Thursday, December 31, 2009

விஷ்ணு புராணம் - 12

01_12. ரிஷிகள் கூறியவைகளை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்ட த்ருவன் அப்போதே அனைத்தையும் ஒழித்தவனாய் யமுனைக் கரையின் மதுவனத்தை அடைகிறான். மிகுந்த புண்யஸ்தலமான இது மது என்ற அஸுரன் வஸித்ததால் இந்த பெயரைப் பெற்றது. மதுவின் புத்ரன் லவணனை சத்ருக்னர் அழித்து மதுரை நகரை இங்கு ஏற்படுத்தினார். ஆதியில் வாமனன் தவம் செய்து ஸித்தி பெற்ற ஸித்தாச்ரமமும் இதுவே. பகவன் நித்யமாயிருக்கும் ஸ்தலம் இது. வேறெதிலும் மனதைச் செலுத்தாமல், மஹாவிஷ்ணுவை ஹ்ருதயத்தில் நிறுத்தி, ரிஷிகள் உபதேஸித்த மந்த்ரத்தை ஜபிக்க ஆரம்பித்தான் த்ருவன்.

பரமன் துணையுடன் தவம் தொடர்ந்தது. அவன் இடக்காலை ஊன்றித் தவம் செய்த போது பூமி இடப்பக்கமும், வலக்காலை ஊன்றித் தவம் செய்த போது பூமி வலப்பக்கமும் தாழ்ந்தது. பின் கட்டை விரலை மட்டும் ஊன்றித் தவத்தைத் தொடர்ந்தான். அப்போது பூமி நடுங்கியது. மலைகள் நிலை குலைந்தன. ஆறு, கடல்கள் கலங்கின. தேவலோகமும் அவன் தவத்தினுக்ரத்தைத் தாங்க முடியவில்லை. ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் தேவர்களாயிருந்தவர்கள் யாமர் எனப்படுபவர்கள். த்ருவனின் இந்தத் தவம் தொடர்ந்தால் தங்கள் பெருமையும், பதவிகளும் பாதிக்கப்படுமோ என்றஞ்சிய அவர்கள் இந்த்ரனுடன் கூடி தவத்தைக் கலைக்க ஆலோசித்தனர்.

அவன் அனுப்பிய கூச்மாண்டர் என்ற பூதங்கள் பல மாயைகளைச் செய்தனர். அவன் தாய் உருவிலேயே வந்து "குழந்தாய்! இந்த கொடிய தவத்தை விட்டு விடு. இது உடலையே அழித்து விடும். பல ஆசை, எண்ணங்களுடன் உன்னைப் பெற்றெடுத்தேன். இப்போது மிக்க வருத்தத்திலிருக்கிறேன். எனக்கு உன்னைத் தவிர கதி இல்லை. மாற்றாந்தாயின் சொல்லைக் கொண்டு என்னைக் கைவிடாதே. உன் வயதெங்கே, இந்த கொடிய தவமெங்கே. தாய் வருந்தத் தவமிருக்காதே. அது பயன் தராது. இப்போது விளையாடு, பின் வேதம் ஓது, பின் மணம்புரிந்து இன்புற்று, பின் தவ வாழ்க்கையைக் கொள். அதுவே சரி. அந்தந்த பருவத்தில் செய்யவேண்டியதைச் செய். தாயின் விருப்பத்தின் படி நட. அதுவே தவறென்றாலும் தர்மம். தாய்க்கு விருப்பமில்லாதது எதுவாயினும் அதுவே அதர்மம். என் சொல்படி நட. இல்லையென்றால் உன் முன்பே உயிரை மாய்த்துக் கொள்வேன்" எனக் கதறியழுதன.

அவன் சிந்தை இப்போது இங்கில்லை. சலனமின்றி தவத்திலேயே இருக்கிறான் த்ருவன். "இதோ பார், பல ராக்ஷஸர்கள் ஆயுதங்களுடன் தாக்க வருகின்றனர். ஓடி வா" என பயமுறுத்தியும் பார்க்கிறாள். பலனின்றி மறைந்து விடுகிறாள். அவ்வாறே பல உருவங்களுடன் பயங்கரமான ஆயுதங்களேந்தி கூக்குரல்களுடன், கொள்ளிக்கட்டைகளுடன், சிங்கம், புலி, அரக்கர், முதலை, நரி எனப் பல முகங்களுடன் சிறுவனைச் சூழ்ந்து கொண்டு பல தீச்செயல்களால் பயமுறுத்தின.

அவன் சிந்தை இப்போது இங்கில்லை. சலனமின்றி தவத்திலேயே இருக்கிறான் த்ருவன். பாதாரவிந்தங்களிலேயே லயித்திருக்கிறான். இந்த்ரனின் மாயைகளும், தீச்செயல்களும் அவனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை, ஒரு பாதிப்பும், சலனமுமில்லை த்ருவனுக்கு. தங்கள் பதவிகளும், பலமும் த்ருவன் தவத்தால் அடைந்துவிடுவானோ என்ற பயத்திலும், தங்கள் முயற்சிகளும் ஒன்றும் பலனளிக்காததும் கண்டு வேறு வழியின்றி தேவர்களனைவரும் சென்று மஹாவிஷ்ணுவினிடமே முறையிடுகின்றனர்.

"தேவா! ஜகன்னாதா!! த்ருவன் தவத்தால் பெருங்கவலையடைந்துள்ளோம். சந்த்ரன் கலைகளால் வளர்வது போல், த்ருவனும் தன் தவத்தினால் வளர்ந்து கொண்டே வருகிறான். இவன் எங்களில் எவருடைய பதத்திற்கு ஆசைப்பட்டு இந்தத் தவத்தைச் செய்கிறான் என்பது தெரியாமல் வாடுகிறோம். அதனால் இந்தத் தவத்திலிருந்து அவனை விலக்கி எங்களைக் காப்பாற்றுங்கள்" என வேண்டுகின்றனர். ஸர்வேச்வரன் "நீங்கள் கவலைப்படவேண்டாம். அவன் உங்கள் பதவிகளை விரும்பவில்லை. அவன் விரும்புவதை நானறிவேன். நீங்கள் உங்களிடம் செல்லுங்கள். நானும் த்ருவனை தவத்திலிருந்து விலக்குகிறேன்" என்றார். இதைக் கேட்டு தேவர்களும் தெளிந்து தங்களிருப்பிடம் சென்றனர்.

தேவதேவனும் த்ருவன் முன் தோன்றி, "உத்தம புதல்வனே! உன் தவத்தால் மகிழ்ந்தேன். வேறு எதிலும் மனத்தைச் செலுத்தாமல் என்னிடத்திலேயே செலுத்தினாய். வரங்களைக் கேள்" என்றார். கண்களைத் திறந்த த்ருவன் ஸர்வாலங்கார, ஆயுத பூஷணராய், சித்தத்திலிருந்த மூர்த்தி நேரில் தரிஸனம் தருவதைக் கண்டு பரபரப்புடனும், பயத்துடனும், வியப்புடனும், உடலெங்கும் மயிர்க் கூச்செறிய விழுந்து வணங்கினான். எவரும் அறிந்திராத பரம புருஷனை, எப்படித் துதிப்பதென்பதையும் ஒருவரும் அறியார். ஆனால் துதித்தேயாக வேண்டும். "தேவா! ப்ரஹ்மநிஷ்டர்களும் உன்னை அறியார். நான் உன்னை எப்படித் துதிப்பேன். ஆனால் என் மனம் உன் திருவடிகளிலும், உன்னைத் துதிப்பதிலுமே நிலைத்து நிற்கிறது. என் நிலைக்கேற்ற தத்துவ ஞானத்தை நீயே தந்தருள வேண்டும்" என்கிறான்.

உயர்ந்த பதவிகளுக்காகத் தவத்தை மேற்கொண்டு, அது கிடைக்க ஒருவர் தரிஸனம் தரும்போது த்ருவன் தத்துவ ஞானத்தைக் கேட்கிறான். பரமனும் பாசத்துடன் தன் பாஞ்சஜன்யத்தின் நுனியால் த்ருவன் தாடையைத் தடவிக் கொடுக்க, புத்துணர்வு கொண்டு, பரமார்த்த தத்வத்தை முழுதும் அறிந்தவனாய் ப்ருத்வி முதலிய பஞ்ச பூதங்கள், பஞ்சேந்த்ரியங்கள், மஹதஹங்காரம், ப்ரக்ருதி இவைகளை உடலாய்க் கொண்டு நிற்பதாய்ப் பரமனைப் போற்றுகிறான். கல்யாண குணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவனும் நீயே. நீயே ஸ்வரூபம், குணங்களில் பெருமை பெற்றவ்ன். நீயே ப்ரஹ்மம். யோகிகளால் அறியத் தக்கவன் நீ. மாறுபாடில்லாதவன் நீ.

பல தலைகள், கால்கள், கண்கள், ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள் பெற்றவன் நீ. எங்களுக்குத் தேவைப்படுவது போல் உன் க்ரியைகளுக்கு இந்த இந்த்ரியங்கள் தேவையில்லை. எனினும் அனைத்தையும் அடக்கிய ஸர்வ சரீரமாய் இருக்கிறாய். அவ்யக்த சரீரரான அனிருத்தனும், ஸ்வராட் எனும் ஆத்ம ப்ராப்தி உள்ளவனும், ஸம்ராட் எனும் பரம பதத்தைப் பெற்றவனும், ஆதி ப்ரஹ்மனும், அனைத்தையும் அடக்கிய இந்த ஹிரண்யகர்ப்பனும், இந்த உலகும் உன்னிடமிருந்தே தோன்றியது. இனியும் தோன்றும், வளரும். ப்ரளய காலத்தில் இந்த ஜகத்தும், பெரிய மரம் அதன் வித்தில் அடங்கியிருப்பது போல் அடங்கும். இப்படிப் பலவாறுத் துதித்த த்ருவன் நான் உனக்கு சொல்ல வேண்டியதொன்றுமில்லை. எல்லா உயிர்க்கும் அந்தராத்மா நீ. என் மனதையும் நீ அறிவாய். உன் தரிஸனம் பெற்றேன். உன்னைத் துதிக்கவும் செய்தேன். என் தவப்பயன் அடைந்தேன்" என்கிறான்.

பெருமான் என்னைத் தரிசிப்பவர்கள் தானே எல்லா சிறப்புகளும், நன்மைகளையும் பெறுவார்கள். ஆகவே என் தரிசனத்தை விட்டு, மற்றொரு வரத்தைக் கேள் என்கிறார். த்ருவனும் "நீயறியாததொன்றுமில்லை. நான் மூடன். ஆனால் பெரும் பயனை விரும்புகிறேன். அரிதாயினும் உன்னருளால் ஆகாததொன்றுமில்லை. உன்னருளாலேயே இந்த்ரனும் இருக்கிறான். மாற்றாந்தாய் கூறியதை மனத்தில் கொண்டு நீலைத்திருப்பதும், இவ்வுலகிற்கெல்லாம் ஆதாரமுமான ஓருயர்ந்த ஸ்தானத்தையே நான் ப்ரார்த்திக்கிறேன் என்றான்.

"தந்தேன், உன்னுடைய இந்த தவத்திற்கும், பலனிற்கும் ஒரு காரணம் உண்டு. முற்பிறவியில் நீ ஒரு அந்தணச் சிறுவனாக, எப்போதும் என்னிடத்திலேயே மனத்தைச் செலுத்தி, ஆராதித்தாய். தாய், தந்தையர்களுக்கும் பணிவிடை செய்து, உன் வர்ணாச்ரம தர்மங்களையும் தவறாது செய்து வந்தாய். அப்போது உனக்குக் கிடைத்த ஓர் அரச குமாரனின் நெருங்கிய நட்பால் பல அரச போஹங்களையும், வஸ்துக்களையும் கண்டு அதற்கு ஆசைப்பட்டாய். அரசகுமாரனாகப் பிறக்க விரும்பினாய். என்னிடம் நீ வைத்திருந்த பக்தியினாலேயே இந்த உயர்ந்த ஸ்வாயம்புவ மனுவின் அரச வம்சத்தில் நீ பிறந்தாய். இப்போதும் என்னிடம் பக்தி செலுத்தினாய். என்னிடம் மனதுடன் பக்தி செலுத்தினால் ஒருவன் மோக்ஷத்தையே பெறும்போது ஸ்வர்கங்களை அடைவதில் என்ன ஆச்சர்யம்

நீ மூவுலகங்களுக்கும் மேலே அனைத்து நக்ஷத்ரங்களுக்கும் ஆதாரமாய் விளங்குவாய். அனைத்து க்ரஹங்கள், நக்ஷத்ரங்கள், ஸப்தரிஷிகள், தேவர்கள் அனைவருக்கும் மேம்பட்ட இடத்தைத் தந்தேன். சதுர்யுகம் முடியும் வரையிலும், மன்வந்த்ரம் முடியும் வரையிலுமே சிலர் தம் ஸ்தானங்களில் இருப்பார்கள். நீ கல்பம் முடிய இந்த ஸ்தானத்திலிருந்து, பிறகு என் த்யானத்தால் மோக்ஷத்தையும் பெறுவாய். உன் தாய் ஸுநீதி உன் அருகிலேயே நக்ஷத்ரமாய் வாசம் செய்வாள், குழந்தாய்! உறுதியில் உயர்ந்த உன்னை எவர் அமைதியான மனதுடன் காலையிலும், மாலையிலும் பாடுகிறார்களோ அவர்களுக்கு மிகுந்த புண்யம் உண்டாகும்" என்று அருளினார்.

அஸுரகுரு சுக்ராச்சார்யாரும், "உலகில் யாவரும் வணங்கும் ப்ரஸித்தி பெற்ற ஸப்தரிஷிகளும், இப்போது உன்னையே முன்னிட்டு ஸஞ்சரிக்கின்றனர். உன் தவம் அற்புதமானது. அன்று தந்தை மடி பெறாது, வருத்தமுற்றிருந்தபோது "நல்லொழுக்கத்துடன், நற்செயல்களைச் செய்து வா, உனக்கு நன்மை கிட்டும்" என்று ஆசிர்வதித்த உன் தாயின் குணத்தை என்ன சொல்வது. உண்மையை உரைத்த உத்தமியால் நீயும், உன் மாறாத தவத்தால் உன் தாயும் உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றீர்கள்" எனப் புகழ்கிறார்.

பராசரரும் "மேற்கண்ட வகையில் இந்த த்ருவ சரித்ரத்தைத் தினந்தோறும் பாடுபவன் ஸர்வ பாபங்களும் தொலைந்து இவ்வுலகிலும், ஸ்வர்க்கத்திலும் நீக்கமற்ற பதவியைப் பெற்று சிறப்புறுவான். ஸகல போக்யங்களும் பெற்று நீண்ட நாள் வாழ்வான்" எனப் புகழ்ந்துரைக்கிறார்.

No comments:

Post a Comment