Thursday, December 17, 2009

விஷ்ணு புராணம் - 5

01_05. ஸ்ருஷ்டி க்ரமம்: முதலில் செடி, கொடி, மரம் எனத் தாவரங்களே படைக்கப்பட்டன. முன்பிருந்த உலகங்களைப் போலவே மீண்டும் அனைத்தையும் படைக்க நினைத்த ப்ரஹ்மன் அதற்காக தவமும் இருந்தான். ஆனாலும் முதலில் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட இந்த தாவரங்கள் ப்ரஹ்மனின் தமோ குணத்தால் ஓரறிவு உள்ளவைகளாகவே இருந்தன. சப்தம் முதலிய வெளி விஷயங்களும், ஸுக, துக்கங்களென்ற உள் விஷயங்களும் இவைகளறியா. ஆனாலும் நீரைத்தேடி வேர் செல்கிறது. வெட்டினால் மீண்டும் முளைக்கிறது. உரமிட்டால் உற்சாகத்தோடு வளரவும் செய்கிறது. எனவே இவைகளுக்கும் அறிவு உண்டென்றே கூறவேண்டும்.

உலகம் யாகங்களால் த்ருப்தி செய்விக்கப்பட்டு வ்ருத்தியடையவேண்டுமென ப்ரஹ்மன் நினைத்தான். ஆனால் த்யானம் போதாததால் யாகம் செய்யத் தகுதியற்ற தாவரங்கள் தோன்றின. எனவே ப்ரஹ்மன் மீண்டும் த்யானம் செய்து, ஸ்ருஷ்டியை ஆரம்பித்தார். இப்போது அவரது இரு பக்கங்களிலுருந்தும் ஒரு குளம்புள்ள கழுதை, குதிரை, கோவேறுக்கழுதை, காட்டெருமை, வெள்ளை மான் போன்ற ஆறு வகை ம்ருகங்களும், இரட்டைக் குளம்புள்ள ஆடு, மாடு, எருமை, பன்றி, கவரிமான், கருமான், ஒட்டகம், செம்மறியாடு முதலிய ஒன்பது வகைகளும், ஐந்து நகங்களையுடைய நாய், நரி, முயல், முள்ளம்பன்றி, சிங்கம், குரங்கு, யானை, பல்லி, முதலை, ஆமை, புலி, பூனை முதலான பதிமூன்று வகைகளுமாக ஆக மொத்தம் 28 வகை ம்ருகங்கள் பகுத்தறிவின்றி தோன்றின. இவைகள் ப்ரஹ்மாவினிடமிருந்து குறுக்காகத் தோன்றியதாலும், குறுக்காக வளரும் தன்மையுடையனவாகவும் இருப்பதால் இவைகள் திர்யக் (குறுக்கு) ஸ்ரோதஸ்ஸுக்கள் எனப்படுகின்றன.

இவைகளாளும் உலக யாத்ரை ஒழுங்காக நடைபெறாது எனத் த்யானித்தபோது, அவன் மேல் பாகத்திலிருந்து ஊர்த்வ ஸ்ரோதஸ்ஸுக்களெனப்படும் தேவர்கள் தோன்றினர். இவர்கள் ஸத்வகுணம் மிகுந்தவர்கள். பூமியைத் தீண்டாதவர்கள். அக்ஞானமற்றவர்கள். ஸுகமும், ப்ரீதியுமுடையவர்கள். முன்னம் செய்த ஸ்ருஷ்டியை விட இதில் ப்ரஹ்மனும் மகிழ்ந்தான். ஆனாலும் பூர்ண த்ருப்தியடையவில்லை. ஏனெனில் ஸுகவாஸிகளான இவர்கள் யாகம் முதலான கர்மங்களில் கவனம் செலுத்தவில்லை.

இப்போது மனிதர்கள் ப்ரஹ்மனின் மத்யத்திலிருந்து அர்வாக்ஸ்ரோதஸ்ஸுக்களென்ற பெயருடன் பூமியில் உண்டாயினர். இவர்கள் ஞானம் மிகுந்தவர்களாக யாகம் முதலிய கர்மாக்களை செய்பவர்களானாலும், தமோகுணத்தால் பல துன்பங்களுக்கு ஆளானார்கள். ரஜோகுணத்தால் அடிக்கடி ஏதாவது வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.

இப்போது த்ருப்தியடைந்த ப்ரஹ்மன் உலக யாத்ரைக்காக தாவரங்களுக்கு அவித்யையையும், ம்ருகங்களுக்கு இந்த்ரிய வதத்தையும், தேவர்களுக்கு ஒன்பது துஷ்டிகளையும், மனிதர்களுக்கு எட்டு ஸித்திகளையும் படைத்தான். இதற்கு அனுக்ரஹ ஸ்ருஷ்டி என்று பெயர். இதன் பின் கௌமார ஸ்ருஷ்டி எனப்படும் ஸனக, ஸனந்தன, ஸனத்குமார, ருத்ரர்களையும் படைத்தான். ஆக ஸ்ருஷ்டி தாவர, திர்யக், தேவ, மனுஷ்ய, அனுக்ரஹ, கௌமார ஸ்ருஷ்டிகள் என ஆறு வகைப்படும். இவைகளுக்கு முன்பாக மஹத், தன்மந்த்ரங்கள் மற்றும் உணர்ச்சிகளையும் சேர்த்து ஒன்பதாகவும் கூறுவர்.

தமோ குணம் மிகுந்திருந்த ஓருருவத்தில் இருக்கும்போது ப்ரஹ்மனின் இடுப்பிலிருந்து சிலர் தமோ குணத்துடனேயே தோன்றினர். இவர்களே அஸுரர்கள். இவர்களுக்கு இரவில் பலம் அதிகம், இரவிலேயே இவர்களுக்கு செய்யப்படும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. மற்றொரு சமயம் சந்தோஷத்துடன் இருந்த உருவின் முகத்திலிருந்து சிலர் தோன்றினர். இவர்கள் தேவர்கள். பகலில் இவர்களுக்கு பலம். பூஜைகளும் பகலிலேயே செய்யப்படுகின்றன. மற்றொரு சமயம் ஸத்வ குணத்தோடே தன்னைப் பிதாவாக நினைத்துக்கொண்டிருந்த போது, அவரின் பக்கங்களிலிருந்து சிலர் தோன்றினர். பிதாவாகத் தன்னை நினைத்துக் கொண்டிருந்த போது இவர்கள் பிறந்ததால் இவர்கள் பித்ரு தேவதைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மாலை சந்திக்கு முன்னுள்ள அபராஹ்ன காலத்தில் பலம். அதனாலேயே ச்ராத்தம், தர்ப்பணம் முதலியவைகள் இந்த காலத்தில் செய்யப்படுகின்றன.

இதேபோல் ரஜோகுணத்திலிருந்த போது காலைச்சந்தியில் பலமுள்ள ரஜோகுணமுள்ள மனுஷ்யர்கள் பிறந்தனர். மற்றொரு ஸமயம் தமோகுணம் மிகுந்திருக்கையில் ஸ்ருஷ்டிக்க ஆரம்பித்தபோது ப்ரஹ்மனுக்குப் பசியும், அதனால் கோபமும் உண்டானது. அந்த நிலையில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட சிலர் மெலிந்து, மிகுந்த கோபத்துடன், தாடி, மீசையுடன் பயமுறுத்தும் உருவில் உண்டானார்கள். அவர்கள் பசியுடனும், கோபத்துடனும் ப்ரஹ்மனையே உண்ண நினைத்தார்கள், இன்னும் சிலர் அவரை விட்டு விடுங்கள், அவர் காப்பாற்றப்பட வேண்டியவர் என ஏளனம் செய்து கொண்டிருந்தனர். இவர்களே ராக்ஷஸர்கள் மற்றும் யக்ஷர்கள். இவர்களைக் கண்டு மனம் வருந்திய ப்ரஹ்மனின் தலையிலிருந்து மயிர்கள் உதிர்ந்தன. அவைகள் ஊர்ந்து சென்றமையால் பாம்புகள் என்றும் அஹி (தலையிலிருந்து ஹீனங்களானவை) என்றும் அழைக்கப்பட்டன. இப்படி இன்னும் பிசாசர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்ஸுகள், கின்னரர்கள், நீரில், நிலத்தில், க்ராமத்தில், காட்டில் வாழும் மிருகங்கள்,பக்ஷிகள், பூச்சிகள் எனப் பலவற்றையும் முன்பிருந்த கல்பங்களில் இருந்தவாறே வேதங்களைக் கொண்டு படைத்தார்.


No comments:

Post a Comment