை வந்து பார்க்கிறேன். இவர்களைக் கொன்றதெல்லாம் போதாது. நீ அவனைக் கொன்றால் தான் பூமியின் பாரம் குறைந்ததாகும். பூபாரம் குறைப்பதில் நீ பல அரசர்களோடு போரிட வேண்டியிருக்கும். நீ நீண்ட ஆயுளோடு அவர்களோடுப் புரியப் போகும் அந்த அற்புத யுத்தங்களை நான் கண்டு களிக்க வேண்டும். எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. நான் புறப்படுகிறேன். இந்தக் கேசினி வதத்தின் மூலம் நீ தேவர்களுக்குப் பெரிய உதவி செய்துள்ளாய். இன்னும் நீ செய்ய வேண்டியது நிறைய உள்ளது. அனைத்தையும் நான் உனக்கு உரைக்கத் தேவையில்லை. உனக்கே தெரியும். நான் வருகிறேன். உனக்கு மங்களமுண்டாகட்டும்" என்று ஆசி கூறி விடை பெற்றுச் சென்றார் நாரதர். அதன் பின் கோபர்கள் கொண்டாட, அவர்கள் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டு க்ருஷ்ணன் கோகுலம் சேர்ந்தான்.

விஷ்ணு புராணம் - 95

05_15. க்ருஷ்ணனைக் கொல்வதற்காகச் சென்ற அஸுரர்கள் ப்ரலம்பன், தேனுகன், அரிஷ்டன் என்று அனைவருமே அழிந்தனர். கண்ணனோ வ்ருந்தாவனத்தில் கோவர்த்தனத்தைத் தூக்கித் தாங்குகிறான். காளியனை ஒடுக்குகிறான். மரங்களுக்கு சாப விமோசனம் கொடுத்தான். பூதனை, சகடாஸுரனை வீழ்த்தி விட்டான். இப்படி இவன் திருவிளையாடல்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், பூலோகம் வந்த நாரதர் நேரே கம்ஸனிடம் சென்று க்ருஷ்ணன் பிறந்தது, வஸுதேவர் குழந்தைகளை ஒரே இரவில் இடம் மாற்றியது என இது வரை அவனுக்குத் தெளிவாயிராத அனைத்து ரஹஸ்யங்களையும் அவனிடம் கூறி விட்டார். இந்த விஷயங்களைக் கேட்டதும் கம்ஸன் வஸுதேவரிடமும், யாதவர்களிடமும் கடும் கோபம் கொண்டான்.

இளம் வயதிலேயே இவ்வளவு பேரை வதைக்கும் இந்த பலராம, க்ருஷ்ணர்கள் இன்னும் யுவர்கள் ஆனால் என்ன செய்வார்களோ என்ற பயத்தில், இப்போதே அவர்களைக் கொன்று விட வேண்டும் எனத் தீர்மானித்தான். "வ்ருந்தாவனத்திலேயே இருக்கும் கேசி என்பவனைக் கொண்டு மீண்டும் இவர்களைக் கொல்ல முயற்சி செய்வோம். அவன் அவர்களை நிச்சயம் கொன்று விடுவான். அவனிடம் தப்பி விட்டால், இங்கே ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு ச்வபல்கனின் புதல்வரும், யதுக்களில் மதிப்பிற்குரியவருமான அக்ரூரர் மூலம் ராம, க்ருஷ்ணர்களை அழைப்போம். அதற்கு வரும் வஸுதேவனின் மகன்களான, அந்த இடைச்சிறுவர்களை நம் யானை குவலயாபீடம் கொன்று விடும், அதனிடமும் அவர்கள் தப்பி வந்தால், நம்முடைய ப்ரதான மல்யுத்தர்களான சாணூரன், முஷ்டிகன் இவ்விருவர்களைக் கொண்டு அவர்களைப் போட்டியில் கொன்று விடலாம்" என்று முடிவு செய்தான்.

உடனே அக்ரூரரையும் அழைத்து "அக்ரூரரே! நீர் எனக்கு நெருங்கிய நண்பர் அல்லவா. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள். என் கட்டளையை நிறைவேற்றுங்கள். தேரில் ஏறி, நந்தகோகுலம் சென்று பலராமன், க்ருஷ்ணன் இருவரையும் இங்கு அழைத்து வாருங்கள். விஷ்ணுவின் அம்சங்களான அவர்கள் என்னைக் கொல்வதற்காகவே அவதரித்துள்ளார்களாம். என் வீரர்களையும் அனுதினமும் கொன்று வருகிறார்கள். வரும் சதுர்தசியில் இங்கு ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்கு நீங்கள் அவர்களை அழைத்து வரவேண்டும். அதற்கு வரும் அந்த வஸுதேவன் புத்ரர்களை என் யானை குவலயாபீடமே கொன்று விடும். மீறினால் இதே தனுர்யாகத்தில் ஒரு பகுதியாக பொது மக்கள் முன்னிலையில் ஒரு மல்யுத்தம் நடக்கும். அதில் என் வீரர்களான சாணூரன், முஷ்டிகன் இருவரும் அவர்களைத் திறமையாக நிச்சயம் கொல்வார்கள்.

அவ்விருவரும் ஒழிந்த பின் என்னைக் கொல்ல நினைப்பவர்களான வஸுதேவன், அந்த இடையன் நந்தகோபன், என் முட்டாள் தந்தை உக்ரஸேனன் இவர்களை நானே கொன்று விட்டு இவர்களின் தனத்தையும், பசுக்களையும் மற்ற அனைத்தையும் எடுத்துக் கொள்வேன். உம்மைத் தவிர மற்ற யாதவர்களனைவரும் எனக்குப் பகைவர்களே. கொஞ்சம், கொஞ்சமாக அவர்களையும் வேரில்லாமல் செய்து விட்டு, உம்முடன் சேர்ந்து நானே இந்த ராஜ்யத்தை எந்தத் தடையுமின்றி ஆளுவேன். எனவே நீங்கள் இப்போதே நந்தன் கோகுலத்திற்கு விரைவாகச் செல்லுங்கள். நான் உங்களிடம் சொன்ன எல்லா செய்திகளையும் அங்கே கூறி காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள். நடக்க இருக்கும் தனுர் யாக மஹோத்ஸவத்தை மட்டும் எடுத்துக் கூறி, அதற்காக அவர்கள் எல்லோரையும் தேவையான தயிர், பால் இவைகளை ஏற்பாடு செய்து கொண்டு வருமாறு கூறி விட்டு, ராம, க்ருஷ்ணர்களை மட்டும் உங்களுடன் கூட்டிக் கொண்டு வந்து விடுங்கள்" என்று அன்பாக உத்தரவிட்டான் கம்ஸன். இதைக் கேட்டதும் அக்ரூரரும் மகிழ்ச்சியோடு "அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டுத் தன் அழகிய தேரிலேறி உடனே க்ருஷ்ணனைத் தர்ஸிப்பதற்காக மதுரையை விட்டுச் சென்றார்.

விஷ்ணு புராணம் - 94

05_14. க்ருஷ்ணன் ஒரு நாள் மாலைப் பொழுதில் ராஸக்ரீடைக்குச் செல்ல எத்தனிக்கையில் அரிஷ்டன் என்ற ஒரு அஸுரன் கொடிய கரிய எருதின் உருவில் ஸூர்யன் போன்ற ஒளிப் பிழம்பான கண்களுடன், குளம்புகளால் பூமியைப் பிளந்து கொண்டு, நாக்கால் உதடுகளை நக்கிக் கொண்டு, வாலைத் தூக்கிக் கொண்டு அனைவரையும் பயமுறுத்திக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். கெட்டியான கழுத்தும், உயர்ந்த திமிளும் கொண்டு, பின் புறம் சாணம், மூத்திரம் இவைகளால் பூசப்பட்டு, பசுக்களையும் பயந்தோடச் செய்து கொண்டு வந்து கொண்டிருந்தான். காட்டில் முனிவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த இவன் முகத்தில் மரங்களை முட்டித் தள்ளியதாலுண்டான வடுக்கள் இருந்தன.

இப்படி ஒரு எருது ஓடிவருவதைக் கண்டு, அதனருகில் கூட போகமுடியாமல் கோகுலத்தில் எவரும் க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று கதறிக் கொண்டு ஓடினர். க்ருஷ்ணனும் இவர்களைக் காப்பதற்காக ஸிம்ஹநாதம் செய்து கொண்டே அதன் எதிரில் வந்தான். க்ருஷ்ணன் வயிற்றில் குத்திக் கிழிப்பதற்காக அந்த எருதும் தன் கூரிய கொம்புகளை நீட்டி கொண்டு ஓடிவந்தது. பயப்படாமல் தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எருது அருகில் நெருங்கியதும் அதன் கொம்புகளைப் பிடித்து அதை அசைய விடாமல் செய்து, முழங்காலால் அதன் வயிற்றில் ஒரு உதை விட்டான் க்ருஷ்ணன். அதை பழைய துணியைப் பிழிவது போல் அடித்துப் பிழிந்து, அதன் ஒரு கொம்பையே பிடுங்கி, அதனாலேயே வாயில் ரத்தம் கக்கி இறக்கும் வரை அதை அடித்துக் கொன்றான் க்ருஷ்ணன். கோபர்கள் அவன் இறந்ததைக் கண்டு கண்ணனை மகிழ்ந்து கொண்டாடினர்.

Thursday, February 18, 2010

விஷ்ணு புராணம் - 93

05_13. தேவேந்த்ரன் புறப்பட்டபின், கோவர்த்தனகிரியை க்ருஷ்ணன் எளிதாகத் தூக்கிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்திருந்த கோபர்கள் "க்ருஷ்ணா, பெரும் ஆபத்திலிருந்து எங்களையும், பசுக்களையும் மலையைக் குடையாய்ப் பிடித்துக் காத்தாய். உன் செயல் ஆச்சர்யகரமான குழந்தைத் தனமாயிருக்கிறது. இடையர் பிறப்பிற்குச் சம்பந்தம் இல்லாத, தெய்வீகச் செயல்களையே புரிந்து வருகிறாய். இது எப்படி என்று எங்களுக்குப் புரியவில்லை. நீயே உண்மையைச் சொல்லி விடு. முன்பு பெரும் யமுனையின் மடுவில் காளியனை ஒடுக்கினாய். ப்ரலம்பனைக் கொன்றாய். இப்போது மலையைத் தூக்கி எங்களைக் காத்திருக்கிறாய். இந்த அரிய செயல்களைக் கண்டு நாங்கள் ஸந்தேஹத்தால் மிகவும் குழம்பியுள்ளோம்.

ஹரியின் பாதங்களில் ஆணையாய் உண்மையைச் சொல்கிறோம். எல்லையற்ற வல்லமை படைத்தவனே! உன்னுடைய பெரும் பலத்தை கண்ட எங்களால் உன்னை மனிதனாக நம்ப முடியவில்லை. இந்த சேரியில் குழந்தைகள், பெண்கள், எவருக்கும் உன் மீது அன்பு உண்டு. தேவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தாலும் செய்தற்கரிய செயல்களை நீ செய்துள்ளாய். ஆயர் குடியில் பிறந்ததையும், பிறப்பிற்கு ஒவ்வாத வீர்யத்தையும் நினைக்கும் போதெல்லாம் மிகுந்த ஸந்தேஹம் உண்டாகிறது. நீ யாரோ தேவ, ராக்ஷஸ, யக்ஷ, கந்தர்வனாகவோ தான் இருக்க முடியும். யாராயிருந்தாலும் எங்கள் உறவினன் நீ. அது ஒன்றே போதும். உன்னை நாங்கள் வணங்குகிறோம்" என்று கூறினர்.

சிறிது நேரம் இந்த வார்த்தைகளால் புண்படுத்தப்பட்டவன் போல் அமைதி காத்த க்ருஷ்ணன் "கோபர்களே, நீங்கள் என்னை உறவினன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறீர்கள் போலிருக்கிறது. இல்லையென்றால் உங்கள் சம்பந்தத்தை விரும்பி உங்கள் குலத்தில் பிறந்திருக்கும் என்னை ஏன் தேவன், தானவன் என்றெல்லாம் கூறவேண்டும். நான் கொண்டாடத் தக்கவனாகவே இருந்து, என் சம்பந்தத்தால் உங்களுக்கும் வெட்கமும் உண்டாகாமலிருந்தால் இந்த ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டாம். நான் தேவனோ, கந்தர்வனோ, யக்ஷனோ, தானவனோ அல்ல. உங்கள் உறவினனே. வேறு வகையில் என்னை நினைக்காதீர்கள்" என்று கோபமாகக் கூறுவது போல் கூறினான். இப்படி இவன் கோபமாய்க் கூறியதைக் கண்ட கோபர்கள் மேலே எதுவும் பேசாமல் மௌனமாகி, க்ருஷ்ணனை உறவினனாகப் பெற்றதற்கு மகிழ்ந்து அவனோடு காட்டிற்குள் சென்றனர்.

இதன் பின் ஒருநாள் ஆகாயம் தெளிவாயிருக்க, சரத் காலத்து சந்த்ரன் உலா வந்து கொண்டிருக்க, அல்லிப் பூக்கள் நீர் நிலைகளெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்க, வண்டுகள் பாட என்று இப்படி எல்லாம் அழகாக இருந்த நிலையில் க்ருஷ்ணன் கோபிகைகளுடன் விளையாடக் கருதினான். வீட்டை விட்டு வனத்திற்கு வந்து, கோபிகைகளையும் வீட்டிலிருந்து அங்கு வரவழைக்கக் கருதி புல்லாங்குழலில் ஏற்ற, இறக்கங்கங்களுடன் அவர்கள் விரும்பும் இனிய கானம் செய்தான். இதன் இனிய ஓசையைக் கேட்டதும் கோபிகைகளும் காவல்களைக் கடந்து தங்கள் வீட்டை விட்டு க்ருஷ்ணனிடம் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

ஒருத்தி அந்தக் குழலோசைக்கேற்ப தானும் மெல்லப் பாட, இன்னொருத்தி அவனையே மனதில் நினைத்திருக்க, மற்றொருத்தி "க்ருஷ்ணா! க்ருஷ்ணா" என்று அவன் பெயரைக் கூறிக் கொண்டு வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருத்தி க்ருஷ்ணன் பக்கம் சென்று நிற்க என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவன் குழலோசையை அனுபவித்திருந்தனர். இன்னொரு பெண் மாமனார், மாமியாருக்குப் பயந்து தன் வீட்டிற்குள்ளேயே அவன் நினைவாகவே இருந்தாள். அவனையே நினைத்திருந்தலால் அவள் செய்த புண்யங்களின் பலனும் கழிந்து, வீட்டை விட்டு வெளியேறி அவனிடம் சென்று சேர முடியாத துக்கத்தில் இருந்ததால் அவள் பாபப் பலன்களும் கழியப் பெற்று அந்த இரவிலேயே அவள் பகவத் த்யானத்தால் முக்தியும் அடைந்தாள்.

இப்படி எல்லோரோடும் க்ருஷ்ணன் அந்த இரவில் ராசலீலை செய்து கொண்டிருக்கையில் அவர்கள் கண்களிலிருந்து மறைந்தான். க்ருஷ்ணன் திடீரென மறைந்ததால் துயருற்று வ்ருந்தாவனத்தில் அங்குமிங்கும் அலைந்த கோபியர் அவன் லீலைகளைத் தாங்களே ஒவ்வொருவராக செய்து காட்டி மகிழத் தொடங்கினர். ஒருத்தி "தோழி, நானே க்ருஷ்ணன். அவனைப் போலவே அழகாய் நடக்கிறேன் பாருங்கள்" என்றாள். இன்னொருத்தி "நான் தான் க்ருஷ்ணன். அவனைப் போலவே பாடுகிறேன். அதைக் கேளுங்கள்" என்றாள். இன்னொருத்திக் காளியனாக ஒருத்தியைப் பாவித்து, "துஷ்டா! காளியா! நில்! ஓடாதே!" என்றவாறு தோள் கொட்டி அவளைப் பிடித்து இழுத்துக் காண்பித்தாள். நான்காமவள் இதேபோல் கோவர்த்தனகிரியைத் தூக்குவது போலவும், ஐந்தாமவள் தேனுகாவதத்தையும் இப்படி இவர்கள் க்ருஷ்ணனின் பற்பல லீலைகளைப் பாவித்துக் காண்பித்துக் கொண்டு திளைத்திருந்தார்கள்.

இப்படி இவர்கள் வ்ருந்தாவனத்தில் சுற்றி வருந்தி வருகையில் ஓரிடத்தில் த்வஜ, வஜ்ர ரேகைகள் பொருந்திய இரு காலடிச் சுவடுகளைக் கண்டாள் ஒருத்தி. மிகமகிழ்ந்த அவள் "இதோ க்ருஷ்ணனின் காலடிகள், இங்கே பாருங்கள்" என்று மற்றவர்களுக்கும் காண்பித்தாள். சிறிது தொலைவில் இன்னொருவரின் காலடிகளும் அதன் கூட இருந்தன. உடனே அவள் "இதோ பாருங்கள், க்ருஷ்ணனுடன் புண்யம் செய்த ஒருத்தியும் சென்றிருக்கிறாள். நமக்குக் கிடைக்காத பாக்யம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. சிறிய இந்த காலடிகள் நெருங்கி இருப்பதால் மெதுவாய் நடக்கும் இயல்புடையவள் அவள்" என்றும் கூறுகிறாள்.

இன்னும் சிறிது தூரத்தில் க்ருஷ்ணனின் முன் பாதப்பகுதிகள் மட்டும் இருப்பதையும், அருகில் பூச்செடிகள் இருப்பதையும் கண்ட அவள் "உடன் சென்றிருப்பவள் தனக்குப் பூக்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறாள். இவன் அவள் ஆசையை நிறைவேற்ற உயரத்தில் இருக்கும் அந்தப் பூக்களை முன்னங்கால்கள் மட்டும் பூமியில் படுமாறு எழும்பிப் பறித்துக் கொடுத்துள்ளான், அதனால் தான் கால்களின் பின் பகுதிகள் இங்கில்லை, பாருங்கள் நம் ஆசைகளை நிறைவேற்றாமல் அவள் ஆசையை மட்டும் நிறைவேற்றி இருக்கிறான், அவள் பாக்யமே பாக்யம்" என்று பெருமூச்சு விடுகிறாள். இன்னும் ஒரு இடத்தில் பூக்கள் கீழே சிதறி, காலால் மிதிபட்டிருப்பதைக் கண்டு "அவன் அவளுக்கு இங்கேதான் உட்கார வைத்து அலங்காரம் செய்திருக்கிறான் போலிருக்கிறது, முன் பிறவியில் இவள் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்திருப்பாள், அதன் பலனே இது" என்று பொருமுகிறாள்.

சிறிது தூரத்தில் கண்ணன் காலடிகள் மட்டுமே காணப்படுகின்றன. உடனே ஆராய்ச்சி செய்யும் இந்தப் பெண் "கொஞ்ச நேரத்திற்கு முன் கண்ணனே பூக்களைப் பறித்து அவள் விரும்பியபடியெல்லாம் அவளுக்கு அலங்காரம் செய்து விட்டான் அல்லவா. அதனால் யாருக்கும் கிடைக்காத இந்த பாக்யம் நமக்கே கிடைத்தது என்று அவளுக்குக் கர்வம் வந்து விட்டது. கர்வம் கொண்டதால் அவளை விட்டு விட்டு தான் மட்டும் சென்றுள்ளான். அதனால் தான் அவள் காலடிகளைக் காணவில்லை" என்கிறாள்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் "இங்கே பாருங்கள், க்ருஷ்ணனின் காலடிகளைத் தொடர்ந்து இன்னொரு காலடிகளும் அழுந்தித் தெரிகின்றன. ஒருத்தியை அவன் விட்டு விட்டுத் தனித்துச் செல்வதை அறிந்த இன்னொருத்தி ஓடிச் சென்று கண்ணனைப் பிடித்திருக்கிறாள் போலும். அதனால்தான் இவள் காலடிகள் அழுந்தித் தெரிகின்றன. இதோ இங்கே, இங்கே அவள் காலடிகள் ஒழுங்கீனமாக இங்குமங்கும் காணப்படுகின்றன. தன்னை நெருங்கி விட்ட அவளைத் தன் கைகளால் பிடித்திழுத்துக் கூட்டிச் சென்றிருக்கிறான் கண்ணன். இவளும் தன்னிலையிழந்து அவனோடு லயித்துச் சென்றிருக்கிறாள். அதனால் தான் இப்படி தாறுமாறாக இருக்கின்றன இங்கே அவள் கால்கள்" என்கிறாள்.

இன்னும் கொஞ்ச தூரத்தில் பெண்ணின் காலடிகள் தலைகீழாகத் தெரிவதைக் கண்ட அவள் "இவள் கண்ணன் கையைப் பிடித்ததோடு சரி போலும், வேறெந்த பாக்யத்தையும் அடையாமல் அந்த மோசக்காரனால் இவள் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறாள். அது தான் இது" என்கிறாள். "இங்கேயே இரு, நாம் விளையாடி மகிழ நல்ல ஒரு இடத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவளை இங்கேயே விட்டு, வேகமாக ஓடிச் சென்றிருக்கிறான் இந்த அடர்ந்த கானகத்துள், இதற்குள் நிலவு கூடப் புகமுடியாது, இனி அவன் காலடிகளை நம்மால் தொடர முடியாது" என்று முடிக்கிறாள் அவள். இப்படி அவனைத் தேடிச் சென்ற அவர்கள் இப்போது வேறு வழியின்றி மீண்டும் வந்த வழியே திரும்பி, யமுனைக் கரையை அடைந்து அங்கேயே அவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி, விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் கண்ணன் இவர்களின் பக்திக்கு மகிழ்ந்து மீண்டும் தோன்றி அவர்களை நோக்கி பரவசத்துடன் வரத்தொடங்கினான். அவன் வருவதைக் கண்ட ஒருத்தி வேறொன்றும் தோன்றாது "க்ருஷ்ணா! க்ருஷ்ணா" என்றே கூறிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி அவனை ஊடலுடன் புருவங்களை நெரித்துத் தன் வண்டுக் கண்களால் அவன் முகமாகிய தாமரையை நுகர்ந்து கொண்டிருந்தாள். இன்னொருத்தி கண்களால் அவனை மனதில் இருத்தி, மீண்டும் வெளியே சென்று விடாதவாறு கண்களை மூடிக் கொண்டு, அவனையே த்யானித்துக் கொண்டிருந்தாள். இவர்களைக் கண்ணனும் சிரித்துப் பேசியும், தானும் புருவங்களை நெரித்தும், கைகளால் தழுவியும் தக்கபடி சமாதானம் செய்தான். இதனால் அவர்களும் மனக்கவலை தீர்ந்து மகிழ்வுற்றனர்.

இதன் பின் ராஸ லீலை (நர்த்தனமாடும் பெண்களை வட்டமாக நிற்க வைத்து விளையாடும் ஒரு விளையாட்டு) செய்ய விரும்பினான். ஆனால் ஒருவரும் அதற்கு இசையாதவாறு அவனிடமே, அவனை ஸ்பர்ஸித்துக் கொண்டே நின்றிருந்தனர். க்ருஷ்ணன் தானே ஒவ்வொருத்தியின் கையையும் பிடித்து இன்னொருத்தியின் கையோடு சேர்த்துப் பிடிக்க வைத்தான். அவன் கை பட்டதில் தங்களை மறந்த அவர்கள் க்ருஷ்ணன் தன் கையையே பிடித்துக் கொண்டிருப்பதாக எண்ணினர். மற்றவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதாக அறியவில்லை. க்ருஷ்ணனும் தன் மாயையால் ஒவ்வொருவர் பக்கத்திலும் இருப்பது போலவே தோற்றமளித்தான். க்ருஷ்ணன் சரத் காலத்து சந்த்ரனையும், அழகு பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளையும் பாட, கோபியர்களோ சலிப்பின்றி அவன் பெயரையே பாடிக் கொண்டிருக்க, அவர்கள் வளையொலிகளோடு சேர்ந்து ராஸக்ரீடை வளர்ந்தது.

இடையில் களைப்படைந்த இந்த பெண்கள் கண்ணன் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டும், அவன் தாடையோடு தங்கள் தாடையை சேர்த்து வைத்துக் கொண்டும், அவனைக் கட்டி அணைத்துக் கொண்டும் இப்படி ஒவ்வொரு முறையில் தங்கள் ச்ரமத்தைத் தீர்த்துக் கொண்டனர். அவன் பாடுவதை இரு முறை திரும்பப் பாடிக் கொண்டும், அவனோடு சேர்ந்தோடியும், அவனை எதிர்த்துச் சேர்ந்தும் பலவிதங்களில் அவனோடு ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தனர். அவனைப் பிரியும் ஒரு நொடியும் அவர்களுக்கு ஒரு கோடி வருஷமாகத் தோன்றியது. இவ்வாறு அவர்களோடு கண்ணனும் ஆடிக் களித்தான்.

தங்கள் கணவன், தகப்பன், ஸஹோதரன் இப்படி அனைவரையும் விடுத்து அன்பிற்குரிய அவனோடே திரிந்து கொண்டிருந்தனர். எல்லா உயிர்க்கும் அந்தர்யாமியாய், ஆத்மாவாய் இருப்பதனால் இவனோடு சேர்ந்து இப்படி விளையாடிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் தோஷமில்லை. அவர்கள் தங்கள் ஆத்மாவோடு விளையாடி ஆத்மானுபவம் அடைந்தார்களே அன்றி வேறு புருஷனாக க்ருஷ்ணனையும், தங்கள் புருஷனை விட்டு இவனோடு விளையாடிக் கொண்டிருந்ததாக இந்த கோப ஸ்த்ரீகளையும் நினைப்பதில் ஒரு பொருளும் இல்லை. அவனுக்கு உலகமே உடல், இந்த கோபஸ்த்ரீகளும் அதில் அடக்கம். இந்த கோபஸ்த்ரீகள் உட்பட எல்லா உயிர்க்கும் அவனே ஆத்மா. ஆக இருவரிடத்தும் ஒரு தோஷமுமில்லை, குறையுமில்லை, அதர்மமுமில்லை.

விஷ்ணு புராணம் - 92

05_12. இந்த்ரன் ஐராவதத்தில் ஏறி ஆவலோடு க்ருஷ்ணனை வணங்குவதற்காகக் கோவர்த்தனத்திற்கு இறங்கி வந்தான். உலகையே காப்பவன் இங்கு இடைச் சிறுவன் வேஷத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். நித்ய ஸூரிகளால் சூழப்பட்டிருக்கும் க்ருஷ்ணன் இங்கு இடைச்சிறுவர்களால் சூழப்பட்டிருப்பதைக் கண்டான். யார் கண்ணிற்கும் புலப்படாமல் கருடன் வானிலிருந்து தன் சிறகுகளை விரித்து க்ருஷ்ணனுக்கு குடையாக நிழல் கொடுத்துக் கொண்டிருந்தான். ஐராவதத்திலிருந்து கீழே இறங்கி தனிமையில் க்ருஷ்ணனிடம் வந்து வணங்கிக் கூறலானான். "க்ருஷ்ணா, நான் வந்த வேலையைச் சொல்கிறேன். தயவு செய்து கேட்டருள். மேலும் சண்டை போட வந்துள்ளேன் என்று தவறாக நினைத்து விடாதே.

பூபாரம் தீர்க்கவே நீ அவதரித்துள்ளாய் என்பதை நான் அறிவேன். ஆனால், எனக்கு செய்து வந்த யாகம் நிறுத்தப்பட்டதால் நான் பகை கொண்டு மேகங்களை கோகுலத்தை அழிக்குமாறு உத்தரவிட்டு விட்டேன். அவைகளும் அப்படியே செய்தன. ஆனால் நீயோ கிரிதாரியாய் பசுக்களை ரக்ஷித்து, எனக்கும் மகிழ்ச்சியையே கொடுத்தாய். ஆபத்தில் அண்டியவர்களைக் காத்தாய். நீ இந்தச் செயலை செய்ததைக் கண்டதும் உன் வலிமையை நான் அறிந்து கொண்டேன். நீ எங்களுக்கும் நன்மைகளைச் செய்து விடுவாய் என்று உறுதி படுத்திக் கொள்கிறேன். கோகுலத்தின் இந்தப் பசுக்களை நீ காத்ததைக் கண்டு இவைகளின் முன்னோர்களாக எனக்கும், ஸத்யலோகத்திற்கும் மேலாக கோலோகத்தில் இருக்கும் பசுக்களும் மகிழ்ந்துள்ளன.

இதற்காக உன்னை கௌரவிப்பதற்காகவும் என்னை அனுப்பியுள்ளன. அவைகளின் உத்தரவுப்படி உன்னையே கோலோகத்தின் செல்வத்திற்கெல்லாம் உன்னை உபேந்த்ரனாகப்(இன்னொரு இந்த்ரன்) பட்டாபிஷேகம் செய்ய நினைக்கிறேன். இதனால் நீ பசுக்களுகெல்லாம் இந்த்ரனாக, கோவிந்தனாக விளங்குவாய்". இப்படிக் கூறிவிட்டு இந்த்ரன் ஐராவதத்தினிடமிருந்து தீர்த்த பாத்ரத்தை எடுத்து அதில் சுத்த ஜலத்தை நிரப்பி, அதனால் க்ருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகத்தையும் செய்து வைத்தான். பசுக்கள் அப்போது தானாகவே தங்கள் மடியிலிருந்து பாலைப் பெருக்கி, பூமியை சேறாக்கின.

இதன் பின் க்ருஷ்ணனிடம் இந்த்ரன் பணிவாக இன்னொன்றையும் கீழுள்ளவாறு வேண்டிக் கொண்டான். "க்ருஷ்ணா! உன் பணியை எளிதாக்கும் விதமாக இப்போது நான் ஒன்று சொல்கிறேன். கேள். பூலோகத்தில் எனது அம்சமாக அர்ஜுனன் ப்ருதையின் மகனாகப் பிறந்துள்ளான். அவன் சிறந்த வீரன். பூபாரம் தீர்ப்பதில் உனக்கு உறுதுணையாய் இருப்பான். நீ அவனை உன் ஆத்மாவைப் போல் காத்துத் தர வேண்டும்" என்பதே அது. இந்த்ரனின் வணக்கங்களையும், ப்ரார்த்தனைகளையும் ஏற்றுக் கொண்ட க்ருஷ்ணன் அவன் செய்த தீங்குகளை மறந்து, கருணையோடு "தேவேந்த்ர! உன் அம்சமாக பரத வம்சத்தில் அர்ஜுனன் பிறந்திருப்பதை நான் அறிவேன். வெல்ல முடியாதவனே! அவனைப் பற்றி நீ வீணாகக் கவலைப்படாதே. நான் பூவுலகில் இருக்கும் வரை அவனை நிச்சயம் காத்தருள்வேன். நான் இங்கு இருக்கும் வரை அவனை எவனும் யுத்தத்தில் வெல்லமாட்டான்.

கம்ஸன், அரிஷ்டன், கேசி, குவலயாபீடம் எனும் யானை, நரகன் இன்னும் மற்ற தைத்யர்கள் எல்லோரும் அழிந்த பிறகு பாரத யுத்தம் என்ற ஒரு பெரும் போர் உண்டாகப் போகிறது. அப்போதே பூபாரம் குறைந்தது என்று நீ நினைத்துக் கொள். அர்ஜுனனுக்குப் பகைவன் என்று ஒருவன் என் முன் நிற்க மாட்டான். அர்ஜுனனுக்காக, யுதிஷ்ட்ரன் முதலான மற்ற குந்தி புத்ரர்களையும் ஆயுதம் படாமல் காப்பாற்றி அந்த யுத்தத்தின் முடிவில் குந்தி தேவியிடம் கொடுப்பேன். இது உறுதி" என்று உறுதியளித்தான். இதைக் கேட்ட இந்த்ரன் மன நிம்மதியோடு பெரிதும் மகிழ்ந்து, கண்ணனைக் கட்டித்தழுவிக் கொண்டு, ஐராவதத்தில் ஏறி தன்னுலகத்திற்கு விடைபெற்றான்.

இதற்குள் இந்த்ரன் க்ருஷ்ணனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து வைத்த செய்தியைக் கேள்விப்பட்ட கோப ஸ்த்ரீகள் அவன் வரவைப் பெரிதும் எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர். கண்ணனும் மற்ற கோபர்களோடும், பசுக்களோடும் மீண்டும் சேரிக்கு வந்து சேர்ந்தான்.