Saturday, November 2, 2013

வாமன புராணம் - 01

வாமன புராணம் - 01

புராண வரலாறு: நாரதர் ஒரு ஸமயம் புலஸ்த்ய மஹர்ஷியிடம் சென்று "பதினெட்டு புராணங்களில் பதினான்கான வாமன புராணத்தைக் கூறுமாறு கேட்டார்.  ஏன் பக்த ப்ரஹல்லாதன் தேவர்களோடு சண்டையிட்டான்? தக்ஷ புத்ரியான ஸதி ஏன் தன் சரீரத்தை விட்டாள்? ஏன் ஹிமவானின் மகளாகத் தோன்றினாள்? மேலும் தீர்த்தங்கள், தானங்களின் மஹிமையையும், வ்ரதங்களையும் விரிவாகக் கூற வேண்டும்" என்று பல கேள்விகளைக் கேட்டார்.  புலஸ்த்யர் அவரை நன்கு கவனிக்குமாறு கூறி விஷயங்களைக் கூறினார்.

"ஒரு ஸமயம் மந்தர மலையில் வீற்றிருக்கும் போது தாக்ஷாயணி "உக்ரமான இந்த கோடை காலத்தில் இருக்க எனக்கொரு வீடில்லை, என்ன செய்வது" என்றாள்.  "ஒரு பிடிப்பும் இல்லாது காட்டில் வஸிக்கும் நான் வீட்டிற்கு எங்கு செல்வது" என்று சிரித்துக் கொண்டே கூறினார் பரமன்.  அவரை அறிந்த தேவி உடனே ஒரு மரத்தினடியில் சென்று வஸிக்கலானாள். மழைக்காலம் வந்ததும் அதுவும் ச்ரமமானது.  மழையிலும், குளிரிலும் வாடிய தேவி "இப்போதாவது கருணை காட்டக்கூடாதா" என்றாள்.  ஈச்வரன் "நானோ நித்ய தரித்ரன், ம்ருகங்களின் தோலை அணிந்து, பாம்புகளையே ஆபரணங்களாக அணிந்து கொண்டிருப்பவன்.  வீட்டிற்கு நான் எங்கு செல்வேன்" என்று கூறி தாக்ஷாயணியுடன் மேகக்கூட்டங்களுக்குள் வஸித்து வந்தார்.  மழைக்காலம் சென்றதும் மீண்டும் மந்தர மலைக்கே வந்தார்கள்.

தக்ஷ யஜ்ஞம்: ஒரு ஸமயம் தக்ஷன் தேவர்களோடு ஆலோஸித்து ஓர் யாகம் செய்ய ஆரம்பித்தான்.  எல்லா தேவர்களையும் மனைவியோடு அதில் கலந்து கொள்ளக் கூறினான்.  அஹிம்ஸையெனும் மனைவியோடு கூடின தர்மதேவனை த்வாரபாலகனாக ஆக்கினான்.  அரிஷ்டநேமியை ஸமித்து முதலான த்ரவ்யங்களைச் சேர்க்கச் சொன்னான்.  ஆங்கிரஸ் சந்த்ரையோடு கூட பாகசாலையிலும், ப்ருகு யாக சாலையிலும், ரோஹிணியும் சந்த்ரனும் பொக்கிஷ அறையிலும் இருந்து வேலைகளைப் பார்க்கச் சொன்னான்.  கபாலமும், சூலமும் கொண்ட பரமனை அசுத்தமானவன் என்று அழைக்காமல் இருந்து விட்டான்."

உடனே நாரதர் பரமசிவன் ஏன் கையில் கபாலத்தை வைத்துக் கொண்டிருக்கிறார் என்று புலஸ்யரைக் கேட்டார்.  அவர் "ஒரு ஸமயம் பரமனது நித்ரையின் போது ஆயிரமாண்டு எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.  அதன் பின் ரஜோகுணத்தோடு ஐந்து தலைகள் கொண்ட ப்ரஹ்மனும், தமோகுணம் நிரம்பிய முக்கண்ணனும் தோன்றினார்கள்.  விஷ்ணு அப்போது அஹங்காரத்தைப் படைக்க அதனால் ப்ரஹ்மனும், சிவனும் தானே உயர்ந்தவன் என்று சண்டையிடலானார்கள்.  ப்ரஹ்மனது ஐந்தாவது தலை சிவனை நோக்கி "உண்ண உணவில்லை, உடுத்த உடையில்லை, காளை மீதேறிச் சுற்றும் நீயோ எனக்கு ஈடு" என்று கூறிச் சிரித்தது.  உடனே கோபம் கொண்ட பரமேச்வரன் அந்த தலையை தன் கைவிரல் நகங்களால் கொய்து விட்டார்.  ப்ரஹ்மனது கோபத்திலிருந்து ஆயுதம் கொண்டு ஒரு வீரன் வந்து சிவனை எதிர்த்தான்.  சிவன் விரைவாக பதரிகாச்ரமம் சென்று கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபாலத்தைக் காட்டி நாராயணரிடம் பிக்ஷை கேட்டார்.  அவர் தனது வலக்கையைக் காட்டி சூலத்தால் அதில் அடித்து வேண்டியதைப் பெற்றுக் கொள்ளக் கூறினார்.  சூலம் அடிபட்ட இடத்திலிருந்து மூன்று வழிகளில் இரத்தம் வழிந்தோடியது.  ஒன்று நக்ஷத்ர மண்டலத்தையும், மற்றொன்று துர்வாஸராக அத்ரியிடமும், மூன்றாவது ஒரு வீரனாகவும் தோன்றியது.  சிவன் கூறியபடி அந்த வீரன் ப்ரஹ்ம புத்ரனைக் கொல்லச் சென்றான்.  இந்த ப்ரஹ்ம, ருத்ர வீரர்களுமே பின் வாலி-ஸுக்ரீவனாகவும், கர்ண-அர்ஜுனர்களாகவும் தோன்றினர். 

ப்ரஹ்மசிரத்தை அறுத்ததால் சிவனை ப்ரஹ்மஹத்தி பயங்கரமான பெண்ணுருவம் கொண்டு வந்தடைந்தது.  அதைப் போக்கிக் கொள்ள நர, நாராயணர்களைக் காண அவர் பத்ரிகாச்ரமம் சென்றார்.  அங்கு அவர்கள் தென்படவில்லை.  பின் யமுனையில் நீராடிப் பாபத்தைப் போக்கிக் கொள்வோம் என்று யமுனைக்குச் செல்ல, யமுனையும் உலர்ந்து போனது. புஷ்கரம், மாகதம், ஸைந்தவம், நைமிஷ ஆரண்யங்களுக்குச் சென்றும் அவர் பாபமகலவில்லை.  அவர் குருஜாங்கலமென்னும் தேசத்தில் மஹாவிஷ்ணுவைத் துதித்தார்.  மஹாவிஷ்ணு அவரை ப்ரயாகை, வாரணா எனும் நதிகளுக்கிடைப்பட்ட காசி க்ஷேத்ரத்துக்குச் செல்லச் சொன்னார்.  அங்கு சென்று கங்கையில் ஸ்னானம் செய்ததும் ப்ரஹ்மஹத்தி அவரை விட்டு அகன்றது.  ஆனால் கையிலிருந்த கபாலம் மட்டும் விடவில்லை.  விஷ்ணு உடனே எதிரிலிருந்த ஒரு தீர்த்தத்தைக் காட்டி அதில் ஸ்னானம் செய்யச் சொன்னார்.  அதில் குளித்ததும் சிவனது கையை விட்டு அந்த கபாலம் அகன்றது.  அந்த தீர்த்தமும் கபாலமோசனி என்று ப்ரஸித்தி பெற்றது." என்றார்

பார்வதி தேவி தன்னிடம் வந்த கௌதமரின் புத்ரியான ஜயையிடம் அவள் ஸஹோதரிகளான விஜயை, அபராஜிதா எங்கே எனக் கேட்டாள்.  ஜயை "தங்கள் தந்தை செய்யும் யாகத்திற்கல்லவா அவளும், ஏனையோரும் சென்றிருக்கின்றனர்.  உலகத்திலுள்ளோர் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனரே.  உங்களை அழைக்கவில்லையா, அல்லது அழைத்து நீங்கள்தான் செல்லவில்லையா?" என்று கேட்டாள்.  இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் தேவி இறந்தாள்.  ஜயை தேவியின் மரணத்திற்கு நான் காரணமாகி விட்டேனே என்று அழுது கொண்டிருந்தாள்.  அப்போது அங்கு வந்த பரமேச்வரன் விஷயமறிந்து தக்ஷனிடம் பெரும் கோபம் கொண்டார்.  அவரது மயிர்க் கால்களிலிருந்து ஸிம்ஹ முகத்தோடு எண்ணிறந்த வீரர்கள் தோன்றினார்கள்.  ஜயை கதையை எடுத்துக் கொண்டாள்.  வீரபத்ரனோடும், பத்ரகாளியோடும் ஈசன் போர்க்கோலம் கொண்டு தக்ஷனுடைய யாகசாலைக்கு வந்தார்.

வாசலில் காவல் புரிந்த தர்மனை அடித்துக் கீழே தள்ளி விட்டு உள்ளே நுழைந்தார்.  உக்ரமான இவரது கோலத்தைக் கண்ட முனிவர்கள் ஓட்டமெடுத்தனர்.  எதிர்த்துப் போரிட முடியாமல் தேவர்கள் பயந்தோடினர்.  விஷ்ணு சக்ராயுதத்தால் வீரபத்ரனைக் கட்டி, சிவகிங்கரன் என்பதால் அவனைக் கொல்லாமல் விட்டார்.  அவன் தோல்வியைக் கண்ட பரமேச்வரன் தானே புறப்பட்டார்.  அவரைக் கண்டதும் மஹாவிஷ்ணு ஒரு மாமரத்தில் ஒளிந்து கொண்டார்.  அஷ்டவஸுக்களும் நதியாகி ஓடினர்.  கச்யபர் முதலியோர் சதருத்ரீயத்தால் பரமனைப் போற்றினர்.  பூஷா என்பவன் ஈசனைப் பார்த்துப் பல்லைக் காட்டிச் சிரித்துப் போருக்கழைத்தான்.  அவன் பற்கள் உதிர அவன் கன்னத்தில் ஒரு குத்து குத்தினார் பரமேச்வரன்.  எதிர்த்த எல்லோரையும் கொன்று குவித்தார்.  மூன்று கண்களாலும் மூன்று அக்னிகளையும் கொளுத்தினார்.  யஜ்ஞம் மான் உருக்கொண்டு பயந்தோடியது.  பகவான் இன்னுமொரு உருவம் தாங்கி அதைத் துரத்திச் சென்றார்.  தக்ஷன் நடுநடுங்கி அவரைத் துதித்து யாகத்தைப் பூர்த்தி செய்தான்.

தாக்ஷாயணியில்லாது தனித்திருந்த சிவன் மீது மன்மதன் உன்மாதமெனும் அம்பை ஏவினான்.  அவர் பித்து பிடித்தார்போல அலைய ஆரம்பித்தார்.  மீண்டும் ஸந்தாபினீ எனும் அம்பை ஏவினான்.  பெரும் துயரத்தில் திரிந்து கொண்டிருந்த மஹாதேவர் முன்பு குபேரனது மகன் பாஞ்சாலன் அகப்பட்டான்.  அவனைத் தன் தாபத்தை ஏற்குமாறுக் கேட்டுக் கொண்ட மஹேசன் அவனை ஆசிர்வதித்து "காலஞ்சர க்ஷேத்ரத்திற்கருகே பாஞ்சாலகேசன் என்ற பெயரோடு விளங்குவாய், உன்னை பூஜிப்பவர் இஷ்டம் பூர்த்தியாகும்" என்று கூறிச் சென்றார்.

மன்மதன் கணையோடு பின் தொடர கைலாஸநாதன் தாருகாவனம் சென்றார்.  மஹர்ஷிகள் அனைவரும் வரவேற்று நிற்க, அருந்ததியைத் தவிர மற்ற முனிபத்னிகள் அனைவரும் அம்பிகாபதியின் அழகில் மயங்கி அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.  இதைக் கண்ட முனிவர்கள் தங்கள் தபோபலத்தின் கர்வத்தால் சிவனது லிங்கம் கீழே விழட்டும் என சபித்தனர்.  அது கீழே விழுந்து லோகங்களைக் கடந்து சென்றது.  அதிர்ச்சியில் ஸகல ஜீவராசிகளும் நடுங்கிற்று.  விஷ்ணுவும், ப்ரஹ்மாவும் அங்கு வந்து அதன் அடி, முடிகளைக் காண முயற்சித்துத் தோல்வி அடைந்தனர்.  அனைவரும் இறைவனைத் துதித்தனர்.  பரமேச்வரன் ப்ரத்யக்ஷமாகத் தோன்றி ப்ரஹ்மாதி தேவர்களுக்கு லிங்க பூஜையை உபதேசித்து மறைந்தார்.  அதைக் கொண்டு ப்ரஹ்மா சைவம், பாசுபதம், காலதாமனம், காபாலிகம் என்ற நான்கு சிவபூஜா சாஸ்த்ரங்களை இயற்றினார்.  சக்தி முனிவருக்கு கோபாயனர், பரத்வாஜர் என இரு சிஷ்யர்களிருந்தனர்.  பரத்வாஜரது சிஷ்யனான ஸோமகேச்வரன் எனும் அரசன், ஆபஸ்தம்பரது சிஷ்யனான க்ரோதேச்வரன் எனும் வைச்யன், அர்ணோதரன் எனும் சூத்ரன் மூவரும் சிவ பூஜா ஸம்ப்ரதாயத்தை உலகில் ஆரம்பித்தனர்.  மூன்றாம் முறை அம்பெய்ய காத்திருந்த காமனை பரமன் கண்ணால் எரித்தார்.  எரிந்து விழுந்த அவனது பாகங்கள் மரங்களாயின.

No comments:

Post a Comment