Thursday, December 31, 2009

விஷ்ணு புராணம் - 18

01_18. இப்படிப் பல சமயங்களில் உடன் படிக்கும் அஸுரச் சிறுவர்களுக்கு உபதேசம் செய்து வந்தான் ப்ரஹ்லாதன். ஹிரண்யனிடம் பயம் கொண்ட அந்தச் சிறுவர்கள் இதை அஸுரேந்த்ரனிடம் கூறி விட்டனர். அவன் உடனே சமையற்காரர்களை அழைத்துத் தன் புத்ரனைக் கொன்று விடும் படி கூறுகிறான். ப்ரஹ்லாதன் தான் கெட்டது மட்டுமன்றி, மற்றவர்களையும் கெடுக்கிறான். எனவே இந்த துஷ்டனை உணவுகளில் ஹாலகால விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொன்று விடுங்கள். அதை அவனுக்குத் தெரியாமல் செய்து விடுங்கள். தெரிந்து விட்டால் ஏற்கனவே பல முறை தப்பினாற்போல் இந்த முறையும் தப்பி விடுவான். கவலைப்படாமல் இதைச் செய்யுங்கள் என்று அரசன் கட்டளையிட்டான்.

அரசன் ஆணையை சிரமேற்கொண்ட சமையற்காரர்களும் அவ்வாறே செய்து, உணவு வகைகளைப் ப்ரஹ்லாதனிடம் சேர்ப்பித்தனர். ப்ரஹ்லாதன் எப்போதும் இறைவனை நினைத்தே ஒவ்வொரு பொழுதையும் கழிப்பவன், செயல்களைச் செய்பவன். இப்போது தன் உணவை இறைவனுக்கு அர்ப்பணித்து, ப்ரசாதமாக அதை உண்டான். விஷமுட்பட அனைத்தும் நன்கு ஜரித்தன ப்ரஹ்லாதனுக்கு. சமையற்காரர்கள் மூலம் இதையறிந்த ஹிரண்யகசிபு க்ருத்யை செய்து தாங்களே ப்ரஹ்லாதனைக் கொன்று விடுகிறோமென்று முன்பு தன்னிடம் கூறிச் சென்ற சண்டமர்க்கர்களை அழைத்து அதைச் செய்யச் சொன்னான். அவர்களும் துயரத்துடனே ப்ரஹ்லாதனிடம் சென்று கடைசி முறையாக அன்பாகச் சொல்லி விளங்க வைப்போம் என்று செல்கின்றனர்.

"நீண்ட ஆயுளுடையவனே! குழந்தாய், மூவுலகிலும் ப்ரஸித்தமான ப்ரஹ்மகுலத்தில், அதிலும் அஸுரேந்த்ரனான ஹிரண்யகசிபுவிற்குப் பிறந்துள்ளாய் நீ. உனக்கு தேவர்களாலோ அல்லது அந்த விஷ்ணுவினாலோ ஆக வேண்டியது என்ன. நீயும் மூவுலகிற்கும் ரக்ஷகனாகப் போகிறாய். எனவே அப்பாவின் பகைவர்களைத் துதிப்பதை விட்டு, உன் தந்தையைத் துதி. அவரே உனக்குச் சிறந்த குரு. எனவே அவரைத் துதித்து, அவர் விருப்பப்படி நட" என்று சுக்ராச்சார்யாரின் புத்ரர்கள் ப்ரஹ்லாதனிடம் கொஞ்சிக் கூறுகின்றனர். ப்ரஹ்லாதன் "மரீசி மஹரிஷி முதல் வளர்ந்து வந்த இந்த ப்ரஹ்ம குலம் தாங்களும், மற்ற மூவுலகும் கூறுவது போல் புனிதமானதே. என் தந்தையும் அவ்வாறே மிகுந்த பராக்ரமம் உடையவர், சிறந்த குரு, பூஜிக்கத் தக்கவரே. நானும் அவ்வாறே எந்த குறையுமின்றி அவ்வாறே அவரிடம் பணிவுடனும், உபசரிப்புடனும் நடந்து வருகிறேன். ஆனால் நாராயணனால் ஆகவேண்டியதொன்றுமில்லை என்பதை உங்களைத் தவிர வேறெவரும் இப்படிக் கூற மாட்டார்கள்" என்கிறான்.

"ஆச்சார்யர்களே! அனந்தனாலே என்னப் ப்ரயோஜனமென்று வெகு அழகாகக் கூறுகிறீர்களே. நீங்கள் வருந்தமாட்டீர்களென்றால் நான் அவற்றை உங்களுக்கு சொல்கிறேன். நால்வகைப் புருஷார்த்தங்களான தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களை மரீசி, தக்ஷன் முதலானோருக்கும் அளிப்பவன் அந்த அனந்தனே. தத்துவ ஞானிகளும் அவனை ஆராதித்தே பந்தங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தைப் பெற்றனர். நீங்களோ அவனால் என்ன பயன் என்கிறீர்கள். நீங்கள் எனக்கு ஆசார்யர்கள். நீங்கள் எனக்கு எதை வேண்டுமானாலும் தாராளமாகக் கூறலாம். ஆனால் அவை எனக்கு எந்த மாறுதலையும் உண்டாக்காது. என் சிறிய விவேகத்தின் படி என் கடைசி கூற்றின்படி அவனே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்பவன். எங்கும் நிறைந்து அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கப்படுவதாகவும் இருப்பதும் அவனே. குழந்தையாதலால் என்னை மன்னியுங்கள்" என்று மேலும் அவர்களிடன் கூறுகிறான்.

அவர்கள் கோபம் கொண்டு "ஏ அறிவில்லாதவனே, உன் தந்தையிடமிருந்து உன்னை எதற்காக மீட்டோமென்பதை நீ அறியவில்லை. உனக்கு அதற்கான அறிவும் இல்லை. பயத்தால் பகைவனைப் போற்ற மாட்டாய் என்றல்லவா உன்னைக் காத்தது. துர்ப்புத்தி உடையவனே! நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் நாங்கள் ஏவும் க்ருத்யை நிச்சயமாக உன்னைக் கொன்று விடும். எனவே நாங்கள் சொல்வதை கேள்" என்று மிரட்டுகின்றனர். ப்ரஹ்லாதன் இதைக் கேட்டு சிரித்துக் கொண்டே "நானா அறிவில்லாதவன். ஒருவராலும் ஒருவரைக் காக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒருவன் செய்யும் கார்யங்களே அவனை அழிக்கவும், காக்கவும் செய்கின்றன. அவன் செய்யும் நற்கார்யங்கள் அவனைக் காக்கின்றன. தீயச்செயல்கள் அவனை மெல்ல அழிக்கின்றன. நீங்கள் இதை அறியவில்லையே. மேலும் நீங்கள் என்னைக் காத்ததாகவும், இனி அழிக்கப்போவதாகவும் வேறு கூறுகிறீர்கள்" என்கிறான்.

ப்ரஹ்லாதனின் இந்த சொற்களால் கோபித்த சண்டமர்க்கர்கள் "இவன் தந்தைக்கு நான் ப்ரோஹிதர்கள், இவனுக்கு நாம் ஆசார்யர்கள், ஆனால் இவனோ நமக்கே உபதேஸிக்கிறான். இதை விட மானக்கேடு என்ன இருக்கிறது" என்று க்ருத்யையைச் செய்து ஏவுகின்றனர். நெருப்பு மாலையுடன் பூமியதிர வந்த அந்த பயங்கரமான பூதம் எஃகினாலான ஒரு சூலாயுதத்தை ப்ரஹ்லாதன் மீது வீசி எறிந்தது. அது ப்ரஹ்லாதன் மார்பில் பட்டு சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது. ப்ரஹ்லாதன் பக்திக்கு முன் தோற்ற அந்த க்ருத்யை மீண்டும் ஏவியவர்களையே வந்து எரித்தது. தன் ஆசார்யர்கள் துன்பப் படுவதைக் கண்ட ப்ரஹ்லாதன் பதறினான். ஆசார்யர்களைக் காக்குமாறு பரமனை வேண்டினான்.

"க்ருஷ்ணா, அனந்தா, என் ஆசார்யர்கள் காத்தருள். உலகைப் படைத்து, அதனையே உடலாகக் கொண்டு, எங்கும் வ்யாபித்து நிற்கும் ஜனார்த்தனா! மந்த்ரத்தாலுண்டான இந்தத் தீயிலிருந்து இந்த ப்ராஹ்மணர்களைக் காப்பாயாக. நீ எங்கும் நிறைந்திருப்பதும், நீயே ஸர்வரக்ஷகன் என்றும் என்னைக் கொல்ல வந்த அஸுரர்கள், விஷம் கொடுத்தவர்கள், தீயில் தள்ளியவர்கள், தந்தங்களால் முட்டிய திக்கஜங்கள், விஷப்பாம்புகள் என அனைவரிடத்திலும் நான் நண்பர்களிடம் இருப்பது போல் ஸமத்வ பாவத்துடன் இருந்தது உண்மையானால் இந்தப் ப்ரோஹிதர்களுக்கு ஒன்றும் நேரக்கூடாது" என்று கண்டிப்புடனும், நம்பிக்கையுடனும் வேண்டுகிறான். பரமன் அருள் பாலிக்கிறான். தீயிலிருந்து ஆச்சார்யர்கள் தீங்கின்றி பொலிவுடன் வெளிவருகின்றனர்.

தங்கள் செய்கையையும், ப்ரஹ்லாதனின் செய்கையையும், பக்தியின் பலனையும் உணர்கின்றனர். நீ நீடூழி வாழ்வாயாக! எதிரிகளே இல்லாமல் இருப்பாயாக. பலம், வீர்யம், பிள்ளை, பேரன், பணம் என அனைத்து ஸம்பத்துடன் கூடி ஸர்வோத்தமனாய் வாழ்வாயாக! என்று ஆசிர்வதிக்கின்றனர். தங்களாலேயே கொல்ல முடியாதவனைக் கண்டு இனி அவனை யாராலும் ஒன்றும் செய்யமுடியாதென்று அறிந்து ஹிரண்யனிடமும் சென்று நடந்தவைகளைக் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment