Thursday, December 31, 2009

விஷ்ணு புராணம் - 11

01_11. மனுவிற்கு ப்ரஸூதி, ஆஹுதி என்ற இரு பெண்களும், ப்ரியவ்ரதன், உத்தானபாதன் என்ற இரு மகன்களும் ஆவர். அதில் பெண்களின் வம்சத்தை இதுவரை பார்த்துள்ளோம். இனி மகன்களின் வம்சம். இவர்களிருவருமே சிறந்த வீரர்களும், தர்மங்களையறிந்தவர்களும் ஆவர். உத்தானபாதனுக்கு ஸுருசி, ஸுநீதி என்று இரு மனைவிகள். இதில் ஸுருசியினிடம் அவனுக்கு அன்பு அதிகம். இவர்களுக்கு உத்தமன் என்ற குழந்தையும், ஸுநீதியினிடம் த்ருவனும் பிறந்தனர். உத்தமன் தகப்பனுக்கு வேண்டியவனாகவும், ஸுநீதியினிடம் அவ்வளவாக அன்பின்றியும் இருந்தான். த்ருவன் நற்குணங்கள் நிரம்பியவனாக இருந்தான்.

ஒருநாள் அரசவையில் ஸுருசியுடன் அரசன் அமர்ந்திருக்கையில் உத்தமன் பாசத்துடன் அப்பாவின் மடியில் ஏறி விடுகிறான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த த்ருவனும் அவ்வாறே செய்ய முயல்கிறான். அருகில் ஸுருசி இருப்பதால் அவளுக்கு விருப்பமில்லாததை செய்ய விரும்பாத அரசனும் குழந்தை த்ருவனை அன்புடன் மடியில் ஏற்கவில்லை. ஸபத்னியைப் பிடிக்காத அரசியும் தன் கோபத்தைக் குழந்தையிடம் காட்டுகிறாள்.

"குழந்தை! நீ என் வயிற்றில் பிறக்கவில்லை. எனவே உனது இந்த ஆசை வீண். அப்பா மடி என்ற ஸ்தானத்தையடையும் எண்ணம் மடமை. அது உத்தமோத்தம ஸ்தானம். உனக்கு அது கிடைக்கவே கிடைக்காது. நீ என் மகனுக்கு தனயன் தான். ஆனாலும் எனக்குப் பிறக்காத காரணத்தால் உனக்கு இந்த உரிமையில்லை. அரசர் பலரும் அண்டி வாழும் ஒரு பேரரசனுக்குரிய இந்த ஸிம்ஹாஸனம் என் மகனுக்கே உரியது. அதை நீ விரும்பினால் துன்பத்தையடைவாய். பாக்யமற்ற ஸுநீதியின் மகன் நீ என்பதை மறந்து விட்டாயா" எனப் பலவாறு கூறினாள் ஸ்ருசி.

இந்த வார்த்தைகளையும், தந்தையின் நிலையையும் கண்ட த்ருவன் கோபத்துடன், வெகுண்டெழுந்து தன் தாயிடம் ஓடுகிறான். "ஏனப்பா இவ்வளவு கோபம், யாராவது உன்னையோ, அப்பாவையோ அவமதித்து விட்டார்களா" என அன்புடன் அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டு கேட்கிறாள் அவன் தாய் ஸ்நீதி. குழந்தை சபையில் நடந்ததனைத்தையும் கூறுகிறான். வருத்தத்தில் ஒளியிழந்த கண்களுடன் "குழந்தாய்! நீ கோபம் கொள்ளாதே யார் மீதும். அவையனைத்தும் உண்மையே. நீ என் வயிற்றில் பிறந்ததால் பாக்யமற்றவன் தான். இவை முன் வினைகளின் பயனே. செய்த வினைகளின் பலனைத் தடுக்கவும், செய்யாத வினைகளின் பலனைக் கொடுக்கவும் ஒருவராலும் முடியாது.

உயர்ந்த ஸிம்ஹாஸனமும், வெண் கொற்றமும், மதயானைகளும், ஜாதிக் குதிரைகளும் மற்ற பரிவாரங்களும் கொண்ட அரசு பாக்யம் செய்தவர்களுக்கே. ஸுருசி நிறைய புண்யங்கள் செய்தவள். அதனாலேயே அரசனின் அன்பும், உரிமைகளும் கிடைக்கப்பெற்றுருக்கிறாள். உத்தமனும் அவ்வாறே அவள் வயிற்றில் பிறந்து அரசனுக்கு ப்ரியனாக இருக்கிறான். நானோ பெயருக்குத்தான் பார்யை. என் வயிற்றில் பிறந்ததால் நீயும் அப்பாவிற்கு வேண்டாதவனாக இருக்கிறாய். எனவே நீ இதற்கு வருத்தப்படாதே. புத்திசாலிகள் இறைவன் கொடுத்ததைக் கொண்டு சந்தோஷப்படுகிறார்கள். உனக்கு இன்னும் வருத்தமிருந்தால் இன்னும் நிறைய புண்யங்களைச் செய்து, நன்னடத்தை, தர்ம சிந்தனை, அன்பு, எல்லா உயிர்க்கும் நன்மையே செய்யும் எண்ணம் இவைகளைச் செய். அப்போது பள்ளத்தை நோக்கி நீர் ஓடி வருவதுபோல் உன்னிடம் செல்வங்கள் தானே வந்து சேரும்" என்று ஆறுதல் கூறினாள்.

இவைகளில் ஆறுதல் அடையவில்லை குழந்தை. அது "அம்மா! உங்கள் சொற்கள் எனக்கு சாந்தியளிக்கவில்லை. சித்தியின் சொற்கள் என் மனத்தைப் பிளந்திருக்கின்றன. நான் சித்தியின் வயிற்றில் பிறக்கவில்லை. உங்கள் வயிற்றில் தான் பிறந்தேன். ஆனாலும் நான் செய்யப்போவதைப் பாருங்கள். உலகத்தோர் கொண்டாடும் ஓருயர்ந்த ஸ்தானத்தை நான் அடைவேன். அரசுரிமையை உத்தமனுக்கே கொடுக்கட்டும் அப்பா. இன்னொருவருக்குக் கொடுத்த்து எனக்கு வேண்டாம். என் முயற்சியினாலேயே தந்தை முதலானோரும் இதுவரை அடையாத இடத்தை அடைவதற்கு வேண்டியதைச் செய்வேன்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி அருகிலிருக்கும் கானகத்தை அடைந்தது.

அங்கு தவம் செய்து கொண்டிருந்த ஸப்த ரிஷிகளிடம் சென்று நமஸ்கரித்துத் தன்னையும் அறிமுகப் படுத்திக் கொள்கிறான். தான் உலகை வெறுத்து வந்துள்ளதாகவும், தன் வருத்தத்தையும் போக்கிக் கொள்ள வேண்டுவதாகவும் கூறுகிறான். அவர்கள் ஆச்சர்யத்துடன் "இந்த நாலைந்து வயதில் உனக்கு வருத்தமா? அப்பா இருக்கும் போது உனக்குக் குடும்பக் கவலையுமில்லை. விரும்பியதும், விரும்பியவர்களின் பாசமும் கிடைக்காதது போலவுமில்லை. நோய்களெதும் இல்லை. பின்னே உன் வருத்தத்திற்கு என்ன காரணம்" என்றனர். த்ருவன் விஷயங்களைக் கூறுகிறான். ரிஷிகள் இந்த வயதில் இந்த க்ஷத்ரியச் சிறுவனுக்கு இவ்வளவு ரோஷமா என்று வியந்த ரிஷிகள் அவன் விரும்புவதைப் பெறத் தங்களாலியன்ற உதவியைச் செய்வதாகவும் கூறுகின்றனர்.

கோவிந்தனை ஆராதித்தால் எந்த உயர்ந்த ஸ்தானத்தையும், அபீஷ்டங்களையும் பெறலாம் என்று மரீசி, அத்ரி, ஆங்கிரஸ், புலஸ்த்யர், க்ரது, புலஹர், வஸிஷ்டர் என அனைவரும் அருளுகின்றனர். வேண்டியது பலதானாலும், நிறைவேற்றுபவன் ஒருவனே என்றும் கூறி விஷ்ணுவை ஆராதிக்கச் சொல்கின்றனர். த்ருவனும் உடனே அதற்கான ஆராதனை முறைகளைப் போதிக்க வேண்டுகிறான். "மனதை உலகப் பொருட்களிலிருந்து மீட்டு பகவானிடம் நிலைக்கச் செய்து, சிந்தனையை அவன் சரணாரவிந்தங்களில் செலுத்தி, "வ்யஷ்டி, ஸமஷ்டி ரூபமாய் ப்ரக்ருதியைச் சரீரமாகக் கொண்ட ஞானமயமான வாஸுதேவனை வணங்குகிறேன்" என்ற பொருள் கொண்ட த்வாதசாக்ஷரத்தை ஜபித்துத்தான் உன் தாத்தா ஸ்வாயம்புவமனு விரும்பிய செல்வத்தையடைந்தார். நீயும் அவ்வாறே செய்து வா" என உபதேஸிக்கின்றனர்.

No comments:

Post a Comment