Monday, December 24, 2012

விஷ்ணு புராணம் - 124

06_06  அளவற்ற கல்யாண குணங்கள், செல்வம், திவ்ய மங்கள விக்ரஹங்களையுடைய அந்த இறைவனை நம் ஊணக்கண்களால் அறிய முடியாது.  அதற்கு ஸ்வாத்யாயம், யோகம் என்ற இரு கண்கள் தேவை.  வேதாந்த சாஸ்த்ரம், த்வாதசாக்ஷரீ, ப்ரணவம் முதலிய தத்வங்களை அறிந்து தனதாக்கிக் கொள்வதே ஸ்வாத்யாயம்.  இந்த வாக்ய விசாரங்களால் தத்வங்களை நன்கு அறிந்த பிறகு அந்த ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும்.  இந்த உபாஸனையே யோகம்.  இந்த ஞானங்கள் ப்ரஹ்மத்தையே விஷயமாகக் கொண்டிருப்பதாலும், ப்ரஹ்மத்தையே அடைவிப்பதாலும் இவைகளே ப்ரஹ்மம் என்றும் சொல்லப்பெறுகின்றன.  யோகம் செய்ய ஆரம்பித்த பின்பும் அவ்வப்போது சாஸ்த்ரார்த்த சிந்தனையான ஸ்வாத்யாயமும் வேண்டும்.  இவ்விரண்டினுள்ளும் ஸ்வாத்யாயம் ஸாதாரணக் கண்.  யோகம் சிறந்த கண்.  இந்த சிறந்த யோகத்தைத் தனக்கு விரிவாய் விளக்குமாறு மைத்ரேயர் பராசரரை வேண்டிக் கொள்ள அவர் இது ஸம்பந்தமாக கேசித்வஜருக்கும் சாண்டிக்ய ஜனகருக்கும் நடந்த ஸம்வாதத்தைக் கூறுகிறார்.

ஜனக வம்சத்தில் தர்மத்வஜர் என்ற ஜனகர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு மிதத்வஜர், க்ருதத்வஜர் என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.  இவர்களில் க்ருதத்வஜர் எப்போதும் வேதாந்த விசாரம் செய்து கொண்டு, மகிழ்ந்திருப்பார்.  மிதத்வஜர் கர்ம மார்க்கத்தில் அரசாண்டு கொண்டிருந்தார்.  க்ருதத்வஜருக்கு கேசித்வஜர் என்ற மகனும், மிதத்வஜருக்கு காண்டிக்யரும் பிறந்தனர்.  இருவரும் அவரவர் தந்தை வழியில் சிறந்தவர்களாக இருந்தனர்.  ஒரு ஸமயம் இவர்களிடையே பகை மூண்டு, அதில் கேசித்வஜர் வென்று, காண்டிக்யரை ராஜ்யத்திலிருந்து விரட்டி விட்டார்.  காண்டிக்ய ஜனகர் தன் மந்த்ரி, புரோஹிதருடன் காட்டிற்கு சென்று வஸிக்கலானார்.

ப்ரஹ்மத்தை உபாஸித்துக் கொண்டே ராஜ்ய பரிபாலனம் செய்து வந்த கேசித்வஜர் தன் தீவினைகள் தீர பல யாகங்களையும் செய்து வந்தார்.  அப்படி ஒரு ஸமயம் யாகம் செய்து கொண்டிருக்கையில், அதற்கு பால் தரும் அவருடைய பசுவை காட்டில் புலி ஒன்று கொன்று விட்டது.  இந்த யாகம் இப்படித் தடைபட்டதற்குக் கவலைப்பட்ட கேசித்வஜர் அதற்கான ப்ராயச்சித்தத்தை ருத்விக்குகளிடம் கேட்டார்.  அவர்கள் தங்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என்றும், கசேரு என்பவர் அறிவார் என்றனர்.  கசேரு தனக்கும் தெரியாது என்று கூறி பார்க்கவர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  பார்க்கவர் சுனகர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  அவர் அரசரிடம் தங்கள் யாருக்கும் தெரியாது என்றும், அரசரால் தோற்கடிக்கப்பட்டு, ஓடிய காண்டிக்ய ஜனகரே இந்த விஷயம் தெரிந்தவர் என்றும், விருப்பமிருந்தால் அவரிடமே சென்று கேட்டுக் கொள்ளும் என்று கூறிவிட்டார்.

"தர்மகார்யம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவன் மரணமடைந்தால் அவன் தர்ம பலனைப் பெற்று விடுகிறான் என்றே சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எனவே தவறாகப் புரிந்து கொண்டு, ப்ராயச்சித்தம் கேட்க வரும் நம்மைக் காண்டிக்யர் கொன்று விட்டாலும், நமக்கு ஒரு குறையுமில்லை.  யாகப்பலன் கிடைத்து விடும்.  இல்லாது ப்ராயச்சித்தத்தைக் கூறினாலோ யாகம் நிறைவேறி விடும், ஆகவே எது நடந்தாலும் பிழையில்லை" என ஒரு நிமிஷம் இதை யோசித்த கேசித்வஜர், பின் தன் சத்ருவான அவரிடத்திலேயே ப்ராயச்சித்தம் அறிந்து கொள்ள முடிவு செய்து அவரிடம் சென்றார்.

மான்தோலைப் போர்த்திக் கொண்டு தன்னை நோக்கி காட்டில் வந்து கொண்டிருக்கும் கேசித்வஜனைக் கண்டதும்,  காண்டிக்யரின் கண்கள் சிவந்தன.  வில்லில் நாணேற்றி, பாணத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.  கேசித்வஜனை நோக்கி "அடே மூடா! உன் வேஷத்தில் நான் ஏமாறுவேன், அப்போது என்னைக் கொன்று விடலாம் என்று நீ நினைக்கிறாய். நீ க்ருஷ்ணாஜினம் தரித்துக் கொண்டு வந்தாலும் நான் ஏமாற மாட்டேன்.  உன்னைக் கொல்லவே செய்வேன்.  நானும், நீயும் சேர்ந்து எத்தனை மான்களைக் கொன்றுள்ளோம், அவைகள் க்ருஷ்ணாஜினம் போர்த்திக் கொண்டிருக்கவில்லையா?  என் ராஜ்யத்தைப் பறித்துக் கொண்ட நீ எனக்கு ஆததாயீ ஆவாய்.  உன்னைக் கொல்வதில் ஒரு தவறுமில்லை, என் கையில் நீ இறப்பது நிச்சயம்" என்று கூறினார்.

கேசித்வஜர் சிரித்துக் கொண்டே "காண்டிக்யரே! நாம் உம்மிடம் ஒரு ஸந்தேஹத்தைத் தீர்த்துக் கொள்ளவே வந்துள்ளேன்.  கொல்ல வரவில்லை.  இதையறிந்த பின் நீங்கள் கோபத்தையோ அல்லது பாணத்தையோ விடுங்கள்" என்றார். உடனே தன் மந்த்ரிகளுடன் இதை ஆலோசித்தார் காண்டிக்யர்.  மந்த்ரிகள் பகைவன் சிக்கியிருக்கும்போதே அவனைக் கொன்று விட்டால் ராஜ்யம் மீண்டும் வசமாகிவிடுமாதலால், அவனைக் கொன்று விடுவதே நல்லது என்று கூறினர்.  ஆனால் காண்டிக்யர் "இவனைக் கொன்று நான் இந்த ராஜ்யத்தை அடைந்தால் இவனுக்கு பரலோகம் வசமாகும்.  நான் இவனைக் கொல்லாது விட்டால் எனக்குப் பரலோகமும், இவனுக்கு பூலோகமும் கிடைக்கும்.  பூலோகஜயம் குறுகிய காலத்திற்கே ஸுகத்தையளிக்கும்.  பரலோகஸுகமோ நீண்ட காலத்திற்காகும்.  ஆகவே நான் பரலோகத்தையே பெறுவேன்.  இவனைக் கொல்ல மாட்டேன்" என்று கூறினார்.

அப்படியே கேசித்வஜருக்கு நேர்ந்ததற்கான ப்ராயச்சித்தத்தை விரிவாகக் கூறி, அவர் யாகம் முடிப்பதற்கான உதவியைச் செய்தார்.  ஆனால் யாகம் நன்கு முடிந்த பின்பும் கேசித்வஜருக்கு மனம் சந்தோஷமாயில்லை.  குழப்பமாகவே, நிம்மதியின்றியே இருந்தது.  யோசித்துப் பார்த்தார்.  "ப்ராஹ்மண பூஜைகள் நன்கு நடந்தன.  பொது மக்களுக்கும் வேண்டியவைகள் செய்யப்பட்டன.  யாசகர்களும் சந்தோஷமாகவே சென்றனர்.  எல்லாருக்குமே தகுந்த முறையில் உபசாரம் செய்தோம்.  இருந்தாலும் ஏதோ ஒன்றை விட்டு விட்டதாகவே தோன்றுகிறதே" என்று சிந்திக்கலானார்.  இறுதியில் ப்ராயச்சித்த உபதேசம் செய்த காண்டிக்ய ஜனகருக்கு குருதக்ஷிணை என்று ஒன்றும் தரவேயில்லை என்பது நினைவிற்கு வந்தது.  மீண்டும் காட்டிற்கு ஓடினார்.

தன்னைப் பார்த்ததும் மீண்டும் கோபமடைந்த காண்டிக்யரிடம் தான் வந்த காரணத்தைக் கூறினார் கேசித்வஜர்.  காண்டிக்யர் உடன் மந்த்ரிகளிடம் கலந்தாலோசித்தார்.  அவர்கள் மீண்டும் ராஜ்யத்தையே கேட்டுப் பெறுமாறு கூறினர்.  "மந்த்ரிகளுக்கு செல்வம் சேர்ப்பதைத் தவிர வேறென்ன வேலை" என்று அவர்களிடம் கூறிச் சிரித்தார்.  பின் அவர்களிடம் நிலையான மோக்ஷத்தை விளக்கி விட்டு, கேசித்வஜரிடம் ஸம்ஸார துக்கத்தைப் போக்கும் அத்யாத்ம வித்யையான யோக மார்க்கத்தைத் தனக்கு உபதேசிக்குமாறு கேட்டுப் பெற்றார்.

No comments:

Post a Comment