Thursday, December 31, 2009

விஷ்ணு புராணம் - 19

01_19. ப்ராஹ்மணர்களின் முயற்சியும், க்ருத்யையுமே தோற்றதை அறிந்த ஹிரண்யகசிபு வியக்கிறான். ப்ரஹ்லாதனிடமே "உன் பெருமைக்கும், உன் வியத்தகு செயல்களுக்கும் காரணமென்ன? இதை மந்த்ரத்தால் பெற்றாயா அல்லது பிறப்பிலேயே உனக்கு வாய்த்ததா" எனக் கேட்கிறான். ப்ரஹ்லாதன் "அப்பா! இதில் என்னுடைய செயலும், பெருமையும் ஒன்றும் இல்லை. இறைவனை மனதில் வைத்திருக்கும் ஒவ்வொருக்குமே பொதுவானதே இது. இறைவனை இருத்த வேண்டிய இதயத்திலிருந்து தீய எண்ணங்களை ஒழித்துத் தூயதாக வைத்திருக்க வேண்டும். மனதாலும், சொல்லாலும், செயலாலும் ஒருவருக்குத் தீங்கிழைக்காதவர் ஹ்ருதயத்திலே பகவான் இருப்பான். அனைத்து உயிர்களிலும் பரமன் இருக்கிறான். பிறருக்குச் செய்யும் தீங்கு நமக்கே செய்து கொண்டதாகும். எனவே நான் எவரிடமும் அப்படியில்லை. இதுவே என் பெருமைக்கும், சக்திக்கும் காரணமாகும்" என்கிறான்.

இந்தச் சொற்களால் மீண்டும் வெறுப்புற்ற அஸுரன் மேலிருந்து பிள்ளையை கீழே தூக்கியெறியச் சொன்னான். அஸுரர்களும் அவ்வாறே செய்தனர். ஆனால் பூமாதேவி ஒரு மலரைத் தாங்குவது போல் தானே மேலெழுந்து அவனைக் காத்தாள். உடனே மாயாவிகளில் சிறந்த ஸம்பராஸுரனை அழைத்து மாயைகளாலாவது சிறுவனைக் கொன்றுவிடும்படிப் பணிக்கிறான். அவன் ஆயுதங்களை ஏவ ஒன்றும் பலனில்லை. ஸம்சோஷகன் என்னும் காற்றை ஏவி குழந்தையைக் காய வைத்து விடும்படி கூறுகிறான். அதுவும் தோற்றுவிடுகிறது. மேலும் பல மாயைகளும் தோற்கின்றன. மேலும் சில காலம் மீண்டும் குருகுலத்தில் கழிகிறது. சுக்ர நீதி முழுதையும் போதித்து விட்டதாகக் கூறி பரிக்ஷை செய்து பார்க்குமாறு அஸுரனிடம் ஆசார்யர்கள் ஒரு ஸமயம் கூறுகின்றனர்.

ஹிரண்யன் மீண்டும் ப்ரஹ்லாதனிடம் "நண்பர், பகைவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். நிறைவு, குறைவு காலங்களிலும், மந்த்ரி முதலானோர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்" என ராஜநீதிகளைக் கேட்கிறான். ப்ரஹ்லாதன் "அப்பா! ஆசார்யர் ஸாம, தான பேத தண்டங்களைக் கற்பித்ததெல்லாம் உண்மையே. ஆனால் பகைவன் என்ற ஒருவனே இல்லாத நிலை ஏற்பட்டால் இவையெல்லாம் எதற்கு. இறைவன் அனைவரிடத்திலுமிருக்கிறான் என்பதை உணர்ந்தால் பகையுணர்வு ஏது. மேலும் இத்தகைய கல்விகள் வெறும் வார்த்தைகளால் நிறைந்து நிரந்தரமில்லாத இம்மைப் பயன்களையேக் கூறுகின்றன. இவைகளைக் கல்வியென்றே நான் நினைக்கவில்லை"

உலகில் எவரும் பொருளையும், பதவியையும் வேண்டிக்கொண்டேதானிருக்கின்றனர். ஆனால் எல்லாருக்கும் எல்லாமே கிடைத்து விடுவதில்லை. ஒரு சாஸ்த்ரத்தையும் தெரிந்து கொள்ளாமல், ஒரு முயற்சியுமில்லாமல், அறிவும், சூரத்தன்மையும் எதுவுமின்றி சிலருக்கு ராஜ்யமும், செல்வமும் கிடைத்துவிடுகிறது. மற்றொரு புரம் இவையனைத்துமிருப்பவர்கள் ஒன்றும் கிடைக்காமல் விரக்தியிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டும் இருக்கின்றனர். வெவ்வேறான உருவம், பிறப்பு, தொழில்களை உடைய ஒவ்வொரு உயிரிலும் அந்தர்யாமியாக இறைவனே இருக்கிறான். எனவே ஸமத்வ புத்தியுடன் புண்யங்களைச் செய்து வருபவர்க்கே பாக்யத்தால் இவைகள் கிடைக்கின்றன. எனவே துர்ப்புத்தியை விட்டு விஷ்ணுவின் உடலாக இருக்கும் அனைத்து உயிர்களிடமும் அன்பைக் காட்டி, அவனையே பஜிக்கவும் வேண்டும்" எனப்பலவாறு உபதேஸிக்கிறான்.

பலமுறை, பல முயற்சிகளில் தோற்ற ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதனின் வார்த்தைகளால் வெகுண்டெழுந்து ப்ரஹ்லாதனை மார்பில் ஓங்கி உதைத்துத் தள்ளி, விப்ரஸித்தி, ராஹு, பலன் என்ற தன் வேலைக்காரர்களைக் கூப்பிட்டு ப்ரஹ்லாதனை நாக பாசங்களால் கட்டிக் கடலில் போடச்சொல்கிறான். இந்தத் தீச்செயலால் கடல் பொங்கி ஊரை அழிக்க வருகிறது. மலைகளைப் போட்டாவது கடலிலிருக்கும் பிள்ளையைக் கொல்லச் சொல்கிறான் தகப்பன். ஊரிலுள்ள பெரும் மலைகளையும் நூற்றுக்கணக்கில் கொண்டு வந்து கடலில் போட்டும் ப்ரஹ்லாதனுக்கு ஒன்றுமே நேரவில்லை. அப்போதும் அவன் தன்னிலை மறந்து மஹாவிஷ்ணுவையே போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறான்.

No comments:

Post a Comment