Monday, December 24, 2012

விஷ்ணு புராணம் - 125

06_07 குருதக்ஷிணையாக, கேட்பதையெல்லாம் தருவதாகக் கூறிய தன்னிடம் யோகமார்க்கத்தை மட்டுமே உபதேசிக்குமாறு கேட்ட காண்டிக்ய ஜனகரைக் கண்டு பெரு வியப்புடன் "அரசர்கள் ராஜ்யத்தையல்லவா விரும்புவர்? அதுவும் சண்டை, எதிரிகள் இன்றி எளிதில் கிடைக்கும் ராஜ்யத்தை யாராவது மறுப்பார்களா?  நீர் ஏன் ராஜ்யத்தைக் கேட்கவில்லை?  அதுவும் ராஜ்யபரிபாலனம் நமது தர்மமாயிற்றே? ஸ்வதர்மத்தை விடுவது குற்றமல்லவா?" என்று கேட்கிறார் கேசித்வஜர்.  தான் ஏன் அந்தப் பெரும் ராஜ்யத்தை விரும்பவில்லையென்பதை என்று பின்வருமாறு பதிலுரைக்கிறார் காண்டிக்யர்.

"இந்த அரசை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்.  நீர் கூறியது சரியே.  க்ஷத்ரியர்களுக்கு ராஜ்ய பரிபாலனமும், தர்மயுத்தங்களும் ஸ்வதர்மமே.  சக்தியிருந்து என் தர்மத்தை நான் விட்டிருந்தால் அது குற்றமே.  ஆனால் அதற்கு எனக்கு சக்தியும் இல்லை, ஆசையும் இல்லை.  ஆகையால்தான் நீங்களும் அதை பறித்துக் கொண்டீர்கள்.  எனவே இதில் என் குற்றம் எதுவுமில்லை. எனக்கும், என் மந்த்ரிகளுக்கும் இந்த ராஜ்யத்தில் தர்மத்தைக் காரணமாகக் கொண்டு ஆசை வரவில்லை.  எனக்கு வந்த ஆசை முன் ஜென்ம கர்மபலன்களை அனுபவிப்பதற்காக வந்தது.  மந்த்ரிகளுக்குள்ள ஆசை ராகத்வேஷங்களால் வந்தது.  எவருக்குமே தர்ம பரிபாலனம் செய்வதற்காக இந்த ராஜ்யத்தில் ஆசை வரவில்லை.

மேலும் நான் இப்போது ராஜ்யபரிபாலனம் செய்ய வேண்டுமானால் உம்மிடம் இந்த ராஜ்யத்தை யாசிக்க வேண்டும்.  க்ஷத்ரியர்கள் யாசிக்கக் கூடாது என்கிறது சாஸ்த்ரம்.  எனவேதான் நான் இதை விரும்பவில்லை.  மேலும் பகுத்தறிவு இல்லாதவர்களே பெரும்பாலும் இந்த ராஜ்யங்களை விரும்புவர்.  நான், எனது என்று மதிமயங்கி இருப்பார்கள்.  என் போன்ற விவேகிகள் இதை மதிக்க மாட்டார்கள்" என்று கேசித்வஜ ஜனகருக்கு, காண்டிக்ய ஜனகர் கூறினார்.  இதைக் கேட்டு மகிழ்ந்த கேசித்வஜரும் காண்டிக்யருக்கு யோக மார்க்கத்தை பின்வருமாறு உபதேசிக்கிறார்.

ஸம்ஸாரத்தில் உள்ள துன்பங்களுக்குக் காரணங்களைக் கூறி, அவைகளை விலக்குவதற்கான வழிகளையும் கூறுகிறார்.  "யோகம் செய்பவர்கள் முதலில் பரமாத்மா, ஜீவாத்மாவின் ஸ்வரூபங்களை பகுத்தறிய வேண்டும்.  வர்ணாச்ரம தர்மங்களையும் ஒரு அங்கமாகவே செய்து வர வேண்டும்.  காண்டிக்யரே! நானும் அவ்வாறே இந்த ப்ரஜா பரிபாலனம், யாகம் முதலியவைகளைச் செய்து வருகிறேன்.  இதனால் பாவங்கள் அழிந்து, உபாஸனம் நன்கு வளர்கிறது.  ஸுகங்களை அனுபவிப்பதால் புண்யபலனையும் அழித்து வருகிறேன்.  பாவ, புண்யங்கள் இரண்டுமே உபாஸனம் செய்பவனுக்கு விரோதிகளாதலால் இரண்டையுமே அவன் போக்கிக் கொள்ள வேண்டும்.  இப்படிக் கடினமான வழிகளால் தான் நானும் ரஜ, தமோ குணங்களை ஒழித்து, ஸத்வ குணத்தால் அறிவை வளர்த்துக் கொள்கிறேன்.

உங்கள் மனமோ இயற்கையாகவே விவேகத்துடன் விளங்குகிறது.  இப்போது அவித்யையின் ஸ்வரூபத்தைக் கூறுகிறேன், கேளும்.  பலன்களில் பற்று கொண்டு செய்யப்படும் கர்மாக்கள் அவித்யை என்று அறியப்படுகிறது.  இந்த காம்ய கர்மாவாகிய மரத்தை வளர்ப்பதால் ஸம்ஸாரம் என்ற பலன் உண்டாகிறது.  இதற்கு இரண்டு காரணங்கள்.  ஒன்று ஆத்மாவை விட்டு சரீரத்தையே ஆத்மாவாக நினைப்பது.  மற்றொன்று ஆத்ம வளர்ச்சிக்கு உதவாமல், இந்த சரீரத்தை மட்டுமே வளர்க்கும் உணவு, நீர், மனை, மக்கள் முதலானவைகளைத் தனதாக நினைத்துக் கொள்வது. இவ்விரண்டுமே ப்ரமைகள்.

இந்த சரீரம் பஞ்ச பூதங்களாலானது.  ஆத்மாவோ பஞ்சபூதங்களிலிருந்து வேறுபட்டு நிற்பது.  ஆனால், மூடர்கள் அனாத்மாவான இந்த சரீரத்தையே நான் என்றும், சரீர ஸுக, துக்கங்களுக்கு உண்டான உணவு, நீர், மனைவி, மக்கள் இவைகளை என்னுடையவை என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.  இப்படி இந்த ஜீவாத்மா முன் ஜென்ம கர்ம வினைகளால் எல்லா விஷயங்களிலும் இருளில் மூழ்கிக் கிடக்கிறான்.  உண்மையை அறிந்து கொள்ளாமல் இந்த ப்ரமைகளால் சரீர ஸுகத்திற்கான கார்யங்களையே செய்து வருகிறான்.  அவித்யையான இந்த கர்மாக்களால் மறுபடி ஸம்ஸாரமே உண்டாகிறது.

மண்ணாலான வீட்டுச் சுவர்களை மீண்டும் மண்ணைக் கொண்டே பூசி, மெழுகி உறுதி செய்து கொள்வது போலவே, பஞ்ச பூதங்களாலான இந்த உடலையும் உணவு, நீர் இவைகளைக் கொண்டே காத்து வளர்த்துக் கொள்கிறோம்.  பஞ்ச பூத மயமான இவைகளால் உடல் வளர்ந்து உறுதி பெறுமேயல்லாது, ஆத்மாவிற்கு ஒரு ப்ரயோஜனமுமில்லை.  ஆத்ம வளர்ச்சிக்கு உபாஸனமே வழியாகும்.  மேலும், ஆயிரக்கணக்கில் பிறவிகளை உடைய ஸம்ஸார வழியில் வந்த இந்த ஜீவன் அஞ்ஞானம் மற்றும் கர்ம வாஸனைகள் என்ற புழுதியால் துக்கங்களையே பெறுகிறான்.

உடலின் புழுதியையும், ச்ரமங்களையும் வெந்நீர்க் குளியல் எப்படிப் போக்கி ஸுகத்தைத் தருமோ, அப்படியே, வருந்தும் இந்த ஆத்மாவின் அஞ்ஞான, மோஹங்களால் உண்டாகும் துக்கங்களையும் தத்வ ஞானம் போக்கும்.  மோஹம் தொலைந்தால் ஜீவன் தன்னிலையில் இருப்பான்.  பின் ஒப்புயர்வற்ற மோக்ஷ ஸுகத்தையும் அடைகிறான்.  ஜீவன் குற்றமற்ற ஆனந்த ஸ்வரூபமே. மோக்ஷமும், ஞானமும் ஜீவன்களுக்கு இயல்பாகவே உள்ளவை,  கர்ம பலன்களைப் போல் அவை புதிதாக உண்டானவைகளல்ல.

ஆனந்த மயனான இந்த ஆத்மாவுக்கு ஸம்ஸாரத்தில் உண்டாகும் துக்கமும், அஞ்ஞானமும் இயல்பான குணங்காளாகாது.  அவை ப்ரக்ருதியின் ஸம்பந்தத்தால் வந்தவையே.  தண்ணீர் இயற்கையில் குளிர்ச்சியாகவும், பொங்காமலும், சப்தமில்லாமலும் இருக்கிறது.  ஆனால் அது தங்கியிருக்கும் பாத்ரத்திற்கு அக்னி ஸம்பந்தம் ஏற்பட்டால், அது சூடாகிறது, சப்தத்தை உண்டாக்குகிறது, பொங்கவும் செய்கிறது.  தண்ணீருக்கும் அக்னிக்கும் நேரில் ஸம்பந்தமும் கிடையாது,  அது அந்த பாத்ரத்தில் தங்கியிருப்பதால் தான் இந்த மாறுபாடுகளை அடைகிறது.  ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாவும் இந்த ஜலம் போன்றதே.  ப்ரக்ருதி பாத்ரம் போன்றது.  இந்த ப்ரக்ருதியுடனே தாப த்ரயங்கள் (ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்)  நெருப்பு போல ஸம்பந்தப்படுகின்றன.  இதனாலேயே  ஆத்மாவும் அஞ்ஞானம், துக்கம், பசி, தாகம் முதலான மாறுதல்களை அடைகிறது.  ஆனாலும் ஆத்மா நித்யமானது.

இப்படி அவித்யைக்குக் காரணமான இருவகை ப்ரமைகளும், அதனால் வரும் துன்பங்களும் அழிவதற்கு உபாஸனம் ஒன்றே வழி.  அந்த யோகத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.  யோகத்தில் உள்ளவன் இந்த ஸம்ஸாரத்தை அடைவதில்லை.  இந்த மோக்ஷத்தை அடைவதற்கு முக்ய காரணம் மனம்.  இந்த மனம் வேறு விஷயங்களைப் பற்றியிருக்கும் போது அது ஸம்ஸாரத்திற்குக் காரணமாகிறது.  அவைகளில் பற்றாமலிருந்தால் அதுவே மோக்ஷத்திற்குக் காரணமாகிறது.  ப்ரக்ருதி, ஜீவன், ஈச்வரன் இம்மூன்று விஷயங்களைப் பகுத்தறிந்தவன் இதில் வென்று மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்த வேண்டும்.  அப்படிச் செய்தால் அந்த ப்ரஹ்மம் அவன் அழுக்குகளைப் போக்கி, தன்வயப்படுத்திக் கொள்கிறது.  காந்தமும், அக்னியும் தன் அருகில் இருப்பவைகளை எப்படி தன்னிடம் இழுத்துக் கொள்கிறதோ, சுத்தப்படுத்துகிறதோ அதைப் போலவே ப்ரஹ்மமும் தன்னை த்யானிப்பவனைச் செய்கிறது.

இப்படி பற்பல விஷயங்களிலேயே சுழன்று கொண்டிருக்கும் மனதை இதுவரை நினைத்துப் பார்க்காத இந்த விஷயத்தில் திருப்ப பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.  இறை த்யானத்தின் நடுவில் வேறு நினைவொன்றும் புகாதவாறு அவனை ஸ்மரிக்க வேண்டும்.  இந்த ஸ்ம்ருதியே ஒரு நிலையில் ஆனந்தமாகும்.  இறைவனிடம் நம்மை சேர்ப்பிக்கும்.

இந்த யோகம் யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரண, த்யான, ஸமாதி என்று எட்டு அங்கங்களுடன் கூடியது.  இதில் முதல் நிலையிலுள்ளவன் யுஞ்ஜானன் என்று அறியப்படுகிறான்.  ஸமாதி கைகூடியவன் விநிஷ்பன்னஸமாதி என்றும் யோகி என்றும் அழைக்கப்படுகிறான்.  த்யானம் வரை அடைந்தவன் யோகயுக் எனப்படுகிறான்.  இதில் யுஞ்ஜானன் பயிற்சியின் போது இடையூறுகள் வந்து மனம் வேறு வழிகளில் சிதறுமாயின் மேலும் பல பிறவிகள் யோகம் செய்து அதன் பிறகே மோக்ஷத்தை அடைகிறான்.  யோகி அவன் பாவங்கள் அனைத்தையும் த்யானத்தின் போதே போக்கிக் கொண்டு விடுவதால் அந்தப் பிறவியிலேயே மோக்ஷத்தை அடைந்து விடுகிறான்.

இந்தப் பயிற்சியிலுள்ளவன் தன் தகுதியை உறுதி செய்து கொள்ள ப்ரஹ்மசர்யம், அஹிம்ஸை, ஸத்யம், திருடாமை, தானம் வாங்காமை என்ற யமத்தின் அங்கங்களையும், ஸ்வாத்யாயம் (வேதமோதுதல்), தூய்மை, ஸந்தோஷம், தவம் முதலான நியமத்தின் அங்கங்களையும் பலனைச் சிறிதும் கருதாமல் ப்ரஹ்மத்தில் மனதை வைத்துச் செய்து வர வேண்டும்.  இதன் பின் அவன் யோகாஸனங்களில் ஒன்றில் இருந்துகொண்டு பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.  இதையடுத்த ப்ராணாயாமம் என்பது ப்ராண வாயுவை பயிற்சியின் மூலம் வசப்படுத்துதல்.  அதை ஒரு இறையுருவை த்யானித்து, மந்த்ர ஜபங்களோடு செய்தால் ஸபீஜம் என்றும், இல்லையேல் அபீஜம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ப்ராணாயாமம் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற மூன்று அங்கங்களுடையது.  காற்றை மூக்கு, வாய்களால் வெளியே மட்டும் விடுவது ரேசகம், உள்ளே இழுப்பதை மட்டும் செய்வது பூரகம், காற்றை வெளியேயும் விடாமல், உள்ளேயும் இழுக்காமல் ஹ்ருதயத்திலேயே நிறுத்துதல் கும்பகம். இதையடுத்த ப்ரத்யாஹாரம்
என்பது இந்த்ரியங்களை வெளியே நாட்டம் காட்ட விடாது, இறை வழிபாட்டில் திருப்பி விடுவது.  இப்படி ப்ராணனையும், இந்த்ரியங்களையும் வசப்படுத்தி விட்டால் அதன் பின் இறையுருவை மனதில் நிலை கொள்ளச் செய்ய வேண்டும்.  அது தாரணையாகும்.

இந்த தாரணை மூர்த்தம், அமூர்த்தம் என்று இரு வகையாகும்.  சரீரத்தோடு கூடின ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மனதில் கொள்ளும் மூர்த்தம் அபரம் என்றும், மூர்த்தியற்ற ஸ்வரூபத்தை எங்கும் காணும் அமூர்த்தம் பரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த தாரணை ப்ரஹ்ம பாவனை, கர்ம பாவனை, உபய பாவனை என்று மூன்று பாவனைகளோடு விளங்குகிறது.  எப்போதும் ப்ரஹ்மத்தையே நினைத்துக் கொண்டிருத்தல் ப்ரஹ்ம பாவனை.  நாம் செய்யும் கர்மாக்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது கர்ம பாவனை.  ப்ரஹ்மத்தையே ஸதா சிந்தித்துக் கொண்டு கர்மாக்களைச் செய்து கொண்டிருப்பது உபய பாவனை.

சரீரத்தைக் கொண்டே தேவ, மனுஷ்ய வேறுபாடுகள் வருகின்றன.  ஜீவனுக்கு இது உண்மையில் கிடையாது.  இதை அறியாத வரையில் மூர்த்த ப்ரஹ்மமும் இருக்கும்.  அமூர்த்த ப்ரஹ்மத்தில் சரீரம் கிடையாது.  எனவே ஜாதி, அழிவு முதலிய பேதங்களும் அங்கில்லை.  அது ஞானத்தை முக்யமாகக் கொண்டு ஸ்வயம் ப்ரகாசமாய் இருப்பது.  இந்த பரப்ரஹ்மத்தை யோகத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவனால் சிந்திக்க முடியாது.  அவனுக்கு முதலில் மூர்த்த ப்ரஹ்மமே சிந்திக்க இயல்பானது.  அப்போது தேவ, கந்தர்வ, தானவ, யக்ஷ முதலான தேவ ஜாதிகளும், மனுஷ்யர்கள், பசுக்கள், மலைகள், கடல்கள், நதிகள், மரங்கள், கொடிகள் என அனைத்து ரூபங்களும், அதன் காரணங்களும், ஒன்று, இரண்டு என பல பாதங்கள் உள்ளவையும், பாதங்கள் அற்றவையும் மஹாவிஷ்ணுவின் ஸ்வரூபமே.

இந்த மூர்த்தம் முன் கண்ட பாவனைகளோடு இருப்பதால் இது சுபத்தைத் தரப்போவதில் சிறந்ததில்லை.  இந்த ப்ரபஞ்சம் விஷ்ணு சக்தியால் வ்யாபிக்கப்பட்டிருக்கிறது.  இதுவே முக்த ஸ்வரூபத்தில் பரசக்தியாகவும், பக்தஜீவர்களின் ஸ்வரூபத்தில் க்ஷேத்ரக்ஞ சக்தியாகவும்,  வேத விஹிதமான கர்மசக்தியான அவித்யையாகவும் மூன்று விதத்தில் பிரிந்திருக்கிறது.  கர்மசக்தியான அவித்யையால் க்ஷேத்ரக்ஞர்கள் மறைக்கப்பட்டு அவரவர் சரீரத்திற்கேற்றார்ப்போல் அறிவு, சுக, துக்கம் முதலியவற்றில் ஏற்றத் தாழ்வுகளை அடைகின்றனர்.

உயிரில்லாத பாறை, மரக்கட்டைகளில் இருக்கும் ஜீவன் அறிவையும், ஆனந்தத்தையும் மிகவும் குறைவாகவே பெறுகிறது.  தாவரங்கள் இவைகளை விட கொஞ்சம் அதிகமாக பெறுகின்றன.  இப்படி பாம்பு முதலான ஊர்வனவைகள், பின் பறப்பனவைகள், ம்ருகங்கள், மனிதர்கள், தேவர்கள், தேவராஜன், ப்ரஜாபதி, ஹிரண்யகர்பன் என வரிசைப்படி ஜாதிகள் ஒன்றை விட ஒன்றாக ஞானம், ஆனந்தம் இவைகளை அதிகமாகக் கொண்டுள்ளன.  நல்ல விலை கொடுத்து வாங்கும் உடை எப்படி சிறந்திருக்கிறதோ அப்படியே இந்த ஞானம், ஆனந்தத்தின் அளவுகள், செய்யும் நல்ல கர்மாக்களின் அளவைக் கொண்டே அமைகின்றன.  இதனால் அந்தந்த சரீரங்களும், அதைச் சார்ந்து இருக்கும் ஆத்மாவும் அமைகின்றன.

மஹாவிஷ்ணுவின் அமூர்த்தமான ரூபமே ஸத் என்று பண்டிதர்களால் அழைக்கப்படுகிறது.  அதை யோகத்தில் தேர்ச்சி பெற்றவனே சிந்திக்க முடிகிறது.  அந்த அமூர்த்த ப்ரஹ்மம் கீழ் கண்ட மூவகை சக்திகளுக்கு இருப்பிடமாகவும், விவரிக்கப்பட்ட ப்ரபஞ்சத்தை விட வேறாகவும் இருக்கிறது.  அதிலிருந்து கொண்டே மஹாவிஷ்ணு பலவகை ரூபங்களில் அவதரிக்கிறான்.  உபேந்த்ரனாக அவதரித்து தேவ கர்மாக்களையும், மீன் முதலானவைகளாக அவதரித்து விலங்குகளின் செயல்களையும், ராம, க்ருஷ்ண அவதாரங்களில் மனுஷ்ய செயல்களையும், நரஸிம்ஹமாக அவதரித்து இடைப்பட்ட செயல்களையும் இந்த அமூர்த்த ப்ரஹ்மமே செய்தது.

இந்த அவதாரங்களும், அவைகளும் செயல்களும் நம்மால் அளவிட முடியாதவை.  அவை எந்தப் பலனையும் கருதி செய்யப்பட்டவை அல்ல.  எந்த கர்மத்தின் பலனாகவும் நடந்தவை அல்ல.  அவை லோக உபஹாரமாக நடந்தவையே.  இந்த ரூபத்தையே யோகி பயிற்சி செய்ய வேண்டும்.  எப்படி நெருப்பு கிளம்பினால் சுற்றியிருக்கும் எரித்து விடுமோ, அப்படியே இந்த ஸ்வரூபமும் யோகியின் மனதில் நிலைபெற்றால் அவனது பாவங்கள் அனைத்தையும் ஸம்ஹரித்து விடும்.  இதுவே தாரணை.  சுபத்தைக் கொடுப்பதாலும், தாரணைக்கு ஆதரவாக (ஆச்ரயம்) இருப்பதாலும் இந்த அமூர்த்த ஸ்வரூபமே ஸுபாச்ரயம்.  பக்தர்களின் ஸ்வரூபம் தாரணைக்கு ஆச்ரயமாக இருந்தாலும் அவை கீழ்க்கண்ட மூவகை பாவனைகளோடு இருப்பதால் அவை சுபமாயிருப்பதில்லை.  விஷ்ணுவின் இந்த அமூர்த்த ஸ்வரூபமே இந்த இரு குணங்களோடும் இருப்பதால் அதுவே சுபம்.

எங்கெங்கோ அலைந்து, எதையெதையோ பற்றிக்கொண்டிருக்கும் மனதிற்கு பற்றுக் கோடாக இருப்பதும், ஸம்ஸார சக்ரத்திலிருந்து யோகிகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுப்பதும் இந்த மங்கள ஸ்வரூபமே.  தேவர் முதலான வேறெந்த ஸ்வரூபங்களுமே கர்ம வசத்தில் இருப்பதால் சுபஞ்செய்ய சக்தியற்றவர்களே.  வேறெதிலும் ஆசையில்லாது விஷ்ணுவின் மங்கள ஸ்வரூபம் ஒன்றையே மனத்தில் நிலை கொள்ளச் செய்வதே தாரணை.

எங்கும் ஒளி நிறைந்த சந்த்ர வதனமும், தாமரையையொத்த பெரிய கண்களும், அழகிய தாடைகளும், பரந்து விரிந்த நெற்றியும், ஒத்த அளவில் தொங்கும் ஒளி மிகுந்த குண்டலங்கள் கொண்ட காதுகளும்,  சங்கு போன்ற கழுத்தும், லக்ஷ்மியைக் கொண்டிருக்கும் சிறந்த மார்பும், மூன்று மடிப்போடும், ஆழ்ந்து சுழிந்துள்ள தொப்புளும் கொண்டு விளங்கும் திருவயிறும், நீண்டு திரண்ட நான்கு கைகளும், ஸமமான துடைகளும், கணுக்கால்களும், மலர்களையொத்தத் திருவடிகளும், அரையில் சிவப்பாடையும், க்ரீடம், ஹாரங்களைப் பெற்று பொலிவோடு விளங்கும் மஹாவிஷ்ணுவான பரப்ப்ரஹ்மத்தைத் த்யானிக்க வேண்டும்.

விஷ்ணுவுக்கு நான்கு கைகள், எட்டு கைகள் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எட்டு கைகள் என்று கொண்டால் அவைகளில் சார்ங்கம், சங்கம், கதை, கட்கம், சக்ரம், அக்ஷமாலைகளையும், மற்ற இரு கைகளில் தாமரையும், பாணமுமோ அல்லது வர, அபய முத்ரைகளையோ கொள்ள வேண்டும்.  நான்கு கரங்கள் எனக் கொண்டால் அவைகளில் சங்கம், சக்ரம், கதை, தாமரை இவைகளைக் கொண்டு த்யானிக்க வேண்டும்.  இப்படி அஸ்த்ரம், ஆபரணம், ப்ரத்யங்கம், ப்ரதான அங்கம் முதலியவைகளோடு கூடின ஸ்வரூபத்தை நினைத்து நிற்பது முதல் வகை தாரணை.  அஸ்த்ரங்களை விட்டு மற்ற மூன்று அங்கங்களையும் கொள்வது, பின் ஆபரணங்களையும் விடுவது, பின் கடைசியில் ப்ரதான அங்கம் ஒன்றை மட்டுமே பற்றி இருப்பது என தாரணை நான்கு வகையாகிறது.  நிற்கும் போதும், நடக்கும் போதும், எந்த செயலையும் செய்து கொண்டிருக்கும் போதும் இந்த உருவம் மனதை விட்டு அகலாதிருப்பின் யோகி தன் தாரணை ஸ்திரப்பட்டு விட்டதாகக் கொள்ளலாம்.

இதற்கடுத்த த்யானம், அஸ்த்ரம் முதலான நான்கு அங்கங்களோடு கூடின விஷ்ணுவின் ஸ்வரூபத்தை வேறெந்த நினைவுகளும் இன்றி ஸதா நினைப்பது.  இந்த த்யானம் ஸ்வரூபத்தைப் பற்றி இருப்பதால் ஸாலம்பன யோகம் என்றும், ஸபீஜ யோகம் என்றும் கூறப்படுகிறது.  இதுவே எந்த ஸ்வரூபமும், நாமமுமின்றி அமூர்த்தமான ஆத்ம ரூபமாக த்யானித்து லயிக்கும் போது ஸமாதி என்று அறியப்படுகிறது.  பரவித்யை என்றும், விவேகஜன்ய ஞானம் என்று அழைக்கப்படுகிறது.

ப்ரஹ்மத்தை அடைவிப்பது இந்த ஞானமே.  மூவகை பாவனைகளை அழித்து இந்த ஞானமே அடைய வேண்டியதான ப்ரஹ்மத்தை ஸமாதி என்ற உபாஸனத்தால் ஆத்மாவிற்குத் தருகிறது.  மோக்ஷத்தையும் தருகிறது.  இந்த உபாஸன ஞானம் இப்படி ஆதிகாலமாக மாயையால் மறைக்கப்பட்டிருந்த ஜீவாத்மாவுக்கு கருவியாக இருந்து மோக்ஷத்தைக் கொடுத்து தன் கடமையை நிறைவேற்றி, அனுக்ரஹிக்கிறது.  இப்படி மோக்ஷமடைந்த ஜீவாத்மா அந்த பரப்ரஹ்மத்தோடு லயித்து பேதமற்று விடுகிறது.

இயற்கையில் ஆனந்த மயமான இந்த ஆத்மா கர்மாக்களால் பேதங்களைக் கொள்கிறது.  பின் ஸமாதி தர்சனத்தில் கர்மங்கள் முற்றும் அழிகையில் அதன் கார்யமான பேதங்களும் முற்றிலும் அழிந்து விடுகிறது.  அப்போது எந்த பேதங்களையும் உண்டு பண்ணுபவனும் இல்லை, அவைகளை அறிபவனும் இல்லை.  இத்தகைய மோக்ஷத்தைக் கொடுப்பது இந்த ஸமாதி" என்று காண்டிக்யருக்கு கேசித்வஜர் அஷ்டாங்க யோகத்தை சுருக்கியும், விவரித்தும் கூறி "வேறு என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்.

காண்டிக்யர் "கேசித்வஜரே! நான் ப்ரார்த்தித்தபடி எனக்கு அஷ்டாங்க யோகத்தை முழுதாக உபதேசித்தீர்கள்.  தங்கள் உபதேசத்தால் என் மனதிலிருந்த அஞ்ஞானம் முதலான அழுக்குகள் முற்றும் அழிந்தன.  என் மமகாரமும், அஹங்காரமும் தவறே.  ஆத்ம ஸ்வரூபம் அழிவற்றது, அது சொல்லிற்கு எட்டாதது.  இனி ஆண், பெண், ஆடு, மாடு என்ற பேத வ்யவஹாரங்கள் எனக்கில்லை.  வேண்டிய நன்மைகள் யாவும் எனக்குச் செய்து விட்டீர்கள்.  இனி நீங்கள் செல்லலாம்" என உபசரித்து அனுப்பினார்.  கேசித்வஜரும் மீண்டும் ராஜ்யத்திற்குத் திரும்பினார்.

காண்டிக்யர் இதன் பின் மீண்டும் ராஜ்யத்தையும் பெற்றார்.  தன் குமாரனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டு அவர் வனம் சென்று அஷ்டாங்க யோகத்தால் மோக்ஷத்தை அடைந்தார்.  கேசித்வஜரும் கர்ம பலன்களான விஷயங்களை அனுபவித்து, பலன் கருதாது கர்மங்களையும் செய்து புண்ய, பாவங்களைத் தீர்த்துக் கொண்டு மோக்ஷத்தை அடைந்தார்.

No comments:

Post a Comment