Sunday, January 31, 2010

விஷ்ணு புராணம் - 62

04_06. ஸூர்ய வம்ச வ்ருத்தியைக் கேட்டறிந்த மைத்ரேயர், சந்த்ர வம்சத்தையும் கூறக் கேட்கிறார். விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றிய ப்ரஹ்மாவின் புத்ரர் அத்ரி மஹரிஷி. இவரின் புத்ரன் தான் சந்த்ரன். ஓஷதிகள், ப்ராஹ்மணர்கள், நக்ஷத்ரங்கள் இவைகளுக்கு அதிபதியாக ப்ரஹ்மாவால் பட்டம் சூட்டப்பட்ட இவன் ராஜஸூய யாகமும் செய்து முடித்தான். செருக்கால் தேவகுரு ப்ருஹஸ்பதியின் பத்னி தாரையை அபஹரித்தான். மற்ற தேவர்களும், குருவும், ப்ரஹ்மாவும் சொல்லியும் அவளை விடாத சந்த்ரனின் பக்கம் ப்ருஹஸ்பதியின் பகையாளியான சுக்ராச்சார்யார் இந்த சமயம் பார்த்து தன் சிஷ்யர்களான ஜம்பன், கும்பன் முதலான தைத்ய, தானவர்களுடன் சேர்ந்து கொண்டு தேவர்களுக்கெதிராக யுத்த முயற்சிகளையும் கொண்டார்.

ப்ருஹஸ்பதியின் பிதாவான அங்கிரஸ்ஸிடமே ருத்ரரும் வித்யாப்யாஸம் செய்தார். எனவே குரு புத்ரராதலால் ருத்ரரும், தங்களின் குருவாதலால் தேவ ஸைன்யமும் ப்ருஹஸ்பதியின் பக்கம் சேர்ந்தது. தாரையின் நிமித்தாமாய் தாரகாமயம் என்ற தேவாஸுர யுத்தம் கடுமையான யுத்தம் மூண்டது. ப்ரஹ்மா இதில் தலையிட்டு தாரையை ப்ருஹஸ்பதியிடமே விடுமாறு சந்த்ரனிடம் கூற, முடிவில் அவனும் அவ்வாறே செய்தான். ஆனால் இப்போது அவள் கர்ப்பிணி. சந்த்ரனால் பலாத்காரமாக உண்டாக்கப்பட்ட அந்தக் கர்ப்பத்தை விட்டு விடுமாறு அவளிடம் ப்ருஹஸ்பதி கூற பதிவ்ரதையான அவளும் அதை நாணற்கற்றையில் விட்டாள்.

ஆனால் உண்டான குழந்தையின் உன்னதமான தேஜஸ்ஸைக் கண்டு ப்ருஹஸ்பதி, சந்த்ரன் இருவருக்குமே அதனிடம் ஆசை உண்டாயிற்று. ஆனால் எவர் கேட்டபோதும் அது யாருடைய குழந்தை என்பதைக் கூற வெட்கத்தினால் தாரை மறுத்துவிட்டாள். இதனால் கோபம் கொண்ட குழந்தை தாயைத் தண்டிக்க முடிவு செய்தது. மீண்டும் சமாதானம் செய்து வைத்த ப்ரஹ்மா, தாரையிடம் உண்மையை உரைக்குமாறு கூறுகிறார். தாரை அந்தக் குழந்தைச் சந்த்ரனுக்குப் பிறந்தவன் என்று கூறுகிறாள். சந்த்ரனும் மிகுந்த ஸந்தோஷத்துடன் அவனுக்கு புதன் என்று பெயர் சூட்டிக் கொண்டாடுகிறான்.

இந்த புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்பவன் பிறந்தான். அவன் யாக, தானங்களில் சிறந்தவன். ஊர்வசிக்கும் இவனுக்கும் காதல். இதனால் மித்ராவருணர்கள் ஊர்வசியிடம் காமம் கொண்ட போது அதற்கு ஊர்வசி உடன்படாததால், பூலோகத்தில் ஒருவனுக்கு மனைவியாக சில காலம் வசிக்கக்கடவாய் என்று அவர்கள் ஊர்வசியைச் சபித்து விட்டனர். பூலோகத்தில் இவளிடம் மனதைப் பறிகொடுத்த புரூரவஸ் இவளிடம் தன்னை மணக்குமாறு வேண்டுகிறான். அதற்கு இவள் மூன்று நிபந்தனைகளை விதித்து, அவைகளுக்கு உடன்பட்டால் அவனை மணப்பதாகக் கூறுகிறாள்.

தான் குழந்தைகளைப் போல் வளர்க்கும் இரு ஆடுகளை படுக்கையறையிலேயேதான் எப்போதும் வைத்திருப்பேன் என்பது முதலாவது நிபந்தனை. ஆடையின்றித் தான் புரூரவஸ்ஸைப் பார்க்க நேரிடக்கூடாது என்பது இரண்டாவது. எப்போதும் நெய்யையே உணவாகக் கொள்வேன் என்பது மூன்றாவது நிபந்தனை. இவைகளை ஏற்றுக்கொண்டு அவளை மணந்த புரூரவஸ்ஸும் அவளுடன் அறுபத்தொரு வருஷங்கள் இன்பம் துய்த்திருந்தான். ஊர்வசியும் தேவலோகத்தையும் இந்த ஆனந்தத்தில் வெறுத்திருந்தாள். ஊர்வசியில்லாத ஸ்வர்க லோகம் குறையோடு இருந்தது.

இதனால் ஊர்வசியை மீண்டும் தேவலோகத்திற்குக் கொண்டு வருவதற்காக விச்வாவஸு என்ற கந்தர்வ ராஜன் ஒரு இரவு கந்தர்வர்களுடன் வந்து ஆடுகளை அபஹரித்துச் சென்றான். ஆடுகள் கத்துவதைக் கேட்டு ஊர்வசியும் நான் குழந்தைகளைப் போல வளர்த்து வந்த ஆடுகளை எவனோ அபஹரித்துச் செல்கிறானே. நான் அனாதையானேனே. இதை யாரும் தடுக்கவில்லையே. ஒன்றுக்கும் உதவாத ஒருவனை நான் புருஷனாக அடைந்திருக்கிறேனே என்று கத்தத் தொடங்கி விட்டாள். அப்போது புரூரவஸ் ஆடையின்றி இருந்தான். இருட்டில் இவள் நம்மை நிர்வாணமாகப் பார்க்க முடியாது என்று அப்படியே கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைத் திருடியவர்களைப் பிடிக்க அவஸரமாகச் சென்றான்.

இதுதான் ஸமயம் என்றிருந்த விச்வாவஸுக்கள் ப்ரகாசமான ஒரு மின்னலையும் ஏற்படுத்தி ஊர்வசியைப் புரூரவஸ்ஸின் நிர்வாணக்கோலத்தைக் காணச் செய்தனர். இரண்டு நிபந்தனைகளும் மீறப்பட்டு விட்டதால் ஊர்வசியும் தேவலோகம் திரும்பி விட்டாள்.
கந்தர்வர்களும் வந்த வேலை முடிந்ததென்று ஆட்டுக்குட்டிகளை அங்கேயே விட்டு விட்டு மறைந்து விட்டனர். ஊர்வசியைக் காணாத புரூரவஸ் பித்துப் பிடித்து திகம்பரனாகவே அலையத் தொடங்கி விட்டான். பல நாள் கழித்து அவளையும், கூட நான்கு அப்ஸரஸ்ஸுக்களையும் ஒரு தாமரைக் குளத்தில் குருக்ஷேத்ரத்தில் கண்டான். பலவாறு அவளைப் புகழ்ந்தும், திட்டியும், நல்லதும் கூறினான் புரூரவஸ்.

ஊர்வசி, "விவேஹத்தை இழக்காதீர்கள். உங்களால் கர்ப்பிணியாய் இருக்கிறேன் இப்போது நான். உங்களுக்கு ஒரு புத்ரன் பிறக்கப் போகிறான். எனவே ஒரு வருஷம் கழித்து வாருங்கள். நான் ஓரிரவு உங்களுடன் கூடி வஸிக்கிறேன்" என்று கூறினாள். புரூரவஸ்ஸும் சந்தோஷச் செய்திகளுடன் நாடு திரும்பினான். ஊர்வசி அவனைப் பற்றியும், தான் அவனுடன் வாழ்ந்தது பற்றியும் மற்ற அப்ஸரஸ்ஸுக்களிடம் புகழ்ந்து கூறினாள். அவர்களும் அவனைக் கொண்டாடி, தாங்களும் அவனுடன் வஸிப்பதை விரும்புவதாகக் கூறினர். ஒரு வருஷம் கழிந்ததும், "ஆயுஸ்" என்ற புத்ரனை அவனிடம் கொடுத்து விட்டு, தானும் அவனுடன் ஒரு இரவு அவனுடன் கூடியிருந்தாள். அவ்வாறே மற்ற அப்ஸரஸ்ஸுக்களும் அவள் அனுமதியுடன் அவனுடன் கூடி இருந்து தாங்களும் பிள்ளைகளைப் பெற்றனர்.

மஹாராஜரே! எங்களிடம் அன்பு கொண்ட கந்தர்வர்கள், அதனால் தங்களுக்கு வரங்களைத் தர முன் வந்துள்ளார்கள் என்றாள் ஊர்வசி. புரூரவஸ் "நான் பகைவர்களை வென்று, இந்த்ரிய சக்தி மிகுந்தவனாக, உறவினர், பொக்கிஷங்கள் குறைவின்றி இருக்கிறேன். எனவே ஊர்வசியே எனக்கு வேண்டியது. அதை அருளுங்கள்" என்று கந்தர்வர்களிடம் வேண்டினான். கந்தர்வர்கள் ஒரு அக்னி ஸ்தாலியை அவனிடம் கொடுத்து வேத வழியில் அந்த அக்னியை மூன்றாக்கி, ஊர்வசியின் கூடுதலை விரும்பி யாகம் செய்யுங்கள். அவளை அடைவீர்கள் என்று கூறிச் சென்றனர். சரியென்று அதைப் பெற்றுக் கொண்ட வந்த அவன் வழியில் யோசித்தான்.

ஊர்வசியைப் பெற்று வராமல் இந்த ஸ்தாலியைப் போய் பெற்றுக் கொண்டு வந்து விட்டோமே என்று அதை அங்கேயே வைத்து விட்டு வருத்தத்தோடு நாட்டுக்கு வந்து விட்டான். நள்ளிரவில் உறங்காமல் குழப்பத்தில் "ஊர்வசியை அடைய உதவுமென்று கந்தர்வர்கள் கொடுத்த அக்னி ஸ்தாலியையும் காட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டோமே" என்று மீண்டும் காட்டிற்கு வந்தான். அக்னி ஸ்தாலியை வைத்து விட்டுப் போன இடத்தில் வன்னி மரத்தை நடுவில் கொண்ட ஒரு அரச மரத்தைக் கண்டான். "இந்த அக்னி ரூபமான மரத்தையே அரணியாக்கி, கடைந்து அக்னியை உண்டாக்கி உபாஸிப்போம்" என்று அந்த மரத்தைத் தன் நாடு கொண்டு வந்தான்.

காயத்ரீ மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே அரணியைச் செய்ய, இருபத்து நான்கு அளவுள்ள அரணியும் உண்டாயிற்று. அதைக் கடைந்து மூன்று அக்னியையும் பெற்று வேத விதிப்படி, ஊர்வசியை உத்தேஸித்து யாகங்களைச் செய்த புரூரவஸ் மீண்டும் கந்தர்வ லோகத்தையும், ஊர்வசியையும் நிரந்தரமாகப் பெற்றான். ஒன்றாய் இருந்த அக்னி இப்படி இந்த மன்வந்த்ரத்தில் மூன்றாயிற்று.

விஷ்ணு புராணம் - 61

04_05. இக்ஷ்வாகுவின் புதல்வர்களில் ஒருவனான நிமி ஆயிரம் வருடங்கள் செய்யத்தக்க ஸத்ரயாகத்தை ஆரம்பித்தான். அதில் ஹோதாவாக இருக்க வஸிஷ்டரை வேண்டிக் கொண்டான். அவர் இந்த்ரனின் ஐநூறு ஆண்டுகள் செய்யத்தக்க மற்றொரு யாகத்தில் ஏற்கனவே ரித்விக்காக இருக்க ஒப்புக் கொண்டு விட்டதாகவும், அது முடியும் வரைப் பொறுத்திருக்கும் படியும் நிமியிடம் கூறுகிறார். நிமி இதற்குப் பதிலொன்றும் கூறாமல் மௌனமாக இருக்கிறான். அவன் ஒப்புக்கொண்டு விட்டதாக நினைத்துக் கொண்ட வஸிஷ்டர் இந்த்ரனின் யாகத்திற்குச் சென்று விட்டார். ஆனால் நிமி, குலகுரு இல்லாததால் கௌதமர் முதலான மஹரிஷிகளைக் கொண்டு தன் யாகத்தை ஆரம்பித்து விட்டான்.

இந்த்ரன் யாகம் முடிந்து நிமியிடம் வந்த வஸிஷ்டர் தம்மை எங்கும் போக வேண்டாம் என்று கூறி இருந்தால் இங்கேயே இருந்திருப்போமே, அப்போது மௌனமாக இருந்து விட்டு இப்படி யாகத்தை ஆரம்பித்து விட்டானே என்று வருத்தமும், கோபமும் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த நிமியை நோக்கி இவன் உடலற்றவனாவான் (விதேஹன்) என்று சாபமிட்டார். இதையறிந்த நிமி தூங்கிக் கொண்டிருந்த போது, எதையும் கூறாமல் தனக்குச் சாபமிட்ட வஸிஷ்டரையும் விதேஹராவார் என ப்ரதி சாபமிட்டான். இருவருமே கண்ணுக்குத் தெரியாதவர்களானார்கள். இதன் பின் மித்ரா வருணர் ஊர்வசியிடம் மோஹம் கொண்ட போது அதிலிருந்து வஸிஷ்டர் வேறு தேஹம் கொண்டார்.

நிமியினுடைய தேஹத்தை யாகம் செய்து கொண்டிருந்த ரித்விக்குகள் (தனக்கு உதவியாக இருப்பதற்காக யஜமானன் தக்ஷிணைகள் கொடுத்து வரித்த அத்வர்யு, ஹோதா, உத்காதா, ப்ரஹ்மா ஆகியோர்) தைலங்களால் பதப்படுத்திக் காத்து வந்தனர். யாகம் தொடர்ந்து முடிந்தது. தங்கள் பங்கைப் பெறுவதற்காக யாகத்தின் இறுதியில் வந்த தேவர்களிடம் இந்த ரித்விக்குகள் யஜமானனுக்காக வரம் வேண்ட, அவர்களும் தர இசைந்தனர். ஆனால், நிமி தான் அந்த சரீரத்தை விரும்பவில்லையென்றும், தான் இனி அனைவரின் கண்களிலும் வஸிக்க வேண்டும் என்ற வரத்தைக் கோரிப் பெற்றான். இதனாலேயே கண்களை ஜீவராசிகள் இமைக்கின்றன. அரசனில்லாமல் ராஜ்யம் கெட்டு விடக்கூடாது என்று நிமியின் உடலைக் கடைந்து ஜனகன் (வைதேஹன், மிதி) என்ற புத்ரனை உண்டாக்கினர் மஹரிஷிகள்.

இந்த மிதியின் வம்சம் உதாவஸு, நந்திவர்த்தனன், ஸுகேது, தேவராதன், ப்ருஹதுக்தன், மஹாவீர்யன், ஸுத்ருதி, த்ருஷ்டகேது, ஹர்யச்வன், மரு, ப்ரதிகன், க்ருதிரதன், தேவமீடன், விபுதன், மஹாத்ருதி, க்ருதராதன், மஹாரோமா, ஸ்வர்ணரோமா, ஹ்ரஸ்வரோமா என்று வளர்ந்தது. இந்த ஹ்ரஸ்வரோமாவிற்கு ஸீரத்வஜனும், குசத்வஜனும் பிறந்தனர். இந்த ஸீரத்வஜன் தான் பிள்ளைப் பேறுக்காக யாகம் செய்ய பூமியை உழுத போது, ஸீதை தோன்றினாள். குசத்வஜன் ஸாங்கர்ய தேசத்திற்கு அதிபதியாக இருந்தான். ஸீரத்வஜனுக்குப் பின் பானுமான், சதத்யும்னன், சுசி, ஊர்ஜன், சதத்வஜன், க்ருதி, ரஞ்ஜனன், புருஜித், அரிஷ்டநேமி, ச்ருதாயுஸ், ஸுபார்ச்வன், ஸ்ருஞ்ஜயன், க்ஷேமாவி, அநேநஸ், பௌமதன், ஸத்யரதன், உபகு, உபகுப்தன், ஸ்வாகதன், ஸ்வாங்கன், ஸ்வாபனன், ஸுவர்சஸ், ஸுபாஷன், ஸுச்ருதன், ஜயன், விஜயன், ருதன், ஸுநயநன், வீதஹவ்யன், த்ருதி, பஹுளாச்வன், க்ருதி என்று வளர்ந்தது. பெரும்பாலும் ஆத்ம வித்யையில் நிலை பெற்ற இந்த ஜனக (மிதி, விதேஹ) வம்சம் மிதிலா நகரை ஆண்டது.

விஷ்ணு புராணம் - 60

04_04. ஸகரனின் மனைவிகளாக சாச்யபரின் பெண் ஸுமதியும், விதர்ப்ப ராஜனின் பெண் கேசினீயும் அமைந்தனர். புத்ர பாக்யத்திற்காக இவ்விருவரும் ஔர்வரைப் பூஜித்தனர். அவர்களிடம் கருணை கொண்ட ஔர்வர் ஒருவருக்கு வம்ச வ்ருத்தி செய்யும் ஒருவனையும், மற்றொருவருக்கு அதற்கு உதவாத அறுபதினாயிரம் பிள்ளைகளையும் அனுக்ரஹிப்பதாக அருளினார். விதர்ப்பராஜனின் மகள் கேசினீ குலம் விளங்கும் ஒரு பிள்ளையையும், ஸுமதி அறுபதினாயிரம் பிள்ளைகளையும் இசைந்து பெற்றுக் கொண்டனர். கேசினீக்கு அஸமஞ்ஜஸனும், அவனுக்கு அம்சுமானும் பிறந்தனர்.

அஸமஞ்ஜஸனும், ஸுமதிக்குப் பிறந்த அறுபதினாயிரம் புதல்வர்களும் பிறந்ததிலிருந்தே தீய வழிகளில் சென்று கொண்டிருந்தனர். இளமைத் திமிர் அடங்கியதும் சரியாகிவிடுவார்கள் என்ற ஸகர மன்னனின் எண்ணம் பலிக்கவில்லை. யாகங்களையும், பல தர்ம கார்யங்களையும் அழித்துக் கொண்டிருந்தனர் அஸமஞ்ஜஸனும், அறுபதினாயிரம் பேரும். ஸகரன் வேறு வழியின்றி அஸமஞ்ஜஸனை நாடி கடத்தி விட்டான். அறுபதினாயிரம் பேர்களின் அட்டூழியங்களைப் பொறுக்காத தேவர்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமாய் அப்போது அவதரித்திருந்த கபில மஹரிஷியிடம் சென்று முறையிட்டனர். இவர்களின் துன்பங்களிலிருந்து உலகைக் காத்தருள வேண்டினர். அவரும் இன்னும் சில நாட்களிலேயே அவர்கள் அழிவார்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

இந்த ஸமயத்தில் ஸகரன் அச்வமேதம் செய்ய ஆரம்பித்தான். யாகக் குதிரையைக் காக்கும் பொறுப்பைத் தன் அறுபதினாயிரம் புத்ரர்களிடம் விடுத்து யாகத்தை ஆரம்பித்தான். அவர்கள் பாதுகாப்புடன் உலகெங்கும் சுற்றிக் கொண்டிருந்த அந்தக் குதிரையை ஒருவன் ரஹஸியமாக பாதாள லோகத்திற்கு ஓட்டிச் சென்று விடுகிறான். பயமும், பெரும் கோபமும், பரபரப்பும் அடைந்த ஸகர புத்ரர்கள் குதிரையின் குளம்படியை அனுஸரித்து பாதாள லோகத்தை நோக்கி பூமியைத் தோண்டிக் கொண்டுச் சென்றனர். பாதாள லோகத்தையும் அடைந்தனர். அங்கே தவம் செய்து கொண்டிருந்த கபில மஹரிஷியையும், அவருக்கருகில் யாகக் குதிரையையும் கண்டனர். முனிவரையே குற்றவாளியாகத் தீர்மானித்து யாகத்தைக் கெடுத்த அவரைக் கொன்று விடுவதாக பெரும் கூச்சலுடன் அவரிடம் ஓடினர். தன் பார்வையாலேயே அறுபதினாயிரம் ஸகர புத்ரர்களையும் கொளுத்திச் சாம்பலாக்கி விட்டார் கபில மஹரிஷி.

பிள்ளைகளையும், யாகக் குதிரையையும் காணாத ஸகரன் தன் பேரனான அம்சுமானை அழைத்து அவர்களைத் தேடி அழைத்து வரச் சொன்னான். தந்தைமார்கள் தோண்டிய வழியே அவர்களைத் தேடிப் பாதாளத்தை அடைந்த அம்சுமான் அங்கு ப்ரகாசமாயிருக்கும் கபில மஹரிஷியைக் காண்கிறான். அவரைப் பலவாறு போற்றிப் புகழ்ந்து, நமஸ்கரிக்கிறான். இவனின் உபஸரிப்பால் பெரிதும் உவந்த மஹரிஷி "குழந்தாய்! யாகக் குதிரையை அழைத்துச் செல். தாத்தாவிடம் சேர்த்து விடு. உன் பௌத்ரன் பகீரதன் ஸ்வர்க லோகத்திலிருக்கும் கங்கையைப் பூலோகம் கொண்டு வரப் போகிறான். பெரும் பேறு பெற்ற நீயும் என்னிடம் வரத்தைப் பெற்றுக் கொள்" என்றார்.

மஹரிஷியின் வார்த்தைகளால் மகிழ்ந்த அம்சுமான் மஹரிஷியின் கோபத்தால் இறந்து போன தன் பித்ருக்களுக்கு ஸ்வர்கத்தை வேண்டுகிறான். "நான் முன்னமே கூறிய படி உன் பேரனால் பூலோகத்திற்கு வரும் கங்கையின் தீர்த்தம் இந்த சாம்பல் குவியலில் பட்டதும் இந்த ஆத்மாக்கள் ஸ்வர்கத்தை அடையும். இந்த கங்கை பகவானின் கால் கட்டை விரலிலிருந்து தோன்றியது. அளவிட முடியாத பெருமை பெற்றது. பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்னானம் செய்யாவிட்டாலும், இறந்தவனுடைய சரீரத்தைச் சேர்ந்த சாம்பல், எலும்பு, தோல், நரம்பு, மயிர் என ஏதாவதொன்று இதில் நனைந்தாலும் அவன் பதிதனாக இருந்தாலும் அவனுக்கு ஸ்வர்கத்தைத் தரும் புனித கங்கை.

அம்சுமான் கொண்டு வந்த குதிரையைக் கொண்டு யாகத்தையும் முடித்த ஸகரன், அவன் பிள்ளைகள் பாதாளம் செல்வதற்காகத் தோண்டிய குழியில் நீர் நிரம்பி உண்டான ஸமுத்ரத்தைத் தன் பிள்ளையாக எண்ணினான் (ஸாகரம்). அம்சுமானுக்குத் திலீபனும், அவனுக்குத் தான் பகீரதனும் பிறந்தனர். அவன் பலகாலம் கடும் தவம் புரிந்து ஆகாச கங்கையையும் பூமிக்குக் கொண்டு வந்தான். அதனால் கங்கையும் பாகீரதி எனப்பட்டாள். பகீரதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு ஸிந்துத்வீபனும், அவனுக்கு அயுதாயுவும், அவனுக்கு ருதுபர்ணனும் பிறந்தனர். இந்த ருதுபர்ணனே நள மஹராஜன் புஷ்கரனிடம் சொக்கட்டான் ஆடி தன் போகங்களை இழந்து தவித்த போது, ஆட்டத்தின் மர்மங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுத்து மீண்டும் புஷ்கரனிடமிருந்து ராஜ்ய போகங்களைப் பெறுவதற்கு உதவியவன்.

ருதுபர்ணனுக்கு ஸர்வகாமனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு மித்ரஸஹனும் (ஸௌதாஸன்) பிறந்தனர். இந்த ஸௌதாஸன் ஒரு முறை வேட்டைக்குச் சென்றிருந்த போது மற்ற அனைத்து விலங்குகளையும் துன்புறுத்திக் கொண்டிருந்த இரு புலிகளைக் கண்டான். ஒன்றை வேட்டையில் கொன்றான். அது இறக்கும் போது பயங்கரமான ராக்ஷஸ உருவத்துடன் இறந்தது. மற்றதும் "இதற்கு உன்னை தகுந்த ஸமயத்தில் பழி வாங்குவேன்" என்று கூறி மறைந்து விட்டது. ஸமயத்தை எதிர்பார்த்திருந்த அது ஒரு ஸமயம் ஸௌதாஸன் யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது, குலகுரு வஸிஷ்டரின் உருவில் வந்து யாக முடிவில் நர மாம்ஸத்தைத் தனக்குத் தரவேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றது.

அதுவே சமையல்காரனாக உருவம் தாங்கி நர மாம்ஸத்தைப் பக்வம் செய்து அரசனிடம் பணிவுடன் கொடுத்தது. உண்மை அறியாத ஸௌதாஸனும் அதைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து குருவிற்குச் சமர்பித்தான். உண்மையான வஸிஷ்டர் அதைக் கண்டு மாம்ஸம், அதுவும் நர மாம்ஸம் என்று உணர்ந்து பெரும் கோபத்துடன், நீயே இதை விரும்பிச் சாப்பிடுபவனாக ஆகக்கடவது என்று அரசனை சபித்து விட்டார். குழப்பமும், பதட்டமும் அடைந்த மன்னன் அவரிடமே நடந்த விஷயங்களைக் கூறி "நீங்களே ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு, இப்போது என்னை சபித்து விட்டீர்களே" என்று வருந்தினான்.

த்யானத்தால் விஷயங்களை முழுதும் தெரிந்து கொண்ட வஸிஷ்டரும் ராக்ஷஸன் செய்த தவறுக்கு ஒன்றும் அறியாத இவனை சபித்து விட்டோமே என்று வருந்தினார். மீண்டும் அவனிடமே இந்த சாபம் பனிரெண்டு வருஷங்கள் உன்னிடம் இருந்து பின் விலகும் என்று அருளினார். தவறே செய்யாமல் நாம் ஏன் பனிரெண்டு வருஷங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆராயாமல் சபித்த குருவை நாமும் சபித்தால் என்ன என்று கோபத்துடன் சபிப்பதற்காக ஜலத்தையும் எடுத்து ஜபித்தான். மனைவி மதயந்தீ கணவனின் எண்ணத்தை அறிந்து கொண்டாள். பூஜிக்கத்தக்க குலகுருவைச் சபிப்பதிலிருந்து தன் கணவனைத் தடுத்து, அவன் செய்ய நினைப்பது தகாத செயல். பாபச்செயல் என்று அறிவுரை கூறினாள்.

அவளின் உபதேஸத்தால் தான் செய்ய இருந்த தவறை உணர்ந்த ஸௌதாஸன் ஜபித்த நீரை எங்கு விட்டாலும் அங்குள்ள வளமை அழியும் என்று தன் காலிலேயே விட்டுக் கொண்டான். மந்த்ரதீர்த்தம் பட்ட அவனது கால் உடனே வெளுப்பும், கறுப்பும் கலந்த ஒரு விசித்ர வர்ணத்தில் (கல்மாஷம்) மாறிவிட்டது. இதனால் அன்றிலிருந்து அவன் கல்மாஷபாதன் என்று அழைக்கப்பட்டான். ராக்ஷஸனாக மாறிய கல்மாஷபாதன் (என்ற ஸௌதாஸன் என்ற மித்ரஸஹன்) காடுகளில் அலைந்து திரிந்து மனிதர்களைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தான். இப்படி ஒரு ஸமயம் காட்டில் தன் பத்னியுடன் சேர்ந்திருந்த ஒரு முனிவரைப் பிடித்துக் கொண்டான். முனிபத்னி அவனிடம் பலவாறு கெஞ்சினாள்.

அவனது பூர்வங்களையும், சிறப்புகளையும் எடுத்துக் கூறினாள். இக்ஷ்வாஹு குல திலகமான மித்ரஸஹனல்லவா நீ. உனக்குத் தெரியாத தர்மங்கள் உண்டோ. ஸ்த்ரீ தர்மத்திலிருக்கும் நான் ஸுகத்தை அனுபவிக்காமலிருக்கும் போது என் பர்த்தாவைக் கொல்வது பாபமல்லவா. எனவே அவரை விட்டுவிடு எனப் பலவாறு கெஞ்சினாள். புலிக்கு தர்மோபதேசம் செய்தால் அதற்குப் புரியவா போகிறது. முனிவரை அடித்துக் கொன்றான். சாப்பிட்டான். சொல்வதைக் கேட்காத, புரிந்து கொள்ளாத அவனிடம் கடுங்கோபம் கொண்ட முனிபத்னி நீயும் இதேபோல் காம ஸுகத்திற்கு முயலும் போது இறந்து படுவாய் என்று சபித்து விடுகிறாள். இரண்டாவது சாபம். பனிரெண்டு வருடங்கள் கழித்தும், இந்த முனிபத்னியின் சாபத்தை நினைவில் கொண்டு அவனும் பலகாலம் இல்லற சுகம் இல்லாமலேயே கவனமாக இருந்தான்.

ஸந்ததியே இல்லாமல் தன்னுடன் வம்சம் முடிவதால் வருந்திய கல்மாஷபாதனும், மனைவி மதயந்தீயும் புத்ர ப்ராப்திக்காக வஸிஷ்டரை வேண்டிக்கொண்டனர். அவருடைய அனுக்ரஹத்தால் மதயந்தீ கர்ப்பவதி ஆனாள். ஆனால் ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. பொறுமையிழந்த அரசி கல்லினால் வயிற்றில் இடித்துக் கொண்டாள். ஆண்குழந்தை ஒன்று அப்போது பிறந்தது. அச்மகன் (அச்மா=கல்) என்று பெயர் வைத்தனர் இந்தக் குழந்தைக்கு. இவனுக்கு மூலகன் என்பவன் பிறந்தான். இவன் காலத்தில் தான் க்ஷத்ரியர்களைப் பூண்டோடு அழித்துக் கொண்டிருந்தார் பரசுராமர். இவனையும் கொல்ல வந்தபோது பல பெண்கள் ஆடையின்றி இவனை சூழ்ந்து மறைத்துக் கொண்டனர். இதனால் இவன் உயிர் தப்பினான். பெண்கள் இவனுக்குக் கவசமாய் இருந்து இவனுக்கு நாரீகவசன் என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த மூலகன் என்ற நாரீகவசனுக்கு தசரதனும், அவனுக்கு இலிபிலி என்பவனும், அவனுக்கு விச்வஸஹனும், அவனுக்கு கட்வாங்கனும் பிறந்தனர். கட்வாங்கன் தேவர்களுக்குத் துணையாயிருந்து அஸுரர்களை வெல்ல உதவினான். அதற்கு ப்ரதிபலனாக அவனை ஸ்வர்கத்திற்கு அழைத்துச் சென்று பல போகங்களை அவன் அனுபவிக்கச் செய்து, அதன் பின் வேண்டிய வரத்தைப் பெறுமாறு கூறுகின்றனர். புத்திசாலியான கட்வாங்கன் முதலில் தனது மீதமிருக்கும் ஆயுசைக் கூறுமாறும், அதற்குத் தக்கவாறு வரங்களைக் கேட்பதாகவும் கூறுகிறான். வேறு வழியின்றி தேவர்களும் அவனது ஆயுசைக் கணக்கிட்டு "இன்னும் ஒரு முஹூர்த்தமே உள்ளது உன் ஆயுள்" என்ற செய்தியைக் கூறுகின்றனர். (ஒரு முஹூர்த்தத்துல என்னத்த அனுபவிக்கறது, அவன் புத்திசாலிதான்) இதைக் கேட்டவுடன் விமானம் மூலம் உடனேயே பூலோகம் வந்து சேர்ந்தான் கட்வாங்கன்.

"ப்ராஹ்மணர்களுடன் இருப்பதை விட பெரிதொன்றுமில்லை. நான் ஒரு பொழுதும் ஸ்வதர்மங்களை விட்டதில்லை. அனைத்து ஸ்தாவர, ஜங்கம ஜீவ ராசிகளிலும் பரமனைத் தவிர வேறெதையும் நான் கண்டதில்லை. இவையெல்லாம் உண்மையானால் மஹரிஷிகள் உபாஸிக்கின்ற பெருமானையே நான் அடைவேனாக" என்று விஷ்ணுவினிடமே தன் ஆத்மாவை அர்ப்பணம் செய்து, அந்த ஒரு முஹூர்த்த காலத்திலேயே மோக்ஷத்தையும் அடைந்தான் கட்வாங்கன். இந்த கட்வாங்கனுக்குத் தீர்க்கபாஹுவும், அவனுக்கு ரகுவும், அவனுக்கு அஜனும், அவனுக்கு தசரதனும் பிறந்தனர்.

இந்த தசரதனுக்குத் தான் தன் அம்சங்களுடன் பகவான் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களாகப் பிறந்தார். விச்வாமித்ரரின் யாகம் காக்க இளமையிலேயே கானகம் சென்று, தாடகையைக் கொன்று, மாரீசனை ஸமுத்ரத்தில் தள்ளி, ஸுபாஹு முதலான ராக்ஷஸர்களை அழித்தான். தன் பாதத்தால் அஹல்யைக்கு சாப விமோசனம் தந்து, விச்வாமித்ரரின் யாகம் காத்த ராமன் அவருடனேயே மிதிலை சென்று ஜனகரின் சிவதனுசை ஒடித்து, ஜனகருக்கு யாக சாலைக்காக பூமியை உழுதபோது கிடைத்த ஸீதை என்ற அயோநிஜையை பத்னியாக்கிக் கொண்டான். அயோத்தி செல்லும் வழியில் க்ஷத்ரியர்களை அழிப்பவரும், ஹைஹய குலத்தை ஒழித்தவருமான பரசுராமரின் வீர்யத்தை அடக்கி, அதன் பின் தந்தை சொல்படி ராஜ்யத்தைத் துறந்துத் தம்பியோடும், மனைவியோடும் கானகம் புகுந்தான்.

கானகத்தில் கர, தூஷணர்களைக் கொன்று, பின் ஸீதையின் பிரிவால் வருந்தி அலைந்து கொண்டிருந்த போது, வழியில் கபந்தனைக் கொன்று, ஸுக்ரீவனைத் தோழனாகக் கொண்டு, வாலியையும் கொன்றான். அதன் பின் அனுமன் மூலம் ஸீதை இருக்குமிடம் அறிந்து, கடலில் அணை கட்டி ராவணாதி அரக்கர் குலத்தை அழித்து, அக்னி ப்ரவேசத்தினால் ஸீதையைப் புனிதையாக்கி, தேவர்கள் புகழ்ந்த ஸீதையுடன் மீண்டும் அயோத்தி திரும்பினான். இப்படி ராமாயணத்தைச் சுருக்கிச் சொல்லி விட்டேனே என்று நினைக்க வேண்டாம். மைத்ரேயே! உண்மையில் பல நூறு வர்ஷங்கள் வர்ணித்தாலும் அந்த மஹோத்ஸவத்தை முடிக்க முடியாது. எனவே அந்த மங்களமான மஹோத்ஸவத்தைச் சுருங்கக் கூறுகிறேன் கேள்" என்றார் பராசரர்.

லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகிய தம்பிகளுடன், விபீஷணன், ஸுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமான் முதலான துணைவர்களுடம் மலர்ந்த முகத்துடன் குடை, சாமரங்களை ஏந்திக் கொண்டிருக்க, ப்ரஹ்மா, இந்த்ரன், அக்னி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ருத்ரன் என எல்லா தேவர்களும் துதிக்க, வஸிஷ்டர், வாமதேவர், வால்மீகி, மார்க்கண்டேயர், விச்வாமித்ரர், பரத்வாஜர், அகஸ்த்யர் என ரிஷிகள் மூன்று வேதங்களால் துதி செய்ய, வீணை, புல்லாங்குழல், ம்ருதங்கம், பேரி, படஹம், சங்கம், காஹளம், கோமுகம் முதலான வாத்யங்கள் முழங்க, இன்னும் பல கோலாகலங்களுடன் ஸர்வ லோக ரக்ஷணனாக ராமன் பட்டாபிஷேகம் செய்யப் பட்டான். பதினோராயிரம் ஆண்டுகள் நல்லாட்சியும் புரிந்தான்.

இளவரசனான பரதன் மூன்று கோடி கந்தர்வர்களைக் கொன்று, அந்த ராஜ்யத்தை வென்றான். சத்ருக்னனும் மது புத்ரனான லவணன் என்ற அஸுரனைக் கொன்று மதுரா நகரை ஏற்படுத்தினான். இப்படி இந்த ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள் தங்கள் பராக்ரமங்களால் துஷ்ட நிக்ரஹம் செய்து விட்டு இப்பூமியை விட்டுக் கிளம்பிய போது, அவர்களிடம் பக்தி கொண்ட அந்நாட்டு ப்ராணிகளும் கூட மோக்ஷத்தை அடைந்தன. ராமனுக்கு லவ, குசனும், லக்ஷமணனுக்கு அங்கதன், சந்த்ரகேதுவும், பரதனுக்குத் தக்ஷகன், புஷ்கலனும், சத்ருக்னனுக்கு ஸுபாஹு, சுரஸேனனும் பிறந்தனர்.

இந்த சந்ததி குசன், நிஷதன், அனலன், நபஸ், புண்டரீகன், க்ஷேமதன்வா, தேவானீகன், அஹீனகு, குரு, பாரியாத்ரன், பலன், சலன், உத்கன், வஜ்ரநாபன், சங்கணன், வ்யுஷிதாச்வன், விச்வஸஹன், ஹிரண்யநாபன், புஷ்யன், த்ருவஸந்தி, ஸுதர்சனன், அக்னிவர்ணன், சீக்ரகன், மரு,ப்ரசுச்ருகன், ஸுஸந்தி, அமர்ஷன், ஸஹஸ்வான், விச்வபவன், ப்ருஹத்பலன் என வளர்ந்தது. இதில் ஹிரண்யநாபன் ஜைமினி சிஷ்யரான மஹா யோகீச்வரர் யாக்ஞவல்க்யரிடமிருந்து யோகத்தைக் கற்றவன். மரு என்பவனே இன்றும் இமயமலைக்கருகில் கலாபம் என்ற க்ராமத்திலே தன் யோக பலத்தால் யாருக்கும் தெரியாமல் வஸித்து வருகிறான். இவனே இனி வரும் க்ருத யுகத்திலே ஸூர்ய வம்ச முதல்வனாகப் போகிறான். ப்ருஹத்பலனென்பவன் மஹாபாரத யுத்தத்திலே அர்ஜுன புத்ரன் அபிமன்புவால் கொல்லப் பட்டான். இப்படிப் பட்ட இந்த ஸூர்ய வம்சத்தைப் பற்றிக் கேட்பவர்களும், படிப்பவர்களும் இவ்வுலகிலும், ஸ்வர்கத்திலும் விரும்பிய போகங்களைப் பெற்று, எல்லோராலும் கொண்டாடப்படுவர்.

Thursday, January 28, 2010

விஷ்ணு புராணம் - 59

04_03. மாந்தாதாவின் மகன்களுள் அம்பரீஷனுக்கு யுவநாச்வனும், அவனுக்கு ஹரிதனும் பிறந்தனர். இவனைக் கொண்டே அங்கிரஸ்ஸுக்கள் ஹாரீதர்கள் என்று ஆனார்கள். ஒரு ஸமயம் ரஸாதலத்தில் இருந்த நாகர்களை காச்யபருக்கும், அவர் மனைவி முனிக்கும் பிறந்தவர்களான மௌனேயர் என்ற ஆறு கோடி கந்தர்கவர்கள் வென்று அவர்களின் உயர்ந்த ரத்னங்களையும், ஆட்சியையும் கைப்பற்றினார்கள். நாகர்கள் இது பற்றி மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவர்கள் ப்ரார்த்தனைக்கு மனமிறங்கிய பெருமான் தானே மாந்தாதாவின் மகனான புருகுத்ஸனிடம் ப்ரவேசித்து அந்த துஷ்ட கந்தர்வர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கேக் கொடுப்பதாகக் கூறினார்.

இதைக் கேட்ட நாகர்களும் பெரிதும் மகிழ்ந்து தங்கள் ஸஹோதரியான நர்மதையை புருகுத்ஸனுக்கு மனைவியாக்கி, அவனை நாகலோகத்திற்கு அழைத்து வந்தனர். மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் புருகுத்ஸனும் மௌனேயர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கு அளித்து விட்டுத் தன் நகரம் திரும்பினான். மிகவும் ஸந்தோஷப்பட்ட நாகர்கள் நன்றிக்கடனாக "நர்மதையின் பெயரைக் கூறுபவனையும், மனதில் நினைப்பவனையும் எந்த விஷமும் ஒன்றும் செய்யாது. விஷத்தையே உண்டாலும் அவனுக்கு அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இரவிலும், பகலிலும் எங்கு சென்றாலும் அவனைப் பாம்புகள் கடிக்காது" என்ற வரத்தைக் கொடுத்தனர். புருகுத்ஸனுக்கும் ஸந்ததி விளங்க வரம் அளித்தனர்.

புருகுத்ஸனுக்கும், நர்மதைக்கும் த்ரஸதஸ்யு என்பவனும், அவனுக்கு அனரண்யனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு ஹஸ்தனும், அவனுக்கு வஸுமனஸ்ஸும், அவனுக்கு த்ரிதன்வாவும், அவனுக்கு த்ரைய்யாருணியும், அவனுக்கு ஸத்யவ்ரதனும் பிறந்தனர். இதில் அனரன்யனை ராவணன் திக் விஜயம் செய்த போது கொன்று விட்டான். இந்த ஸத்யவ்ரதனே பிறகு த்ரிசங்கு என்று பெயருடன் சண்டாளனானான். சங்கு என்றால் முளையுடன் கூடிய குச்சி. அடித்தால் அப்படி வலிக்கும். மணக்கோலத்தில் இருந்த ப்ராஹ்மணப் பெண்ணைக் கவர்ந்து, அவள் தந்தையிடம் "சண்டாளனாகப் போவாய்" என்ற சாபம் பெற்றது, வஸிஷ்டர் ஹோமத்திற்கு உதவிக் கொண்டிருந்த பசுவைக் கொன்றது, மாம்ஸத்தை ஒரு முறை ப்ரோக்ஷிக்காமலே உண்டது இப்படி மூன்று துக்கம் தரும் பாபங்களை செய்ததால் ஸத்யவ்ரதனுக்கு அவன் தந்தை த்ரையாருணி த்ரிசங்கு என்று பெயர் வைத்தான்.

இப்படி சண்டாளனான த்ரிசங்குவின் காலத்தில் பனிரெண்டு வருஷங்கள் மழை பொய்த்து விட்டது. பெரும் பஞ்சத்தில் மாம்ஸம் சாப்பிட்டுத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். மாம்ஸமும் சண்டாளனிடமிருந்து தான் கிடைத்தது. சண்டாளனிடமிருந்து ஒன்றைப் பெறுவது மிகவும் பெரிய பாபம், குற்றம். அந்த நிலை மஹரிஷி விச்வாமித்ரருக்கும் வந்தது. மஹரிஷி இந்தச் செயலுக்குட்பட்டதைக் கண்ட த்ரிசங்கு மிகவும் மனமுடைந்து மஹரிஷிக்காகத் தானே வனத்தில் வேட்டையாடி தினமும் மாம்ஸங்களை கங்கைக் கரையில் ஒரு ஆலமரத்தில் கட்டி வைத்தான். இந்த உதவியால் தன் குடும்பத்துடன் பெரிதும் மகிழ்வுடன் வாழ்ந்த விச்வாமித்ரர் அவனை ஸ்வர்கத்திற்கு அனுப்பி வைத்தார்.

த்ரிசங்குவிற்கு ஹரிச்சந்த்ரனும், அவனுக்கு ரோஹிதாச்வனும், அவனுக்கு ஹரிதனும், அவனுக்கு சஞ்சுவும், அவனுக்கு விஜயன், வஸுதேவன் என்ற இருவரும் பிறந்தனர். விஜயனுக்கு ருருகனும், அவனுக்கு வ்ருகனும், அவனுக்கு பாஹுவும் பிறந்தனர். ஹைஹயர், தாளஜங்கர் முதலான பகைவர்களிடம் போரில் தோற்ற பாஹு கர்ப்பிணியாக இருந்த தன் ஒரு மனைவியுடன் காட்டிற்குள் சென்று விட்டான். அவனின் மற்றொரு மனைவி சக்களத்தியின் கர்ப்பம் அழிவதற்காக விஷத்தைக் கொடுத்து விடுகிறாள். கர்ப்பம் ஏழு வருடங்களாக இந்த விஷத்தால் பிறக்காமல் வயிற்றிலேயே இருந்தது. வயது முதிர்ந்த பாஹுவும் ஒரு ஸமயம் ஔர்வ மஹரிஷியின் ஆச்ரமத்தினருகில் மரணமடைந்து விடுகிறான்.

கணவன் சிதையிலேயே உடன்கட்டை ஏறத் துணிந்த அவனது கர்ப்பிணி மனைவியை ஔர்வர் தடுத்து நிறுத்தி "அம்மா, பிடிவாதம் செய்யாதே. உன் வயிற்றில் பெரும் பூமண்டலாதிபதியும், பராக்ரமசாலியும், யாகங்களைச் செய்பவனும், சத்ருக்களை அழிப்பவனுமான ஒருவன் இருக்கிறான். நீ இறந்தால் அவனும் இறப்பான். எனவே உன்னுடைய இந்த ஸாஹஸத்தை நிறுத்தி விடு" என்று கூறுகிறார். அவளைத் தன் ஆச்ரமத்திற்கே அழைத்துச் செல்கிறார். அங்கு விஷத்துடனேயே பிறக்கும் ஆண் குழந்தைக்கு ஔர்வ மஹரிஷியே சடங்குகளைச் செய்து "ஸகரன்" என்ற பெயரையும் வைத்து, தகுந்த பருவத்தில் உபனயனம் செய்வித்து, ஸகல வித்தைகளையும் கற்பிக்கிறார். ப்ருகு மஹரிஷியிடமிருந்து பெற்ற ஆக்னேயம் என்ற அஸ்த்ரத்தையும் உபதேஸிக்கிறார்.

தகுந்த ஸமயத்தில் தாயிடமிருந்து தன் ராஜ்யம், தந்தை, பகைவர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்ட ஸகரன் பெரும் கோபம் கொண்டு, சபதம் பூண்டு ஹைஹயர், தாளஜங்கர் மேலும் அவர்களைச் சேர்ந்த சகர், யவனர், காம்போஜர், பாரதர், பப்லவர் என அனைவரையும் கொன்று குவிக்கிறான். அந்த வம்சங்களைச் சேர்ந்த மிஞ்சியவர்கள் ஸகரனின் குல குருவான வஸிஷ்டரைத் தஞ்சமடைகின்றனர். அவர்களிடம் கருணை கொண்ட அவரும் ஸகரனிடம் வந்து "குழந்தாய்! இவர்களைக் கொல்லாதே, தர்மங்களிலிருந்து விலகினாலே ஒருவன் இறந்தவனாகி விடுகிறான். எனவே உன் சபதத்தைக் காக்க நானே இவர்களை வைதீக தர்மங்களிலிருந்து விலக்குகிறேன். இனி இவர்கள் வெறும் உயிரை மட்டும் கொண்ட பிணங்களே (ஜீவத் ம்ருதர்கள்). இவர்களை நீ விட்டு விடு" என்று கூறுகிறார்.

ஆசார்யரின் வார்த்தைக்குப் பெரிதும் மதிப்பு கொடுத்து அதன்படியே அவர்களின் உயிரை மட்டும் விட்டு, வேஷங்களையும், ஆசாரங்களையும் பறித்து விடுகிறான். யவனர்களின் தலையை மொட்டையடித்து, பாரதர்களின் தலைமயிரைத் தொங்கவிட்டு, பப்லவர்களுக்குக் காரணமின்றி தாடி, மீசை வைத்து, இன்னும் சிலருக்கும் இப்படி எதையாவது செய்து அவர்களை கர்மாக்களைச் செய்வதற்கும் அதிகாரமின்றி வேதாத்யனனம் முதலியவைகளை அழித்து விட்டான். இவர்களே ம்லேச்சர்கள் என்று ஆனார்கள். ப்ராஹ்மணர்களாலும் கைவிடப்பட்டார்கள். ஸகரனும் ஏழு த்வீபங்களையும் எந்த தடைகளுமின்றி நன்கு ஆண்டு வந்தான்.

விஷ்ணு புராணம் - 58

04_02. ககுத்மி ப்ரஹ்மலோகம் சென்றிருந்த போது குதஸ்தலியை புண்யஜனர் என்ற ராக்ஷஸக் கூட்டம் அவர் தம்பிகளை நான்கு திசைகளிலும் விரட்டி விட்டு தாங்கள் ஆண்டனர். தம்பிகளில் ஒருவனான வ்ருஷ்டனிடமிருந்து வார்ஷ்டகம் என்ற ராஜ குலம் உண்டாயிற்று. மனுவின் மற்றொரு புதல்வனான நாபாகனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு விரூபனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ரதீதரனும் பிறந்தனர். ரதீரதனின் மனைவியிடம் அங்கிரஸ் என்ற ப்ராஹ்மணர் ப்ரம்ஹ வர்ச்சஸ் உள்ள பிள்ளைகளை உண்டாக்கவே, அவர்கள் ப்ராஹ்மண்யமும், க்ஷத்ரியத்வமும் கலந்தவர்கள் ஆனார்கள்.

இதேபோல் ஒரு ஸமயம் மனு தும்மியபோது அவர் மூக்கிலிருந்து தோன்றிய இக்ஷ்வாகுவிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். விகுக்ஷி, நிமி, தண்டன் என்ற மூவரே அதில் முக்யமாயிருந்தனர். சகுனி முதலான ஐம்பது பேர்கள் உத்தராபதத்திற்கும், நாற்பத்தெட்டு பிள்ளைகள் தக்ஷிணாபதமென்ற நாட்டிற்கும் அரசராயினர். ஒரு ஸமயம் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றிருந்த விகுக்ஷி பல ம்ருகங்களைக் கொன்று மிகவும் களைத்திருந்தான். தந்தை அஷ்டகை ச்ராத்தத்திற்கு மாம்ஸம் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டிருந்ததை நினைவில் கொண்ட அவன் பசியால் சேமித்த விலங்குகளுள் முயலை மட்டும் தான் சாப்பிட்டு விட்டு, மற்ற அனைத்தையும் தந்தையிடம் ச்ராத்தத்திற்காகக் கொண்டு வந்து தந்தான்.

அவற்றை பரிக்ஷித்த வஸிஷ்டர் "அரசே! ச்ராத்தத்திற்கு என ஸம்பாதித்த இந்த மாம்ஸங்களுள் ஒன்றான முயல் மாம்ஸத்தை உன்னுடைய துராத்மாவான இந்த பிள்ளை தின்று விட்டதால் இவையனைத்துமே தோஷம் காரணமாக விலக்கத்தக்கவை, அசுத்தமாகிவிட்டன இவை" என்று கூறி விட்டார். இதனால் விகுக்ஷி சசாதன் (முயலைத் தின்றவன்) என்று அழைக்கப்பட்டான். இக்ஷ்வாகுவும் அவனைக் கைவிட்டான். இக்ஷ்வாகுவின் இறப்பிற்குப் பின் இவன் அரசாண்டான். புரஞ்ஜயன் என்ற புத்ரனையும் பெற்றான்.

முன்பொரு ஸமயம் த்ரேதா யுகத்தில் பலத்தால் அஸுரர்கள் தேவர்களை வென்றனர். விஷ்ணுவை ஆராதித்த அவர்களிடம் "சசாதனுடைய புத்ரன் புரஞ்ஜயன் உடலில் நான் புகுந்து அஸுரர்களை வெல்வேன். எனவே நீங்கள் அவனிடம் சென்று உதவி கோருங்கள்" என்றார். தேவர்களின் வேண்டுதலைக் கேட்ட புரஞ்ஜயன் "நூறு அச்வமேதங்கள் செய்த உங்கள் தலைவன் இந்த்ரன் எனக்கு வாஹமானால் ஒழிய அந்த அஸுரர்களை வெல்வது கடினம்" என்று நிபந்தனை விதித்தான். இந்த்ரன் இதற்குடன்பட்டு வ்ருஷபமானான் (எருது). எருதின் முதுகுக் கொண்டையின் (ககுத்)மீதிருந்து போர் புரிந்து வென்றதால், புரஞ்ஜயனுக்கு ககுத்ஸ்தன் என்ற பெயர் நிலைத்தது. இவனுக்கு அநேநஸ் என்பவனும், அவனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விஷ்டராச்வனும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

யுவனாச்வனுக்கு சந்த்ராம்சம் பொருந்தியிருந்ததால் சாந்த்ரன் எனப்பட்டான். அவனுக்கு சாபஸ்தன் பிறந்து சாபஸ்தீ நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ப்ருஹதச்வனும், அவனுக்குக் குவலயாச்வனும் பிறந்தனர். அவன் உதங்க மஹரிஷியின் பகைவனான துந்து என்ற அஸுரனைத் தன் இருபத்தோராயிரம் புத்ரர்களோடு சென்று கொன்று, துந்துமாரன் என்ற பெயர் கொண்டான். அந்த சண்டையில் த்ருடாச்வன், சந்த்ராச்வன், கபிலாச்வன் என்ற மூன்று பிள்ளைகளைத் தவிர மீதம் ஆயிரமாயிரம் புத்ரர்களும் துந்துவின் மூச்சுக் காற்றால் இறந்தனர். த்ருடாச்வனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு நிகும்பனும், அவனுக்கு அமிதாச்வனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ப்ரஸேனஜித்தும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

இந்த யுவனாச்வனுக்கு நெடுங்காலமாக புத்ரன் இல்லாமையால் வெறுத்துப் போய், காட்டிலும், ரிஷிகளின் ஆச்ரமங்களிலுமே இவன் திரிந்து கொண்டிருந்தான். இவனிடம் கருணை கொண்ட மஹரிஷிகள் தாங்களாகவே அவனுக்கு ஒரு புத்ரனை வேண்டி இஷ்டியைச்(வேள்வி) செய்தனர். நள்ளிரவில் அந்த வேள்வி முடியவே மந்த்ர தீர்த்தம் நிரம்பிய கலசத்தை யாக வேதியின் நடுவில் வைத்து விட்டு, மஹரிஷிகள் அயர்ந்து விட்டனர். அப்போது பெரும் தாஹத்துடன் அங்கு வந்த யுவனாச்வன் தூங்குபவர்களை எழுப்ப வேண்டாம் என்று, பராக்ரமம் வாய்ந்த பிள்ளையைப் பெற அவன் மனைவி அருந்த வேண்டிய அந்த மந்த்ர தீர்த்தத்தைத் தான் குடித்து விடுகிறான்.

முனிவர்கள் விஷயமறிந்து வருத்தமடைந்து கொண்டிருக்க, அவன் வயிற்றில் ஒரு கர்ப்பம் உண்டாகி, காலத்தில் வலக்கைக் கட்டை விரலாலேயே யுவனாச்வன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு குழந்தை வெளியேயும் வந்து விடுகிறது. யுவனாச்வன் இறந்து விடுகிறான். இந்தக் குழந்தைக்கு யார் பால் கொடுப்பார்கள் என்று முனிவர்கள் வருந்தும்போது இந்த்ரன் "என்னைத் தாயாகக் கொண்டு இது பாலுண்ணும்" என்று கூறி தன் பவித்ர (மோதிர)விரலால் அம்ருதத்தை வர்ஷிக்க, அதை உண்ட குழந்தையும் விரைவில் வளர்ந்தது. இந்தக் குழந்தையே மாந்தாதா என்ற பெயரில் பின்னர் சக்ரவர்த்தியாகி ஸூர்யன் உதித்து அஸ்தமிக்கும் எல்லை வரை ஆண்டது. இவனுக்கும் சசிபிந்து என்பவனின் பெண்ணான இந்துமதிக்கும் புருகுத்ஸன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற மூன்று பிள்ளைகளும், ஐம்பது பெண்களும் பிறந்தனர்.

இந்த நேரத்தில் ரிக் வேதியான ஸௌபரி மஹரிஷி, ஜலத்திற்குள் பனிரெண்டு வருஷமாகத் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வஸித்து வந்த ஸம்மதன் என்ற மீன்களின் அரசன் தன் பிள்ளை, பேரன்களோடு அங்குமிங்கும் உல்லாஸமாக அங்குமிங்கும் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்ததில் தன் தவத்தைக் கலைத்துக் கொண்ட ஸௌபரி மஹரிஷி மீன்கள் ஸம்மதன் மேல் அங்குமிங்கும் விளையாடுவது போல தானும் பிள்ளை, பேரன்களோடு விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். வந்தார் மாந்தாதாவிடம். அவனின் பூஜை, உபஸரிப்புகளை ஏற்றுக்கொண்டு "அரசே! நான் திருமணம் செய்ய நினைத்திருக்கிறேன். எனக்குப் பெண் தா.

எத்தனையே அரசர்கள் பெண் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் ககுத்ஸ்த வம்சத்தவர்களே இரப்போரின் மன விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள் என்று உன்னிடம் நான் வந்துள்ளேன். உங்களிடம் வந்தவர்கள் வீணே திரும்புவதில்லை. உனக்கோ ஐம்பது பெண்கள். அவர்களில் ஒரு பெண்ணையாவது எனக்குக் கொடு. என் துக்கத்தைப் போக்கு" என்றார். உடல் தளர்ந்த கிழவரின் வேண்டுகோளுக்கும், அவர் கோபத்துக்கும் பயந்து அவன் யோஸிப்பதைக் கண்ட மஹரிஷி "பெண்ணாகப் பிறந்தால் யாருக்காவது கொடுத்துதானே ஆக வேண்டும். நான் என்ன தவறாகக் கேட்டு விட்டேன். உனக்கும், எனக்கும் லாபமே, கொடுத்து விடு" என்றார்.

அரசன் உசிதமாக "நற்குடியில் பிறந்த எவரையாவது தாங்களே எங்கள் பெண்கள் தேர்ந்தெடுப்பதே எங்கள் குல வழக்கம். நான் இதில் என்ன செய்ய. நீங்களோ கேட்டு விட்டீர்கள். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, அதனால் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். முனிவரா விடுவார். "சரி, குடும்ப வழக்கத்தைக் கெடுக்க வேண்டாம். என்னை அந்தப் புரத்திற்குள் விடச்சொல். எந்தப் பெண் என்னைத் தானாக வரிக்கிறாளோ அவளையே நான் மணக்கிறேன். ஒருவரும் வரிக்கவில்லையெனில், இந்த கிழப்பருவத்திற்கு இது வீண் என்று விட்டு விடுகிறேன்" என்றார். இந்தக் கிழவரை எவள் வரிக்கப் போகிறாள் என்று அரசனும் காவலாளியைக் கூப்பிட்டு முனிவரை அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறான்.

அவனும் அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று "இவரை வரிப்பவர் எவராயினும் மன்னர் மறுப்பின்றி அவருக்கே இவரை மணம் முடிப்பார்" என்று அறிவிக்கிறான். முனிவர் இப்போது எவரும் வியக்கும், விரும்பும் அழகையும், உருவத்தையும் கொள்கிறார். ஐம்பது இளவரசிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அவரிடம் மனதைப் பறி கொடுக்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த மன்னன், வேறு வழியின்றி தன் வார்த்தையின் படி தன் ஐம்பது பெண்களையும் அவருக்கே விவாஹம் செய்து வைக்கிறான். அனைவரும் முனிவருடன் ஆச்ரமம் சென்று விடுகின்றனர்.

இளவரசிகளான அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குடியிருப்புகளை உண்டாக்கித்தர நினைத்த மஹரிஷி விச்வகர்மாவை உடனே அழைத்து "பறவைகள் சப்தமிடும் தாமரைக் குளங்கள், பூச்செடிகள், பழ மரங்கள், நந்தவனங்கள், பரந்த மெத்தை, மேடைகள், மாடங்கள், கூடங்கள் நிறைந்த தனித்தனி மாளிகைகளை உண்டாக்கித் தர வேண்டும்" என உத்தரவிடுகிறார். அப்படியே செய்து முடிக்கிறான் விச்வகர்மா. நந்தனன் என்ற நித்ய நிதியையும் படைக்கிறார் மஹரிஷி. அவைகளோடும், பல போகங்களோடும், அவர்களோடும் அதிதி பூஜைகளோடும், மனம் மகிழ்வோடு உள்ள வேலைக் காரர்களோடும் காலத்தைக் கழித்து வந்தனர்.

ஆண்டுகள் கழிகின்றன. பெண்கள் ஸந்தோஷமாக இருக்கிறார்களா என்ற அறிய விரும்பிய மாந்தாதா மாப்பிள்ளையான ஸௌபரி மஹரிஷியின் ஆச்ரமத்திற்கு வருகிறான். வசதிகளைக் கண்டு வியந்தபடி ஒவ்வொரு பெண்ணின் மாளிகைக்கும் சென்று உபசரிப்புகளை ஏற்றுக் கொண்டு அவர்களை நலம் விசாரிக்கிறான். அனைவருமே அப்பாவின் ஆசியில் மிகவும் உல்லாசமாகவும், த்ருப்தியுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஒவ்வொருவருமே மஹரிஷி எப்போதும் தங்களுடனே இருப்பதாகவும், எனவே மற்ற ஸஹோதரிகளைப் பற்றி இது குறித்து வருந்துவதாகவும் கூறுகின்றனர். இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த மன்னன் மஹரிஷியிடமும் சென்று அவரைப் பூஜித்து, கொண்டாடுகிறான்.

"தேவரீருடைய மஹிமையை நன்கு அறிகிறேன். இத்தகைய செல்வங்களும், சிறப்புகளும் வேறெங்கும் நான் கண்டதில்லை, தங்களின் தவத்தின் சக்தியைப் புரிந்து கொண்டேன்" என்று அவரைப் பலவாறு புகழ்ந்து விட்டு, சிலகாலம் தானும் அங்கு இருந்து அவைகளை அனுபவித்து விட்டு, நகருக்குத் திரும்புகிறான். நூற்றைம்பது குழந்தைகளுக்குத் தகப்பனாகிறார் ஸௌபரி மஹரிஷி. கொஞ்சி மகிழ்கிறார். அவர்கள் சிரிப்பையும், விளையாட்டையும், ஸேஷ்டைகளையும், தவழ்வதையும், நடப்பதையும் கண்டு ஸந்தோஷிக்கிறார். அவர்களின் பல்வேறு பருவங்களைப் பற்றி யோசித்தும் மகிழ்கிறார். இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஸமயம் அவருக்கு விழிப்பு வருகிறது.

"மோஹம் வளர்ந்து விட்டது, எவ்வளவு லக்ஷம் வருஷங்கள் கழிந்தாலும் இந்த ஆசைகள் முடியாது போலிருக்கிறதே. பிள்ளைகளைப் பார்த்தால், பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும், அதன் பின் கொள்ளுப் பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆசையும் பூர்த்தியானதும், புதிதாக இன்னொரு ஆசை பிறக்கிறது. மரணத்தின் போதுதான் இவைகளுக்கு முடிவு போலும். தவம் செய்து கொண்டிருந்த நான் மீனின் ஸஹவாசத்தால் இப்படி அழிந்து விட்டேனே. இனி எவரோடும் கூட்டு வைக்கக் கூடாது. அது பல தோஷங்களை உண்டாக்குகிறது. ஒரு மனைவியோடு இருப்பவனுக்கே பல கஷ்டங்கள் இருக்கும் போது, பலரை மணக்க நினைத்தேனே.

ஆஹா, எவ்வளவு தூரம் வந்து விட்டேன். யோகம், ஸித்திகளைப் பெற்றவர்களுக்கே ஸஹவாஸம் இவ்வளவு கஷ்டங்களைத் தருமென்றால், அல்பர்கள் இப்படிப்பட்டக் கூட்டுறவால் பதிதராகவே ஆகிவிடுவரே" இப்படிப் பலவாறு புலம்பி முடிவில் ஒரு முடிவுக்கு வந்தார். லோக குருவான விஷ்ணுவே இதற்கு கதி. அவனையே மீண்டும் சரணடைந்து தவத்தால் இந்த கஷ்டங்களை விட்டு விலகுவேன் என்று முடிவு செய்து போகங்களைத் துறந்து, மனைவிகளோடு வானப்ரஸ்தராகி, பல தர்மங்களை வனத்தில் அனுஷ்டித்து, பக்வம் அடைந்ததாக உணர்ந்த போது அக்னி ஹோத்ர அக்னிகளை தன் ஆத்மாவில் முடிந்து, ஸன்யாஸ ஆச்ரமத்திலிருந்து அழிவில்லாத மோக்ஷத்தையும் அடைந்தார்.

இந்த ஸௌபரி மஹரிஷியின் சரிதத்தை நினைப்பவனும், படிப்பவனும், படிக்கச் செய்பவனும், கேட்பவனும், கேட்கச் செய்பவனும், மனதில் வைப்பவனும், எழுதுபவனும், எழுதச் செய்பவனும், கற்பவன், கற்பிப்பவன் என அனைவரும் எட்டு பிறப்புக்கள் வரை தீய சிந்தையும், தீய ஒழுக்கமும் அண்டாது வாழ்வார்கள். அத்தனை புண்யமானது இந்த சரிதம்.

விஷ்ணு புராணம் - 57

04_01. அரசர்களின் வம்சங்களைப் பற்றிக்கூறுமாறு மைத்ரேயர் கேட்க, பராசரர் "ப்ரஹ்மத்தை முதலாகக் கொண்ட இந்த மனு வம்சத்தின் வரலாற்றை கேட்பவர்களின் வம்சம் மேன்மேலும் வளரும். ஸகல பாபங்களும் அகலும். ரிக், யஜுர், ஸாமமயனான விஷ்ணுவிடம் ஹிரண்யகர்ப்பனான ப்ரஹ்மாவும், அவர் வலக்கால் கட்டை விரலிலிருந்து தக்ஷ ப்ரஜாபதியும் தோன்றினார். தக்ஷனின் புதல்வி அதிதியின் பிள்ளை விவஸ்வான். விவஸ்வான் பிள்ளை மனு. மனுவிற்கு இக்ஷ்வாகு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், ப்ருஷத்ரன் என்று ஒன்பது புத்ரர்கள்.

இவர்கள் பிறப்பதற்கு முன் மனு மித்ராவருணர்களை உத்தேஸித்து புத்ரனை வேண்டி ஒரு யாகம் செய்த போது, அவர் மனைவி ஹோதாவிடம் சென்று புத்ரியை வேண்டுமாறு கூறினாள். இந்தக் குழப்பத்தால் இளா என்ற பெண் யாகப் பயனாகப் பிறந்து, உடனே மித்ர வருணர்களின் ஆசியால் ஸுத்யும்னன் என்ற ஆண் பிள்ளையாகவும் மாறிவிட்டாள். முன்பொரு ஸமயம் பரமேச்வரனும், பார்வதியும் ஒரு காட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொது சில மஹரிஷிகள் அங்கு வந்து விட்டனர். வெட்கமும், கோபமும் கொண்ட பார்வதி குடிசையில் மறைந்து கொண்டாள். நிலைமையைப் புரிந்து கொண்ட ரிஷிகளும் வெளியே சென்று விட்டனர். பார்வதியை த்ருப்தி செய்வதற்காக அந்தக் காட்டில் இனி யார் நுழைந்தாலும் அவர்கள் பெண்ணாக மாறி விடுவர் என்று வரம் கொடுத்தார்.

வேட்டைக்குச் சென்றிருந்த ஸுத்யும்னன் தற்செயலாக இதே காட்டிற்குள் நுழைந்து விட மீண்டும் பெண்ணாகி விடுகிறான். இந்தக் காட்டிற்கு இளாவ்ருதம் என்று பெயர். வெட்கமும், துயரமும் கொண்ட அவன்(ள்) சந்த்ரனின் புத்ரனான புதனுடைய ஆச்ரமத்தினருகில் சுற்றிக் கொண்டிருந்தான். அவளிடம் புதன் புரூரவஸ் என்ற பிள்ளையைப் பெற்றான். இதன் பின் மஹரிஷிகளின் பெருமை வாய்ந்த ஒரு யாகத்தால் ஸுத்யும்னன் மீண்டும் ஆண்மை எய்தினான். இவனுக்கு இப்போது உத்கலன், கயன், விதானன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். ஆண், பெண் குழப்பத்தால் ஸுத்யும்னனுக்கு அரசுரிமை வாய்க்கவில்லை.

வஸிஷ்டரின் உத்தரவால் தந்தையிடமிருந்து கிடைத்த ப்ரதிஷ்டானம் என்ற நகரத்திற்குத் தனக்குப் பின் புரூரவஸ்ஸை மன்னனாக்கினான் இளா என்ற ஸுத்யும்னன். மனுவின் மற்றொரு புத்ரனான ப்ருஷத்ரன் ஆசார்யர் வஸிஷ்டரின் பசுக்களைக் காத்துக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் இரவு ஒரு புலி பசுக்களை உண்பதற்காக அவற்றுள் புகுந்து விட்டது. அப்போது தவறுதலாக ஒரு பசுவை ப்ருஷத்ரன் கொன்று விட, வஸிஷ்டர் அவனை சூத்ரனாக சபித்து விடுகிறார். மற்றொருவனான கரூசன் கரூச தேசத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு பராக்ரமர்களான க்ஷத்ரியர்கள் பிறந்தனர். மற்றொருவனான த்ருஷ்டனுக்கு நாபாகனும், அவனுக்குப் பலந்தனனும் பிறந்தான். தாழ்ந்த செய்கைகளால் வைச்யத் தன்மை அடைந்த நாபாகனால் பலந்தனனுக்கும் க்ஷத்ரியத் தன்மை போய்விட்டது.

பலந்தனனுக்கு வத்ஸப்ரீதியும், அவனுக்கு ப்ராம்சுவும், அவனுக்கு ப்ரஜாபதியும், அவனுக்கு கனிமித்ரனும், அவனுக்கு சாக்ஷுஷனும், அவனுக்கு விம்சனும், அவனுக்கு விவிம்சகனும், அவனுக்கு கநிநேத்ரனும், அவனுக்கு அதிவிபூதியும், அவனுக்கு கரந்தமனும், அவனுக்கு அவிக்ஷித்தும், அவிக்ஷித்துக்கு மருத்தனும் பிறந்தனர். மருத்தன் செய்த யாகங்களில் கருவிகள் அனைத்தும் தங்கத்தாலானவை. இந்த்ரன் ஸோமபானத்தாலும், ப்ராஹ்மணர்கள் தக்ஷிணையாலும் இந்த யாகத்தில் த்ருப்தி அடைந்தனர். இவன் சபையில் தேவர்கள் இருந்தனர். இந்த மருத்தன் சக்ரவர்த்தியாக விளங்கினான். இவனுக்கு நரிஷ்யந்தனும், அவனுக்கு தமனும், அவனுக்கு ராஜவர்தனனும், அவனுக்கு ஸுவ்ருத்தியும், அவனுக்குக் கேவலனும், அவனுக்கு ஸுத்ருதியும், அவனுக்கு நரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு கேவலனும், அவனுக்கு பந்துமானும், அவனுக்கு வேகவானும், அவனுக்கு புதனும், அவனுக்கு த்ருணபிந்துவும், அவனுக்கு ஜலபிலா என்ற பெண்ணும் பிறந்தனர்.

த்ருணபிந்துவை அலம்புஸா என்ற அப்ஸரஸ்ஸுக்கும் விசாலன் பிறந்தான். அவன் விசாலன் எனும் நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ஹேமசந்த்ரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு தூம்ராக்ஷனும், அவனுக்கு ஸ்ருஞ்ஜயனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ஸோமதத்தனும் பிறந்தனர். இந்த ஸோமதத்தன் பத்து அச்வமேத யாகங்களைச் செய்தான். இவனுக்கு ஜனமேஜயன் பிறந்தான். இந்த அரசர்கள் அனைவரும் விசாலா நகரை ஆண்டவர்கள். இதேபோல் மனுவின் மற்றொரு புத்ரனான சர்யாதிக்கு ஸுகன்யா என்ற பெண்ணும், ஆனர்த்தன் என்ற புத்ரனும் பிறந்தனர். ஸுகன்யா ச்யவன மஹரிஷியை மணந்தாள்.

ஆனர்த்தனுக்கு ரேவதன் பிறந்தான். அவன் குதஸ்தலீ நகரிலிருந்து கொண்டு ஆனர்த்த ராஜ்யத்தை ஆண்டு வந்தான். இவனுக்கு ரைவதனும், அவனுக்கு ககுத்மி முதலான நூறு புத்ரர்கள் பிறந்தனர். ககுத்மிக்கு ரேவதி என்ற பெண் பிறந்தாள். அவளுக்கு யாரை மணம் முடிப்பது என்பதைக் கேட்கலாம் என்று ப்ரஹ்மலோகத்திற்கு அழைத்துச் சென்ற ககுத்மி அங்கு ஹாஹா, ஹூஹூ என்ற இரு கந்தர்வர்கள் பாடிக் கொண்டிருந்ததை மனம் லயித்து கேட்டுக் கொண்டிருந்தான். அதிதானம் என்ற அந்த ஸங்கீதம் சித்ரை, தக்ஷிணை, வார்த்திகைகளில் சுற்றிக் கொண்டு அனேக யுகங்கள் பாடப்பட்டு வந்தது. ககுத்மியும் அவ்வளவு காலமும், காலம் போவதறியாமல் அதை விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இது முடிந்ததும் ப்ரஹ்மாவிடம் சென்று தன் பெண்ணுக்கு யாரை மணம் முடிக்கலாம் என்று கேட்ட அரசனிடம், நீர் யார், யாரைத் தேர்ந்தெடுதுள்ளீர்கள் என்று ப்ரஹ்மா கேட்க, அரசன் சிலரைக் கூறுகிறான். தலையைக் கவிழ்த்துக் கொண்டு சிரிப்புடன் ப்ரஹ்மா கூறலானார்: "அரசே! நீங்கள் கூறும் வரன்களின் ஸந்ததிகள் கூட இப்போது பூலோகத்தில் இல்லை. பூலோகத்தில் நீங்கள் இங்கு கச்சேரியில் லயித்திருந்த காலத்தில் பல சதுர் யுகங்கள் சென்று விட்டன. இப்போது வைவஸ்வத மனுவின் இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் கலியுகம் நெருங்கிய வண்ணம் இருக்கிறது. ஆகையால் வேறு ஒருவனுக்குத் தான் உன் பெண்ணை நீ தர வேண்டும். உன் சுற்றம், பொருள், வேலையாட்கள் என எதுவும் இப்போது இல்லை".

வரன்கள் கிடைக்காததற்கு வருந்திய ககுத்மி ப்ரஹ்மாவிடமே தகுந்த வரனைச் சொல்ல வேண்டினான். "அரசே! பூமியில் விஷ்ணுவே இப்போது அம்சமாய் அவதரித்திருக்கிறார். அவருடைய ஆதி, மத்யம், அந்தம், ஸ்வரூபம், ப்ரபாவம், பலம் இவைகளை நானும் அறிந்திலன். காலமும் அவருக்கு எந்த மாறுதலையும் உண்டாக்குவதில்லை. சரீரமும், அழிவும், நாம, ரூபங்களுமற்றவரவர். அவர் அனுக்ரஹத்தாலேயே நான் ஸ்ருஷ்டியையும், ருத்ரன் ஸ்ம்ஹாரத்தையும் செய்கின்றோம். மற்ற தேவதைகளின் ஸ்வரூபமும் அவரே. அவரிடமே உலகம் நிலைத்துள்ளது. அவரும் எதிலும் நிறைந்துள்ளார். உன் குதஸ்தலி நகரம் இப்போது யாதவர்கள் அரசாளும் த்வாரகையாக உள்ளது. ஆதிசேஷனின் அம்சமாய் அவதரித்திருக்கும் பலதேவனுக்கு உன் பெண்ணை மணம் முடி" என்றார் ப்ரஹ்மா.

குதஸ்தலியை விட முழுதும் வேறுபட்டிருக்கும் த்வாரகையையும், குள்ளமாகவும், சக்தி குறைந்தவர்களாகவும் இருக்கும் மனிதர்களையும் திரும்பிப் பெண்ணுடன் வந்த ககுத்மி கண்டான். ஸமுத்ரத்தின் கரையில் இருந்தது குதஸ்தலி. த்வாரகை ஸமுத்ரத்தின் நடுவில் இருக்கிறது இப்போது. கலப்பையை ஆயுதமாகத் தரித்து, ஸ்படிக மலை போல் வெளுத்து, உயர்ந்து அகன்ற மார்புடன் இருக்கும் பலராமருக்குத் தன் பெண் ரேவதியை மணம் முடித்தான் ககுத்மி. அவரும் ஏற்றுக் கொண்டார். தன்னை விட மிகவும் உயரமாக இருந்த பெண்ணை கலப்பையால் அழுத்தித் தனக்கு உரியவளாக்கிக் கொண்டார் பலராமர். ககுத்மி பின் இமயம் சென்று தவம் புரிந்தார்.

Wednesday, January 27, 2010

விஷ்ணு புராணம் - 56

03_18. தவம் செய்து கொண்டிருந்த அஸுரர்களை நர்மதைக் கரையில் கண்ட மாயாமோஹன் உடனே ஆடையின்றி, மழுங்கச் சிரைத்தத் தலையுடனும், கையில் மயில் தோகையுடனும் அவர்களிடன் சென்று, "அஸுரத் தலைவர்களே! எதற்குத் தவம் செய்கிறீர்கள். இம்மைப் பயனுக்கா, அல்லது மோக்ஷமெனும் மறுமைப் பயனுக்கா" என்று கேட்க, அவர்கள் "மோக்ஷம் விரும்பியே செய்கிறோம். நீ கேட்பதைப் பார்த்தால் இது ஸம்பந்தமாக ஏதோ சொல்ல விரும்புவது போலுள்ளது. சொல்" என்றனர். மாயனும் "அப்படியானால் நான் சொல்லப்போகும் மோக்ஷத்துக்குக் காரணமான தர்மத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்களாக (அர்ஹர்கள்) இருங்கள். இதைவிட வேறெதும் மோக்ஷத்தைத் தராது. இதுவே ஸ்வர்கத்தையோ, மோக்ஷத்தையோ தரக்கூடியது. எனவே இந்த தர்மத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இது தர்மமாகவும், அதர்மமாகவும், ஸத்தாகவும், அஸத்தாகவும், மோக்ஷத்தைத் தருவதும், தராததுமாகவும், பர அபரமார்த்தமாகவும், செய்யத்தகுந்ததாகவும், தகாததாகவும், சொல்லத்தகுந்ததாகவும், தகாததாகவும், திகம்பரர்களுடையதாகவும், ஆடைகளணிந்தவர்களுடையதாகவும் இருக்கும்" என்று பலவாறு குழப்பி அவர்களை மதி மயக்கி, வேத மார்க்கத்திலிருந்து விலக்கினான். அவர்களும் அந்த தர்மத்தைக் கொண்டார்கள். தகுந்தவர்(அர்ஹர்) ஆவீர் என்று அடிக்கடி கூறியதால் மாயனுக்கு அர்ஹன் என்ற பெயரும், அந்த தர்மம் அர்ஹத்வம் என்றும், அதைக் கொண்டவர்கள் ஆர்ஹதர் என்றும் ஆயினர். இதுவே ஜைன மதமாகப் பரவியது.

இதன் பின் அர்ஹன் மேலும் சில அஸுரர்களிடம் சிவந்த ஆடைகளோடு, ஜிதேந்த்ரியனாய், தபஸ்வி வேஷம் கொண்டு "அஸுரர்களே! பசுக்களைக் கொல்லும் ஜீவஹிம்ஸை நிறைந்த இந்த யாகங்கள் எதற்கு? மோக்ஷத்திற்காகவா? இந்த யாகங்களால் எந்த பயனும் இல்லை. நான் சொல்வதைக் கேளுங்கள். இவ்வுலகம் விஞ்ஞான மயமானது. ஞானிகளும் இதையே கூறுகின்றனர். மேலும் ஆதாரமற்றது. அநாதியாகவே தோஷமுள்ளதாக ஸம்ஸார ஸங்கடங்களில் உழல்கிறது. இதை அறியுங்கள்" என்று பலமுறை உபதேஸித்தான். அறியுங்கள் (புத்யத) என்று பல முறை கூறியதால் புத்தன் என்றும், இந்த வாதம் புத்யத்வம் என்றும் ஆனது. மதம் பௌத்தமானது. இப்படி அஸுரர்கள் எவரும் வேத தர்மங்களை விடுத்து, அந்தணர்களையும் மதிக்கத் தவறினர்.

"ப்ராணி வதம் கூடாது என்று கூறப்பட்டுள்ள போது, யாகங்களில் மட்டும் அது பயனைத் தருவதென்று கூறுவது ஆராயாமல் சொல்வதாகும். எனவே யாகங்களைச் செய்ய வேண்டாம். யாகங்கள் செய்வது இந்த்ரனாகி ஸ்வர்கத்தை அனுபவிப்பதற்காகத் தானே. இந்த்ரன் யாக ஸமித்துக்களான ஹோமம் செய்யப்படும் வன்னிக் கட்டைகளை சாப்பிடுகிறான் என்கிறது வேத மதம். கட்டையைச் சாப்பிடும் அநாகரிகமான இந்த்ரனாவதற்கு யாகங்கள் செய்வதை விட ம்ருதுவான இலைகளை உண்ணும் ஆடுகளாகப் பிறப்பதே சிறந்தது. யாகங்களில் இறக்கும் ஆடுகள் ஸ்வர்கத்திற்குச் செல்கின்றன என்றால், வைதீகர்கள் தங்கள் தந்தைகளையே யாகங்களில் வெட்டிப் போட்டு, ஸ்வர்கத்திற்கு அனுப்பலாமே.

அதேபோல் ச்ராத்தம் செய்து ப்ராஹ்மணர்களுக்கு வயிறு புடைக்க சோறு போடுவதும் வீணே. இங்கிருப்பவர் சாப்பிட்டால் எங்கோ இருப்பவர்களுக்கு பசி, நீர் உண்ட த்ருப்தி உண்டாகிறதென்றால், வெளியூர் செல்லும் தகப்பன் கையில் உணவைத் தயாரித்துக் கொண்டு செல்வது ஏன். தான் வெளியூர் செல்லும் போது வீட்டிலிருக்கும் பிள்ளையையே தனக்கு ச்ராத்தம் செய்யச் சொல்ல வேண்டியது தானே. பசியும், தாகமும் அடங்கி விடுமல்லவா. இந்த உலகத்திலேயே வேறு ஊர் செல்பவர்க்கு நாம் செய்யும் ச்ராத்தம் பசியையும், தாகத்தையும் தீர்க்காதபோது, வேறு உலகத்திற்கே சென்று விட்டவர்களுக்கு, நாம் பூலோகத்தில் ச்ராத்தம் செய்து ப்ராஹ்மணர்களுக்கு உணவிடுவது, நீர் கொடுப்பது எப்படி த்ருப்தியைத் தரும்.

எல்லாம் பொய். பாமரர்களை ஏய்க்கவே இந்த ச்ராத்தம் முதலான சடங்குகள் எல்லாம். ஆகவே புத்திசாலி அஸுரர்களே, நீங்கள் அவற்றையெல்லாம் நம்பாதீர்கள், விரும்பாதீர்கள். அவற்றை ஒதுக்குவதே உங்களுக்கு நன்மை தரும். எழுத்துக்களாலும், சொற்களாலும் செய்த வேதவாக்யங்கள் அனித்யங்கள். நாம் எப்போதும் நம்பத் தகுந்தவன் சொல்வதையே ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த வேதங்களைக் கூறியவர் அப்படி யார். ஒருவரும் கூறாமல் இவை ஆகாசத்திலிருந்து குதித்தவைகளா? எனவே புத்திசாலிகளுக்குகந்ததும், உங்களுக்கு நம்பத்தகுந்தவனுமான நான் சொல்வதைக் கேளுங்கள். இவைகளை விட்டொழியுங்கள்" என்றெல்லாம் பலவாறு மீதமிருந்த அஸுரர்களையும் புத்தன் குழப்ப, அவர்கள் முழுவதுமாக வேத மார்க்கத்தை விட்டு விலகினர். நாஸ்தீகர்களும், நக்னர்களுமான அவர்களை அப்போது தேவர்கள் எளிதில் வென்றனர்.

எனவே வேதங்களையும், வேத தர்மங்களையும் விட்டவர்களே நக்னர்கள். இதேபோல் நான்கு ஆச்ரமங்களில் ஏதாவது ஒன்றில் எப்போது இருக்க வேண்டும். ஆச்ரமமில்லாமல் இருக்கக் கூடாது. அவர்களும் நக்னர்களே. சக்தியுள்ள போதும் கர்மாக்களை விட்டவன் அந்த நாளிலேயே பதிதன் (ப்ரஷ்டன்-விலக்கத் தக்கவன்) ஆகிறான். ஒரு பக்ஷம் விட்டவன் விசேஷ பதிதனாகிறான். மீண்டும் ப்ராயச்சித்தம் செய்தே இவர்கள் சுத்தி அடையலாம். ஒரு வருஷம் கர்மாக்களை விட்டவன் மிக்க பாபியாகிறான். இவனுக்கு ப்ராயச்சித்தமே கிடையாது. இவனை எவரும் பார்க்கவே கூடாது. அப்படிப் பார்த்தால் பாபம் தீர ஸூர்யனையும், நல்லவர்களையும் பார்க்க வேண்டும். தொட்டால் உடுத்திய வஸ்த்ரத்துடன் குளிக்க வேண்டும்.

எவன் வீட்டில் தேவ, ரிஷி, பித்ருக்கள், அதிதிகள் பூஜிக்கப் பட வில்லையோ அவனை விட பாபம் செய்தவர் உலகில் எவருமில்லை. தேவ, ரிஷி, பித்ருக்கள், அதிதிகள் வருந்தி விடும் பெரு மூச்சினால் இவர்கள் தீண்டப்பட்டவர்கள், இவர்களுடன் உட்காருதல், இவர்கள் வீட்டிற்குச் செல்லுதல் முதலான பாபங்களை எவரும் செய்யக்கூடாது. அப்படி ஒரு வருஷம் செய்தால் அவர்களுக்கும், அந்த பாபிக்குச் சமமான பாபமே வந்து சேரும். அவன் உணவை உண்டாலோ, அவன் படுக்கையில் படுத்தாலோ உடனே அந்த பாபம் நமக்கும் வந்து விடும். நான்கு வர்ணத்தவர்க்கும் எங்கு கலப்பு (ஸாங்கர்யம்) இருக்கிறதோ அந்த இடத்தையும் பெரியோர்கள் விட வேண்டும்.

முன்பு சததது என்ற ஓர் புகழ் பெற்ற அரசன் இருந்தான். அவன் மனைவி சைப்யை சிறந்த பதிவ்ரதை. அவளுடன் சேர்ந்து அரசன் தினமும் ஜனார்த்தனனை த்யான, ஹோம, ஜப, தான, உபவாஸ முதலியவைகளால் ஆராதித்து வந்தான். இவர்களிருவரும் ஒரு கார்த்திகை ஏகாதசியில் கங்கையில் நீராடி விட்டுக் கரையேறும் போது, எதிரில் ஒரு பாஷண்டி (ஸ்வதர்மத்தை விட்டவன்) வருவதைக் கண்டனர். அவன் இந்த அரசனுக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த ஆசார்யனின் ஸ்னேஹிதன். அந்த மரியாதைக்காக அவனுடன் சததது சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். இதைத் தவறென்று கருதிய சைப்யை அவனுடன் பேசாமல், பார்த்த பாபம் தீர ஸூர்யனையும் உடனே தர்சித்தாள்.

பின் வீடு திரும்பிய அவர்கள் விஷ்ணு பூஜையைச் செய்து, கடமைகளைச் செய்தனர். இப்படிக் காலங்கள் கழிந்த போது ஒரு சமயம் அரசன் இறக்கவே, சைப்யையும் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். உபவாஸ காலத்தில் பாஷண்டனுடன் பேசிய ராஜன் மறுபடி நாயாகப் பிறந்தான். அரசி காசிராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவள் முற்பிறவி நினைவுடனும் இருந்தாள். ஸகல நற்குணங்களும் நிறைந்த அவள் தன் தகப்பன் தனக்கு மணம் முடிக்க முயற்சிப்பதை அறிந்து அதைத் தடுத்து விட்டு, திவ்ய த்ருஷ்டியினால் விதிசை எனும் நகரத்தில் தன் முன் ஜன்மத்துக் கணவன் நாயாகப் பிறந்திருப்பதை அறிந்து அங்கு ஓடினாள். நாயையும் அங்கு கண்டு பிடித்து, அதற்குப் பிடித்த உணவு வகைகளை எப்போது அதற்குக் கொடுத்து, உபசரித்தாள்.

தன் குணத்திற்கேற்ப நன்றிக்காக வாலை ஆட்டிக் காண்பித்த அதற்கு முன்பிறவியை உணர்த்தினாள். தன் செயலை நினைத்துப் பெரிதும் வருந்திய நாய்ப் பிறப்பில் இருக்கும் சததது, நகருக்கு வெளியேயுள்ள ஒரு மலையிலிருந்து கீழே விழுந்து (மருப்ரபதனம்)உயிரைப் போக்கிக் கொண்டான். மீண்டும் கோலாஹலம் எனும் மலை ப்ரதேசத்தில் நரி ஜன்மம் எடுத்த அவனை மீண்டும் தன் ஞான த்ருஷ்டியால் கண்டு பிடித்த ராஜகுமாரி இப்போதும் அவனை உபஸரித்து உண்மையைக் கூறினாள். அவனும் மிக வருந்தி உணவை எடுத்துக் கொள்ளாமலேயே இருந்து உடலை விட்டான். இப்படி மேலும் செந்நாய், கழுகு, காக்கை, கொக்கு, மயில் எனப் பிறவிகளை எடுத்தான். இளவரசியும் தொடர்ந்து அவனைக் காத்தாள்.

இப்படி மயில் பிறவியிலிருக்கும் போது ஜனகர் அச்வமேத யாகம் செய்து முடிவில் (அவப்ருதம்) ஸ்னானம் செய்யும் காலத்தில் இளவரசி மயிலையும் கொஞ்சி முன் பிறவிகளை நினைவு படுத்தி அதனுடன் ஸ்னானம் செய்தாள். மயிலும் உடலை விடுத்து இப்போது ஜனகருக்கே மகனாகப் பிறந்தது. இந்த சூழ்நிலையில் தந்தையிடம் தனக்கு ஸுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்ன இளவரசி ஜனகனின் மகனாகப் பிறந்திருக்கும் தன்னுடையவனையே மீண்டும் வரித்து, அவனுடன் பல காலம் வாழ்ந்திருந்து, விதேஹ ராஜ்யத்தையும் பெரும் பொருளுடனும், புகழுடனும், வெற்றிகளோடும், நற்பெயரோடும் ஆண்டு அனுபவித்து ஒரு யுத்தத்தில் அரசன் வீர மரணம் எய்த போது தானும் உடன்கட்டை ஏறி ஸ்வர்க்கத்திற்கும் மேலான லோகங்களை அனுபவித்தாள். இதிலிருந்து பாஷண்டனும் பேசிய பாபமும், அச்வமேத அவப்ருத ஸ்னானத்தின் மஹிமையும் புரியும்.

இதேபோல் மேலும் சிலர் உள்ளனர். அவர்களையும் விலக்க வேண்டும். வேதங்களில் விலக்கப் பட்ட கர்மாக்களைச் செய்பவன்(விகர்மஸ்தன்), சாமியார் வேஷம், கமண்டலம், தண்டம் இவைகளைத் தாங்கி, ஒருவருக்கும் தெரியாமல் பாபத்தைச் செய்பவன்(பைடாலவ்ரதிகன்), பூனையின் வ்ரதமுடையவன், எதிரில் ப்ரியமாகவும், மறைவில் அப்ரியமாகவும் ஒருவரைப் பற்றிச் சொல்பவன்(சடன்), நற்செயல்கள் செய்யும் போது பல தோஷங்களைக் காட்டி அவற்றில் சந்தேஹத்தை ஏற்படுத்துபவன்(ஹைதுகன்), கொக்கு போல ஒன்றும் தெரியாதவனாக இருந்து, ஸமயம் பார்த்து தீங்கிழைப்பவன் (பகவ்ருத்தி) இவர்களை பேச்சளவிலும் உபசரிக்கக் கூடாது. பெரும் பாபம் சேரும். காரணமின்றி ஜடை வளர்ப்பவர் மொட்டை அடித்துக் கொள்பவர், தேவ ரிஷி பித்ருக்களுக்கு நிவேதிக்காத உணவை உண்பவர், உள்ளும் வெளியும் சுத்தமில்லாதவர் இப்படி நக்னர்கள் பல விதம். இவர்கள் பார்த்தாலே ச்ராத்தம் அழியும், அன்றைய புண்யமும் போகும்.

விஷ்ணு புராணம் - 55

03_17. நக்னன் என்றால் யார் என்கிறார் மைத்ரேயர். "ஆடையில்லாதவனையே உலகத்தார் நக்னன் என்கிறார். ஆனால் ச்ராத்தத்தின் போது இருக்கக் கூடாதவனான நக்னன் என்பவன் வேறு. ரிக், யஜுர், ஸாம வேதங்களே மூன்று வர்ணத்தாருக்கும் ஆடையும், ரக்ஷையும் ஆகும். அதை விட்டவனே நக்னன். என் பிதா வஸிஷ்டர் பீஷ்மருக்கு முன்பொரு சமயம் கூறியதைக் கூறுகிறேன். தேவாஸுர யுத்தம் ஒரு ஸமயம் தேவமானத்தில் நூறு வருஷம் நடந்தது. ஹ்ராதன் முதலான அஸுரர்களால் தேவர்கள் தோற்று, மஹாவிஷ்ணுவிடம் ப்ரார்த்தித்தனர். ஸ்தோத்ரத்தின் முடிவில் தோன்றிய பரமனிடம் "உன்னுடைய அம்சமேயான நாங்களும் அஸுரர்களும் அவித்யையால் வேறு வேறாகப் பார்த்துக் கொள்கிறோம். அவர்களை அழிக்க வேண்டுகிறோம்.

ப்ரஹ்மாவின் ஆக்ஞையையும் மீறி எங்களுடைய யக்ஞபாகங்களை அவர்கள் அபஹரித்து விட்டனர். வர்ணாச்ரம தர்மங்களை அவர்கள் தவறாமல் செய்து கொண்டிருப்பதால் எங்களால் அவர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. தாங்கள் தான் இதற்கு ஒரு உபாயம் செய்ய வேண்டும். அவர்களைக் கொன்று எங்களைக் காக்க வேண்டும்" என்று தேவர்கள் ப்ரார்த்தித்துக் கொண்டனர். விஷ்ணு தன்னிடமிருந்து ஒரு மாயனை உண்டாக்கி, இவன் அந்த அஸுரர்களை வேத மார்க்கத்திலிருந்து விலக்கி விடுவான். ப்ரஹ்மனின் ஆணையை மீறியவர் எவரும் தண்டிக்கத்தக்கவரே. வேத வழியிலிருந்து விலகியவர்களை நீங்கள் எளிதில் அழித்து விடலாம்" என்று அருளினார். அவ்வாறே அவனை முன்னிட்டுக் கொண்டு, அஸுரர்களை வென்றனர் தேவர்கள்.

விஷ்ணு புராணம் - 54

03_16. காலசாகக் கீரை, தேன், ப்ரசாந்திகமெனும் காட்டு தான்யம், செந்நெல், கருஞ்சாமை, வெண்சாமை, வழுதுணை, பிரண்டை முதலான காட்டு மருந்துகள், கிழங்குகள், யவம், உளுந்து, பயறு, கோதுமை, நெல், எள், மலையகத்தி, கடுகு, பாகல், பலா, வாழை, அவரை முதலியவை ச்ராத்தத்திற்குச் சிறந்தவை. கயா ச்ராத்தம் ஜன்ம சாபல்யம் தரும். ஆக்ரயணம் செய்யாத தான்யங்கள், மொச்சை, காராமணி, அணு எனும் கல்ப தான்யம், மஸூரம், சுரை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, காந்தாரகம் எனும் வாசனையுள்ள சம்பா, கரம்பம், உப்பு, உப்புச் சுவை மிகுந்தவை, உவர் நிலத்தில் உண்டானவை, சிவந்தவை, மரப் பிசின் (பெருங்காயம்), வாயால் சொல்லத்தகாதவை இவை கூடாது.

இரவில் கொண்டு வந்தது, பாழடைந்த கிணற்றிலிருந்தது, குறைந்த அளவுள்ளது, துர்நாற்றமும் நுரையுமுள்ளது இந்த தீர்த்தங்கள் கூடாது. கன்றில்லா பசுவின் பால், ஒற்றைக்குளம்புள்ளவைகளின் பால், ஒட்டகம், ஆடு, எருமை, மான் இவைகளின் பாலும் கூடாது. நபும்ஸகன், நக்னன், பெரியோர்களால் தள்ளப்பட்டவன், சண்டாளன், பாஷண்டன், அருவருப்பான நோயுள்ளவன், வேத தர்மங்களை விட்டவன், வீட்டு விலக்கானவள், ப்ரஸவித்தவள், சௌசமும்(சுத்தம்) ஆசாரமும் இல்லாதவன், பிணம் தூக்கிப் பிழைப்பவன், கோழி, நாய், குரங்கு, ஊர்ப்பன்றி இவைகள் சூழ்ந்த இடங்களையும், நகம், மயிர், பூச்சி, கஞ்சி இவைகளோடு சேர்ந்ததும் பழையதுமான அன்னத்தையும் ச்ராத்தத்திற்கு விலக்க வேண்டும்.

பூமியில் எள்ளை இறைத்து ராக்ஷஸர்களை விரட்ட வேண்டும். மறைவான இடத்தில் செய்ய வேண்டும். சுத்தமான அன்னத்தை நாம, கோக்ரங்களுடன் கொடுத்தால் பித்ருக்கள் தேவ லோகத்தில் இருந்தால் அன்னம் அம்ருதமாகவும், பசுக்களாக இருந்தால் புல்லாகவும் இப்படி பலவாறு மாறி அவர்களுக்கு த்ருப்தி அளிக்கிறது. இமயமலைச் சாரலில் கலாபம் எனும் க்ராமத்தின் உபவனத்தில் மனுபுத்ரனான இக்ஷ்வாஹு மஹராஜனிடம், "கயையில் பிண்டம் போடும் நல்லொழுக்கமுடையவர்களும், பாத்ரபத க்ருஷ்ண த்ரயோதசி, மாக அமாவாஸ்யையிலும் நமக்குத் தேனும், நெய்யும் கலந்த பாயஸம் தரும் நல்லவர்களும் நம் குலத்தில் பிறப்பார்களா? நம் குலத்தில் பிறந்தவர்கள் பத்து வயது நிரம்பிய கன்னிகையை விவாஹம் செய்து தருவார்களா? உடலில் சிவந்தும், முகத்திலும் வாலிலும் நன்கு வெளுத்தும், கொம்பிலும் குளம்பிலும் சிறிது வெளுத்தும் இருக்கும் நீலம் எனும் ரிஷபத்தை விடுவார்களா? விதிப்படி தக்ஷிணை தந்து அச்வமேதமாவது செய்வார்களா" என்று பித்ருக்கள் தங்கள் இஷ்டத்தைக் கேட்டிருக்கிறார்கள்.

விஷ்ணு புராணம் - 53

03_15. இரண்டாம் காடகத்தில் அயம் வாவய: பவதே என்பது முதலான மூன்று நசிகேத அனுவாகங்களையும், மூன்று மது ரிக்குகளையும், ப்ரஹ்மமேது மா முதலான த்ரிஸுபர்ண அனுவாகங்களையும் அத்யயனம் செய்து அதன் படி நடப்பவனும், ஆறு அங்கங்களோடு வேதாத்யயனம் செய்தவனும், வேதத்தின் பொருளை அறிந்தவனும், அதன்படி நடப்பவனும், ப்ரப்ரஹ்ம த்யானம் செய்பவனும், ஜ்யேஷ்டமென்னும் ஸாமத்தைப் பாடுபவனுமே ச்ராத்தத்தில் ப்ராஹ்மணனாக வரிக்கத் தக்கவன். இவர்கள் கிடைக்காவிடில் ரித்விக், ஸஹோதரியின் புத்ரன், தௌஹித்ரன், மாப்பிள்ளை, மாமனார், மாமா, தவம் செய்வோர், பஞ்சாக்னி உபாஸகர், சிஷ்யர், ஸம்பந்தி, பெற்றோரைப் பூஜிப்பவன் இவர்களை வரிக்கலாம்.

மித்ர த்ரோஹம் செய்தவன், பிறவியிலேயே சொத்தை நகம் உடையவன், நபும்ஸகன், இயற்கையிலேயே சொத்தையான, கரும்பற்களை உடையவன், கன்னியைக் கெடுத்தவன், காரணமின்றி வேதத்தையும் அக்னியையும் விட்டவன், ஸோம விக்ரயம் செய்தவன், பதிதன், திருடன், கோள் சொல்பவன், க்ராமத்திற்காகக் கூலி வாங்கிக் கொண்டு யாகம் செய்பவன், கூலிக்கு வேதம் ஓதுபவன், கூலிக்கு வேதம் ஓதுவிப்பவன், விதவையை மணந்தவன், பெற்றோரை விட்டவன், சூத்ர ஸ்த்ரீயின் குழந்தைகளை வளர்ப்பவன், சூத்ர ஸ்த்ரீயை மணந்தவன், தேவதைகளைப் பூஜிப்பதால் பிழைப்பு நடத்துபவன் (குருக்கள், மாந்த்ரீகன், பட்டர் முதலானோர்) இவர்களை ச்ராத்தத்தில் ப்ராஹ்மணனாக வரிக்கக் கூடாது.

கர்த்தா முதல் நாளே தகுதியுள்ளவர்களை தேவ, பித்ருக்களுக்கு வரித்து சிறிது நேரம் பொறுத்திருக்குமாறு ப்ரார்த்திக்க வேண்டும். இதற்குப் பின் இருவரும் கோபத்தையும், ஸ்த்ரீ போகத்தையும், களைப்பையும் தவிர்க்க வேண்டும். ஸ்தீரீ போகம் கொண்டால் தங்களின் பித்ருக்களை ரேதஸ்ஸின் குழியில் தள்ளிய பாபத்தைச் செய்தவர்கள் ஆகிறார்கள். இந்த்ரிய நிக்ரஹம் செய்த யதிகள் ச்ராத்தத்தன்று தற்செய்லாக கர்த்தாவின் க்ருஹத்திற்கு வந்தால் அவர்களை நிமந்த்ரணம் (வரித்தல்) செய்ய ப்ரார்த்திக்க வேண்டும். இப்படி க்ருஹத்திற்கு வந்த ப்ராஹ்மணர்களை கால் அலம்ப நீர் கொடுத்து, உபசரித்து, ஆசனம் தந்து போஜனம் செய்விக்க வேண்டும். பித்ருக்கள் ஸ்தானத்தில் ஒற்றையாகவும், தேவர்கள் ஸ்தானத்தில் இரட்டையாகவும் அல்லது இரண்டிலும் ஒவ்வொருவராகவும் வரிக்கலாம்.

பித்ரு வர்க்கத்தைச் சேர்ந்த தேவர்களின் ஸ்தானத்தில் வரிக்கப்பட்டவர்களை கிழக்கு முகமாகவும், பித்ருக்களாக வரிக்கப்பட்டவர்களை வடக்கு முகமாகவும் போஜனம் செய்விக்க வேண்டும். இவர்களுக்கு தனித்தனியே அல்லது சேர்த்தே ச்ராத்தமும், பாகமும் செய்யலாம் என்பது ரிஷிகளின் அபிப்ராயம். தேவஸ்தானத்தில் வரிக்கப்பட்டவர்களுக்கு ஆஸனத்திற்காக தர்ப்பைகளைக் கொடுத்து, அர்ச்சித்து அர்க்யம் கொடுத்து அவர்கள் அனுக்ஞையுடன் தேவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். யவ உதகத்தால் அர்க்யம் கொடுத்து, புஷ்பம், சந்தனம், தூப, தீபங்களால் உபசரிக்க வேண்டும். இப்படியே பித்ருக்களுக்கு அப்ரதக்ஷிணமாக அனைத்தையும் செய்ய வேண்டும். அனுமதி பெற்று தர்ப்பங்களை இரட்டிப்பாகத் தர வேண்டும். தில உதகத்தால் அர்க்யம் தர வேண்டும்.

இந்த சமயத்தில் அன்னத்தை விரும்பி அதிதிகள், ப்ராஹ்மணர்கள் யாரேனும் வந்தால் வரித்தவர்களின் அனுமதியோடு அவர்களுக்கும் போஜனம் செய்விக்க வேண்டும். அர்ச்சிக்கப்படாத அதிதி ச்ராத்த பலனை அழித்து விடுகிறான். பின் பக்வம் செய்த காய், உப்பு காரம் கலக்காத அன்னம் இவைகளை வரித்தவர்களின் அனுமதியோடு அக்னி, ஸோமன், யமன் இவர்களுக்காக மூன்று முறை ஆஹுதி செய்ய வேண்டும். அதில் மிகுந்த அன்னத்தில் ஒரு பாகத்தை வரித்தவர்களின் இலையில் பரிமாற வேண்டும். ப்ராஹ்மண போஜனத்திற்கு செய்த அன்னம் நன்கு பக்வம் செய்யப்பட்டு, ருசியோடு, இஷ்டமானதாக, நிறைய, கர்த்தா இன்சொல்லோடு, அவசரமின்றி, கோபமின்றி இருக்க வேண்டும். ப்ராஹ்மணர்களும் இசைந்து, பேசாமல், மலர்ச்சியோடு உண்ண வேண்டும்.

உண்ணும் போது ரக்ஷோக்த மந்த்ரங்களைப் படித்து, பூமியில் எள் பரப்பி, அந்த ப்ராஹ்மணர்களையே தன் பித்ருக்களாக பாவிக்க வேண்டும். பூஜிக்க வேண்டும். உண்டபின் பூமியில் விகிராந்தம் இட வேண்டும். அவர்கள் கை, கால்கள் சுத்தி செய்து ஆசமனம் செய்ய தனித்தனியே தீர்த்தம் தர வேண்டும். அவர்கள் அனுமதியோடு பின்னே அன்ன பிண்டங்களை எள்ளோடும், சாகத்தோடும் தர வேண்டும். திலோதகத்தை பித்ரு தீர்த்தத்தால் தர வேண்டும். ப்ராஹ்மணர்கள் உண்ட பாத்ரங்களுக்குப் பக்கமாக தெற்கு நுனியாகப் பரப்பிய தர்ப்பைகளில் அர்ச்சித்த பிண்டத்தை முதலில் பிதா, பின், பிதாமஹர், பின் ப்ரபிதாமஹர் எனத் தரவேண்டும். தர்ப்பைகளின் அடியில் நாலாமவரான பித்ருக்கள் முதலானோருக்கு பாத்ரங்கள், தர்வியில் ஒட்டியிருப்பதைத் துடைத்துக் கொடுத்தல் முதலானவைகளால் த்ருப்தி செய்ய வேண்டும்.

பின் இப்படியே மாத்ரு வர்க்கத்தார்க்கும் செய்ய வேண்டும். பின் பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் தக்ஷிணை செய்து, ஆசி பெற்று, விஸர்ஜனம் செய்ய வேண்டும். அர்ச்சிக்கும் போது முதலில் தேவர்கள், பித்ரு வர்க்கம், மாதாமஹ வர்க்கம் எனச் செய்து விஸர்ஜனத்தில் பித்ருக்கள், மாதாமஹர், விச்வேதேவர்கள் எனச் செய்ய வேண்டும். ப்ராஹ்மணர்கள் செல்லும் போது நன்கு உபசரித்து, வாசல் வரை சென்று, விடை பெற்று உள்ளே வரவேண்டும். பின் வைச்வதேவம் செய்து, அனைவருடன் சேர்ந்து புஜிக்க வேண்டும். தௌஹித்ரன், குதபகாலம் (தினத்தின் எட்டாவது முஹூர்த்தம், பதினான்கு நாழிகைக்கு மேல், பதினாறு நாழிகைக்குள்), எள் இவை மூன்றும் ச்ராத்தத்திற்குச் சிறந்தது. எனவே கோபம், அவஸரம் இவைகளை விடுத்து பித்ரு, மாதாமஹ ச்ராத்தங்களைச் செய்பவனை விச்வேதேவர்கள், பித்ருக்கள் யாவரும் வ்ருத்தி செய்கின்றனர். பித்ருக்களின் கனம் சந்த்ரனை ஆதாரமாய்க் கொண்டது. சந்த்ரன் யோகத்தை ஆதாரமாய்க் கொண்டவன். எனவே யோகியை உபசரித்தால் அனைவரும் மகிழ்வார்.

விஷ்ணு புராணம் - 52

03_14. ச்ரத்தையுடன் செய்யப்படுவதே ச்ராத்தம். இதனால் ப்ரஹ்மா முதல் அனைத்து தேவர்களும், பித்ருக்களும், ம்ருகங்களும், பறவை முதலான அனைத்து ஜீவராசிகளும், அனைத்து பூதங்களும் மகிழ்கின்றன. எனவே க்ருஷ்ண பக்ஷத்திலும், அமாவாஸ்யை, அஷ்டகைகளிலும் ச்ராத்தம் செய்ய வேண்டும். ச்ராத்தத்திற்கு உரிய பொருளோ, ப்ராஹ்மணனோ கிடைக்கும் போதும், வ்யதீபாதம், அயனம், விஷுவம், க்ரஹணங்கள், பனிரெண்டு ராசிகளில் ஸூர்யன் ப்ரவேசிக்கும் காலம், நக்ஷத்ரங்கள் மற்றும் க்ரஹங்களுக்குப் பீடை ஏற்படும் காலம், துர் ஸ்வப்னம், புதிய தான்யங்கள் வரும் காலம் இவைகளில் காம்ய ச்ராத்தத்தைச் செய்யலாம்.

அனுஷம், விசாகம், ஸ்வாதீ நக்ஷத்ரங்களில் அமாவாஸ்யை கூடி வரும் காலங்களில் செய்யும் ச்ராத்தத்தால் பித்ருக்கள் எட்டு வருஷங்கள் நிலைத்திருக்கும் த்ருப்தியையும், திருவாதிரை, புனர்வஸு, புஷ்ய நக்ஷத்ரங்களில் அமாவாஸ்யை வந்திருக்கும் போது செய்தால் பனிரெண்டு வருஷங்கள் நிலைத்திருக்கும் த்ருப்தியையும் பெறுகின்றனர். அவிட்டம், சதயம், பூரட்டாதிகளில் அமாவாஸ்யை வந்திருந்தால் அன்று செய்யும் ச்ராத்தம் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கூடி த்ருப்தி அளிக்கக்கூடியது. வைகாசி மாஸ சுக்ல பக்ஷ த்ருதீயை, கார்த்திகை சுக்ல பக்ஷ நவமி, புரட்டாசி க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி, மாக மாஸ அமாவாஸ்யை இன்னான்கு திதிகளும் யுகாதிகள். யுகாதிகளிலும், க்ரஹணங்களிலும், மூன்று அஷ்டகைகளிலும், அயனங்களிலும் எள்ளுடன் கலந்த தீர்த்தத்தை பித்ருக்களுக்காக விடுபவன் ஆயிரம் வருஷங்கள் ச்ராத்தங்கள் செய்த பலனைப் பெறுகிறான்.

மாசி அமாவாஸ்யை சதயத்தில் வந்தால் அது பித்ருக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும். அவிட்டத்தில் வந்தால் அப்போது அன்ன, தீர்த்தத்தைப் பித்ருக்களுக்குத் தர வேண்டும். இது பத்தாயிரம் வருஷ பித்ரு த்ருப்தியைத் தரும். பூரட்டாதியில் வரும் மாசி மாஸ அமாவாஸ்யையில் ச்ராத்தம் செய்தால் பித்ருக்கள் ஆயிரம் யுகங்கள் வரை கவலையின்றி தூங்குகிறார்கள். கங்கை, சதத்ரூ, யமுனை, வ்யாஸை, ஸரஸ்வதீ, நைமிசாரண்யத்திலுள்ள கோமதீ தீர்த்தங்களில் நீராடி, பித்ரு பூஜை செய்வது ஸகல பாபங்களையும் போக்கும். நாம் எப்போது புரட்டாசி க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி, மாசி அமாவாஸ்யையில் புத்ரர் தரும் தர்ப்பண தீர்த்தத்தைப் பெறுவோம் என்று பித்ருக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பித்ருபக்தியில் சிறந்த புரூரவஸிடம் ஸனத்குமாரர் கூறிய பித்ரு கீதை: ஒருவனுக்கு சுத்தமான மனமும், நல்வழியில் ஈட்டிய பணமும், சிறந்த காலமும், சாஸ்த்ர விதிகளும், ஸத்பாத்ரமும், பக்தியும் கூடிவருமோ அவை அவன் விரும்புவதை நிறைவேற்றும். நம் குலத்துதித்த புத்திமானான புண்யன் செல்வ நிலைக்குத் தகுந்தாற்போல் கபடமின்றி நமக்குத் தவறாமல் ச்ராத்தம் செய்ய வேண்டும். வசதி மிகுந்தவன் வஸ்த்ர, போஜன, தங்கம், வெள்ளி, ரத்னங்கள், வாகனங்கள் எனக் கொடுத்தும், வசதியில்லாதவன் உணவளித்தும், அதுவும் இல்லையேல் ஆமத்தையும் (பாகம் செய்யாத தான்யங்கள்), அதற்கும் வழியில்லையேல் தக்ஷிணையோ, கடைசியில் கொஞ்சம் எள்ளையோ ப்ராஹ்மணர்களுக்குத் தரவேண்டும்.

இதற்கும் வழியில்லையேல் ஏழெட்டு எள்ளுடன் கூடிய தீர்த்தத்தையாவது பூமியில் விட வேண்டும். இதற்கும் கீழ் ச்ரத்தையோடு ஒரு வேளை பசுக்களுக்கு த்ருப்தி அளிக்கும் வரை புல் முதலானவைகளைக் கொடுக்க வேண்டும். இதுவும் முடியாவிடில் காட்டில் போய் கைகளை உயரத் தூக்கிக் கொண்டு ஸூர்யன் முதலான லோக பாலர்களைப் பார்த்துக் கொண்டு "என்னிடம் ச்ராத்தம் செய்ய பொருள் இல்லை. பித்ருக்களை வணங்குகிறேன். என் பக்தியால் பித்ருக்கள் த்ருப்தியடைய வேண்டும். என் கைகளை வாயு மார்க்கத்தில் உயரத் தூக்கியுள்ளேன்" எனக் கதற வேண்டும். இப்படி சக்திக்கேற்ப ச்ராத்தம் செய்பவன் நம் குலத்தில் பிறக்க வேண்டும் என்று பித்ருக்கள் கூறுகிறார்கள் என்று ஸனத்குமாரர் புரூரவஸுக்குக் கூறியதாக ஸகரனுக்கு ஔர்வர் கூறுகிறார்.

விஷ்ணு புராணம் - 51

03_13. ஒருவன் புத்ரன் பிறந்ததும் உடுத்தியிருக்கும் துணியோடு ஸ்னானம் செய்ய வேண்டும். ஜாதகர்மா, அப்யுதய ச்ராத்தம் இவைகளைச் செய்ய வேண்டும். தேவர்கள், பித்ருக்கள் ஸ்தானத்தில் இரட்டையாக ப்ராஹ்மணர்களை வரித்து, கவனத்துடன் அவர்களை ப்ரதக்ஷிணமாகப் பூஜித்து, போஜனம் செய்விக்க வேண்டும். பின் இலந்தை, தயிர், அக்ஷதை இவைகள் கலந்த பிண்டங்களை கிழக்கு அல்லது வடக்கு முகமாக தேவ அல்லது ப்ரஹ்ம தீர்த்தத்தால் தர வேண்டும். இந்த ச்ராத்தத்தால் நாந்தீமுக பித்ருக்கள் த்ருப்தி அடைகின்றனர். குழந்தைகளின் கல்யாணங்களிலும், க்ருஹப்ரவேசம், நாமகரணம், சௌளம், ஸீமந்தம், உபனயனம், மற்ற சுபகாலங்கள், தேசாந்திரம் சென்று வந்த புத்ர, பௌத்ரர்களைப் பார்க்கும் போதும், வ்ருத்திகளிலும் இந்த நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.

ஒருவன் மரணமடைந்தால், சரீரத்தை தீர்த்தங்களால் நீராட்டி, மாலை முதலியவைகளால் அலங்கரித்து, க்ராமத்திற்கு வெளியில் தஹனம் செய்து நீர் நிலைகளில் கட்டியிருக்கும் துணியுடன் ஸ்னானம் செய்ய வேண்டும். பின் தெற்கு முகமாய் கோத்ரத்தையும், பெயரையும் சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். மாலையில் மாடுகள் வரும் போதோ, நக்ஷத்ரங்கள் தெரியும்போதோ வீட்டினுள் நுழைய வேண்டும். படுக்கையில் படுக்கக் கூடாது. தரையிலேயே புல் முதலியவைகளைப் பரப்பிப் படுக்க வேண்டும். தீட்டு முடியும் வரை தினமும் தரையில் பிண்டத்தை இறந்தவனுக்காக தர வேண்டும். இந்த பிண்டம் இடுகிறவன் பகலில் மட்டும் தான் உண்ண வேண்டும். மாம்சம் உண்ணக்கூடாது. உறவினர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கிணங்க உணவிட வேண்டும். அவர்கள் த்ருப்தியடைந்தால் இறந்தவனும் த்ருப்தி அடைகிறான்.

இறந்த முதல் நாள், மூன்றாம், ஏழாம், ஒன்பதாம் நாள் கட்டியிருக்கும் ஆடையை விட வேண்டும். ஊருக்கு வெளியில் ஸ்னானம் செய்து எள்ளுடன் தீர்த்தம் விட வேண்டும். நான்காம் நாள் அஸ்தி ஸஞ்சயனம் (எலும்புகளை எடுத்தல்) செய்ய வேண்டும். இதன் பின் கர்த்தா ஸபிண்டர்களைத் (ஏழு தலைமுறைக்கு உட்பட்டவர்கள்) தொட்டாலும் தோஷமில்லை. ஏழு தலைமுறைக்கு அப்பாற்பட்டவர்கள் ஸமான உதகர்கள். இவர்கள் ஔபாஸனம் முதலான எல்லா கர்மாக்களையும் செய்யலாம். ஆனால் போகங்களான அலங்கரித்துக் கொள்ளல், சந்தனம் பூசிக் கொள்ளுதல், பூச்சுடுவது முதலியன கூடாது. ஸஞ்சயனத்திற்குப் பின் ஸபிண்டர்களோடு படுத்துக்கொள்ளலாம், உட்கார்ந்துக் கொள்ளலாம். ஸ்த்ரீ போகம் கூடாது.

சிறுவன், மஹா நதி, பர்வதம், பாஷை இவைகளால் வேறுபட்ட தேசங்களிலிருப்பவன், ஜாதி மற்றும் குலாசாரங்கள் நீங்கிய பதிதன், ஸன்யாஸி இவர்கள் இறந்தால் ஸ்னானத்திலேயே தீட்டு கழிந்து விடும். அதன் பின் தீட்டு கிடையாது. தற்கொலை செய்து கொண்டாலும் இவ்வாறே. தவறி நடந்துவிட்டால் தீட்டு உண்டு. பந்துக்களுக்குப் பத்து நாளும் (க்ஷத்ரியர்களுக்குப் பனிரெண்டு நாள், வைச்யர்க்குப் பதினைந்து நாள், வேளாளர்க்கு ஒரு மாதம்)தீட்டு உண்டு. ப்ராஹ்மணர்கள் தங்களின் ஆறு செயல்களையும் இந்த காலத்தில் விட வேண்டும். இவ்வாறு தீட்டு காலம் முடிந்த மறு நாள் (பதினோறாம் நாள் முறையே) ஒற்றைப்படையில் ப்ராஹ்மணர்களைப் புஜிக்கச் செய்து, அவர்களின் இலைக்கருகில் தர்ப்பைகளைப் பரப்பி, அதில் இறந்தவனுக்காகப் பிண்டத்தை வைக்க வேண்டும். இப்படியாக ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தை முடிக்க வேண்டும்.

இதற்குப் பின் தீட்டுடையவன் தீர்த்தத்தையும்(ப்ராஹ்மணன்), ஆயுதத்தையும்(க்ஷத்ரியன்), தாற்றுக்கோலையும்(மாடு, குதிரை மேய்க்கும் சாட்டை- வைச்யர்), தடியையும் (சூத்ரன்) தொட்டு சுத்தி அடைகிறார்கள். இதன் பின் தத்தம் தர்மங்களை ஒட்டிச் செல்லலாம். இதன் பின் கர்த்தா மாதந்தோறும் இறந்த திதியில் ஏகோத்திஷ்ட முறையில் (ஆஹ்வானம், அக்னௌகரணம், வைச்வதேவிக விப்ரநிமந்த்ரணம் முதலியன விடுத்து) ச்ராத்தம் செய்ய வேண்டும். ஒரே பவித்ரத்துடன், ஒரே அர்க்யம் கொடுக்க வேண்டும். ப்ராஹ்மணர்கள் புஜித்த பின் பிண்டம் தர வேண்டும். புஜித்த ப்ராஹ்மணர்களை நோக்கி அபிரம்யதாம் (ஸந்தோஷத்தில் திளைக்கிறீர்களா) என்று கர்த்தா கேட்க, அவர்கள் அபிரதா: ஸ்ம: (ஸந்தோஷம் தான்) என்று பதில் சொல்ல வேண்டும். ச்ராத்த முடிவில் இன்னாருக்கு அக்ஷய்யம் என்று சொல்ல வேண்டும்.

இப்படி ஏகோத்தர விதிப்படி ஒரு வருஷம் முழுதும் ஒவ்வொரு மாதமும் மாஸிகம் செய்து, பின் ஸபிண்டீகரணம் (பனிரெண்டாவது நாளிலோ, ஆறாம் மாதமோ அல்லது வருஷ முடிவிலோ) செய்ய வேண்டும். இந்த ச்ராத்தத்தில் பித்ருக்களுக்கு மூன்று அர்க்ய பாத்ரங்களும், ப்ரேதனுக்கு ஒன்றும் எள், சந்தனம் இவைகளோடு வைக்க வேண்டும். ப்ரேத பாத்ரத்திலுள்ளதை பித்ரு பாத்ரங்களில் கலக்க வேண்டும். இதன் பின்னேதான் அவன் ப்ரேதத் தன்மையிலிருந்து பித்ரு தன்மையை அடைகிறான். இதன் பின் அவனை முதலாகக் கொண்டு மூன்று பித்ருக்களை ச்ராத்தத்தில் அர்ச்சிக்க வேண்டும். புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன், ஸஹோதரன், அவனுடைய ஸந்ததி, ஸபிண்டர்களுடைய ஸந்ததி, ஸமான உதகர்களுடைய ஸந்ததி, தாய் வழி ஸபிண்டர்களின் ஸந்ததி, தாய் வழி ஸமான உதகர்களின் ஸந்ததி இவர்களில் முந்தையவர்கள் இல்லாத போது பின்னிருப்பவன் முறையே கர்மாவைச் செய்யலாம்.

இரண்டு வம்சத்திலும் ஒருவரும் இல்லையெனில் ஸ்த்ரீ, கூடப்படித்தவன், இறந்தவன் பணத்தைக் கொண்டு அரசனும் கர்மாவைச் செய்யலாம். பிணத்தைக் கொளுத்துவது முதல் ஜலத்தைத் தொடுவது வரை பூர்வ க்ரியைகள் என்றும், மாதாமாதம் செய்யும் மாஸிகம் முதலியவைகள் மத்யமங்கள், ஸபிண்டீகரணத்திற்குப் பின் நடப்பவை உத்தர க்ரியைகள் என்று மூன்று வகையில் அழைக்கப்படுகின்றன. பூர்வ க்ரியைகளை தந்தை, தாய் வழி ஸபிண்ட, ஸமானோதக, ஸஹாத்யாயி, அரசன் இவர்கள் செய்யலாம். உத்தர க்ரியைகளை புத்ர, பௌத்ர, தௌஹித்ர, அவர்களின் புத்ரர்களோ தான் செய்ய வேண்டும். வேறு எவரும் செய்வதற்கு உரியவர் அல்லர். மத்யம க்ரியைகளை இருவரில் எவரும் செய்யலாம். ஸ்த்ரீகள் இறந்தாலும் இப்படியே.


Friday, January 22, 2010

விஷ்ணு புராணம் - 50

03_12. க்ருஹஸ்தன் தேவதைகள், பசுக்கள், ப்ராஹ்மணர்கள், ஸித்தி பெற்றவர், பெரியோர் இவர்களை எப்போது பூஜிக்க வேண்டும். ஸந்த்யோபாஸனை செய்ய வேண்டும். அக்னி பூஜை செய்ய வேண்டும். நல்ல வஸ்த்ரங்களையே அணிய வேண்டும். விஷத்தைப் போக்கும் மூலிகைகளையும், ரத்னம் முதலானவைகளையும் அணிய வேண்டும். தலைமயிரையும், சரீரத்தையும் அழுக்கின்றி அலங்கரித்துக் கொள்ள வேண்டும். மல்லிகை போன்ற அழகிய வெண்ணிறம் கொண்ட பூக்களை அணிந்திருக்க வேண்டும். பிறர் பொருளை அபகரிக்கக்கூடாது. ப்ரியமான, உண்மையான பேச்சுக்களையே பேச வேண்டும். குறை கூறக்கூடாது. பிறர் மனைவியையும், அடுத்தவருடன் பகையையும் விலக்க வேண்டும். துஷ்ட வாகனம், வெள்ளம் அரித்த ஆற்றங்கரை, பகைவன், தாழ்ந்தவன், பித்தன், பலருக்குப் பகைவன், துன்புறுத்துபவன், துஷ்ட பெண்களோடு சேர்ந்தவன், அற்பன், பொய்யன், அதிக செலவு செய்பவன், கோள் சொல்பவன், இல்லாதவரைப் பேசுபவன், வஞ்சகன் இவற்றையும் விலக்க வேண்டும். துணையின்றி செல்லக்கூடாது.

வெள்ளத்திற்கு எதிராக நீந்துதல், எரியும் வீட்டில் நுழைதல், மரத்தின் உச்சி, பற்களைக் கடித்தல், மூக்கை உயரத்தேய்த்தல், வாயைத் திறந்து கொட்டாவி விடுதல், பெருமூச்சு விடுதல், இருமல், சப்தம் போட்டு சிரித்தல், ஓசையோடு அபானன் வெளியிடுதல், நகம் கடித்தல், துரும்புகளைக் கிள்ளுதல், தரையில் எழுதுதல், மீசையைக் கடித்தல், உதட்டைக் கசக்குதல் இவற்றையும் விலக்க வேண்டும். அசுத்தமான, கெடுதல் தரும் வெளிச்சங்கங்களைப் பார்க்கக்கூடாது. அம்மணமாயிருக்கும் பெண்களைப் பார்க்கக் கூடாது. உதயாஸ்தமய காலங்களில் ஸூர்யனைப் பார்க்கக்கூடாது.

பிணத்தையும், பிணப்புகையையும் அருவருக்கக் கூடாது. சரீரம் சுக்ல, சோணிதமயம். இதில் சுக்லம் எனும் உஷ்ணம் அக்னியின் அம்சம். சோணிதம் எனும் ரஸம் சந்த்ரனின் அம்சம். அக்னியின் அம்சமான சுக்லம் இறக்கும் போது ப்ராணனோடு சென்று விடுகிறது. மீதமிருக்கும் சோணிதம் எரிக்கும் போது வாஸனையாக வருகிறது. எனவே அதை அருவருக்கக் கூடாது. இரவில் நாற்சந்தி, மேடை கட்டி பூஜிக்கப்படும் வேம்பு, அரசு முதலான மரங்கள், சுடுகாடு, உத்யான வனம்(பூங்கா), துஷ்ட ஸ்த்ரீ இவைகளை விலக்க வேண்டும். பூஜைக்குரியவர், தேவதை, ப்ராஹ்மணர்கள், நெருப்பு இவற்றின் நிழலைக் குறுக்காகத் தாண்டிச் செல்லக் கூடாது. பாழுங்காடு, பாழும் வீடு இவற்றில் வஸிக்கக் கூடாது.

மயிர், எலும்பு, முள், அசுத்தம், பலியிட்ட பொருள்களில் சாம்பல், உமி இவைகளை மிதிக்கக் கூடாது. ஸ்னானம் செய்த நீரால் நனைந்த தரையை மிதிக்கக் கூடாது. அயோக்யர் ஸஹவாஸம் கூடாது. சூது முதலானதை மனதாலும் நினைக்கக்கூடாது. மதம் பிடித்த யானை, பாம்புகளை பின் தொடரக்கூடாது. அவற்றின் எதிரேயும் நிற்கக்கூடாது. அதிகமாகக் கண் விழிப்பது, அதிகம் தூங்குவது, நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நின்று கொண்டிருப்பது, படுத்திருப்பது, அதிகம் வருந்தி வேலை செய்வது இவைகளை விலக்க வேண்டும். பல்லாலும், கொம்பாலும் துன்புறுத்தும் ப்ராணிகள், பனி, எதிர் காற்று, எதிர் வெயில் இவைகளை விலக்க வேண்டும். அம்மணமாகவோ, கச்சமின்றியோ, ஒற்றைத் துணியோடோ நீராடவோ, உறங்குவோ, ஆசமனம் செய்யவோ, பூஜை செய்யவோ கூடாது. இவைகளைக் கச்சத்துடனும், மேல் வஸ்த்ரத்தோடுமே செய்ய வேண்டும்.

நல்லவரோடு அரை நிமிஷம் கூடியிருத்தலும் நலமே. உயர்ந்தவர்களோடும், தாழ்ந்தவர்களோடும் பகை கொள்ளக் கூடாது. விவாஹமும், விவாதமும் சம அந்தஸ்து உடையவருடனேயே செய்ய வேண்டும். கலகத்தை ஆரம்பிக்கக் கூடாது. லாபம் கருதிக் கூட விரோதம் பாராட்டக்கூடாது. பகையால் வரும் நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். லாபம் வருமென்றாலும் பகையை கொள்ளக்கூடாது. ஸ்னானத்திற்குப் பின் துண்டினால் உடம்பைத் துடைத்துக் கொள்ள வேண்டும். மயிரை அடுத்தவர் மேல் நீர் படும் படி உதறக்கூடாது. நின்று கொண்டு ஆசமனம் செய்யக் கூடாது. ஒருகாலால் மற்றொரு காலை மிதிக்கக்கூடாது. பெரியவர் முன் கால் நீட்டக்கூடாது.

குருவின் முன்னிலையில் உட்காரவோ, படுக்கவோ கூடாது. அவர் அமர்ந்த பின் அனுமதி பெற்று தாழ்ந்த ஆஸனத்தில் அமரலாம். கோவில், நாற்சந்தி, மங்களப் பொருள்கள் இவைகளைக் கண்டால் ப்ரதக்ஷிணமாகச் செல்ல வேண்டும். மற்றவற்றை ப்ரதக்ஷிணமாகச் செல்லக்கூடாது. ஸூர்யன், சந்த்ரன், அக்னி, நீர், காற்று, பெரியவர்கள் இவர்களுக்கு எதிரில் காறி உமிழவோ, மல ஜல விஸர்ஜனமோ கூடாது. நின்று கொண்டோ, வழியிலோ மல ஜல விஸர்ஜனம் கூடாது. கோழை, மல ஜலம், ரத்தம் இவைகளை மிதிக்கக்கூடாது. போஜன காலம், பலி காலம், ஹோம, ஜப காலம், மங்கள காலம், ஜனங்கள் திரண்டிருக்கும் காலம் இவைகளிலும் துப்புதல் முதலியன கூடாது.

பெண்களை இகழவோ, நம்பவோ, பொறாமை கொள்ளவோ, அனாதரவு செய்யவோ கூடாது. ஏழைகளுக்கு உதவ வேண்டும், பெரியோர்களைச் சார்ந்திருக்க வேண்டும். மனவடக்கத்தோடும், இதமாகவும், ப்ரியமாகவும் தகுந்த காலத்தில் அளவோடு சொல்ல வேண்டும். பகுத்தறிவு, தகாத கார்யங்களைச் செய்வதில் வெட்கம், பொறுமை, வேதத்தில் நம்பிக்கை, கல்வியாலும் குலத்தாலும் மேன்மை, மேம்பட்டவர்களிடம் அடக்கம் இவைகள் வேண்டும். அகாலத்தில் இடி இடிக்கும் போதும், அமாவாஸ்யை, பௌர்ணமி, தீட்டு காலங்களிலும் வேதம் ஓதாமல் இருக்க வேண்டும்.

கோபம் கொண்டவர்களை மேலும் கிளப்பி விடாமல் (உசுப்பேத்தறது) சாந்தி அடையச் செய்தல், பொறாமை முதலான குணங்களின்றி எவரிடமும் உறவு கொள்ளுதல், அஞ்சியவர்களுக்கு ஆறுதல் அளித்தல் இவைகளைச் செய்தால் ஸ்வர்கத்திலும் சிறப்பை அடையலாம். இந்தச் செயல்களுக்கு ஸ்வர்கமும் ஈடாகாது. குடை, தடி, செருப்பு முதலியவைகளை காலங்களில் உபயோகிக்க வேண்டும். மேலேயோ, பக்க வாட்டிலோ, வெகு தூரத்திலோ வேடிக்கை பார்த்துக் கொண்டு நடக்கக்கூடாது. ஒரு நுகத்தடி (மாட்டு வண்டி சக்கரத்தின் மையத்திலிருந்து கட்டியிருக்கும் மாட்டின் கழுத்து வரையிலான தூரம், எப்டி சொல்றேன் பாத்தீங்களா) வரையிலான வழியை நன்கு பார்த்து கொண்டு செல்ல வேண்டும்.

இப்படிச் சிறந்த அறிவோடு, நல்லொழுக்கத்தோடு, கல்வி, கேள்விகளில் சிறந்திருந்து தனக்குத் தீங்கு நினைப்பவருக்கும், கோள் சொல்பவருக்கும், கடுஞ்சொல் சொல்பவருக்கும் நட்பு பாராட்டி, இனிய சொல் கூறி நடந்து வருபவனுக்கு மோக்ஷம் கையில் உள்ளது. இவர்களாலேயே உலகம் இன்னும் நிலை பெற்றிருக்கிறது. உண்மையைக் கூற வேண்டும், அதுவும் அடுத்தவருக்கு ப்ரியமாக, நன்மை தரக்கூடியதாய் இருக்க வேண்டும், அதையும் இனிமையாகக் கூற வேண்டும். இதையே படித்தவன் மனதாலும், வாக்காலும், உடலாலும் செய்ய வேண்டும். இதில் எதாவது ஒன்று தவறுமானால், அந்த சமயத்தில் (கருத்து கூறாமல்) பேசாமல் இருப்பதே மேல்.

விஷ்ணு புராணம் - 49

03_11. ஸகரன் "மஹரிஷி! ஸதாசாரத்தை எனக்குப் போதியுங்கள். ஆசாரங்களைக் கடைபிடிப்பவன் இங்கும், மேலுலகிலும் துன்பம் அடைவதில்லை என்று கூறுகிறார்கள். எனவே அதை எனக்கு அருளுங்கள்" என்று ஔர்வ மஹரிஷியிடம் கேட்கிறான். மஹரிஷி "ஆம், நீ கூறுவது உண்மையே. இரண்டு உலகையும் தரவல்லதே ஸதாசாரம். குற்றமற்ற ஸாதுக்களே ஸத்துக்கள். அவர்களுடைய ஒழுக்கமே ஸதாசாரம் ஆகும். இந்த ஆசாரத்தை ஸப்தரிஷிகளும், மனுக்களும், ப்ரஜாபதிகளும் உபதேசித்தும், அனுஷ்டித்தும் காண்பித்துள்ளார்கள். ஸூர்யோதயத்திற்கு முன் மூன்றாவது முஹூர்த்தமான ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் அறிவுடையவன் தூக்கத்தை விட்டு எழ வேண்டும். முஹூர்த்தம் என்பது இரண்டு நாழிகைகள் ஆகும். அதாவது விடிவதற்கு ஆறு நாழிகைக்கு முன். எழுந்ததும் தர்மத்தையும், அதன் வழியிலான அர்த்தத்தையும், இவையிரண்டிற்கும் முரண்படாத காமத்தையும் சிந்திக்க வேண்டும்.

பின் க்ராமத்தின் தென் மேற்கு (நிர்ருதி) திசையில் அம்பு பாயும் அளவு தூரம் சென்று மல, ஜலங்களைக் கழிக்க வேண்டும். தன் நிழல், மரத்தின் நிழல், பசு, ஸூர்யன், அக்னி, காற்று, ஆசார்யன், அந்தணன் இவர்களைப் பார்த்துக் கொண்டும், எதிரிலும் கழிக்கக் கூடாது. உழுத நிலத்திலும், பயிர்களுக்கு நடுவிலும், பசுக்கள் இருக்கும் இடத்திலும், மக்கள் கூட்டத்திலும், வழி, நதிக்கரை, நீர்நிலை, சுடுகாடு இவைகளில் கழிக்கக்கூடாது. சங்கடமில்லாத போது பகலிலும், இரவிலும் முறையே வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் கழிக்க வேண்டும். அப்போது பூணலை வலக்காதில் சுற்றிக்கொண்டு, அங்க வஸ்த்ரத்தால் தலையை மறைத்துக் கொள்ள வேண்டும். பூமியில் சருகுகளைப் பரப்பி அதன் மேலேயே கழிக்க வேண்டும்.

மௌனியாய் கழிக்க வேண்டும். கழித்த இடத்தில் அதிக நேரம் இருக்கக் கூடாது. அதன் பின் சுத்தமான மண்ணால் முன்புறம் ஒரு தடவையும், பின் புறம் மூன்று தடவையும், இடக்கையில் பத்து முறையும், பின் இரு கைகளிலுமாக ஏழு தடவையும் சுத்தம் செய்து கொண்டு, அதன் பின்னே ஜலத்தால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். புற்று மண், ம்ருகங்கள் தோண்டித் தள்ளின மண், தண்ணீருக்குள் இருக்கும் மண், சுத்தம்(சௌசம்) செய்து மீதமான மண், சுவரிலிருந்து எடுத்தது, பூச்சிகள் நிறைந்தது, கலப்பையால் தோண்டப்பட்டது இம்மாதிரியான மண்ணை உபயோகப்படுத்தக்கூடாது. வெறும் ஜலத்தால் மட்டும் சுத்தம் செய்து கொள்ளவும் கூடாது. உபயோகிக்கும் நீரும் தெளிந்ததாக, துர்நாற்றம், நுரை, குமிழிகள் இல்லாததாக இருக்க வேண்டும். இதன் பின் கால்களை மண்ணாலும், நீராலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின், வேறு நீர் நிலைக்கு வந்து மூன்று முறை ஆசமனம் செய்ய வேண்டும்.

பின் அகமர்ஷண ஸூக்தம் முதலானவைகளை ஜபித்து(பஞ்சாங்க) ஸ்னானம் செய்து, ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். பின் தலைமயிர்களை உலர்த்துதல், அலங்கரித்தல், கண்ணாடி பார்த்தல் முதலான மங்கள கார்யங்களைச் செய்ய வேண்டும். பணம், பொருளில்லாமல் யாகம் முதலானவைகளையும் செய்ய முடியாது. எனவே தனக்குரிய வழியில் பணத்தை ஈட்ட வேண்டும். இதன் பின் மத்யாஹ்ன ஸ்னானம் நதி, நதம், குளம், தேவதைகளாலுண்டாக்கப்ப்பட்ட நீர்நிலைகள், மலையருவி, இவையேதும் இல்லையேல் கிணறு இவற்றில் செய்ய வேண்டும். முடியவில்லையெனில் வென்னீரிலோ அல்லது மந்த்ர ஸ்னானமோ செய்யலாம். பின் சுத்த வஸ்த்ரங்களை அணிந்து கொண்டு தேவ, ரிஷி, பித்ரு தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும். அதன் பின் அனைத்துலகங்களிலுமுள்ள ஸகல ஜீவராசிகளின் பொருட்டும் காம்ய தர்ப்பணம் செய்து, மாத்யாஹ்னிகம் செய்து, க்ருஹத்திலிருக்கும் பூஜையை செய்ய வேண்டும்.

சுத்த ஜலத்தால் அபிஷேகித்து, ஆடை, ஆபரண, அலங்காரங்கள் செய்து, தூப தீபம் காண்பித்து, விதவிதமான அன்னங்களை நிவேதனம் செய்ய வேண்டும். இதன் பின் எல்லா இனத்தைச் சேர்ந்த பூதங்களுக்கும் பலி கொடுப்பதற்காக சமைத்த உணவு வகைகளைக் கொண்டு வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். அதன் பின் ஒரு மாடு பால் கறக்கும் நேரம் வரை வீட்டிலேயே பொறுத்திருந்து யாராவது அதிதிகள் வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வந்தால் வரவேற்று, ஆஸனம் தந்து, கால்களை அலம்பி விட்டு, அன்னமிட்டு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இனிதே பதிலுரைத்து, அவர் செல்லும் வரை கூட இருந்து த்ருப்தி உண்டாக்க வேண்டும்.

குலம், கோத்ரம் தெரியாதவனும், தரித்ரனாகவும், உறவற்றவனாகவும், சாப்பிடும் ஆசையில் இருப்பவனும், ஒரே இடத்தில் இல்லாதவனும், வேறொரு இடத்திலிருந்து வருபவனுமானவனே அதிதி. அவனை ப்ரஹ்மனைப் போல் பாவிக்க வேண்டும். இவனை விட்டுத் தான் மட்டும் உணவுண்பவன் நரகத்திற்குச் செல்கிறான். இதைத் தவிர நிதமும் ஒரு ப்ராஹ்மணனை நித்ய ச்ராத்தத்திற்காகச் சாப்பிடச் செய்ய வேண்டும். அவன் தன்னூரைச் சேர்ந்தவனாகவும், ஆசாரம், குலங்களில் தேர்ந்தவனாகவும், பஞ்சமஹா யக்ஞங்களைச் செய்பவனாகவும் இருக்க வேண்டும். இதன் பின் அன்னத்தைக் கொஞ்சம் "ஹந்த" என்று சொல்லி எடுத்து வைத்து அதை வேதாத்யயனம் செய்திருக்கும் ப்ராஹ்மணனுக்குக் கொடுக்க வேண்டும். ப்ரஹ்மசாரிக்கும், ஸன்யாஸிக்கும் மூன்று கவளங்களுக்குக் குறையாமல் கொடுக்க வேண்டும்.

குலம் கோத்ரம் தெரியாதவர், வேதாத்யயனம் செய்து யக்ஞங்கள் செய்பவர், ப்ரஹ்மசாரி ஸன்யாஸிகள், வேதாத்யயனம் முதலான காரணங்களுக்காக யாத்ரை வருபவர் என அதிதிகள் இப்படி நான்கு வகையாவர். இவர்களுக்கு அளிக்கும் அன்னத்தை தாதா, ப்ரஹ்மா, இந்த்ரன், வஸுக்கள், அக்னி, ஸூர்யன் ஆகியோர் உண்கின்றனர். இவர்கள் உண்ட பின் கல்யாணம் ஆகி புகுந்த வீடு செல்லாமல் இங்கேயே இருப்பவள், கர்ப்பிணி, முதியோர், சிறுவர்கள் இவர்களை ருசிக்க சாப்பிடச்செய்து அதன் பிறகே தான் உண்ண வேண்டும். இப்படி நீராடி, ஜபித்து, வைச்வதேவம், பஞ்சமஹாயக்ஞங்கள் செய்து உண்பதாலேயே அன்னம் சுத்தியடைகிறது.

இப்படியில்லாமல் நீராடாமல் உண்பவன் மலத்தையும், ஜபம் செய்யாமல் உண்பவன் சீழ், ரத்தம் இவைகளையும், வைச்வதேவம் செய்யாமல் உண்பவன் மூத்ரத்தையும், குழந்தை முதலானோருக்கு முன் உண்பவன் ம்ருகங்களின் மலத்தையும், அதிதிகளுக்குக் கொடாமல் உண்பவன் க்ருமிகளையும், ஹோமம் செய்யாமல் உண்பவன் விஷத்தையும் உண்பதாக ஆகிறான். விதிகளின் படி உண்பவனுக்கு இம்மையில் ஆரோக்யமும், பலமும், பகைவரிடம் பயமின்மையும் கிடைக்கும். நல்ல வாசனைகளையும், புஷ்பங்களையும் தரித்து, கைகளில் ரத்னம் முதலியவைகளை அணிந்து கொண்டு உண்ண வேண்டும். ஒற்றைத் துணியோடு உண்ணக் கூடாது. ஈரமான கை, கால்களோடு உண்ணக் கூடாது. முகத்தை சுத்தம் செய்து கொண்டு, மகிழ்ச்சியோடு உண்ண வேண்டும்.

கிழக்கு, வடக்கு நோக்கி உண்ண வேண்டும். மூலையைப் பார்த்துக் கொண்டோ, கவலையோடோ உண்ணக்கூடாது. உணவு உயர்ந்ததாகவும், இதமாகவும் இருக்க வேண்டும். உணவை சுத்த நீரால் ப்ரோக்ஷித்து விட்டே உண்ண வேண்டும். அங்கஹீனர்கள், வ்யாதியஸ்தர்கள் முதலான அருவருக்கத் தக்கவர்கள் கொண்டுவரும் உணவையும், நன்கு சமைக்கப்படாததையும், ஆஸனங்களிலும், அசுத்தமான இடங்களிலும் வைத்துக் கொண்டும் உண்ணக்கூடாது. கோபதாபங்களின்றி சுவைத்து உண்ணும் நினைவுடன் உண்ண வேண்டும். நெருப்பில் பக்வம் செய்யாததைத் தவிர (பழம், கிழங்கு, பக்ஷணங்கள்) பழையதை உண்ணக்கூடாது. சத்தில்லாததை உண்ணக்கூடாதது. தேன், தண்ணீர், தயிர், நெய் இவை தவிர வேறெதையும் மீதமானால் உண்ணக்கூடாது.

முதலில் இனிப்பு, நடுவில் புளிப்பு, உப்பு, பின் கசப்பு, காரம் இப்படி உண்ண வேண்டும். முதலில் த்ரவம், பின் கடினம், பின் மறுபடி த்ரவம் என்று உண்ண வேண்டும். சாஸ்த்ரம் அனுமதிக்காதவற்றை உண்ணக்கூடாது. உண்ணும் போது பேசக் கூடாது. ப்ராண, அபாண, வ்யான, உதான, ஸமான என்ற ஐந்து ப்ராணன்களுக்காக முதல் ஐந்து பிடிகளை உண்ண வேண்டும். உத்ராபோசனத்திற்குப் பிறகு கைகளை முழங்கை வரை சுத்தம் செய்து, முகத்தையும், கால்களையும் அலம்பிக் கொண்டு, கிழக்கு அல்லது வடக்கு பார்த்து ஆஸனத்தில் அமர்ந்து சாந்தமாக, ஓய்வாக இஷ்ட தேவதைகளை த்யானிக்க வேண்டும்.

காற்றால் வளர்க்கப்பட்ட அக்னி, ஆகாசத்துடன் கூடிய (வயிறு முட்டாம சாப்பிட்டிருந்தால்)அன்னத்தை ஜரித்து, அதன் சாரத்தால் என் சரீரத்தைப் காத்து, வளர்த்து எனக்கு சுகத்தை உண்டாக்கட்டும். நான் உண்ட அன்னம் என் உடலிலுள்ள பூமி, ஜலம், அக்னி, காற்று ஆகிய பூதங்களுக்கு பலத்தைத் தந்து எனக்கு சுகத்தை உண்டாக்கட்டும். மேலும் ஐந்து ப்ராணன்களுக்கும் புஷ்டியைத் தந்து எனக்குக் குறைவற்ற சுகத்தை உண்டாக்கட்டும். வயிற்றில் இருக்கும் அக்னியும், வடவாக்னியும் அன்னத்தை ஜரிக்கச் செய்து அதன் வளர்ச்சியால் எனக்கு சுகத்தையும், ஆரோக்யத்தையும் உண்டாக்கட்டும். விஷ்ணு ஒருவனே இந்த்ரியங்களுக்கும், உடல்களுக்கும் ஆத்மா. முதற்பொருள் அவனே. கல்யாண குணங்களை உடையவன் அவனே. இந்த உண்மை நான் உண்ட உணவை ஜீர்ணமாக்கி, எனக்கு நலம் தரும் வகையில் பரிணாமத்தை அடையட்டும். உண்பவனும், உணவும், அதன் பரிணாமமும் விஷ்ணுவே என்ற உண்மையாலும் நான் உண்ட உணவு ஜீர்ணமாகட்டும்.

மேற்கண்ட பத்தியின் பொருளுள்ள ச்லோகம் மூலத்தில் உள்ளது. அந்த ஆறு ச்லோகங்களையும் சொல்லி தன் கையால் வயிற்றைத் தடவ வேண்டும். அதன் பின் உடலுக்கும் உள்ளத்துக்கும் தளர்ச்சியைத் தரும் வேலைகளைச் செய்யாமல், எளிய வேலைகளாகச் செய்து கொண்டு சிறிது நேரம் இருக்க வேண்டும். பின் ஸாயங்காலம் மீண்டும் ஸந்த்யையை ஸ்திரமாக உபாஸிக்க வேண்டும். காலையில் ஸூர்யன் உதிக்கும் முன்பும், மதியம் ஸூர்யன் உச்சியில் இருக்கும் போதும், மாலையில் அஸ்தமிக்கும் முன்னும் உபாஸிக்க வேண்டும். ப்ரஸவம், இறப்பு, சித்தப்ரமை, வ்யாதி, பயம் இவைகளால் பாதிப்பில்லாத காலங்களில் ஸந்த்யையுடன் ஸூர்ய உபஸ்தானத்தைத் தவறாமல் செய்யவேண்டும்.

ஸந்த்யா காலங்களில் தூங்கக்கூடாது. தவறினால் தகுந்த ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அதுவும் செய்யாதவர்கள் தாமிஸ்ர நரகத்தை நிச்சயம் அடைவர். ஸாயம் ஸந்த்யோபாஸனைக்குப் பின் மீண்டும் வைச்வதேவ பலிகளைப் பத்னியுடன் செய்து, அதிதி பூஜைகளைச் செய்து, பின் தான் சாப்பிட்டு, கை, கால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்து விட்டு படுக்கைக்குச் செல்ல வேண்டும். பகலில் அதிதி பூஜை செய்யாததை விட இரவில் அதிதி பூஜை செய்யாதோருக்கு எட்டு மடங்கு அதிக பாபம் உண்டாகும். எனவே முடிந்த அளவு வரவேற்று, உபசரித்து, உணவு, நீர் தந்து, ஆஸனம், படுக்கை, படுக்க இடம் இவற்றைச் செய்ய வேண்டும்.

யானைத் தந்தத்தாலான கட்டிலில் படுத்துறங்குவது நன்று. இல்லாத போது விரிசல்கள், மேடு, பள்ளங்கள், அழுக்கு, பூச்சி, எறும்பு போன்ற குறைகள் இல்லாமல் ஒரு சிறந்த மரத்தால் ஆன கட்டிலில் மேல் விரிப்பு விரித்து கிழக்கிலோ, தெற்கிலோ தலை வைத்து படுக்க வேண்டும். மற்ற திசைகள் நோயைத் தரும். க்ருஹஸ்தன் ருது காலத்தில் (வீட்டு விலக்கு முடிந்து ஸ்னானம் செய்த நான்காம் நாளிலிருந்து பதினாறு நாட்கள்), ஆண் நக்ஷத்ரத்தில் (அச்வினி, க்ருத்திகை, ரோஹிணி, புனர்வஸு, புஷ்யம், ஹஸ்தம், அனுஷம், ச்ரவணம், பூரட்டாதி, உத்ரட்டாதி ஆகிய பத்து நக்ஷத்ரங்கள்), சுப காலத்தில், இரட்டைப்படை தினங்களில் மனைவியைச் சேர்வது சாலச் சிறந்தது.

அப்போதும் மனைவி அனுகூலமாகவும், நோயில்லாமலும், ரஜஸ்வலையாக(விலக்காக)இல்லாமலும், இருவரும் கோபம், அசௌகர்யம் முதலியன இல்லாமலும், கர்ப்பிணியாக இல்லாமலும், சக்தியோடும், வேறொருவரிடம் ஆசையின்றியும், தன்னிடம் ஆசையோடும், பசியில்லாமலும், அதிகமாக உணவுண்ணாமலும் இருக்க வேண்டும். (சரியாப் போச்சு, மாஸத்துக்கு ஓரிரு நாள் தான் தேறும், எல்லாமே அளவு தான் போல). நீராடி, மாலை, சந்தனம் முதலியவைகளை அணிந்து மகிழ்ச்சியோடு, மித ஆகாரம் உண்டு, ஆசையோடும், அன்போடும் மனைவியை (மட்டும்) சேர வேண்டும். சதுர்தசி, அஷ்டமி, அமாவாஸ்யை, பௌர்ணமி, மாஸப்பிறப்பு ஆகிய காலங்களை விலக்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், மாம்ஸம் உண்டிருப்பதுவும் விலக்கவேண்டியவைகளே. இவைகளை மீறுபவன் விண்மூத்ர போஜனம் என்னும் நரகத்தை அடைவான். இப்படி விலக்கிய காலங்களில் இருவரும் ஆராதனைகளிலும், த்யானமும், ஜபமும், நல்ல பேச்சுக்களாலும் காலத்தைக் கழிக்க வேண்டியது. அடுத்தவர் மனைவியோடும், ம்ருகங்களோடும் சேரக்கூடாது. கோவில், ப்ராஹ்மணர்கள் மற்றும் ஆசார்யர்களின் இருப்பிடங்களில் சேரக்கூடாது. புண்ய தீர்த்தம், மாட்டுக்கொட்டில், ஜனங்கள் கூடுமிடம், சுடுகாடு இவைகளைச் சேர்ந்த நந்தவனங்கள், ஜலம், தரை இவைகளோடும், இந்த இடங்களிலும் சேரக்கூடாது. ஸந்த்யா காலங்கள், இயற்கை உபாதையோடு இருக்கும் போது (மல, ஜல விஸர்ஜனம் செய்யும் உணர்ச்சி தோன்றும் போது)சேரக்கூடாது. இவைகளை மனதாலும் மனதாலும் நினைக்கக் கூடாது. மிகுந்த பாபமும், கடும் நோயும், பழியும் இவற்றால் உண்டாகும். நரகத்திலும் உழன்று மீண்டும் புழுக்களாகப் பிறப்பர்.

Thursday, January 21, 2010

விஷ்ணு புராணம் - 48

03_10. ஸகரன் "மஹரிஷி! கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம், உன்னயனம், விஷ்ணுபலி, ஜாதகர்மம், நாமகரணம், உபநிஷ்க்ரமணம், அன்னப்ராசனம், சௌளம், உபனயனம், நான்கு வ்ரதங்கள்(ப்ராஜாபத்யம்,ஸௌம்யம், ஆக்னேயம், வைச்வதேவம்), விவாஹம் என்ற பதினான்கு கர்மாக்களையும், நித்ய, நைமித்திக, காம்ய கர்மங்களையும் தர்மங்களையறிந்த தாங்கள் விவரிக்க வேண்டும்" என்று ஔர்வரிடம் கேட்கிறார். ஔர்வர் "குழந்தை பிறக்கும் முன் கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம், உன்னயனம் முதலானவைகளையும், பிறந்த பின் ஜாதகர்மா முதலானவைகளையும், அப்யுதய ச்ராத்தத்தையும் செய்ய வேண்டும்.

ப்ராஹ்மணர்கள் தேவ பூஜைகளையோ, நாந்தீ, பித்ரு கார்யங்களையோ செய்யும் போது இரட்டைப் படையில் ப்ராஹ்மணர்களை கிழக்கு முகமாக இருக்கச் செய்து, த்ருப்தி அடையும் வரை உணவூட்ட வேண்டும். நாந்தீ என்றால் சுபம், உத்ஸவம். இதையே ப்ரதானமாகக் கொண்ட சில தேவதைகள் நாந்தீமுக தேவதைகளாவர். இவர்களும் பித்ரு தேவதைகளைச் சேர்ந்தவர்களே. இவர்களுக்காக தயிர், யவம், இலந்தைப் பழம் இவைகளுடன் கலந்த பிண்டங்களைத் தீர்த்தத்தோடு தேவ (விரல்களின் நுனி வழி) அல்லது ப்ராஜாபத்ய தீர்த்தத்தினாலோ(சுண்டு விரலின் கீழுள்ள பகுதி வழி) ப்ரதக்ஷிணமாகத் தர வேண்டும். இந்த நாந்தீ ச்ராத்தத்தை எல்லா வ்ருத்தி காலங்களிலும் (கல்யாணம், க்ருஹ ப்ரவேசம், சௌளம், ஸீமந்தம் முதலியன) செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்த பத்தாம் நாள் தகப்பனே பெயர் வைக்க வேண்டும். குழந்தையின் பெயர் குல தேவதை, குல முன்னோர்களின் பெயரைக் கொண்டதாக இருக்க வேண்டும். சர்ம, வர்ம, குப்த, தாஸ என்ற வார்த்தைகளை முறையே ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர வர்ணங்களில் பிறந்த குழந்தைகளுக்குக் கடைசியில் சேர்க்க வேண்டும். அர்த்தமில்லாமலோ, வெட்கப்படும்படியாகவோ, தீச்சொல்லுடனோ, அமங்களமாகவோ, அருவருப்பாகவோ பெயர் இருக்கக்கூடாது. இரட்டைப்படையில் (புத்ரனுக்கு)எழுத்துக்கள் கொண்டதாயிருக்க வேண்டும். நீண்டோ, குறுக்கியோ, நெட்டெழுத்துக்கள் அதிகமாகவோ, கடின சந்தியுடனோ இருக்கக் கூடாது. எளிதில் உச்சரிக்கக்கூடியதாயிருக்க வேண்டும்.

இதற்குப் பின் உபனயனம் வரை மற்ற கார்யங்களையும் தகப்பனே செய்து வைக்க வேண்டும். அதன் பின் குருவின் க்ருஹத்தில் வஸித்து வேதத்யயனம், குருதக்ஷிணை, வ்ரதங்களை முடித்துக் கொண்டு விரும்பினால் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் குரு, குருபுத்ரனுக்குப் பணிவிடை செய்து கொண்டு ப்ரஹ்மசாரியாகவோ, வானப்ரஸ்தனாகவோ, ஸன்யாஸியாகவோ இறுதி வரை வாழலாம். ஆனால் முடிவை மாற்றி வேறு ஆச்ரமத்திற்கு இடையில் செல்லக்கூடாது.

விவாஹம் செய்து கொள்ள விரும்புபவன் தன் வயதில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்படாத வயதுள்ள பெண்ணை மணக்கலாம். அவள் நீண்ட கூந்தலுடனோ, கூந்தலே இல்லாமலோ இருக்கக் கூடாது. கரிய நிறத்திலோ, பசிய நிறத்திலோ, அளவிற்கு அதிகமான அல்லது குறைவான அவயவங்களுடன் இருக்கக் கூடாது. சூத்ரன் முதலோரால் வளர்க்கப்பட்டவள், இழி குலத்திலே பிறந்தவள், உடலில் ரோமம் அடர்ந்தவள், நோயாளி, துஷ்டத்தனமுள்ளவள், தோஷமுள்ள வார்த்தைகளைக் கூறுபவள், தொற்றுநோயுள்ள பெற்றோருக்குப் பிறந்தவள், ஆண்மையின் அடையாளங்களுள்ளவள், கரகரப்பான குரல் படைத்தவள், இளைத்தவள், காக்கைக் குரலுள்ளவள், மயிரடர்த்தி இல்லாத இமைகளுள்ளவள், வட்டமான கண்ணுள்ளவள், உயர்ந்த குதிகாலுள்ளவள், சிரிக்கும் போது கன்னத்தில் அதிக அளவில் குழி விழுபவள்,

அமைதியற்றவள், வெளுத்த நகங்களுள்ளவள், சிவந்த கண்களுள்ளவள், பருத்த கை, கால்களுள்ளவள், குள்ளப் பெண், நெட்டைப்பெண், கூடிய புருவங்களுள்ளவள், பற்களுக்கிடையே இடைவெளியுள்ளவள், பயங்கரமான முகமுள்ளவள், தாய் வம்சத்தில் ஐந்து தலைமுறைக்குட்பட்டவள், தகப்பன் வம்சத்தில் ஏழு தலைமுறைக்குட்பட்டவள் இவர்களை விலக்க வேண்டும். ப்ராஹ்மம், தைவம், ஆர்ஷம், ப்ராஜாபத்யம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என்று விவாஹம் எட்டு வகையாகும். ப்ராஹ்மம் என்பது வரனைக் கூப்பிட்டு, சக்திக்கேற்ப கன்னியை அலங்கரித்துக் கொடுத்தல், யாகத்தில் ரித்விக்காக இருப்பவனுக்குக் கொடுப்பது தைவம், இரண்டு எருதுகளைப் பெற்றுக் கொண்டு கன்னியைக் கொடுப்பது ஆர்ஷம், இருவரும் சேர்ந்து தர்மத்தை அனுஷ்டியுங்கள் என்று கொடுப்பது ப்ராஜாபத்யம். பணம் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஆஸுரம். ஆணும், பெண்ணும் மனம் ஒன்றுபட்டபோதே சேர்தல் காந்தர்வம், பெண்ணைச் சண்டை போட்டு, வென்று தூக்கிக் கொண்டு வருவது ராக்ஷஸம். பெண்ணை ஏமாற்றிக் கொண்டு வருவது பைசாசம். ப்ராஹ்மணர்கள் ப்ராஹ்ம, தைவ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய முறைகளிலும், காந்தர்வ, ராக்ஷஸ, ஆஸுர வழிகளில் மற்ற மூவரும் விவாஹம் செய்யலாம். பைசாச விவாஹம் மிகுந்த பாபத்தைத் தருவது.

விஷ்ணு புராணம் - 47

03_09. இளமையில் உபனயனம் செய்யப்பெற்று, வேதாத்யயனம் செய்வதற்காக குருகுலம் சென்று வசிப்பவனே ப்ரஹ்மசாரி ஆகிறான். இவன் மனதையடக்கி, தூய்மை, நல்லொழுக்கங்களுடன், குரு சிஷ்ரூஷை செய்து வரவேண்டும். கள், மாம்ஸங்களை விலக்கி, ப்ராஜாபத்ய முதலான வ்ரதங்களுடன் வேதங்களைக் கற்க வேண்டும். இரண்டு ஸந்த்யைகளிலும் ஸூர்யனையும், அக்னியையும் அடக்கத்துடன் வணங்க வேண்டும். பின் ஆசார்யனை நமஸ்கரிக்க வேண்டும். ஆசார்யன் நிற்கையில் தான் அமரக்கூடாது. ஆசார்யன் அமர்ந்த பின் அதைவிடத் தாழ்ந்த ஆசனத்தில் தான் அமர வேண்டும். ஆசார்யனுக்கு எதிர்க்கருத்துக்களைக் கூறக்கூடாது. ஆசார்யன் உத்தரவு பெற்று அவன் எதிரிலேயே அத்யயனம் செய்ய வேண்டும். குருவின் உத்தரவுடன் பிக்ஷை பெற்றே, குருவின் அனுமதியினுடனேயே உண்ண வேண்டும். ஆசார்யன் நீராடிய பின் அவர் நீராடிய நீரிலேயே தான் நீராட வேண்டும். ஆசார்யனுக்குத் தேவையான ஸமித், நீர் முதலான பொருள்களை வேளையில் ஏற்படுத்தித் தரவேண்டும். வேதார்த்தங்களை அறியும் வரை அத்யயனம் செய்து விட்டு, குருதக்ஷிணையைக் கொடுத்து விட்டு, குருவின் அனுமதியினுடனேயே கார்ஹஸ்த்யம் செல்ல வேண்டும்.

குருவின் அனுமதி பெற்ற ப்ரஹ்மசாரி விதிப்படி ஒரு பெண்ணை மணக்க வேண்டும். தனக்குரிய தர்ம வழியில் தர்மங்களை அனுஷ்டிப்பதற்காக பணம் சம்பாதிக்க வேண்டும். எள்ளுடன் நீர் கலந்தும், பிண்ட தானத்தாலும் பித்ருக்களைப் பூஜிக்க வேண்டும். வேத யாகங்களால் தேவதைகளைப் பூஜிக்க வேண்டும். அதிதிகளை அன்னமிட்டு பூஜிக்க வேண்டும். வேதங்களை ஓதுவதால் ரிஷிகளை பூஜிக்க வேண்டும். நன்மக்களைப் படைப்பதால் ப்ரஹ்மாவைப் பூஜிக்க வேண்டும். வைச்வதேவ பலியால் ஸர்வ பூதங்களையும் பூஜிக்க வேண்டும். அன்பினால் அனைவரையும் கவர வேண்டும். இத்தகைய க்ருஹஸ்தன் பல நல்ல லோகங்களை அடைகிறான்.

ப்ரஹ்மசாரிகளும், ஸன்யாஸிகளும் க்ருஹஸ்தர்களையே அண்டியிருக்கிறார்கள். க்ருஹஸ்தர்கள் இல்லையேல் இவர்கள் இல்லை. பலருக்கும் உதவுவதால் இந்த ஆச்ரமமே உயர்ந்தது. பலர் படிப்பதற்காகவும், தீர்த்த, க்ஷேத்ராடனத்திற்காகவும், யாத்ரைக்காகவும் உலகைச் சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு வஸிக்க இடமோ, உணவோ நிலையாக இல்லை. இவர்களை இவையெல்லாவற்றையும் அளித்துத் தாய் போல் காப்பது இந்த க்ருஹஸ்தர்களே. விருந்தினர்களுக்கு நல்வரவு கூறி, உபசரித்து, நீர், உணவு, ஆசனம், படுக்கை முதலானவைகளை இவர்களே செய்துத் தர வேண்டும். அப்படிச் செய்யாமல் அதிதி அத்ருப்தியுடன் சென்றால் அவன் தன்னுடைய பாபங்களை இந்த க்ருஹஸ்தனுக்குக் கொடுத்து விட்டு, க்ருஹஸ்தனின் புண்யங்களை எடுத்துச் சென்று விடுகிறான். எனவே அதிதியை அவமதிக்கக் கூடாது, அஹங்காரம் காட்டக் கூடாது, கொடுத்துவிட்டு வீணாகிப் போனதே என்று நினைக்கக் கூடாது. விருந்தினர்களை விரட்டக் கூடாது. கடுஞ்சொல் கூறக்கூடாது.

இப்படிக் காலத்தைக் கழித்த க்ருஹஸ்தன் வயது முதிர்ந்ததும், சடங்குகளை முடித்தபின் கடைசி காலத்தைக் கழிக்க பத்னியோடோ, அல்லது பத்னியைப் புத்ரர்களிடம் ஒப்படைத்துவிட்டோ காடு தேடி செல்ல வேண்டும். இலை, கிழங்கு, பழங்களையே உண்ண வேண்டும். தாடி, ஜடைகளைத் தரிக்க வேண்டும். தரையிலேயே படுக்க வேண்டும். பற்றற்றவனாயிருத்தல் பரமனையே நினைத்து (முனி) இருக்க வேண்டும். ம்ருகங்களின் தோலையோ, மரவுரியையோ, புல், தர்ப்பங்களையோ தரிக்க வேண்டும். மூன்று வேலையும் நீராடி, தேவதா பூஜை, ஹோமங்கள், அதிதி பூஜை, பிக்ஷை இடுதல், பூதபலி இவைகளைச் செய்ய வேண்டும். காட்டில் கிடைக்கும் எண்ணையையே தேய்த்துக் கொள்ள வேண்டும். வெயில், குளிர் என அனைத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். இப்படியிருக்கும் வானப்ரஸ்தன் அக்னி குப்பைகளைக் கொளுத்துவது போல் பாபங்களைத் தொலைத்து பரிசுத்தனாகி நிலைத்த லோகங்களுக்குச் செல்கிறான்.

மனைவி, மக்கள், செல்வம் முதலானவைகளில் பற்றுதலை விட்டே ஸன்யாஸம் பெற வேண்டும். காம, க்ரோத முதலியவைகளை ஒழித்து, தர்ம, அர்த்த முதலானவைகளையும் விடுத்து, ப்ரஹ்ம ஞானத்திலேயே பற்றுதலோடிருக்க வேண்டும். எந்த பாகுபாடுமின்றி எவரிடமும் ஸமத்வ பாவத்தோடிருக்க வேண்டும். ம்ருகம், பறவை இவைகளுக்குக் கூட மனது, வாக்கு, செயல்களால் தீங்கிழைக்காமலிருக்க வேண்டும். எதிலும் ஸம்பந்தமின்றி இருக்க வேண்டும். க்ராமத்தில் ஓரிரவும், பட்டணங்களில் ஐந்திரவுகளும் தங்கலாம். ஒருவருக்கும் தன்னிடம் அன்போ, த்வேஷமோ வராமல் நடந்து கொள்ள வேண்டும். ப்ராணனைக் காப்பதற்காக மட்டுமே பிக்ஷை எடுக்க வேண்டும். குலத்தாலும், ஆசாரத்தாலும் உயர்ந்தவர்களின் இல்லத்திலும் அடுப்பு அடங்கி, அனைவரும் சாப்பிட்ட வீட்டிற்கே பிக்ஷைக்குச் செல்ல வேண்டும். பசிக்கு உண்பதாக நினைக்காமல் தன்னுடலில் ஜாடராக்னியில் செய்யும் அக்னிஹோத்ரமாகவே நினைத்து முகமாகிய குண்டத்தில் அன்னமாகிற ஹவிஸ்ஸை இடுவதாக நினைத்துண்ண வேண்டும். அஹங்கார(நான்), மமகாரங்களை(என்னுடையது) விடுக்க வேண்டும். எல்லா உயிர்க்கும் அபயம் அளிப்பவனாயிருக்க வேண்டும். அப்பொழுதான் எந்த உயிர்க்கும் அவனிடம் பயமுண்டாகாது.

விஷ்ணு புராணம் - 46

03_08. "மஹரிஷி! அந்த ஜகன்னாதனை ஆராதிக்கும் முறையையும், அதனால் பெறும் பலன்களையும் கூறியருள வேண்டும்" என்கிறார் மைத்ரேயர். "இதே கேள்வியை முன்னொரு ஸமயம் ப்ருகு மஹரிஷியின் புத்ரரான ஔர்வ மஹரிஷியிடம் ஸகர ராஜன் கேட்டபோது அவர் கூறிய அனைத்து சாஸ்த்ரங்களையும் நான் உனக்குக் கூறுகிறேன்" என்று பதிலுரைக்கிறார் பராசரர். இவ்வுலக ஸுகங்களையும், ஸ்வர்கத்தின் ஸுகங்களையும், ப்ரஹ்ம பதவியையும், மோக்ஷத்தையும் அளிக்கவல்லது பகவானின் ஆராதனை என்று ஆரம்பிக்கிறார் ஔர்வர். ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, வேளாள என்று நான்கு வர்ணங்கள். ப்ரஹ்மசர்ய, கார்ஹஸ்த்ய, வானப்ரஸ்த, ஸன்யாஸ என்று ஆச்ரமங்கள் நான்கு. வர்ணங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் தர்மங்கள் வேறுபடும். அந்தந்த தர்மங்களை அனுஷ்டிப்பதே பரமனுக்கு மிக உகந்தது. அதுவே அவனுக்கு மிகுந்த ஆராதனையுமாகும்.

யாகங்களை அனுஷ்டிப்பதும் விஷ்ணுவின் ஆராதனையே. பல தேவதைகளைக் குறித்து அவைகளில் மந்த்ரங்களைக் கூறினாலும், அவையனைத்தும் அவர்களுக்கும் அந்தராத்மாவாக இருக்கும் விஷ்ணுவையே குறிக்கும். எனவெ எந்த தேவதையின் மந்த்ரங்களும் விஷ்ணுவின் மந்த்ரமேயாகும். அதே போல மற்ற ஜீவன்களைத் துன்புறுத்தும்போதும் அவனே துன்புறுத்தப்படுகிறான். எவரையும் நேரிலோ(அபவாதம்), மறைவிலோ (பைசுன்யம்) நிந்திக்கவும் கூடாது. பொய் சொல்லவோ, பிறர் மனம் வருந்தும் வகையிலோ பேசக்கூடாது. பிறர் மனைவி, பொருள்களில் பற்றுதல் வைக்கக் கூடாது. ப்ராணிகளைக் கொல்லவோ, அடிக்கவோ கூடாது. தேவர், ப்ராஹ்மணர், ஆசார்யர்களிடம் பணிவிடை செய்வதில் விருப்பத்தோடு இருக்கவேண்டும். நம்முயிர் போல அனைத்துயிர்களையும் நினைக்க வேண்டும்.

அந்தணர்கள் முடிந்த வரை தானங்களை அவச்யம் செய்ய வேண்டும். யாகங்களால் தேவதைகளை ஆராதிக்க வேண்டும். அதற்காக வேதாத்யாயனம் செய்ய வேண்டும். தினமும் ஸ்னான, தர்பணங்களை குறைவின்றி செய்ய வேண்டும். அக்னிஹோத்ரம், ஔபாசனங்களைக் காத்துவர வேண்டும். நல்வழியில் பொருளீட்டியவர்களிடமிருந்து ப்ரதிக்ரஹம் பெற வேண்டும். எல்லா ப்ராணிகளுக்கும் இதத்தையே செய்ய வேண்டும். நட்பு கொள்ள வேண்டும். அடுத்தவர் பொருளை துச்சமாக மதிக்க வேண்டும். ருது காலத்தில் பத்னியோடு சேர வேண்டும்.

க்ஷத்ரியன் தானம், யாகம், அத்யயனம் மூன்றையும் அவச்யம் செய்யவேண்டும். ப்ராஹ்மணர்களுக்கு தானமும், பல யாகங்களும் செய்ய வேண்டும். போர் செய்வதும், பூமியைக் காப்பதும் இவர்களுக்கு முக்யம். நாட்டில் நடக்கும் யக்ஞம் முதலான அனைத்து கார்யங்களிலும் இவனுக்கு ஆறில் ஒரு பங்கு உண்டாகையால் இவன் நிச்சயம் மக்களைக் காக்க வேண்டும். துஷ்டர்களைத் தண்டிக்க வேண்டும், தயவு காட்டி விடக் கூடாது. நல்லவர்களைக் காக்க வேண்டும். வர்ணாச்ரமம் இப்படி அரசனால் காப்பாற்றப்படுமானால் அவன் விரும்பிய நல்ல லோகங்களை அடைவான்.

பசு பராமரிப்பு, தானம், யாகம், அத்யயனம், நித்ய, நைமித்திக கர்மாக்கள், வர்த்தம் செய்தல், பயிரிடல் இவைகள் வைச்யனுக்கு ஜீவனம். இம்மூவர்க்கும் பணிவிடை செய்து, அவர்களுக்கு அடிபணிந்திருப்பதே சூத்ரனின் வேலையாகும். அப்படிச் சம்பாதித்த பொருளைக் கொண்டு அவன் குடும்ப பரிபாலனம் செய்யவேண்டும். எதுவும் அப்படிக் கிடைக்காத போது பல சரக்கு வ்யாபாரம், தச்சு வேலை முதலியவைகளைச் செய்து குடும்பத்தைக் காக்க வேண்டும். தானமும் சக்திக்க்கேற்றபடி செய்ய வேண்டும். நமஸ்கார மந்த்ரங்களைக் கொண்டு வைச்வதேவம், பித்ரு கார்யங்கள் முதலியவைகளைச் செய்யலாம். வேத, வேதாங்களை ஓதக்கூடாது.

ந்யாயமான முறையில் பொருளீட்டல், ருது காலத்தில் மனைவியோடு சேர்தல், உயிர்களிடத்து அன்பு, பொறுமை, தற்பெருமையின்மை, இதமான வார்த்தை கூறல், பிறர் பொருள் விரும்பாமை, மலர் சூடுதம் முதலான மங்கலச் செயல்கள், உடல் வாடாமல் வேலை செய்தல், அன்புடைமை, பேராசையின்மை, கருமித்தனமின்மை, குறை கூறாமை, சோம்பலின்மை இவை யாவர்க்கும் பொதுவான தர்மங்கள். இவையாவுமே ஸுபிக்ஷமான காலத்தில் அனுஷ்டிக்க வேண்டியவை. ஆபத்கால தர்மங்களை இனி கூறுகிறேன். சக்தியில்லையெனில் ஆபத்காலத்தில் ப்ராஹ்மணன் க்ஷத்ரியனுடையதையும், க்ஷத்ரியன் வைச்யனுடையதையும், வைச்யன் சூத்ரனுடையதையும் மேற்கொள்ளலாம். சூத்ரனுக்கு ஆபத்தர்மம் முன்னமே கூறப்பட்டது. எக்காரணம் கொண்டும் ப்ராஹ்மண, க்ஷத்ரியர்கள் சூத்ர தர்மத்தைக் கொள்ளக்கூடாது. கர்மங்களை கலக்கக் கூடாது. சக்தியுள்ளவர்கள் தம் கர்மாக்களைத் தவிர்த்தலும், சக்தியற்றவர்கள் மேல் கர்மாக்களையனுஷ்டித்தலுமே கலக்கம் (ஸாங்கர்யம்).

Wednesday, January 20, 2010

விஷ்ணு புராணம் - 45

03_07. மஹரிஷி! கேட்ட அனைத்திற்கும் பதில் அருளி விட்டீர்கள். இன்னொன்றையும் தங்களிடமே கேட்க விரும்புகிறேன். இந்த ப்ரஹ்மாண்டத்தில் ஏழு த்வீபங்களும், மேலும், கீழுமாக ஏழு, ஏழு உலகங்களும் பலவகை ப்ராணிகளுடன் நிறைந்திருக்கிறது. ஓரங்குலத்தின் எட்டில் ஒரு பங்கு கூட ப்ராணிகள் வஸிக்காத இடம் என்று இந்த ப்ரஹ்மாண்டத்திலில்லை. இந்த ப்ராணிகள் அனைத்தும் கர்ம பந்தத்தால் இங்கு பிறந்து, வளர்ந்து, முடிவில் யமனின் உத்தரவில் துன்பங்களையனுபவித்து மீண்டும் தேவ, மானுஷாதி யோனிகளில் பிறக்கின்றன. மீண்டும் இறக்கின்றன. இப்படியே பிறப்பிறப்பு க்ரமத்தில் சுற்றுக் கொண்டேயிருக்கின்றன என்பதே சாஸ்த்ரங்கள் கூறும் முடிவு. இவை இப்படி இந்த சக்ரத்தில் கிடந்துழலாமல் எந்த நல்ல விஷயத்தைச் செய்தால் இதைத் தாண்டமுடியும் என்பதை அருளுங்கள்" என்கிறார் மைத்ரேயர்.

"மைத்ரேயா! இதே கேள்வியை முன்பொரு ஸமயம் நகுலன் பீஷ்மரிடம் கேட்டான். அதற்கு அவர் கூறிய பதிலையே நான் உனக்குக் கூறுகிறேன். பீஷ்மர், "குழந்தாய்! கலிங்க தேசத்தைச் சேர்ந்த ஒரு ப்ராஹ்மண நண்பர் என்னிடம் ஒரு முறை வந்திருந்தார். அவரிடம் நான் பல கேள்விகளைக் கேட்க, கேட்க முற்பிறவி ஞானமும், மஹா யோகமும் வாய்த்திருந்த அவரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர் வாக்கு என்றும் பொய்த்ததில்லை. எது எப்படி ஆகும் என்று கூறுகிறாரோ அது அப்படியே ஆகும். அவரிடம் நான் இந்த கேள்வியைக் கேட்டபோது அதற்குப் பதிலாக அவர் யமகிங்கர ஸம்வாதத்தை எனக்கு உபதேஸித்தார். அதை நான் உனக்குக் கூறுகிறேன்" என்றார்.

ஒரு ஸமயம் வாழ்நாள் முடிந்த ஜீவன்களைப் பிடித்து வருவதற்காகக் கையில் பாசத்துடன் புறப்பட்ட தன் படனைக் கூப்பிட்டு ரஹஸ்யமாக அவன் காதில் யமன் கூறுகிறான். "படனே! ஜீவர்களைப் பிடிக்கச் செல்லும் போது ஒன்றை நினைவில் வைத்துக் கொள். கண்டபடி உன் கைவரிசையைக் காட்டி, பின் நீ கஷ்டப்படக்கூடாது. மதுஸூதனனை அனுஸரித்தவர்களிடம் அருகில் கூட நீ போய் விடாதே. மற்ற பாமரர்களுக்கே நான் ப்ரபு. அவர்களுக்கு அல்ல, அவர்கள் முன்பு நீ கையும், கயிறுமாகச் சென்றால் என் தலை இங்கிருக்காது, எனவே அவர்களைக் கண்டால் கயிறைக் கீழே போட்டு கை குவித்து, ஸாதுவாகப் போ" என்று கூறினான்" என்று கூறினார் அந்த கலிங்க தேசத்து ப்ராஹ்மணர்" என்று கூறினார் நகுலனிடம் பீஷ்மர்" என்றார் மைத்ரேயரிடம் பராசரர்.

ராஜரே! உங்களையே நாங்கள் ப்ரபு என்று மதிக்கிறோம். உம்மை விட மேலான ப்ரபுக்கள் சிலர் இருக்கிறார்களா என்றனர் யம படர்கள். யமன் "ஸாமான்யர்களுக்கே நான் ப்ரபு. யமன் என்ற சொல் தண்டிப்பவன் எனும் பொருளைத் தரும். ஸகல தேவதைகளாலும் பூஜிக்கப்படும் பரமனே எனக்கு இந்தப் பெயரை அளித்துள்ளான். நன்மைகளைப் பரப்பவும், தீமைகளை விலக்கவும் என்னை வைத்துள்ளான் அவன். அந்த ஹரியே எனக்குக் குரு. நான் ஸ்வதந்த்ரனில்லை. அவனுக்கு வசமானவன். நான் ஏதாவது தவறு செய்தால் என்னைத் தண்டிக்கும் யமனும் அவனே. எனவே ஹரியும், ஹரியைத் துதிப்பவர்களும் எனக்கு ப்ரபுக்கள்" என்றான்.

காற்று பூமியிலிருந்து கிளம்பும் போது துகள்களும் கிளம்புவது போல் அவன் ஸ்ருஷ்டிக்கும் போது ப்ரக்ருதியில் தேவன், மனுஷ்யன், பசு என்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. காற்று அடங்கும் போது போல, இவைகளும் அவரிடமே லயமடைகின்றன. அவரே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்பவர். ஸ்வர்ணம் பல வகை ஆபரணங்களிலும் இருப்பது போல அவனே அனைத்து உலகப் பொருள்களுக்கும் ஆத்மா. அவனையே எல்லா தேவர்களும் வணங்கி வழிபடுகின்றனர். பலன் கருதாமல் அவனை வணங்க வேண்டும். அப்படிச் செய்பவனின் எல்லா பாவங்களும் அழிந்தொழியும். இப்படிப்பட்ட பக்தர்களைக் கண்டால் நெய்யால் கொழுந்து விட்டு எரியும் தீயை விட்டு விலகுவது போல விலகிவிட வேண்டும்" என்றான் யமன்.

இதைக் கேட்ட யமபடர்கள் வைஷ்ணவன் என்பவன் லக்ஷணமென்ன. அவனை எப்படி அறிவது என்று கேட்டனர். அதற்கு யமதர்மராஜன் "எவன் தனது வர்ணாச்ரம தர்மங்களை ஆணையாக எண்ணி அனுஷ்டித்து வருகிறானோ, நண்பன், பகைவன் என்ற பாகுபாடின்றி இருக்கிறானோ, அடுத்தவர் பொருளையும், உயிரையும் அபகரிக்காமலிருக்கிறானோ அவனே தூய்மையான மனம் கொண்ட வைஷ்ணவன். அவர்களை கலியின் தோஷங்கள் அடையாது. அவர்கள் மனதில் ஜனார்தனன் நித்யவாஸம் செய்வான். சந்த்ரனின் கிரணங்கள் குவிந்திருக்கும் இடங்களில் எப்படி தீயின் வெப்பம் நெருங்காதோ, அப்படியே ஸ்படிக மலைப்பாறையைப் போன்ற பரமன் இருக்கும் மனதையும் பொறாமை முதலான குணங்கள் நெருங்காது. அவர்கள் அழுக்கற்ற அறிவாளர்களாகவும், சாந்தமாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும், அனைத்துயிர்க்கும் நட்பாகவும், இதமான சொற்களை உடையவர்களாகவும், கர்வம், கபடங்களின்றியும் இருப்பார்கள். இந்த அடையாளங்களைக் கொண்டு ஒருவனை வைஷ்ணவன் என்று அறியுங்கள்" என்றான்.

ஸூர்யன் இருந்தால் இருட்டு அங்கு எப்படி இருக்கும். எனவே பாபமற்ற அவர்களை நாம் நெருங்கக்கூடாது. யம, நியம முதலான யோகங்களால் பாவங்களைப் போக்கி, அனுதினம் அச்யுதனிடம் ஈடுபட்டிருப்பவர்களையும் வைஷ்ணவனென்று அறியலாம். அருகில் ஒருவரும் இல்லாத ஒரு வழியில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு தங்கக் கட்டியைக் கண்டாலும் அதை வெறும் புல்லாக நினைத்து மனத்தை பரமனிடமே வைத்து ஒருவன் செல்வானாகில் அவனை வைஷ்ணவனென்று அறியலாம். இனி பெருமாளிடம் பக்தியில்லாத பாவிகளின் அடையாளங்களையும் கூறுகிறேன் கேள்,

பிறர் பொருளைக் கொள்ளை அடிப்பவன், உயிர்களைக் கொல்பவன், பொய்யும், கடுஞ்சொற்களையும் கூறுபவன், மதம் கொண்டு திரிவான், தூய அறிவின்றி இருப்பான். பிறர் செல்வத்தைப் பொறுக்க மாட்டான். நல்லோரை நிந்திப்பான். பரமனை எவ்வகையிலும் ஆராதிக்கமாட்டான். பக்தர்களுக்கு தன் கையால் எதையும் தர மாட்டான். நெருங்கின நண்பர்களிடமும், மனைவி, மக்கள், மக்கள், தந்தை, தாய், வேலைக்காரன் என அனைவருக்கும் வஞ்சனை செய்வான். பொருளாசை மிகுத்திருப்பான். அதர்மங்களை அனுதினமும் செய்து அதிலேயே சிக்கியிருக்கும் அவனை ம்ருகம் என்றே நினைக்க வேண்டும். உன் முழு அதிகாரத்தையும் இவனிடம் செலுத்தலாம்.

மற்றபடி வைஷ்ணவர்களின் கண் படும் இடங்களுக்குக் கூட நீ சென்று விடாதே. நானும் கூட அங்கு செல்வதில்லை. அவர்கள் நேரே வைகுண்டம் செல்லத் தக்கவர்கள். அப்படிச் செல்கையில் அவர்களால் வழியிலுள்ள லோகங்களும் பரிசுத்தமடைகின்றன. ஆனால் அவர்கள் நம் லோகத்தின் வழியாகச் செல்வதில்லையாதலால் நமது லோகத்துக்குக் கூட அவன் கடாக்ஷம் கிடைக்க வழியில்லை. எனவே இத்தகைய மகிமை வாய்ந்த வைஷ்ணவர்களின் அருகில் கூட நீ சென்று விடாதே" என்றான். இதை நகுலனிடம் கூறிய பீஷ்மர் "இந்த ஸம்ஸாரமென்ற பெரும் ஸாகரத்திலிருந்து நம்மைக் காக்க மஹாவிஷ்ணுவைத் தவிர வேறெவருமில்லை. அவனைச் சரணமடைந்தவர்களுக்கு யம பயமில்லை" என்று கூறியதாகக் கூறி யம கீதையை மைத்ரேயருக்குக் கூறி முடித்தார் பராசரர்.