Thursday, December 6, 2012

விஷ்ணு புராணம் - 118

05_37. வ்யாஸர் அர்ஜுனனுக்கு உண்மையை அறிவிப்பது.
தாருகனிடமிருந்து க்ருஷ்ணனின் கட்டளைகளை அறிந்த
அர்ஜுனன் உடனே த்வாரகைக்கு விரைந்தான்.  ஈமக்
கடன்களைச் செய்தான். பலராமனின் மனைவி ரேவதி,
க்ருஷ்ணனின் எட்டு பட்ட மஹிஷிகள் ஆகியோர்கள்
தங்கள் கணவர்களோடு சிதையிலேறினர்.  அவ்வாறே
உக்ரஸேனன், வஸுதேவர், தேவகி, ரோஹிணி
ஆகியோரும் அக்னியில் ப்ரவேஸித்து விட்டனர்.
மீதமிருந்த க்ருஷ்ண பத்னிகளையும், வஜ்ரன் முதலான
ஆயிரக் கணக்கானவர்களோடு த்வாரகையை விட்டுப்
புறப்பட்டான் அர்ஜுனன். கலி பரவலாயிற்று.  த்வாரகை
கடலில் மூழ்கியது.  உக்ரஸேனின் ஸுதர்மா என்ற தேவ
ஸபையும், பாரிஜாத மரமும் தேவலோகம் சென்றது.  வரும்
வழியில் நன்கு செழித்திருந்த பஞ்சநதம் என்ற தேசத்தில்
அர்ஜுனன் அனைவருடன் தங்கியிருந்தான்.  அப்போது
அங்கிருந்த ஆயிரக் கணக்கான இடையர்கள்
அர்ஜுனனைத் தாக்கி, அடக்கிவிட்டு க்ருஷ்ணபத்னிகள்
உட்பட எல்லா பெண்களையும், பொருள்களையும்
கொள்ளை கொண்டனர். 

அர்ஜுனனால் காண்டீவத்தில் நாணேற்றக் கூட
முடியவில்லை.  அக்னி பகவான் அளித்திருந்த வற்றாத
அம்பறாத்துணியில் அம்புகள் வற்றின.  அஸ்த்ரங்களை
ஏவும் எந்த மந்த்ரங்களும் அவனுக்கு நினைவுக்கு
வரவில்லை. "பாரத யுத்தத்தின் போது எந்த கைகளும்,
ஆயுதங்களும், தேரும், குதிரைகளும், மந்த்ரங்களும்
எனக்கு உதவியதோ, அவைகளே இப்போது க்ருஷ்ணன்
என்ற தெய்வபலம் உடன் இல்லாததால் வேதாத்யயனம்
செய்யாதவனுக்குத் தந்த தானம் போல் பயனற்றுப்
போனதே, தெய்வபலத்தாலே அன்றோ எந்தக் கடையனும்
வெற்றி அடைகிறான்" என்று வாய்விட்டு வருந்தினான்.
மீதமிருந்தோரை அழைத்துச் சென்று இந்த்ரப்ரஸ்தத்தில்
வஜ்ரனுக்கு முடி சூட்டினான்.

அங்கிருந்து ஹஸ்தினாபுரம் செல்லும் வழியில் ஒரு காட்டில்
சக்தியற்று சென்று கொண்டிருந்த அர்ஜுனனை வ்யாஸர்
கண்டார்.   "அர்ஜுனா! ஏன் இவ்வாறு ஒளியிழந்து
காணப்படுகிறாய்? ஆடு, கழுதைகள் கால்களால் கிளப்பிய
புழுதியில் சென்றாயா? ப்ரஹ்மஹத்தி செய்தாயா?
நம்பிக்கை த்ரோகம் செய்தாயா?  சேரத் தகாத
பெண்களோடு சேர்ந்தாயா? நல்ல உணவை
ப்ராஹ்மணர்களோடு பகிர்ந்து கொள்ளாமல் நீயே
உண்டாயா? ஏழையின் பொருளை அபஹரித்தாயா?
முறத்தின் காற்று படுமாறு நின்று கொண்டிருந்தாயா? எவர்
கண்ணேனும் பட்டு விட்டதா? நகம் பட்ட நீரை
உட்கொண்டாயா? குடத்து நீர் ததும்பி உன் மேல்
தெளித்ததா? தாழ்ந்தவர்களால் வெல்லப்பட்டாயா?
இவைகளாலன்றோ நம் தேஜஸ் குறையும், என்ன நடந்தது?"
என்று கேட்டார். 

அர்ஜுனன் பெருமூச்செறிந்து "எங்களுக்குப் பலம், வீர்யம்,
செல்வம், காந்தி, தெஜஸ், பராக்ரமம் என்று எல்லாமுமாக
இருந்த க்ருஷ்ணன் இப்போது எங்களை விட்டுச் சென்று
விட்டான்.  ஈச்வரனான அவன் எங்களோடு அவனாகவே
ஒரு சாமான்யனைப் போல வந்து பழகினான்.  அவனைப்
பிரிந்த நாங்கள் இப்போது வைக்கோல் அடைத்த
பொம்மைகளைப் போலானோம்.  அவன்
மஹிமையாலேயே பீஷ்மர், த்ரோணர், கர்ணன்,
துர்யோதனன் முதலான பெரும் வீரர்களும் சாம்பலாயினர். 
இப்போது அவனன்றி நான் மட்டுமல்ல, இந்த பூமி
முழுமையுமே சக்தியும், செல்வமுமற்று காணப்படுகிறது. 
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என்னையும், என்
அஸ்த்ரங்களையும் தடிகளால் தாக்கி வழியிலிருந்த
இடையர்கள் க்ருஷ்ண பத்னிகளையும், பொருள்களையும்
கொள்ளை கொண்டனர்.  பெரும் வீரர்களையும் வென்று
மூவுலகிலும் ப்ரஸித்தி பெற்றிருந்த என் காண்டீவமும்,
சக்தியும் இடையர் கைத்தடிகளில் தாழ்ந்து அழிந்தது. இதில்
நான் ஒளியிழந்து இருப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை. 
இவ்வளவிற்குப் பின்னும் நான் வெட்கமின்றி உயிரோடு
இருக்கிறேனே, அதுதான் ஆச்சர்யம்" என்று அழுது
கொண்டே கூறினான்.

வ்யாஸர் அவனுக்குக் காலத்தின் போக்கைக் கூறி
அவனைத் தேற்றுகிறார். "அர்ஜுனா! துக்கப்படாதே,
வெட்கப்படாதே, இவை யாவும் காலத்தினாலெயே
நடக்கிறது.  ப்ராணிகள் உண்டாவது, அழிவதும் அந்த
காலத்தினாலேதான்.  நதிகள், ஸமுத்ரங்கள், மலைகள், பூமி,
தேவதைகள், மனிதர்கள், விலங்குகள், மற்ற தாவரங்கள்
என அனைத்தையுமே பகவான் தான் கால ஸ்வரூபியாக
இருந்து கொண்டு படைத்து, மீண்டும் அழிக்கவும்
செய்கிறான்.  பூபாரம் தீர்ப்பதற்காக பூதேவியின்
ப்ரார்த்தனையைக் கேட்டே க்ருஷ்ணன் இங்கு
அவதரித்தான்.  துஷ்ட ஸம்ஹாரமும் செய்தான்.  அவதார
கார்யம் நிறைவேறிவிடவே மீண்டும் வைகுண்டம் சென்று
விட்டான்".

"அந்த க்ருஷ்ணனே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களை
செய்கிறான்.  உன் தோல்வியைக் குறித்து நீ வருந்த
வேண்டாம்.  நல்ல காலம் அமைந்தால் ஒருவனுக்குப்
புகழும், கெட்ட காலத்தில் அவனுக்கே அவமானமும்
உண்டாகின்றன.  பகவத் ஸங்கல்பத்தால் நீ அன்று பீஷ்மர்,
த்ரோணர், கர்ணன் முதலானோரைக் கொன்றாய்.  
தாழ்ந்தவனான உன்னால் அன்று அவர்களுக்கு அவமானம்
நேர்ந்தது.  இன்று உன்னை விடத் தாழ்ந்தவர்களால்
உனக்கு அவமானம் ஏற்பட்டிருக்கிறது.  பகவத்
ஸங்கல்பமில்லையென்றால் நீ அவர்களை அன்று
வென்றதையும், இன்று இடையர்கள் உன்னை வென்றதையும்
யாராவது நம்புவார்களா?  க்ருஷ்ண பத்னிகள் கொள்ளை
போனதும் அவன் ஸங்கல்பத்தினாலேயே.  இவையாவும்
அவன் செயல் என்று ஆற்றிக்கொள்".

"க்ருஷ்ண பத்னிகள் திருடர்கள் கையிலகப்பட்டதன்
காரணத்தையும் கூறுகிறேன் கேள்.  முன்பொரு ஸமயம்
தேவாஸுர யுத்தத்தில் வெற்றியைக் கொண்டாடுவதற்காக
தேவர்கள் மேருமலைக்குச் சென்று கொண்டிருந்தனர். 
அப்போது வழியில் கழுத்தளவு நீரில் இருந்து கொண்டு பல
காலம் ப்ரஹ்மத்தை ஜபித்துக் கொண்டிருந்த அஷ்டாவக்ரர்
என்ற மஹர்ஷியை அப்ஸர ஸ்த்ரீகள் கண்டு வணங்கிச்
சென்றனர்.  அவர்கள் ஸ்தோத்ரங்களால் மனமகிழ்ந்த
மஹர்ஷி அவர்களுக்கு வரமளிப்பதாகக் கூறினார்.  ரம்பை,
திலோத்தமை முதலானோர் தேவரீரின் தர்சனமும், மன
மகிழ்ச்சியுமே போதும் என்று கூறிச் சென்றனர்.  மற்ற
அப்ஸரஸ்ஸுகள் பரவாஸுதேவனையே பதியாக அடைய
வரம் வேண்டினர்.  அவரும் அவ்வாறே அளித்தார். 
அப்போது அவர் நீரிலிருந்து வெளியே வந்தார்.  அவர்
உடலில் இருந்த எட்டு கோணல்களாலேயே அவருக்கு
அஷ்டாவக்ரர் என்ற பெயர் இருந்தது.  அந்த கோணல்கள்
அவர் நீரிலிருந்து வெளியே வந்ததும் தெரிய ஆரம்பித்தன.
 அவர் தோற்றத்தைக் கண்டதும் அந்த அப்ஸரஸ்ஸுகள்
அடக்க முடியாமல் சிரித்து விட்டனர்.  இதனால்
கோபமடைந்த அவர் ஆண்டவனையே பதியாக
அடைந்தாலும் முடிவில் நீங்கள் திருடர்கள் கையில்
அகப்படுவீர்கள் என்று சபித்து விட்டார்.  பின் அவர்கள்
வேண்டிக்கொண்டதால் திருடர்கள் கையில் சிக்கிக்
கொண்டாலும் எந்த களங்கமுமின்றி ஸ்வர்க்கத்தை
அடைவீர்கள் என்று கூறிச் சென்றார்".

"இதுவே விஷயம்.  இது குறித்து நீ வருந்துவதற்கு
ஒன்றுமில்லை.  பிறப்பிற்கு இறப்பும், சேமிப்புக்கு செலவும்,
சேர்க்கைக்கு பிரிவும் தவிர்க்க முடியாதது.  இதையறிந்த
அறிஞர்கள் இவைகளால் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள்.
 உங்களுக்கும் முடிவு காலம் நெருங்கி விட்டது. 
அதனாலேயே உங்கள் பலம் அழிந்து விட்டது.  இதை
உடனே தர்மபுத்ரனிடம் சென்று கூறி, 
உடன்பிறந்தோருடன் நாளை மறுதினமே தவம் செய்யக்
காட்டிற்குப் புறப்பட்டு விடுங்கள்" என்று கூறிச்சென்றார்.  
அர்ஜுனனும் அப்படியே செய்தான்.  பரீக்ஷித்திற்கு பட்டம்
சூட்டி விட்டு அனைவரும் காட்டிற்குச் சென்று விட்டனர்."

பராசரர் இவ்வாறு யது வம்சத்திலவதரித்த க்ருஷ்ணனின்
சரித்ரத்தை மைத்ரேயருக்குக் கூறி, இந்த சரிதத்தை
விரும்பிக் கேட்பவனுக்கு எல்லா பாவங்களும் நசித்து
விஷ்ணு லோகம் கிடைக்கும் என்பதை பலச்ருதியாகக்
கூறினார்.

No comments:

Post a Comment