Thursday, December 17, 2009

விஷ்ணு புராணம் - 3

01_03. நமக்குத் தெரியாத விஷயங்களையறிய விரும்பி, விஷயங்களையறிந்த பெரியவர்களை அணுகும்போது நம்மை பரிக்ஷிக்க சம்பந்தமில்லாததையும், நம் ஆவலைத் தூண்ட சுருக்கமாகவோ உபதேசிப்பார்கள். ஆனால் நம் சந்தேஹங்கள் தெளிய நாம் அவற்றையாராய்ந்து மீண்டும் கேள்விகளைக் கேட்டு விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும். இங்கும் மைத்ரேயருக்கு ஆசார்யனின் பதிலில் ஸந்தேஹங்கள் வருகின்றன. உலகிலுள்ள பானை, துணி, வளையல் என்ற அனைத்துப் பொருள்களையும் செய்யும் கர்த்தா உருவம் உள்ளவர், குணங்களுடையவர். அனைத்தையுமறிந்தவருமில்லை. எங்கும் வ்யாபித்திருப்பவருமில்லை. ஸுக, துக்கங்களை தாண்டியவராகவுமில்லை.

உலகிலுள்ள பொருள்களைப் படைப்பவரையும் கர்த்தா என்கிறோம். உலகைப் படைப்பவரையும் கர்த்தா என்கிறோம். அப்படியானால், பானை முதலானவைகளை செய்யும் கர்த்தாவைப் போல் தானா உலகைப் படைக்கும் கர்த்தாவும். இருவருக்கும் வித்யாஸமுண்டா, இல்லையா. இல்லையெனில் அவரை நினைப்பதும், தொழுவதும் எதற்கு என்ற குழப்பங்கள் வர அவர் மீண்டும் அதை குருவிடமே கேட்கிறார். அதற்கு பராசரர் உலகிலுள்ள பொருள்களிலும், கர்த்தாக்களிலுமே பல வேறுபாடுகள் உள்ளன. தண்ணீரில் குளிர்ச்சியும், தீயில் சூடும் உள்ளது. மற்றவர்களிடம் குறைவாகவோ, இல்லாததாகவோ இருக்கும் தவம் உன்னிடம் அதிகமாக உள்ளது. அவ்வாறே உலகின் கர்த்தாவான ஈச்வரனும் மற்ற உலகப்பொருள்களைச் செய்யும் கர்த்தாவை விட வேறானவனே. அவன் எங்கும் நிறைந்திருப்பவன். கர்மபந்தங்கள், ஸுக, துக்கங்கள், ஸத்வ, ரஜ, தமோ குணங்கள் அவனுக்கு கிடையாது. ப்ரஹ்மத்திற்கு பல உயர்ந்த சக்திகளும், ஞானமும், பலமும் இயற்கையாக அமைந்துள்ளன.

படைக்கும்போது ப்ரஹ்மாவுக்கு உள்ளிருந்து அந்த ப்ரஹ்மமே தொழிலைச் செய்கிறது. நமக்கு 100 ஆண்டுகள் ஆயுள் என்று வரையறுக்கப்பட்டிருப்பது போல், ப்ரஹ்மாவிற்கும் வரைமுறை உண்டு. பல ப்ரஹ்மாக்களும் உண்டு. ஆனால் கால அளவு நம்முடையதைப்போலில்லை. மனுஷ்யமானம், தேவமானம், ப்ரஹ்மமானம் என கால அளவுகள் மாறுபட்டவை.

இவைகளைப் பற்றி: மனுஷ்யமானத்தில் கண் இமைக்கும் நேரம் - 1 நிமிஷம் [ இது நொடியை விடச் சிறியதாகத் தோன்றுகிறது], 15 நிமிஷங்கள் - காஷ்டை, 30 காஷ்டை - 1 கலை, 30 கலை - 1 முஹூர்த்தம்,30 முஹூர்த்தங்கள் - ஒரு நாள். 15 நாள் - ஒரு பக்ஷம் (சுக்ல, க்ருஷ்ண), 2 பக்ஷம் - 1 மாதம், 6 மாதம் - ஒரு அயனம் (உத்ராயணம், தக்ஷிணாயம்), 2 அயனம் - 1 வருஷம். இந்த 1 வருஷம் தேவமானத்தில், அதாவது தேவர்களுக்கு ஒரு நாள். உத்தராயணம் அவர்களுக்குப் பகல் பொழுது, தக்ஷிணாயனம் இரவுப் பொழுது.

இப்படி தேவ வருடங்கள் 12,000 கொண்டது ஒரு சதுர்யுகம். முதலாவதான க்ருதயுகம் - 4,000 தேவவருஷங்கள், இரண்டாவதான த்ரேதாயுகம் - 3,000 வருஷங்கள், த்வாபரயுகம் - 2,000 -மும், கலியுகம் 1000 தேவவருஷங்களுமாக கணக்கிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,000 தேவவருஷங்களில் யுகங்களின் ஸந்த்யைகளும், ஸந்த்யாம்ஸங்களும் செலவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு யுகத்திற்கும் முன்புள்ள சில காலம் ஸந்த்யை, யுகத்திற்குப் பின்னுள்ள சில காலம் ஸந்த்யாம்ஸமாகும். ஒவ்வொரு யுகமும் எவ்வளவாயிரம் காலத்தைக் கொண்டுள்ளதோ, அவ்வளவு நூறு காலம் இந்த ஸந்த்யை, ஸந்த்யாம்ஸ காலமாகும். அதாவது க்ருதயுகத்திற்கு ஸந்த்யா காலம் 400 தேவவருஷங்கள் மற்றும் ஸந்த்யாம்ஸ காலம் 400 தேவவருஷங்கள். இதைப்போல த்ரேதா யுகத்திற்கு 300 ஸந்த்யா, ஸந்த்யாம்ஸ தேவவருஷங்கள், த்வாபர யுகத்திற்கு 200, மற்றும் கலியுகத்திற்கு 100 ஆகும். இவைகளுடன் சேர்த்துப் பார்த்தால் க்ருதயுகம் 4,800 தேவவருஷங்கள், த்ரேதாயுகம் 3,600 தேவவருஷங்கள், த்வாபரயுகம் 2,400 தேவவருஷங்கள் மற்றும் கலியுகம் 1,200 தேவவருஷங்கள்.

மனுஷ்யமானத்தின் கணக்குப்படி கலியுகம் ஸந்திகளைச் சேர்த்து 4,32,000 வருஷங்களும், இதைவிட 2 மடங்கு த்வாபரயுகமும் (8,64,000), த்ரேதாயுகம் 3 மடங்கும் (12,96,000), முதலாவதான க்ருதயுகம் 4 மடங்கும் (17,28,000) ஆகும். யுகக் கணக்குகளின்படி தர்மத்தின் பங்கும் முதல் யுகத்திலிருந்து குறைந்து கொண்டே வரும்.

இப்படி ஆயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவிற்குப் பகலாகவும், இரவாகவும் இருக்கும். அதாவது ப்ரஹ்மமானத்தில் 100 வருடங்கள் ப்ரஹ்மாவின் ஆயுஸ். இதை பரம் (சிறந்தது, உயர்ந்தது) என்றும் இதன் இருபாதிகளை பரார்த்தம் என்றும் கூறுவர். ஒரு நாளின் பகல் நேரத்தில் (அதாவது ஓராயிரம் சதுர்யுகங்கள்) 14 மனுக்களும், ஸப்தரிஷிகளும், தேவர்களும் தோற்றுவிக்கப்பட்டு, அதிகாரிகளாக்கப்பட்டு, அதிகாரத்திலிருந்து இறக்கவும் செய்யப்படுகின்றனர். அதாவது 1000 சதுர்யுகங்களை 14 மனுக்களுக்கும் பிரித்துக் கொடுத்தால், அவர்கள் ஒவ்வொருவரின் காலமும் 71 சதுர்யுகத்திற்குக் கொஞ்சம் அதிகமாக விளங்கும். இந்த காலங்களுக்கு மன்வந்த்ரங்கள் (ஆக 14 மன்வந்த்ரங்கள்) என்று பெயர்.

இப்படி தனது பகல் நேரத்தில் படைக்கப்பட்ட உலகங்களை பகல் பொழுதின் முடிவில் ப்ரளயத்தால் ப்ரஹ்ம்னே அழிக்கிறான். இதற்கு ப்ராஹ்ம ப்ரளயம், நைமித்திக ப்ரளயம் என்று பெயர். இதன் போது பூ,புவர், ஸுவர்லோகங்கள் முற்றிலும் தீயால் அழிகின்றது. மஹர்லோகம் அழிவதில்லை. ஆனால் ப்ரளயத்தின் தாபம் தாங்காது அங்கிருப்பவர்கள் ஜனலோகத்தையடைந்து விடுகின்றனர். மஹர்லோகம் சூன்யமாகிவிடுகிறது. எங்கும் நீரால் சூழ்ந்திருக்கையில் பரமன் பாம்பனையில் பள்ளி கொள்கிறான். ப்ரஹ்மனும் பரமன் நாபிக்கமலத்தில் உதிக்கும் பத்மத்தினையடைகிறான். ஜனலோகத்திலிருப்பவர்கள் இவர்களை உபாஸித்துக்கொண்டிருக்கின்றனர். இப்படியே ப்ரஹ்மனின் இரவுப் பொழுதான அடுத்த ஆயிரம் வருடங்கள் முடிகிறது. பத்மம் தோன்றியதால் ப்ரஹ்மாவின் பகல் பொழுதின் கடைசி கல்பமான இந்த கல்பத்திற்கு பாத்ம மஹாகல்பம் என்று பெயர் (ப்ரதம பரார்த்தத்தின் கடைசி கல்பம்). இரவுப் பொழுது வராஹ கல்பத்தை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கிறது.

No comments:

Post a Comment