Tuesday, December 25, 2012

விஷ்ணு புராணம் - 126

06_08 "நிலையான ப்ரஹ்மத்திடம் ஜீவன் இப்படி லயித்து விடுவது தான் முக்தி எனும் மூன்றாவதான ஆத்யந்திக ப்ரளயமாகும்.  மைத்ரேயரே! இப்படி அனைத்தையும் உமக்கு இதுவரை விளக்கி விட்டேன்.  இந்த விஷ்ணு புராணம் எல்லா பாவங்களையும் போக்கக் கூடியது.  சாஸ்த்ரங்களில் சிறந்தது.  புருஷார்த்தங்களை நன்கு விளக்குவது.  நீங்கள் விரும்பிக் கேட்டதால் நான் உள்ளதை ஒன்று விடாமல் உபதேசித்து விட்டேன்.  இன்னும் ஏதாவது கேட்க வேண்டுமானால் கேளுங்கள்" என்று பராசரர் கூறி முடித்தார்.

மைத்ரேயர் "ஆசார்யரே! நான் கேட்டதனைத்தையும் நன்கு உபதேசித்து விட்டீர்கள்.  நானும் பக்தியுடன் கேட்டேன்.  இனி வேண்டுவது ஒன்றுமில்லை.  என் ஸந்தேஹங்கள் யாவும் இப்போது நீங்கி விட்டன.  மனதும் சுத்தமானது.  உற்பத்தி, ஸ்திதி, லயங்களையும், இதன் காரண பூதர்களான ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ர சக்திகளையும், பாவனைகளையும் தங்கள் அனுக்ரஹத்தால் நன்கு அறிந்து கொண்டேன்.  நாம் காணும் இந்த ப்ரபஞ்சம் முழுதும் அந்த விஷ்ணுவின் சரீரமே, அதைத் தவிர வேறில்லை என்பதே அறியவேண்டுவது.  அதை அறிந்து கொண்டேன்.  வேறு விஷயங்களால் ஒரு பயனும் இல்லை.

குருவே! தங்கள் அனுக்ரஹத்தாலேயே நான் என் ஸந்தேஹங்களும், விபரீத ஞானமும் அழியப் பெற்றேன்.  பலன் பெற்றவனானேன்.  வர்ணாச்ரம தர்மங்கள், ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி கர்மாக்களையும் அறிந்தேன்.  இனி அறிய வேண்டுவது ஒன்றுமில்லை.  என்னாலேயே தங்களுக்கு இவ்வளவு ச்ரமமும் நேர்ந்தது.  இந்த அபராதத்தைப் பொறுத்தருள வேண்டும்.  என்னைத் தங்கள் புத்ரனாகவே கருதி இவ்வளவு தத்வங்களையும் ச்ரமம் பாராமல் உபதேசித்து அருளினீர்கள்" என்று கூறி நமஸ்கரித்தார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த பராசரர் விஷ்ணு புராணத்தின் பெருமைகளை அவருக்கு மேலும் எடுத்துரைக்கிறார்.  "மைத்ரேயரே!  இப்படி சொல்லி முடித்த இந்த விஷ்ணு புராணம் வேதங்களுக்கு ஸமமானது.  இதைக் கேட்ட மாத்ரத்தில் எல்லா பாவங்களும் அழியும்.  இதில் ஸர்க்கம் முதலாக, தேவாஸுரர்கள், முனிவர்கள், மஹான்கள் வரலாறும், வர்ணாச்ரம தர்மங்களும், புண்ய ப்ரதேசங்களும், நதிகள், கடல்கள், மலைகள், சாஸ்த்ரங்கள் என அனைத்தையும் உங்களுக்கு விரிவாகக் கூறியுள்ளேன்.  இவைகள்  நினைத்த பொழுதிலேயே நம் பாவங்களைப் போக்கி விடும்.  மேலும், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கர்த்தாவான விஷ்ணு இந்த புராணத்தில் பல இடங்களில் சொல்லப்படுகிறான்.  எப்படி பயந்திருக்கும் மானைச் சூழ்ந்திருக்கும் ஓநாய்கள் எல்லாம் அங்கு தற்செயலாய் வந்த ஸிம்ஹத்தைக் கண்டதும் ஓடிவிடுமோ, அப்படியே நம்மைத் துன்புறுத்த வந்திருக்கும் பாதகங்கள் அனைத்தும் தற்செயலாய் அவன் பெயரைச் சொன்னாலே ஓடிவிடும்.

அவன் திருநாமத்தை ஒருவன் பக்தியோடு பாடினாலே அவன் பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.  நெருப்பு எப்படி தங்கத்தின் அழுக்குகளைப் போக்கி சுத்தீகரிக்கிறதோ அப்படியே அவன் நாம ஸங்கீர்த்தனமும் நம் அழுக்குகளைப் போக்கி நம்மை பரிசுத்தப்படுத்துகிறது.  அவன் பெயரைச் சொல்லக்கூட வேண்டாம்.  ஒரு நொடி நினைப்பே மிகவும் கொடூரமான இந்த கலி தோஷத்தை அழித்து விடும்.  மேரு மலையின் முன் ஒரு அணு எப்படியோ அப்படியே மஹாவிஷ்ணுவுக்கு முன் இந்த ப்ரஹ்மாண்ட ப்ரபஞ்சமும்.

ப்ரஹ்மாதி தேவ ஜாதிகளும், ஸித்தர்களும், அஸுரர்களும், அப்ஸரஸ்ஸுகளும், நக்ஷத்ரங்களும், க்ரஹங்களும், ஸப்தரிஷிகளும், லோகங்களும், லோக பாலர்களும், ப்ராஹ்மணர் முதலான மனுஷ்யர்களும், பசுக்களும், ம்ருகங்களும், பாம்புகளும், பக்ஷிகளும், மரங்களும், காடுகளும், கடல்களும், நதிகளும், இந்த்ரியங்களுக்கான விஷயங்களும், இன்னும் பலவும் நிறைந்திருக்கும் இந்த ப்ரபஞ்சம் அவனுக்கு முன் அணுவேதான்.  இந்த ப்ரஹ்மாண்டத்திற்கு ஆத்மாவும் அவனே.  எல்லாமும், எல்லாம் அறிந்தவனாகவும் இருப்பவனும் அந்த விஷ்ணுவே.  இப்படி எல்லா பாவங்களையும் போக்கும் அவனை இந்த புராணம் பல இடங்களில் கூறுகிறது.

அச்வமேத யாகத்தின் முடிவில் செய்யும் அவப்ருத ஸ்நானமும், ப்ரயாகை முதலான க்ஷேத்ரங்களில் இருக்கும் உபவாஸமும், ஒரு வருஷ அக்னிஹோத்ரமும் கொடுக்கும் பலனை இந்த புராணம் கேட்பதாலேயே கொடுக்கிறது.  ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் உபவாஸமிருந்து, த்வாதசியில் யமுனையில் நீராடி, மதுராவில் பிறந்தவனை நமஸ்கரிப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கும் அச்வமேத புண்ய பலன், இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை அவன் திருவடிகளை நினைத்து மனதோடு கேட்டாலே கிடைத்து விடும்.  இந்த த்வாதசியில் நம் குலத்தில் பிறந்த யாராவது யமுனையில் நீராடி நமக்குப் பிண்டம் தரமாட்டார்களா? நாமும் மோக்ஷத்தை அடைய மாட்டோமா? என்று ஏங்கும் பித்ருக்களும் இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை ஒருவன் கேட்டாலே அடைந்து விடுகின்றனர்.

இந்தப் புராணம் ஸம்ஸார பயத்தைப் போக்கக் கூடியது.  கேட்கவேண்டிய விஷயங்களில் சிறந்தது.  புண்யங்களுக்குள் புண்யமானது.  கெட்ட கனவுகளின் பலன்களைப் போக்கக் கூடியது.  எல்லா தோஷங்களையும் நீக்கக் கூடியது.  பிள்ளைப் பேற்றைத் தரக்கூடியது.  இப்படிப் பட்ட இதை முதலில் நாராயண ரிஷி ப்ரஹ்மாவுக்கும், அவர் ருபு என்பவருக்கும் உபதேசித்தார்.  அவரிடமிருந்து ப்ரியவ்ரதருக்கும், பாகுரிக்கும், ஸ்தம்பமித்ரருக்கும், ததீசருக்கும், ஸாரஸ்வதருக்கும், ப்ருகுவிற்கும், புருகுத்ஸருக்கும், நர்மதைக்கும் வழி வழியாக வந்தது.  பின் நர்மதை இதை த்ருதராஷ்ட்ரன், ஆபூரணன் என்ற நாகர்களுக்கு உபதேசிக்க, அவர்கள் அதை நாகராஜனான வாஸுகிக்கும், அவர் வத்ஸருக்கும், அவர் அச்வத்தாமருக்கும், அவர் கம்பளருக்கும், அவர் ஏலாபுத்ரருக்கும் உபதேசிக்க இது பாதாள லோகத்தில் பரவி இருந்தது.

ஒரு ஸமயம் பாதாள லோகம் சென்றிருந்த வேதசிரஸ் என்ற முனிவர் இதை அங்கிருந்து பெற்று வந்து பூலோகத்தில் ப்ரமதிக்குக் கொடுத்தார்.  அவர் அதை ஜாதுகர்ணருக்குத் தந்தார், அவர் அதைப் புண்யம் செய்த பலருக்கும் சொல்லி வைத்தார்.  இப்படி பரம்பரையில் வந்த இந்த புராணம் இப்போது புலஸ்த்யரின் வரத்தினால் என் நினைவுக்கு வர நானும் இதை உனக்கு உபதேசித்தேன்.  நீயும் இதைக் கலியுகத்தின் முடிவில் சினீகர் என்பவருக்கு உபதேசிக்கப் போகிறீர்கள்.

இப்படி கலிதோஷத்தைப் போக்க வல்லதும், பரம ரஹஸ்யமுமான இந்த புராணத்தைப் பக்தியோடு கேட்பவன் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.  புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பலனையும், ஸர்வ தேவதைகளையும் துதித்த பயனையும் பெறுகிறான்.  இதில் பத்து அத்யாயங்களைக் கேட்பவன் காராம்பசுவை தானம் செய்த பலனைப் பெறுகிறான்.  இதில் முதல், இடை, முடிவு என எங்கும் விஷ்ணுவே சொல்லப்பட்டிருப்பதால் இதைக் கேட்பதாலும், படிப்பதாலும், சொல்வதாலும் கிடைக்கும் பலன் வேறெதிலும் மூவுலகிலும் கிடையாது.  இதில் மோக்ஷத்தைத் தரும் அவனே பலனாகக் கிடைக்கிறான்.  அவன் ப்ரபாவங்களை நினைத்துப் பார்த்தால், அவனைச் சொல்வதால் பாவம் தொலையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த மஹாவிஷ்ணுவை நினைப்பவன் நரகம் செல்வதில்லை, அவனுக்கு ஸ்வர்க்கமும் ஒரு தடையே. ப்ரஹ்ம லோக ப்ராப்தியும் அவனுக்கு ஸ்வல்பமே.  அவன் மனதிலிருந்து கொண்டு மஹாவிஷ்ணு அவனுக்கு மோக்ஷத்தையே அளிக்கிறான் என்றால் அவனைப் பாடுவதால் பாவங்கள் தொலைகின்றன என்பதில் ஒரு வியப்புமில்லை.  இவனையே யாகாதி கர்மங்களும் ஸ்துதிக்கின்றன. ஞானிகளும் இவனையே த்யானிக்கின்றனர்.  இவனைத் தவிர நாம் கேட்க வேண்டும் பொருள் வேறொன்றுமில்லை.  இவனே பித்ரு ரூபத்தில் ஸ்வதா எனப்படும் கவ்யத்தையும், தேவ ரூபத்தில் ஸ்வாஹா எனப்படும் ஹவ்யத்தையும் ஏற்கிறான்.  இவன் ப்ரமாணங்களால் அளவிட முடியாதவன்.

அந்த மஹாவிஷ்ணு பிறப்பு, இறப்பற்றவன், எந்த மாறுபாடுகளும், வளர்ச்சியும், தேய்வும் அவனுக்கில்லை.  அவனுக்கு நமஸ்காரம்.  புருஷனும் அவனே, அவன் நியமனத்தாலேயே புருஷன் விஷயங்களை அனுபவித்தும், ஞான ஸ்வரூபியாகவும், பேதமின்றியும், சுத்தனாகவும், சரீர ஸம்பந்தத்தால் அசுத்தனாகவும், கர்மங்களால் மஹதாதி தத்வங்களுக்குக் காரணனாகவும், அழிவற்றவனாகவும் இருக்கிறான்.  அந்த புருஷ ஸ்வரூபனுக்கு நமஸ்காரம்.

அவ்யக்தமான ப்ரக்ருதி ஸத்வாதி குணங்களால் உண்டாகும் கார்யங்களுக்கு லயஸ்தானமாக இருக்கிறது.  அது ஆத்மாக்களின் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரவல்லது.  அதுவே கர்மாக்களுக்குக் காரணமுமாகும்.  நித்யமும் அதுவே.  இப்படி அவ்யக்த ஸ்வரூபமாயிருக்கும் விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.  பஞ்ச பூதங்களின் வடிவாகவும், கர்மேந்த்ரியங்களாகவும், ஞானேந்த்ரியங்களாகவும், இவைகளுக்கு விஷயங்களாகவும் இருந்து ஆத்மாவுக்கு உதவி செய்கிறதும், ஸூக்ஷ்ம ஸ்வரூபமாகவும் இருக்கும் வ்யக்தனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

வ்யக்தம், அவ்யக்தம் என இருவகைப்பட்ட ப்ரக்ருதியும், பரமான ஜீவ சரீரங்களும், ஆத்ம ஸ்வரூபமும், பிறப்பு, இறப்பில்லாதவனும், நித்யனுமான விஷ்ணுவுக்கு உடலாய் இருக்கின்றன.  ஞானம் முதலான ஐச்வர்யங்களை உடைய அவன் எல்லா ஆத்மாக்களுக்கும் பிறப்பு, இறப்பில்லாத மோக்ஷ ஸுகத்தை ஆசிர்வதிப்பானாக.

எட்டாம் அத்யாயம் முற்றும்.  ஆறாம் அம்சம் முற்றும்.  விஷ்ணு புராணம் முற்றும்.

25 டிஸம்பர் 2012, செவ்வாய்க் கிழமை, வைகுண்ட ஏகாதசி இன்று.

ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து!

எல்லா உயிரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!

குறைகளைப் பொறுத்து ஆசிர்வதியுங்கள்.

1 comment:

  1. இவ்வளவு புண்ணியம் நிறைந்த இந்த ஸ்ரீ விஷ்ணு புராணத்தை எங்களைப்போன்ற எளியோரும் அறிய வெளியிட்டதற்கு கோடான கோடி நன்றிகள். தங்கள் பணி மென்மேலும் சிறக்க அந்த மகாவிஷ்ணுவை வேண்டுகிறேன்.

    ReplyDelete