Thursday, December 17, 2009

விஷ்ணு புராணம் - 10

01_10. ப்ருஹு, மரீசி முதலானோர் வம்சங்கள்:
ப்ருஹுவிற்கும், அவர் மனைவி க்யாதிக்கும் மஹாலக்ஷ்மியும், தாதா, விதாதா என்ற இரு பிள்ளைகளும் பிறந்தனர். இந்த இரு பிள்ளைகளும் மேருவின் புத்ரிகளான ஆயதி, நியதியை முறையே மணந்தனர். இதில் தாதாவிற்கு ப்ராணன் என்பவனும், அவனுக்கு த்யுதிமானும், அவனுக்கு ஆஜாவானும் பிறந்தனர். விதாதாவிற்கு ம்ருகண்டுவும், அவனுக்கு மார்க்கண்டேயனும், அவனுக்கு வேத சிரஸும் பிறந்தனர்.

தக்ஷ புத்ரிகள் இருபத்து நால்வருள் பதின்மூவர் தர்மராஜனுக்கு மணமுடிக்கப்பட்டனர். ருத்ரபத்னியான ஸதீ தக்ஷனின் கோபத்தால் வம்சமின்றி இறந்து விடுகிறாள். இனி ஸம்பூதி என்பவள் மரீசியின் மனைவி. அவளுக்கு பௌர்ணமாஸனும், அவனுக்கு விரஜஸ், பர்வதன் இருவர்களும் பிறந்தனர். அங்கிரஸின் மனைவியான ஸ்ம்ருதி, ஸிநீவாலீ, குஹூ, ராகா, அனுமதி என்ற நான்கு பெண்களைப் பெற்றாள். அத்ரியின் பத்னி அனஸூயை ஸோமன் (சந்த்ரன்), துர்வாஸன், தத்தாத்ரேயன் ஆகியோரைப் பெற்றாள். புலஸ்த்யருடைய பத்னி ப்ரீதி தத்தோத்ரியைப் பெற்றாள். இவர்தான் முற்பிறவியில் ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் அகஸ்த்யராக இருந்தார். புலஹருக்கும் க்ஷமைக்கும் கர்தமன், அர்வரீவான், ஸஹிஷ்ணு என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

க்ரதுவின் மனைவி ஸந்ததிக்கு வாலகில்யர் என்ற அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தனர். இவர்கள் ஊர்த்வரேதஸ்ஸுக்கள். தீவிர ப்ரஹ்மசாரிகள். கட்டைவிரல் கணுவளவு உருவமுடையவர்கள். ஆனால் புகழில் ஸூர்யனைப் போல் ப்ரகாசமானவர்கள். வஸிஷ்டருக்கும் ஊர்ஜைக்கும் ரஜஸ், காத்ரன், ஊர்த்வபாஹு, ஸவனன், அனகன், ஸுதபஸ், சுக்ரன் என்ற ஏழு பிள்ளைகள். இவர்களே மூன்றாம் மன்வந்த்ரத்தில் ஸப்தரிஷிகள். அக்னி ப்ரஹ்மாவின் மூத்த மகன். அவன் பத்னி ஸ்வாஹாதேவி பாவகன், பவமானன், சுசி என்ற மூன்று பிள்ளைகள். (கடைந்தெடுத்த அக்னி பவமானன்; மின்னலிலிருப்பது வைத்யுதன்; ஸூர்ய மண்டலத்திலிருப்பது சுசி). இவர்கள் ஒவ்வொருவருக்கும் பதினைந்து என மொத்தம் அக்னிகள் நாற்பத்தொன்பது.

பித்ருக்களின் பத்னி ஸ்வதை. யாகம் செய்யாதவர் (அக்னிஷ்வாத்தர்), யாகம் செய்தவர் (பர்ஹிஷதர்) என பித்ருக்கள் இருவகையாவர். ஸ்வாஹாவிற்கும் அக்னிஷ்வாத்தர்களுக்கும் பேனா என்ற பெண்ணும், பர்ஹிஷதர்களுடன் சேர்ந்து வைதரணீ என்ற பெண்ணும் பிறந்தனர். இவர்களிருவரும் ப்ரஹ்ம வாதத்தில் சிறந்தவர்கள், ஞானிகள், நற்குணங்களும், யோகப் பயிற்சியும், சமதமாதிகளும் நிறைந்தவர்கள். இந்த தக்ஷ ஸந்தான க்ரமத்தை நினைப்பவர்கள் ஸந்தானமின்றி இருக்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment