Thursday, November 29, 2012

விஷ்ணு புராணம் - 115

05_35. துர்யோதனனுக்கு ஒரு பெண் இருந்தாள்.  அவள் யெளவனப் பருவம் எய்தியதும் அவளுக்கு ஸ்வயம்வரம் நடத்த ஏற்பாடுகளைச் செய்தார்கள்.  அவளை க்ருஷ்ணனுக்கும், ஜாம்பவதிக்கும் பிறந்த சாம்பன் விரும்பி அபஹரித்துச் சென்று விட்டான்.  இதனையறிந்து கோபம் கொண்ட துர்யோதனன், கர்ணன், பீஷ்மர், த்ரோணர் முதலானோர் போரிட்டு சாம்பனைக் கட்டிக் கொண்டு போய் விட்டனர்.  உடனே க்ருஷ்ணர் முதலான யாதவர்கள் துர்யோதனனைக் கொன்றே விடுவது என்று தீர்மானித்துப் பெரும் படையுடன் புறப்பட்டு விட்டனர்.

அப்போது பலராமர் அங்கு வந்து சேர்ந்தார்.  மது மயக்கத்தில் இருந்த அவர் படைகளைத் தடுத்து, "துர்யோதனன் நம்முள் ஒருவன்.  என்னிடத்தில் துர்யோதனாதிகளுக்கு நல்ல மதிப்பும் உண்டு.  நான் சாம்பனை விட்டு விடு என்று சொன்னாலே அவர்கள் சாம்பனை விட்டு விடுவர்" என்று கூறித் தான் மட்டும் ஹஸ்தினாபுரம் சென்றார்.

அதன் எல்லையிலிருந்த ஒரு உத்யான வனத்தில் அவர் வந்து தங்கியிருப்பதையறிந்த துர்யோதனன் பீஷ்மர், த்ரோணர், கர்ணன் முதலானோருடன் ஓடி வந்து அவருக்கு அர்க்யம் முதலான மரியாதைகளை செய்து நமஸ்கரித்தான்.  அவைகளை ஏற்றுக் கொண்ட பலபத்ரர், சாம்பனை உடனே விடுதலை செய்யுமாறு உக்ரஸேன மஹாராஜா கட்டளையிட்டிருப்பதாகக் கூறினார்.

உக்ரஸேனர் கட்டளையிட்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதும் பாஹ்லீகன், துர்யோதனன் முதலான அனைவரும் பெரும் கோபம் கொண்டனர்.  "பலபத்ரரே! என்ன சொன்னீர்? குரு வம்சத்துப் பேரரசர்களான நாங்கள் எங்கே, கொஞ்சமும் ராஜ்யபாலனம் செய்யத்தகுதி இல்லாத யாதவ வம்சத்து உக்ரஸேனன் எங்கே?  இதை விட எங்களுக்கு வேறு என்ன வெட்கக் கேடு வேண்டும்.  இந்தக் குடை, விசிறி முதலான அரச சின்னங்கள் இனி எங்களுக்கு எதற்கு?  எங்களை வணங்கிப் பிழைத்துக் கொண்டிருந்த யாதவர்கள் எங்களுக்கு உத்தரவிடுவதா?  வேலைக்காரன் யஜமானனுக்கு உத்தரவிடுவது போலானது.  இது உங்கள் குற்றமில்லை.  உங்களுக்கு இந்த மரியாதைகளைத் தந்து அரசர்களாக்கியது எங்கள் குற்றமே.  நாங்கள் அன்பாகக் கொடுத்ததை நீங்கள் அன்பாகப் பார்க்கவில்லை.  இப்போது உங்களுக்குச் செய்த மரியாதைகளும் அன்புப் பரிமாற்றமே.  நீங்கள் இங்கே இருந்தாலும் சரி, போனாலும் சரி.  சாம்பனை நாங்கள் விடப் போவதில்லை"  என்று கூறி விட்டனர்.

உடனே பலராமர் "இந்த்ரனும் அமராத ஸுதர்மா என்ற தேவஸபையில் வீற்று அரசு புரியும் உக்ரஸேனன் எங்கே, பல அரசர்கள் அமர்ந்து அரசாட்சி புரிந்த எச்சில் பீடங்களில் அமர்ந்து அரசு புரியும் நீங்கள் எங்கே? உங்களுக்கு ஏனிந்த கர்வம்? உக்ரஸேனரின் வேலைக்காரர்களின் மனைவிகள் கூட தேவபுஷ்பமான பாரிஜாதத்தையன்றோ சூடிக் கொண்டிருக்கின்றனர்.  இனி உங்களுக்கும் உக்ரஸேனரே அரசர்.  நானே உங்களனைவரையும் கொன்று வம்சமே இல்லாமல் செய்வேன்.  அல்லது உங்களனைவரோடும் சேர்த்து இந்த ஹஸ்தினாபுரத்தை கங்கையில் மூழ்கடிப்பேன்" என்று கூறித் தன் கலப்பையால் ஹஸ்தினாபுரத்தை அழிக்கத் தொடங்கினார்.
பலராமரின் இந்த கோபத்தைக் கண்டு பெரிதும் பயந்த கௌரவர்கள் உடனே அவரைப் பணிந்து சாம்பனையும், அவன் பத்னியையும் சீர்வரிசைகளோடும், காணிக்கைகளோடும் அவரிடம் சேர்ப்பித்தனர்.  பலராமரும் அவர்களை மன்னித்து தம்பதிகளை ஏற்றுக் கொண்டு திரும்பினார்.  இதனால் இன்றும் ஹஸ்தினாபுரம் சற்று சாய்ந்தே இருக்கிறது.  இப்படிப் பல திருவிளையாடல்களைப் பலராமர் செய்தார் என்று மைத்ரேயரிடம் பராசரர் கூறி முடித்தார்.  

No comments:

Post a Comment