Thursday, December 17, 2009

விஷ்ணு புராணம் - 2

1_2. "மைத்ரேயா, உனக்கு நான் கூறப்போகும் இந்த விஷயத்தை முதலில் ப்ரஜாபதிகள் ப்ரஹ்மாவிடமிருந்து கற்றனர். பின்னர் நர்மதைக் கரையில் ஒரு சமயம் அவர்களிடமிருந்து புருகுத்ஸன் என்பவரும், அவரிடமிருந்து ஸாரஸ்வதர் என்பவரும், அவரிடமிருந்து நானும் கற்றறிந்தோம். இப்படி குருபரம்பரையாக வந்த பெரும் விஷயத்தை உனக்கு நான் கூறப் போகிறேன். ஈடுபாட்டோடு கேள்" என விஷயங்களை பராசரர் மைத்ரேயருக்கு உபதேஸிக்கத் துவங்கினார்.

மண்பானை, தங்கவளையல் போன்று இந்த உலகம் விஷ்ணுமயம். உலகிற்கு மூலக்காரணம் அவனே. ஆனால் உலகத்திலிருக்கும் மற்ற காரணப்பொருள்களுக்கிருப்பது போல் இவனுக்கு குணங்கள் கிடையாது. சிறந்ததிலெல்லாம் சிறந்தவன், தனக்கு மேற்பட்டதொன்று இல்லாதவன். எங்கும் நிறைந்தவன். விருப்பற்றவன். வெளுப்பு, கருப்பு என்ற உருவங்கள், ப்ராஹ்மண்யம் முதலான ஜாதிகள், உற்பத்தி, அழிவு என்ற வேறுபாடுகள் இவையாவுமில்லாதவன். நிலையானவன். இவனிடம் எல்லாப் பொருளும், எல்லாப் பொருளிலும் இவனும் வ்யாபித்து உள்ளன. வாஸுதேவன் எனப் பெரியோர்களால் போற்றப்படுபவன். பரப்ரஹ்மம். அவித்யை, காம, க்ரோதங்களற்ற அமலன்.

இந்த ப்ரஹ்மமே ஜகத்காரணம், இதுவே ஜகத்துமாம். உலகப்பொருள்களான அவ்யக்தம் (உணர முடியாதவை), வ்யக்தம் (உணர முடிந்தவை - பஞ்ச பூதங்கள் முதலானவை), ஜீவாத்மா, காலம் என்ற நான்கு வகைகளும் உடலாகவும், ப்ரஹ்மமே ஆத்மாவாகவும் உடையது இந்த உலகம். ஆகவே ப்ரஹ்மமே ஜகத்காரணமும், ஜகத்துமாம். உடலாக விளங்கும் பொருள்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்திடம் இல்லை. அது இந்த பொருட்களிலிருந்து வேறாக, உயர்ந்ததாக விளங்குகிறது. இந்த ப்ரஹ்மத்தையே பிறப்பு, இறப்பாகிய சக்ரத்தைக் கடந்த நித்யஸூரிகள் எப்போதும் தர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்யக்தம் முதலான நான்கு பொருள்களையே விளையாட்டுக் கருவிகளாகக் கொண்டு குழந்தைகள் விளையாடுவது போல் ப்ரஹ்மமும் ஸ்ருஷ்டி முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது. இவற்றுள் அவ்யக்தம் என்பது உணரமுடியாதது. அது உண்டாக்கப்படுவதுமில்லை (ப்ரக்ருதி), அழிவதுமில்லை. ப்ரஹ்மம் இதையே ப்ரதானமாகக் கொண்டு ஸ்ருஷ்டி முதலானவற்றைச் செய்கிறது. வ்யக்தங்களான பஞ்சபூதங்களின் குணங்களான சப்தம், ஸ்பர்சம் போன்ற குணங்கள் அவ்யக்தத்திற்கில்லை. ஸத்வ, ரஜ, தமோ குணங்களைக் கொண்டது அவ்யக்தம். இவை முறையே உருவாக்குதல், காத்தல், அழித்தல் குணங்களை உடையவர்களை நோக்கும்.

[ நா என்ன சொல்றேன்னா: ஸத்வம் முக்யமாக அறிவு, விவேகம், நமக்கும் சமூஹத்திற்கும் நல்லவை சம்பந்தப்பட்டது. வேலை, வேலையற்றிருப்பது, செய்யத்தக்கது, தகாதது, அச்சம், அஞ்சாமை, பந்தம், விடுதலை போன்றவைகளை பகுத்தறியும் ஸாத்வீகம். தன்னை அதிகமாக வெளிப்படுத்திக்கொள்ளமாட்டார்கள் இவர்கள். மனம், உயிர், புலன்களின் செயல்களைத் தாங்கிக் கொள்வார்கள் இவர்கள். வெல்லம், பழங்கள், இஞ்சி, புளிக்காத தயிர், காய்கறிகள், வெண்ணை, பசும்பால் போன்றவைகள் இந்த குணத்தைக் கொடுக்குமாம். சாதுக்கள், பண்டிதர்கள், குருமார்களை இதில் கூறலாம்.

ரஜஸ் முக்யமாக உடல் வேலை, செயல்பாடு சம்பந்தப்பட்டது, தர்மாதர்ம, கார்யாகார்யங்களை அதிகமாக பகுத்தறியாதது. பற்றுதலோடு பயன் விரும்பி அறம், பொருள், இன்பங்களைத் தேடுவார்கள் இவர்கள். உணர்ச்சியைத் தூண்டும் உப்பு, புளிப்பு, காரம், சூடு அதிகமாக இருக்கும் உணவுகள், சாக்லேட்டுகள், இறைச்சி வகைகள் இந்த குணம் சம்பந்தப்பட்டவையாம்.

தமஸ் சோம்பேறித்தனம், தூக்கம், கவலை, ஏக்கம் முதலானவைகளை மாற்றும் திறனற்று அதற்கு அடங்கியிருக்கும். இவர்களுக்கு ரஜஸ் மேல் ! ! அதிகமாக பழையதான உணவுவகைகள் (சாராய மற்றும் அதன் உடன்பிறப்புக்கள், பழைய தோசை, இட்லி மாவு), பன்றிக்கறி, முட்டை, வினிகர், ப்ரிசர்வேட்டிவ் போன்ற வேதிப் பொருட்கள்.

முள்ளங்கி, வெங்காய, பூண்டின் வகைகள் முதலான சில தாவர வகைகள் ஸத்வகுணத்தை சார்ந்தவையன்று]

ப்ரளயகாலத்தில் இந்த அவ்யக்தமான ப்ரக்ருதி, தண்ணீர் உப்பை தன்னுள் மறைத்திருப்பது போல், இரவு, பகல், ஆகாயம், பூமி முதலான வேறுபாடுகளைத் தன்னுள் ஒடுக்கிக்கொள்கிறது. ப்ரக்ருதி, ஜீவாத்மா, பரப்ரஹ்மம் இவைகளே அப்போது இருக்கின்றன. இங்கு ப்ரக்ருதி, ஜீவாத்மா இரண்டுமே ஓரளவில் இந்த்ரியங்களால் உணரமுடியாததானவைகளாய் சூக்ஷ்ம உருவிலிருக்கின்றன. காலமும் ஆதி, அந்தமற்றது. ஸூக்ஷம உருவிலானது. உற்பத்தி, ஸ்திதி, ப்ரளயங்களைக் கடந்தது. இதனால் காலமும் சில நேரம் இறைவனை ஒத்ததாகிறது.

சில காலம் ப்ரளயம் நீடித்த பின் ஜீவாத்மாக்களின் கர்மவினைகளின் படி அவைகள் மறுபடி வேறுபடத் தொடங்குகிறது. காலமும் ஸ்ருஷ்டிக்கேற்றதாகிறது. அப்போது பரமனும் ப்ரக்ருதி, ஜீவன் இரண்டையும் சேர்த்து விளையாட்டைத் தொடங்குகிறான். ஸூக்ஷம உருவை விட்டு, ஜீவாத்மாவும் ஸ்தூல உருவத்தையடையத் தொடங்குகிறது. சுவைகள் அனுபவிப்பவனின் நிலையை மாற்றித் தான் மாறாதிருப்பது போல் பரப்ரஹ்மமும் தான் மாறாதிருக்கிறது.

ஸத்வ, ரஜ, தமோ குணங்களில் சமநிலையிலிருக்கும் ப்ரக்ருதி அந்த நிலையில் மாறுபடும்போது மஹத் என்ற தத்வம் விதைபோல் தோன்றுகிறது. அதிலிருந்து ஸாத்விக, ராஜஸ, தாமஸ அஹங்காரங்கள் தோன்றுகின்றன. தாமஸாஹங்காரத்திலிருந்து பஞ்சபூதங்களும் (ப்ருத்வி - பூமி, அப்பு - நீர், தேஜஸ் - நெருப்பு, வாயு - காற்று, ஆகாசம் - வெளி) தோன்றுகின்றன.

ஸாத்விகாஹங்காரத்திலிருந்து பதினோரு இந்த்ரியங்களும் (ஞானம், அதாவது புலன்களுக்குண்டான அறிவைத் தரும் ஞானேந்த்ரியங்கள் ஐந்து - மெய் (ஸ்பர்சம்), கண் (ரூபம்), மூக்கு (மணம்), நா (சுவை), செவி (சப்தம்) மற்றும் வேலை செய்வதற்கான கர்மேந்த்ரியங்கள் ஐந்து - வாக்கு (பேச), கை (காரியம் செய்ய), கால் (நடக்க), ஆஸனத்வாரம் (மலம் கழிக்க), பிறப்புறுப்புக்கள் (சிறுநீர் கழிக்க) ஆக மொத்தம் பத்து மற்றும் மனம் பதினொன்றாவது) தோன்றுகின்றன.

ராஜஸாஹங்காரம் மேற்கண்டவைகள் ஒன்று சேர்ந்து வேலை செய்வதில் உதவுகிறது. இந்த பஞ்சபூதங்கள் எப்படி ஒன்று சேரும், சேராமல் உலக உற்பத்தியும், இயக்கமும் எவ்வாறு நடைபெறும். இதுவரை நடந்தது ஸமஷ்டி ஸ்ருஷ்டி. இந்த மேற்கண்ட தத்வங்களை தக்கமுறையில் ஒன்று சேர்த்து மேற்கொண்டு ஸ்ருஷ்டிப்பது வ்யஷ்டி ஸ்ருஷ்டியாகும். பஞ்சபூதங்களில் ஒன்றில் அரைப்பங்கும், மற்ற நான்கில் அரைக்கால் பங்கும் கலந்து வ்யஷ்டி பஞ்சபூதங்கள் உண்டாகின்றன. இந்த முறைக்கு பஞ்சீகரணமென்று பெயர்.

மழைக்காலத்து நீர்க்குமிழி போல் மலை, கடல், நிலம், தேவர்கள், மனிதர்கள், நக்ஷத்ரங்கள் முதலானவைகள் கலந்த இந்த அண்டமும் பஞ்சபூதங்களிலிருந்து உண்டாகிறது. இந்த அண்டம் பஞ்சபூதங்கள், மஹத், அஹங்காரம், ப்ரக்ருதி ஆகியவைகளால் ஒன்றை ஒன்று பத்து மடங்கு அதிகமாக சூழப்பட்டுள்ளதாம். ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மனாகவும், ஸ்திதியில் விஷ்ணுவாகவும், ஸம்ஹாரத்தில் சிவனாகவும் அந்தப் பரம்பொருளே இருக்கிறது. சம்பாதித்தல் (உருவாக்குதல்), சேர்த்தல் (காத்தல்), செலவழித்தல் (அழித்தல்) இவைகளை செய்பவன் ஒருவனே. அதேபோல் இறைவனை உழவனாகவும் உருவகிக்கலாம். அவனே செப்பனிட்டு பயிர் விளைவித்து, காத்து, சமயம் வந்ததும் அழித்தும் விடுகிறான். திரும்பவும் இவைகளையே செய்கிறான். திருடன் தன் வாயில் பொருளை வைத்துக்காப்பது போல், இந்தக் கள்ளனும் ப்ரளய காலத்தில் ஜகத்தைத் தன்னுள் ஒடுக்கிக்கொண்டு பாம்பனையில் தூங்குவதுபோலிருக்கிறான்.

No comments:

Post a Comment