Thursday, December 31, 2009

விஷ்ணு புராணம் - 20

01_20. நாகபாசங்கள் அறுகின்றன. கடல் கொந்தளித்தது. கடல்வாழ் துர்ப்ராணிகள் மதி மயங்கின. பூமியும் நடுங்கியது. ப்ரஹ்லாதன் கரையேறினான். மீண்டும் தன்னிலைக்கு வந்தான். மஹாவிஷ்ணு ப்ரத்யக்ஷமாகத் தோன்றுகிறார். பரபரப்புற்ற ப்ரஹ்லாதனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. நா குழறுகிறது. பகவானே அவன் நிலையான பக்திக்கு மகிழ்ந்து வரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். ப்ரஹ்லாதன் அப்போதும் "ஸ்வாமி, உலகில் உள்ள பல பிறவிகளில் ஏதாவது ஒன்றை அருள்வீராக. இதுதான் வேண்டுமென்றில்லை. ஆனால் உன்னிடம் நிலையான பக்தியும், நினைவையும் அருள்வீராக. உன்னிடம் பக்தியில்லாத உயர் பிறவியும் தாழ்ந்ததே. உன் நினைவிருந்தால் எந்த பிறவியும் உயர்ந்ததே. பகுத்தறிவில்லாதவகள் எப்படி உலக போகங்களில் பற்றோடிருப்பார்களோ அவ்வாறே எனக்கு உன்னிடம் பக்தியை அருள வேண்டும்" என்றே வேண்டுகிறான்.

பகவான் சிரித்துக் கொண்டே "குழந்தாய்! இருப்பதையும், இருக்கப்போவதையுமே மீண்டும் நீ கேட்கிறாய். வரம் என்பது இல்லாததைக் கேட்டுப் பெறுவது. எனவே வேறு ஏதாவதொன்றைக் கேள்" என்கிறார். ப்ரஹ்லாதன் தனக்கிழைத்த தீங்குகளால் தன் தந்தைச் சேர்த்துக் கொண்ட பாவங்கள் அழிய வேண்டிப் பெறுகிறான். அதைத் தந்த பகவான் மேலும் கேட்கச் சொல்கிறார். மீண்டும் பக்தியையே கேட்டுப் பெறுகிறான். பரமனும் வரங்களையளித்து விட்டு மறைகிறார். அப்பாவிடம் வந்து சேர்ந்த குழந்தையை ஹிரண்யன் மகிழ்ச்சியோடு கட்டியணைத்து சேர்ந்து வாழத் தொடங்கி விடுகிறான் இப்போது. ஆனால் ப்ரஹ்மாவின் சாபத்தால் துர்புத்தி கொண்டு மீண்டும் சில காலம் கழித்து ப்ரஹ்லாதனை கொல்லும் முயற்சிக்கிறான் ஹிரண்யகசிபு. இதைப் பொறுக்காத பரமன் ந்ருஸிம்ஹாவதாரம் கொண்டு துஷ்ட நிக்ரஹத்தையும், ஸிஷ்ட பரிபாலனத்தையும் செய்து விடுகிறான். ப்ரஹ்லாதன் அஸுரர்களுக்கு அரசனாகிறான். ராஜ்ய போகங்களையும், புத்ர, பௌத்ரர்களையும் பெற்று அனுபவிக்கிறான். முன்வினைப் பயன்களான புண்ய, பாபங்களையும் கடைசியில் விட்டொழித்து பகவத் த்யானத்தில் மோக்ஷத்தை அடைந்தான்.

இந்த ப்ரஹ்லாத சரித்ரத்தைக் கேட்பவனின் பாபங்கள் தொலைகின்றன. பௌர்ணமீ, அமாவாஸ்யை, அஷ்டமீ, த்வாதசீ திதிகளில் இதைப் படிப்பவர்களுக்கு இருமுகங்களுடன் (ப்ரஸவ காலத்தில் இப்படி இருக்கும்) தங்கக் கொம்புடைய பசுவை க்ரஹண காலத்தில் குருக்ஷேத்ரத்தில் தானம் செய்தால் எவ்வளவு பலன் உண்டோ அந்த பலன் கிடைக்கும். ப்ரஹ்லாதன் பக்தியில் லயித்து எப்படி பெருமான் அவனைக் கஷ்டங்களிலிருந்து காத்தாரோ அதைப்போல அவனுடைய புண்ய கதையைக் கேட்பவர்களையும் காப்பார். அவன் பல காலம் கஷ்டங்களுக்கிடையே, அதனோடே பகவத் தயானம் செய்து பெற்ற புண்யங்களை அவன் கதையைக் கேட்ட போதே நாமடையலாம் என்கிறார் பராசர மஹரிஷி.

No comments:

Post a Comment