Thursday, December 31, 2009

விஷ்ணு புராணம் - 15

01_15. இப்படி ப்ரசேதஸ்ஸுக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமியற்றிக்க்கொண்டிருக்கும் போது, நாரதரின் உபதேசத்தால் ப்ராசீனபர்ஹியும் ராஜ்யத்தைத் துறந்து ஞானம் பெற்று யோகத்தில் ஆழ்ந்து விடவே பூமி ரக்ஷனையின்றி இருந்தது. காற்று நுழையவும் இடமின்றி மரங்கள் மண்டின. ப்ரஜைகள் அல்லலுற்றனர். தவம் முடிந்து வந்த ப்ரசேதஸ்ஸுகள் இதைக்கண்டு தங்கள் முகத்திலிருந்தே வாயுவையும், அக்னியையும் உண்டாக்கி மரங்களை அழித்தனர். மரங்களுக்கு அதிபதியான ஸோமன் இந்தச் செயலைக் கண்டு வருந்தி ப்ரசேதஸ்ஸுக்களிடமே சென்று முறையிடுகிறான். மரங்கள் தானே ப்ரஜைகளுக்குத் தேவையான கிழங்கு, பழம், வேர் முதலியவைகளைத் தந்து ப்ரஜா வ்ருத்திக்கு உதவுகின்றவே. இவைகளை ஏன் அழிக்க வேண்டும் என நினைத்தான்.

அரசர்களே! மரங்களின் மீதான கோபத்தை அடக்குங்கள். உங்களுக்குள் ஒரு ஸமரஸ உடன்பாட்டைச் செய்கிறேன். இதோ இந்த மாரிஷை என்ற வ்ருக்ஷங்களுக்குப் பிறந்த பெண்ணை வருங்காலத்தை அறிந்த நான் என் அமுதமயமான கிரணங்களால் வளர்த்து வந்தேன். இவள் மாணிக்கம் போன்றவள். அழகு படைத்தவள். உங்களனைவருக்கும் பத்னியாகப் போகிறவள். இவளிடமிருந்தே தவத்தால் உங்களுக்குண்டான கோபமும், என் கிரணங்களாலுண்டான இவளின் சாந்தி முதலிய குணங்களுடனும் கூடிய தக்ஷன் பிறந்து வம்ச வ்ருத்தியை நன்கு செய்யப் போகிறான். அவன் அக்னிக்குச் சமமான தேஜஸ்ஸுடன் இருப்பான். உங்கள் விருப்பத்தையும் பூர்த்தி செய்யப் போகிறான். இவள் உயர்ந்த குலத்தில் பிறந்தவள். தவத்தினால் தோன்றியவள். தேவஜாதியைச் சேர்ந்தவள். ஆகையால் தயக்கமின்றி இவளையே நீங்களனைவரும் மணந்து கொண்டு வ்ருக்ஷங்களை மன்னித்து விடுங்கள். இவள் வரலாற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். கூறுகிறேன் என்றார்.

முன்பொரு ஸமயம் வேதத்தில் வல்லவரான "கண்டு மஹரிஷி" கோமதி நதிக்கரையில் தவமிருந்து வந்தார். இதைக் கண்ட இந்த்ரன் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இவர் தவத்தைக் கலைக்க ப்ரம்லோசை என்ற அப்ஸரஸ்த்ரீயை தவத்தைக் கலைக்க அனுப்பினான். அவளது சேஷ்டைகளில் தவத்தையும், தைர்யத்தையும், கர்மாக்களையும் விட்ட ரிஷியும் மந்தரத்ரோணி (மந்தரமலையின் நடுப்பாகம்) என்னுமிடம் சென்று அவளுடன் நூறு வருஷங்கள் காம போகங்களை அனுபவித்தார். எனினும் பற்று சற்றும் குறையவில்லை. ப்ரம்லோசை ரிஷியிடம் சென்று தான் வந்து பல நாட்கள் ஆகி விட்டதாகவும், தான் இந்த்ரலோகத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாகவும் கூறுகிறாள். ஆசை தணியாத கண்டு மஹரிஷி அவளை மேலும் சில நாள் தங்கி விட்டு பின் செல்லுமாறு கூறுகிறார். அவர் மீதிருந்த ஆசை, பயம் காரணமாக ப்ரம்லோசையும் அவருடனே இருந்து களிக்கிறாள். மேலும் நூறாண்டுகள் சென்றன. இப்படிப் பல நூறாண்டுகள் சென்று விடுகின்றன. ப்ரம்லோசை திரும்பிச் செல்ல அனுமதி கேட்பதும், மஹரிஷி ஆசையுடன் மறுப்பதுமாக, அவள் இருப்பதுமாக காலம் ஓடுகிறது.

ஒரு நாள் மாலைப் பொழுது. திடீரென்று மங்கையின் தோளிலிருந்து மஹரிஷி விருட்டென்று எழுந்தார். பரபரப்புடன் ஆச்ரமத்தை விட்டு வெளியேறினார். இதைத் திகைப்புடன் கண்ட அப்ஸரஸ் மஹரிஷியை எங்கே செல்கிறீர்கள். ஏன் இந்த பரபரப்பு என்று கேட்கிறாள். சாந்தமாக ஒன்றுமே இவ்வளவு காலம் நடவாதது போல பதிலுரைக்கிறார் மஹரிஷி "இதென்ன கேள்வி. பகல் முடிந்து ஸாயங்காலம் வருகிறது. ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும். உன்னுடன் சல்லாபித்துக் கொண்டிருந்து நித்யகர்மாவை விட்டு விட்டால் பாபம் வந்து விடுமே" என்றெல்லாம் கூற ஆரம்பித்து விட்டார். பல நூறாண்டுகளை ஒரு பகல் பொழுதாகக் கூறிப் பேசும் அவரை ப்ரம்லோசை சிரிப்புடன் பார்த்து "அனைத்து ஸாஸ்த்ரங்களையும் அறிந்த தாங்கள் காலம் எவ்வளவு சென்றது என்பதை மட்டும் அறியவில்லையே. எவ்வளவு நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. எவ்வளவு ஸந்த்யாகாலங்கள் சென்று விட்டன. இதென்ன தாங்கள் ஒரு பகல் பொழுது கழிந்ததாகக் கூறுகிறீர்கள். எவரும் இதைக் கேட்டால் வியப்பார்கள்" என்கிறாள்.

கண்டு மஹரிஷி இதையெல்லாம் நம்பவில்லை. "நல்லவளே! பொய் கூறுகிறாய். இன்று காலை தான் நீ இந்த நதிக்கரைக்கு வந்தாய். அப்போது தான் நாமிருவரும் இந்த ஆச்ரமத்திற்கு வந்தோம். இதோ பகல் முடிந்து மாலையும் வந்து விட்டது. பரிஹஸிக்காமல் உண்மையைக் கூறு" என்றார். அப்ஸரஸ் "நான் வந்த காலை இன்றைய காலையில்லை. இன்றைய காலைக்கும் நான் வந்த காலைக்கும் பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன" என்றாள். நித்யகர்மாக்களை பல காலம் செய்யாமல் விட்டதால் வரும் பாபத்திற்குப் பயந்து நடுங்கியவராய் மஹரிஷி எவ்வளவு காலம் கூடி வாழ்ந்ததில் கழிந்தது என்று அவளை மீண்டும் கேட்கிறார். ப்ரம்லோசை தொள்ளாயிரத்தேழு ஆண்டுகள், ஆறு மாதங்கள் மற்றும் மூன்று நாட்கள் ஆகி விட்டதாகக் கூறுகிறாள்.

மீண்டும் மீண்டும் அவளைக் கெஞ்சி உண்மையை உரைக்கும்படிக் கூறுகிறார் ரிஷி. அவளும் தாங்கள் என்னும் ரமித்திருந்ததில் இவ்வளவு காலம் கழிந்ததென்பது உண்மையே. தாங்கள் மயக்கம் தெளிந்து நித்ய கர்மாக்களை நினைக்கும் இந்த நல்ல நேரத்தில் நான் ஏன் பொய் கூறுவேன். ஆகவே இது உண்மையே என்று விளக்குகிறாள். மஹரிஷி பயத்தில் அழ ஆரம்பித்து விட்டார். தன்னைத்தானே நொந்து கொண்டார். "சேமித்து வைத்த என் தவம் அழிந்து விட்டதே, இது உலகத்தோர் செல்வம் போன்றதன்றே. அந்தணர்க்குரிய வேதமல்லவா என் செல்வம். அது அழிந்து விட்டதே. பகுத்தறிவு அழிந்து விட்டதே. என்னை மயக்கவே இவள் உண்டு பண்ணப்பட்டிருக்கிறாள். எந்த விகாரங்களும் அற்ற அந்த பரப்ரஹ்மத்தை மனத்தையடக்கி நான் அறியச் செய்த தவத்தை, என் புத்தியைக் காமமென்ற பெரும் பூதம் கலக்கிவிட்டது. அது மிகக் கொடியது. வெறுக்கத் தக்கது. நான் செய்த வேதாப்யாஸம், சாந்த்ராயணம் முதலான வ்ரதம் யாவும் அழிந்து விட்டது. நரகத்திற்குக் காரணமான கெட்ட ஸஹவாஸத்தை அல்லவா தேடிக் கொண்டு விட்டேன்" எனப் பலவாறுப் புலம்பி அழ ஆரம்பித்து விட்டார்.

எதிரில் நின்றிருக்கும் ப்ரம்லோசையைக் கோபத்துடன் பார்க்கிறார் மஹரிஷி. "பாவி! என் முன் நிற்காதே! உன் சேஷ்டைகளால் இந்த்ரன் கட்டளையை முடித்து விட்டாய். கோபத்தால் உன்னை எரிக்க வேண்டும் போல இருக்கிறது. ஆனால் ஒருவருடன் ஏழு அடிகள் நடந்தாலே அவர்கள் நண்பர்களாவார்கள். நானோ உன்னுடன் பல நூற்றாண்டுகள் கூடி வாழ்ந்து நட்பு கொண்டு விட்டேன். அதனாலேயே உன்னை அழிக்கவில்லை. உன்னைக் கோபிப்பதும் தவறு. தவறு முற்றிலும் என்னுடையதே, நானே நிந்திக்கப்படவேண்டியவன். புலன்களைக் காக்காமலிருந்து விட்டேன், இந்த்ரியங்களை அடக்கவில்லை. காதலைக் கொண்டாடி உனக்குத் தொண்டனானேன், தவறு என்னுடையதே, ஆனால் உன்னைப் பார்க்காதவரை நான் என் நிலையில் கட்டுப்பாடோடு தானே இருந்தேன், ஆகவே எல்லாம் உன்னால் வந்ததே" என்று கோபம், நிந்தனைகளில் மாறி மாறி இருக்கிறார்.

"இந்த்ரன் விருப்பத்திற்காக என் தவத்தைக் கெடுத்த துஷ்டை நீ. உலகத்தோருக்கு உண்டாகும் மோஹத்திற்கெல்லாம் இருப்பிடமானவள் நீ, எவராலும் வெறுக்கப்பட வேண்டியவள். உன்னிடம் மோஹித்து என்னை இழந்தேனே, என் கண் முன் நில்லாது அப்பால் செல்" என்று அவளிடம் கோபிக்கிறார். ப்ரம்லோசை பெரிதும் நடுங்கி உடல் வேர்த்து அவரிடமிருந்து ஓடி விடுகிறாள். ஆகாய மார்க்கமாகச் செல்லும் அவள் அப்போது ரிஷியால் கருத்தரித்திருந்தாள். பயத்தாலும், நடுக்கத்தாலும் உண்டான வேர்வையை வழியில் இருந்த மரங்களின் இலைகளில் துடைத்தெறிந்தவாறே சென்று கொண்டிருந்தாள். அவளது வீர்யம் அந்த வேர்வைத் துளிகளில் வெளிவந்தவாறு இருந்தது. பல மரங்களில் இருந்த இந்த வீர்யத்தை வாயு சேர்த்துக் கொடுக்க நான் என் கிரணங்களால் போஷித்து வளர்த்து வந்தேன். அந்த கருவிலிருந்து பிறந்த பெண்ணே இந்த மாரிஷை" என்று ஸோமன் அவளது வரலாற்றை ப்ரசேதஸ்ஸுக்களுக்குக் கூறுகிறான்.

இப்படி கண்டு மஹரிஷிக்கும், ப்ரம்லோசைக்கும், வ்ருக்ஷங்களுக்கும், வாயுவிற்கும், எனக்கும் பெண் ஆகிறாள் இந்த மாரிஷை. இவளை ஏற்றுக் கொண்டு நீங்கள் வ்ருக்ஷங்கள் மீதான கோபத்தை விடுங்கள் என்கிறான் ஸோமன். யோகம் கலங்கியதற்கு வருந்திய முனிவர் மீண்டும் புருஷோத்தமம் என்ற பகவான் நித்யவாசம் செய்யும் மலைக்குச் சென்று அவரை ஆராதித்தார். ப்ரஹ்மபாரம் என்ற துதியை ஜபித்து கைகளைத் தூக்கியபடி தவமிருக்கிறார். ப்ரஹ்மபாரஸ்தவத்தை வியந்து அதைத் தங்களுக்குக் கூறுமாறு ஸோமனை ப்ரசேதஸ்ஸுக்கள் கேட்க முதல் மூன்று ச்லோகங்களில் மஹாவிஷ்ணுவின் கல்யாண குணங்களையும், கடைசி நான்காவது ச்லோகத்தில் தனக்குண்டான பாபங்களைத் தொலைக்க வேண்டியும் கண்டு மஹரிஷியால் துதிக்கப்பட்ட அந்த ப்ரஹ்மபாரஸ்தவத்தை ஸோமன் அவர்களுக்குக் கூறுகிறான். மேலும் எவர் அதைத் தினம் பாராயணம் செய்கிறார்களோ அவர்களுடைய காம க்ரோதங்கள் ஒழிந்தழியும் என்று கூறுகிறான் ஸோமன்.

இப்படிப் பிறந்த மாரிஷை முற்பிறவியில் ஒரு ராஜபுத்ரனை மணந்து இள வயதிலேயே குழந்தைகளின்றி விதவையும் ஆகிவிட்டாள். பின் வாழ்வை வெறுத்து மஹாவிஷ்ணுவை ஆராதித்து அவன் தரிசனத்தையும் அருளையும் பெற்றாள். தன் வைதவ்யத்தையும், மகப்பேறின்மையும் கூறி இனி வரும் பிறவிகளில் நீண்ட ஆயுளுடன் கூடிய உயர்ந்த பதிகளும், ப்ரஹ்மாவிற்குச் சமமான ஸத்புத்ரனும், தனக்கும் பிறர் கண்டதும் மயங்கும் அழகும், அயோநிஜையாகவும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். மஹாவிஷ்ணுவும் "அடுத்த பிறவியிலேயே உலகம் புகழும் நற்செயல்களையுடைய பத்து பேர்கள் உனக்குப் பதிகளாவார்கள். நீயும் அழகுள்ளவளாய், அயோநிஜையாகவும் பிறந்து உலகு முழுதும் தன் வம்சத்தை நிறைக்கும் ஓர் உயர்ந்த உத்தமனையும் புத்ரனாகப் பெறுவாய்" என்று அருளினார்.

இப்படிப் பதிகளையும், புத்ரனையும் வரத்தால் அடைந்த மாரிஷையை நீங்கள் அனைவரும் மணப்பதால் ஒரு தோஷமும் இல்லை. அது அவள் வரம் என்று கூறினான் ஸோமன். இந்த விஷயங்களால் தங்கள் கோபமொழிந்து, தெளிந்திருந்த ப்ரசேதஸ்ஸுக்களுக்கு மரங்களும் மாரிஷையை கன்யாதானம் செய்தன. இவர்களுக்குப் பிறந்தவனே தக்ஷன். அவனும் ப்ரஜா ஸ்ருஷ்டியை சராசரங்கள், பல வகைப் ப்ராணிகள் என ஐந்து வர்க்கங்களில் மனதாலேயே ஸ்ருஷ்டித்து ஐம்பது பெண்களையும் படைத்துக், அவர்களில் பத்து பேரை தர்மனுக்கும், பதிமூன்று பேரை காச்யபருக்கும், மீதி இருபத்தேழு பெண்களை (நக்ஷத்ரங்கள்) சந்த்ரனுக்கும் மணம் முடித்தான்.

இந்தப் பெண்களிடமிருந்தே தேவர்கள், தைத்யர்கள், தானவர்கள், நாகங்கள், பசுக்கள், பறவைகள், அப்ஸரஸ்ஸுக்கள், கந்தர்வர்கள் என அனைவரும் உண்டானார்கள். இவர்களிடமிருந்து தான் ஆண், பெண் சேர்க்கையினால் உற்பத்தி என்ற முறையும் உண்டானது. அது வரை மஹாத்மாக்களின் ஸங்கல்பம், தரிசனம், ஸ்பர்சம் இவைகளிலேயே மக்கள் உற்பத்தியாகிக் கொண்டிருந்தனர். பராசரர் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்ததில் மைத்ரேயர் மூன்று ஸந்தேஹங்களைக் கேட்கிறார். முன்பு ப்ரஹ்மாவின் கால் கட்டை விரலிலிருந்து உண்டானதாகக் கூறப்பட்ட நவ ப்ரஜாபதிகளில் ஒருவனான தக்ஷன் இப்போது ப்ரசேதஸ்ஸுக்களின் புத்ரனாகக் கூறப்படுகிறதே அது எவ்வாறு என்கிறார். விரலிலிருந்து தோன்றிய தக்ஷன் ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தைச் சேர்ந்தவன். ப்ரசேதஸ்ஸுக்களின் மகனாகப் பிறந்தது சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் என்கிறார் பராசரர்.

ஸோமனின் மகளான மாரிஷைக்குப் பிறந்த தக்ஷனின் பெண்களை மீண்டும் ஸோமனே மணந்தால் மாப்பிள்ளை வயதில் சிறியவர், மாமனார் வயதில் பெரியவர் என்ற உலக வழக்கும், முறையும் மாறுகிறதே என்று இரண்டாம் கேள்வியைக் கேட்கிறார் மைத்ரேயர். முற்காலத்தில் வயதை ஒட்டி பெரியவர், சிறியவர் என்ற வழக்கு கிடையாது. தவம், ஞானம், பெருமை போன்றவைகளை அனுஸரித்ததே என்கிறார் பராசரர். தக்ஷனின் ஒரு பெண்ணான அனஸூயைக்குப் பிறந்த ஸோமனுக்கு மற்ற பெண்கள் சித்தி முறையில் தானே வருவார்கள். அவர்களை சந்த்ரன் மணப்பது எப்படித் தகும் என்று தன் மூன்றாவது கேள்வியைக் கேட்கிறார் மைத்ரேயர். இவர்கள் தேவ ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், தவத்தால் பாபமற்றவர்களென்பதாலும் பொது விதிமுறைகள் இவர்களுக்குப் பொருந்தாது என்று அதற்குப் பதிலுரைக்கிறார் பராசரர். பின் மைத்ரேயருக்கு தேவ, தானவ, கந்தர்வ, பன்னக, ராக்ஷஸர்களின் பிறப்பை விரிவாகக் கூறுகிறார் பராசரர்.

மனதாலேயே ஸ்ருஷ்டியைத் தொடங்கிய தக்ஷன் அதில் வளர்ச்சி த்ருப்தியாக இல்லாததைக் கண்டு ஆண், பெண்களின் சேர்க்கையாலும் வ்ருத்தியை வகுத்தான். வீரண ப்ரஜாபதியின் மகளான தவத்திலும், பெருமையிலும் சிறந்த அஸிக்னீ என்பவளை மணந்து அவளிடம் ஐயாயிரம் பிள்ளைகளைப் பெற்று, ஹர்யச்வர்கள் என்று ப்ரஸித்தி பெற்ற அவர்களை வம்ச வ்ருத்தி செய்யச் சொன்னான் தக்ஷன். அதற்கு முயற்சி செய்ய எண்ணிக் கொண்டிருந்த அவர்களிடம் நாரதர் சென்று எங்கும் எப்போதும் ஸஞ்சரிக்கவும், எதையும் அறிந்து கொள்ளவும் சக்தி பெற்ற நீங்கள் உலகின் மேல், கீழ், அளவுகள் முதலியவைகளை அறிந்து கொள்ளாமல் ஸ்ருஷ்டி செய்வது ஏன், அவைகளை முதலில் தெரிந்து கொண்டு பின் ஸ்ருஷ்டியை ஆரம்பிக்கலாமே என்று உபாயம் கூற, அதையே சரியென்று கலந்து முடிவு செய்து, அதற்காகச் சென்ற அவர்கள் திரும்பவே இல்லை.

இதையறிந்து தக்ஷன் மீண்டும் சபளாச்வர் என்ற ஆயிரம் பேரை மீண்டும் பெற்றான். இவர்களையும் நாரதர் அதே போல் உபதேஸித்தனுப்பி வைத்து விடுகிறார். அவர்களும் திரும்பவில்லை. இங்கு "தூரதேசம் சென்ற தமையன்மார்களைத் தம்பிகள் தேடிச் செல்வது புத்திசாலித்தனமல்ல" என்றும் உபதேஸிக்கிறார் பராசரர். இப்படித் தன் வம்சத்தின் அழிவைக் கண்ட தக்ஷன் நாரதரைப் பார்த்து அவரும் அழியக்கடவது அல்லது கர்ப்பத்தில் வஸித்துப் பிறக்கக்கடவது என்றும், மேலும் நிலையான இடமின்றி எங்கும் சுற்றித் திரியவும் சபித்து விடுகிறார்.

இதன்பின் தக்ஷன் மீண்டும் அஸிக்னியிடம் அறுபது பெண்களைப் பெற்றான். இதில்தான் பதின்மரைத் தர்மனும், பதின்மூவரைக் காச்யபரும், இருபத்தெழுவரைச் சந்த்ரனும், நால்வரை அரிஷ்டநேமியும், பஹுபுத்ரன், அங்கிரஸ், க்ருசாச்வன் ஆகியோர் தலா இருவரையும் மணந்தனர். அருந்ததீ, வஸு, ஜாமி, லங்கா, பானு, மருத்வதீ, ஸங்கல்பா, முஹூர்த்தா, ஸாத்யா, விச்வா என்ற பத்து பேர்கள் தர்மனின் மனைவிகள். விச்வேதேவர்கள் விச்வாவிற்கும், ஸாத்யர்கள் ஸாத்யாவிற்கும், மருத்வான்கள் (wind) மருத்வதிக்கும், வஸுக்கள் வஸுவிற்கும், முஹூர்த்தாபிமானி தேவர்கள் முஹூர்த்தாவிற்கும், பானுக்கள் (suns) பானுவிற்கும், கோஷாபிமானி தேவன் (arc of heavens) லங்காவிற்கும், நாகவீதி (milky way)என்னும் தேவயானமார்க்காபிமானி தேவன் ஜாமிக்கும், ப்ருத்வியில் உள்ள அனைத்தும் அருந்ததீக்கும், ஸங்கல்பாவிற்கு ஸங்கல்பனும் புத்ரர்களாகப் பிறந்தனர்.

ஆபன், த்ருவன், ஸோமன், தர்மன், அனிலன், அனலன்(அக்னி), ப்ரத்யூஷன் (day-break), ப்ரபாஸன் (light) என்ற அஷ்டவஸுக்களில் ஆபனுக்கு வைஸ்தப்தன், ச்ரமன்(weariness), ச்ராந்தன்(fatigue), துனி (burthen)என்பவர்களும், த்ருவனுக்குக் காலனும்(time), ஸோமனுக்கு வர்ச்சஸ்ஸும்(light), தர்மனுக்கு மனோஹரையிடம் த்ரவிணன், ஹுதஹவ்யன், சிசிரன், ப்ராணன், ரமணன் என்பவர்களும், அனிலனுக்கு(wind) சிவையிடம் புரோகவன், அவிக்யாதகதி(untraceable motion)என்ற இருவரும், ருத்ரனிடமிருந்து வெளிவந்த வீர்யத்தை அக்னி வாங்கி கங்கையில் விட, அது நாணற்புதரில் ஒதுங்கி அதிலிருந்து ஸுப்ரஹ்மண்யனும் பிறந்தான், அவனுக்கு க்ருத்திகை என்னும் நக்ஷத்ரப் பெணகள் பால் கொடுத்தார்கள். ஆக அக்னிக்கும் புத்ரன் ஸுப்ரஹ்மண்யன். ஸுப்ரஹ்மண்யனின் முதுகிலிருந்து அவன் தம்பிகளாக சாகன், விசாகன், நைகமேஷன் என்பவர்கள் பிறந்தார்கள்.

ஏழாவது வஸுவான ப்ரத்யூஷனுக்கு தேவல மஹரிஷி பிறந்தார். இவருக்கு ப்ருஹஸ்பதி என்ற பிள்ளையும், ஒரு பெண்ணும் பிறந்தார்கள். இவளே பிறகு எட்டாவது வஸுவான ப்ரபாஸனுக்குப் பத்னியானாள். இவள் மகனே தேவதச்சனான விச்வகர்மா, அஜைகபாத், அஹிர்புத்ன்யன், த்வஷ்டா, ருத்ரன் என்பவர்கள். த்வஷ்டாவிற்கு விச்வரூபன் பிறந்தான். ருத்ரனைச் சேர்ந்த முக்யமானவர்கள் ஹரன், பஹுரூபன், த்ர்யம்பகன், அபராஜிதன், வ்ருஷாகபி, சம்பு, கபர்தீ, ரைவதன்,ம்ருகவ்யாதன், சர்வன், கபாலி என்ற பதினோரு பேர்கள். இவர்கள் த்ரிலோகாதிபதிகள். அதிதி, திதி, தனு, அரிஷ்டா, ஸுரஸா, கஷா, ஸுரபி, வினதா, தாம்ரா, க்ரோதவசா, இலா, கத்ரூ, முனி என்ற பதிமூன்று தக்ஷ புத்ரிகளே காச்யபரின் மனைவிகள்.

சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் துஷிதர் என்ற பன்னிரண்டு தேவர்கள் தமக்குள் கலந்தாலோஸித்து அடுத்த வைவஸ்வத மன்வந்த்ரத்தில் அதிதியின் கர்ப்பத்தை அடைந்து நன்மையடைய உறுதி செய்து கொண்டனர். இவர்களே ஏழாவது வைவஸ்வத மன்வந்த்ரத்தில் அதிதியிடம் விஷ்ணு, இந்த்ரன், அர்யமா, தாதா, த்வஷ்டா, பூஷா, விவஸ்வான், ஸ்விதா, மித்ரன், வருணன், அம்சு, பகன் என்று பெயர் பெற்ற த்வாதச ஆதித்யர்களாகப் பிறந்தார்கள். அடுத்த திதியின் வம்சம் விரிவானதும், ப்ரஹ்லாத சரித்ரத்தை அடக்கியதுமாதலால் அதைப் பிற்பாடு கூற முடிவு செய்தார். சந்த்ரனின் இருபத்தேழு மனைவிகளுக்கும் பல புத்ரர்கள் பிறந்தனர். அரிஷ்டனேமியின் நான்கு மனைவிகளுக்கும் பதினாறு பிள்ளைகள் பிறந்தனர். பஹுபுத்ரனின் மனைவியர் இருவரும் காற்று, வெயில், மழை, துர்பிக்ஷம் இவைகளுக்குக் காரணமான நான்கு மின்னல்களை கபிலம், ரக்தம், பீதம்(மஞ்சள்), வெண்மை நிறங்களில் பெற்றார்கள்.

ஆங்கிரஸின் மனைவிகள் இருவரும் ப்ரத்யங்கிரஸம் என்று மஹரிஷிகளால் போற்றப்படும் முப்பது மந்த்ரங்களின் தேவதைகளைப் பெற்றனர். ப்ருசாச்வனின் மனைவியர் இருவரும் திவ்யாஸ்த்ர தேவதைகளைப் பெற்றனர். இப்படிக் கல்பத்தின் ஆரம்பத்தில் பிறந்த முப்பத்து மூன்று வகை தேவர்களும் ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் அவர்கள் இஷ்டத்தில் பிறந்து வருகிறார்கள். காச்யபரின் மனைவிகளுள் திதிக்கு ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் என்ற இரு பிள்ளைகளும், ஸிம்ஹிகா என்ற மகளும் பிறந்தனர். இவள் விப்ரஸித்தி என்ற அஸுரனுக்கு மனைவியானாள். ஹிரண்யகசிபுவிற்கு அனுஹ்லாதன், ஹ்லாதன், ப்ரஹ்லாதன், ஸம்ஹ்லாதன் என்ற நான்கு பிள்ளைகள். இதில் ப்ரஹ்லாதன் தர்மபுத்தி உள்ளவன். தன் உடலைப் போல மக்களைக் காப்பவன். ஹிரண்யகசிபுவின் பல தீமைகளுக்கு ஆளானவன். தன் வாழ்வை அச்சுதனுக்கு அர்ப்பணித்தவன்.

No comments:

Post a Comment