Sunday, December 9, 2012

விஷ்ணு புராணம் - 121

06_03  ப்ரளய ஸ்வரூபம்
ப்ரளயம் என்பது எல்லா உயிரினங்களின் அழிவு.  அது நைமித்திகம், ப்ராக்ருதம், ஆத்யந்திகம் என்று மூன்று வகைப்படுகிறது.  ஒவ்வொரு கல்பத்தின் முடிவில் ப்ரஹ்மாவால் செய்யப்படுவது நைமித்திகம்.  ப்ரஹ்மாவின் ஆயுஸ் முடிவில் எல்லா வ்யக்தங்களும், அவ்யக்தத்தில் (ஸ்வரூபமற்ற பரம்பொருளில்) லயப்படுவது ப்ராக்ருதம்.  ஒன்றை பத்தினால் பெருக்க பத்து கிடைக்கும். அதை மீண்டும் பத்தால் பெருக்க நூறு கிடைக்கும்.  இப்படி பதினெட்டு முறை பெருக்கினால் கிடைப்பது பரார்த்தம்.  இதை இரண்டால் பெருக்கினால் த்விபரார்த்தம்.  இதன் முடிவிலேயே ப்ராக்ருத ப்ரளயம் ஏற்படுகிறது.  ஆத்யந்திகம் என்பது மோக்ஷமே.
மனிதர்களின் நிமிஷத்தின் அளவு ஒரு மாத்ரை.  பதினைந்து மாத்ரைகள் ஒரு காஷ்டை.  30 காஷ்டைகள் ஒரு கலை.  பதினைந்து கலைகள் ஒரு நாழிகை.  இரண்டு நாழிகைகள் ஒரு முஹூர்த்தம்.  முப்பது முஹூர்த்தம் ஒரு நாள்.  முப்பது நாள் ஒரு மாதம்.  பன்னிரண்டு மாதங்கள் ஒரு வருஷம்.  இந்த ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள் (அஹோராத்ரம்).  தேவர்களுக்கு 360 நாட்கள் ஒரு வருஷம்.  இந்த வருஷங்கள் 12000 ஒரு சதுர்யுகம்.  ஆயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவின் ஒரு பகல். இதற்குக் கல்பம் என்று பெயர்.  பதினான்கு மனுக்கள் ஒரு கல்பத்தில் மாறி மாறி வருவர்.  இந்த கல்பத்தின் முடிவில் ப்ரஹ்மாவால் செய்யப்படும் நைமித்திக ப்ரளயம் மிகக் கொடியது.
கல்பத்தின் முடிவில் வரும் சதுர்யுகத்தின் முடிவில் பூலோகம் பெரும்பாலும் அழிந்துவிடும்.  நூறு வருஷங்கள் மழையின்றி பஞ்சம் தலைத்தோங்கும்.  அற்ப உயிரினங்கள் அப்போது தாமாகவே அழிந்துபடும்.  அப்போது மஹாவிஷ்ணு ருத்ர ஸ்வரூபம் கொண்டு ஸம்ஹாரத்திற்கு வேண்டிய வேலைகளைச் செய்வான்.  ஸூர்யனின் ஏழு கிரணங்களைக் கொண்டு பூமியிலிருக்கும் ஜலங்களையும், ரத்தங்களையும் சுண்ட உறிஞ்சுவான்.  நதி, ஸமுத்ரங்கள் வரண்டுபடும்.  இப்படி உறிஞ்சின உற்சாகத்தில் அவனது ஏழு ரச்மிகளும் ஏழு ஸூர்யர்களைப் போல ப்ரகாசித்து உலகெங்கும் ஜ்வலித்து பூமி, பாதாளம் என ஏழு உலகங்களையும் சிறு புல் கூட இல்லாமல் எரித்துப் பொசுக்கி ஆமை ஓட்டைப் போல் கடினமாகச் செய்து விடும்.
ஆதிசேஷனுடைய சுவாசத்திலிருந்து காலாக்னி உண்டாகி ருத்ர ஸ்வரூபத்தில் பாதாள லோகங்களையும் எரித்து, பூ, புவர், ஸுவர் லோகத்தையும் எரித்து அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும்.  இந்த காலாக்னியின் ஜ்வாலைகளால் சூழப்பட்டு மூவுலகும் வறுக்கும் சட்டியைப் போலாகும்.  சராசரங்கள் அனைத்தும் அழிந்து போம்.
இந்த இடங்களில் இருக்கும் மனு முதலான அதிகாரிகள் அனைவருடன் சேர்ந்து அங்கிருந்து ஓடி மஹர் லோகத்தையும் அங்கிருந்து ஜன லோகத்தையும் அடைவர்.  இவர்களில் பரப்ரஹ்மத்தை அடைய விரும்புகிறவர்கள் அங்கிருந்து தபோலோகம், ஸத்யலோகத்தை அடைந்து பரப்ரஹ்மத்தை அடைவர்.  மற்ற ஜீவர்களும் தங்கள் ஆத்மாவில் லயித்து விடுவர்.
இதன் பின் ருத்ரனின் மூச்சுக் காற்றிலிருந்து மேகக்கூட்டங்கள் உண்டாகும்.  யானைக்கூட்டங்கள் போன்ற இந்த பயங்கரமான கரிய பெரிய மேகங்களிலிருந்து இடி, மின்னல்களும், பெரிய தாரைகளோடும் கூடின பெருமழை தோன்றி மூவுலகையும் பற்றி எரிக்கும் தீயை அணைத்து விட்டு, மேலும் நூறு வருஷங்களுக்கு விடாது பொழியும்.  மூவுலகங்களும் நீரில் ஆழ்ந்து விடும் என்று நைமித்திக ப்ரளயத்தின் ஸ்வரூபத்தை மைத்ரேயருக்கு வர்ணித்தார் பராசரர்.

No comments:

Post a Comment