Monday, October 18, 2010

விஷ்ணு புராணம் - 112

05_32. பானு, பௌமன், இரிகன் இவர்கள் ஸத்யபாமாவின் புத்ரர்கள். தீப்திமான், தாம்ரபக்ஷன் முதலானோர் ரோஹிணியின் புதல்வர்கள். ஸாம்பன் முதலானோர் ஜாம்பவதிக்கும், பத்ரவிந்தன் முதலானோர் நாக்னஜிதிக்கும், ஸங்க்ராமஜித் முதலானோர் சைப்யைக்கும், வ்ருகன் முதலானோர் மாத்ரிக்கும், காத்ரவான் முதலானோர் லக்ஷ்மணைக்கும், ச்ருதன் முதலானோர் காளிந்திக்கும், என இன்னும் மற்ற தேவிமார்களின் புத்ரர்களையும் சேர்த்து, க்ருஷ்ணனுக்கு ருக்மிணியின் மகனான ப்ரத்யும்னனை முதலாகக் கொண்டு மொத்தம் எண்பதாயிரத்து நூறு புதல்வர்கள். ப்ரத்யும்னன் மகன் அனிருத்தன். இவன் மஹாபலியின் பௌத்ரியும், பாணாஸுரனின் புத்ரியுமான உஷையை மணந்து கொண்டான். இவன் மகன் வஜ்ரன். இந்தத் திருமணம் காரணமாகத்தான் க்ருஷ்ணன் பாணாஸுரனின் ஆயிரம் கைகளையும் வெட்டி எறிந்தான். இந்த உஷை திருமணப் பருவம் எய்தியபோது, ஒரு உத்யான வனத்தில் பார்வதி, பரமேச்வரனுடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டாள். தானும், எப்போது இப்படி ஒருவனுடன் விளையாடுவது என்ற எண்ணம் கொண்டாள்.

ஜீவராசிகளின் உள்ளக் கருத்தை உள்ளபடி அறியும் பார்வதி, இவளது இந்த எண்ணத்தையும் அறிந்து, உஷையை அழைத்து, "வருந்த வேண்டாம், நீயும் இதேபோல் உனக்கேற்ற கணவனுடன் கூடிக் களிக்கப் போகிறாய்" என்றாள். உடனே உஷையும் "யார் அவன்? எப்போது கிடைப்பான்" என்று கேட்டும் விடுகிறாள். பார்வதி தேவி, "குழந்தாய், வைகாசி சுக்ல பக்ஷ த்வாதசியன்று நீ யாரோடு சேர்ந்து விளையாடுவதாகக் கனவு காணப் போகிறாயோ, அவனையே நீ மணம் முடிப்பாய்' என்று அனுக்ரஹிக்கிறாள். அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்த அவளது கனவில், குறிப்பிட்ட நாளில் அதே போல் நடக்கவும் நடந்தது. கனவில் ஸுகம் அனுபவித்து, திடுக்கென்று விழித்தெழுந்த அவள், நிஜத்தில் அவனைக் காணாது, "நாதா, எங்கு சென்று விட்டீர்" என்று பிதற்றத் தொடங்கி விட்டாள். பாணாஸுரன் மந்த்ரி கும்பாண்டன் என்பவனின் மகள் சித்ரலேகை என்பவள் உஷையின் ஆருயிர்த் தோழி. அவள் உஷை இவ்வாறு பிதற்றுவதைக் கண்டு, "அம்மா! யாரைத் தேடுகிறாய்? உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன் எவன்?" என்று கேட்டாள். வெட்கத்தால் தலை குனிந்த அவளை மிகுந்த நம்பிக்கைக் கொள்ளச் செய்து நடந்தவை அனைத்தையும் தெரிந்து கொண்டாள் சித்ரலேகை. அவனை மணம் முடிக்க உதவுமாறு உஷையும் அவளிடம் வேண்டிக் கொண்டாள்.

உருவம் தெரியாது, ஒரு விஷயமும் தெரியாது. எப்படி ஒருவரைக் கண்டு பிடிப்பது. ஏழுநாள் கழித்து அப்போதைய அரசர்கள், இளவரசர்களில் சிறந்தவர்களைச் சித்திரமாக வரைந்து கொண்டு வந்து காண்பித்தாள் சித்ரலேகை. தேவ, கந்தர்வ, அஸுர, மனுஷ்யர்கள் என ஒவ்வொருவராக ஒதுக்கிக் கொண்டு வந்ததைக் கண்டு சித்ரலேகை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது, பலராம, க்ருஷ்ணர்களின் படங்களைக் கண்ட உஷையின் முகத்தில் சிறிது மாற்றம் தெரிந்தது. அடுத்து ப்ரத்யும்னன். இதைக் கண்டும் வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்ட உஷை அடுத்ததாக அனிருத்தனைக் கண்டாள். வெட்கத்தை விட்டு, "இவனே அவன்" என்று கத்தினாள். சித்ரலேகை அவனைப் பற்றிய விவரங்களைக் கூறலானாள். "இவன் க்ருஷ்ணனின் பௌத்ரன். ப்ரத்யும்னனின் மகன். பார்வதி உனக்கு அனுக்ரஹித்தவன் இவனே. இவன் பெயர் அனிருத்தன். இவன் அழகு உலக ப்ரஸித்தம். இவனை நீ அடைந்தால் ஸகல ஸௌபாக்யங்களையும் பெறுவாய். ஆனால், க்ருஷ்ணனால் பாலனம் செய்யப்பட்டு வரும் த்வாரகையினுள் சென்று, இவனை எப்படி உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பது? எனினும் நான் இதற்கு முயற்சி செய்கிறேன். நீ இந்த ரஹஸ்யத்தை யாரிடமும் அதற்குள் சொல்லி விடாதே" என்று கூறி ஆகாய மார்க்கமாக த்வாரகை சென்று சேர்ந்தாள்.

No comments:

Post a Comment