Thursday, December 17, 2009

விஷ்ணு புராணம் - 4

01_04. ­­­­வராஹரூபியாய் பஹவான் அவதரித்ததால் இந்த கல்பத்திற்கு வராஹகல்பம் என்று பெயர். ப்ரஹ்மா இரவுப்பொழுது நித்திரை முடிந்து, ஸத்வகுணத்துடன் விழித்தெழுந்து ஜலமயமாய் இருக்கும் உலகை சுற்றிலும் பார்க்கிறார். பூமியை மீண்டும் கொண்டு வருவது பற்றி யோசிக்கிறார். அப்போது ஒரு தாமரை இலையைப் பார்க்கிறார். இதற்கு ஆதாரமான பூமியென்ற ஒன்று அப்போது இதனடியிலிருக்க வேண்டும் என ஊஹித்து, பெரும் பன்றி வடிவமெடுக்கிறார்.

முன்பு வேதங்களையபஹரித்துச் சென்று கடலினுள் ஒளிந்து கொண்ட அஸுரர்களைக் கொல்ல மீனாக அவதரித்தார். மற்றொரு சமயம் அமிர்தம் கடைய முயன்ற போது, மத்தாக இருந்த மலை மூழ்கிவிடாமலிருக்க ஆமையாக அவதரித்தார். இப்போதும் பூமிதேவியின் துயரைப் போக்க ப்ரஹ்மாவின் மூக்கிலிருந்து வராஹமாக அவதரித்து, வளர்ந்தார். அளவிற்குட்படாமல் பூமியின் உருவம் ஒரு வண்டின் அளவாகச் சிறியதாக தோன்றும் அளவிற்கு வளர்ந்தார். திருமேனி வேத,யாக மயமாக இருந்தது. இவரை ஜனலோகத்திலிருந்த ஸனகர், ஸனந்தனர் முதலானோர் வணங்கினர்.

நீரினுள் மூழ்கி பாதாளம் சென்ற பரமனை, பாசி படர்ந்து கிடக்கும் பூமி தேவி வணங்கித் துதிக்கிறாள். ப்ரளயக்கடலிலிருந்து தன்னைக் காக்க வேண்டுகிறாள். படைப்பவன், காப்பவன், அழிப்பவனும் நீயே; உன் ரூபத்தை ஒருவரும் அறியார்; தேவருட்பட எவரும் உன்னை உபாஸித்தே மோக்ஷம் பெறுகின்றனர். உன்னால் உண்டுபண்ணப்பட்டு, உன்னிடத்திலேயே நிலை பெற்று, உன்னையே சரணமாக அடைந்தவளென்பதாலன்றோ என்னை எல்லோரும் மாதவி என்கின்றனர் எனப் பலவாறுப் போற்றித் துதிக்கிறாள்.

அதை ஏற்றுக்கொண்ட பரமனும் ஸாமவேதத்தின் ஸ்வரங்களுக்கொப்ப குர், குரென உறுமிக்கொண்டு பன்றிகள் கோரைப்பற்களால் கிழங்குகளை மேற்கொண்டு வருவதுபோல, தானும் பூமியைத் தூக்கிக்கொண்டு இருபுறமும் இரண்டு பிறைகள் கவ்விய நீலமலையொன்று நீரிலிருந்து மேலே வருவது போல் வருகிறார். வரும் வழியில் எதிர்த்துவந்த ஹிரண்யாக்ஷனை வதைக்கிறார். இப்படி வரும்போது அவர் மேல் பட்ட நீர்த்திவலைகள் பட்டதால் ஜனலோகத்திலிருப்பவர்கள் புனிதமடைகின்றனர்.

கால் குளம்புகளால் ரஸாதலத்தை உதைத்துக் கிளம்பியதில் ஏற்பட்ட த்வாரங்கள் வழியே பேரிரைச்சலுடன் தண்ணீர் கீழே செல்கிறது. ஜலத்தின் மேலேறிய பஹவான் தன்னுடலை உதறுகிறார். அந்த ரோமங்கள் ஜனலோகம் வரை நிமிர்ந்து நிற்கின்றன. அதில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் மஹரிஷிகள் ஜய ஜய என கோஷிக்கின்றனர்.

"தேவதேவன் நீ; யாகத்தினுறுப்புக்கள் உன் அவயங்கள். உன் கால்கள் நான்கு வேதங்கள். உன் கோரைப்பல்லே யாகத்தின் யூபஸ்தம்பம், புரோடாசங்களை சாப்பிடுவதால் மற்ற பற்கள் யாகங்கள்; அக்னி ஜ்வாலைப் போல் சிவந்திருக்கும் நாக்கே அக்னியாம். ரோமங்கள் தர்ப்பங்கள். நீயே ய்க்ஞபுருஷன். இரவு, பகல்களே உன் கண்கள். மூக்கே ஸ்ருக். நீயே எங்களையும் காக்கவேண்டும். தாமரைக்காட்டில் விளையாடும் யானையின் தந்தத்தில் சேறுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தாமரையிலைப் போலிருக்கிறது உன் கோரைப்பற்களின் நுனியிலுள்ள பூமண்டலம்".

"உலகம் உன்னால் சூழப்பட்டுள்ளது. நீயே இவ்வுலகிற்கு ஆத்மா. இந்த ஞானமில்லாதவர்களே உலகை தேவர்களாகவும், மனிதர்களாகவும், மற்ற ஜடப்பொருள்களாவும் பார்க்கின்றனர். ஜீவாத்மாவையும், உடலையும் ஒன்று என நினைக்கின்றனர். இவர்கள் உன்னை எப்படி அறியப்போகின்றனர், நீ எங்களுக்கு நன்மை செய்வதற்காகவே அனைத்தையும் செய்கிறாய்" எனப் போற்றிப் புகழ்கின்றனர். வராஹமூர்த்தி பூமியை ஜலத்தின் மேல் பரப்பி வைக்கிறார். ஏழு த்வீபங்கள், பூ, புவர், ஸுவர் லோகம் என பாதாள லோகம் வரை அனைத்தையும் ப்ரஹ்மனாயிருந்து படைக்கிறான். ஜீவர்களின் கர்மவினைகளுக்கேற்ப அவர்களை தேவர்களாகவும், மனிதர்களாகவும், தாவரங்களாகவும் படைத்துத் தான் நிமித்தமாய் மட்டும் இருக்கிறான்.

No comments:

Post a Comment