Thursday, December 17, 2009

விஷ்ணு புராணம் - 8

01_08. நான்முகன் கோபத்துடன் இருக்கும்போது அவர் மடியில் தோன்றியவர் ருத்ரன், கருப்பும், சிவப்பும் கலந்த நீலலோஹிதனான இவரைத் தனக்கு சமமாகப் படைத்தார் ப்ரஹ்மன். அழுதுகொண்டேயிருந்ததால் ருத்ரன் என இவரை அழைத்தார் ப்ரஹ்மன். மேலும் பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்ரன், மஹாதேவன் என இன்னும் ஏழு பெயர்களும் இட்டார். இவருக்கு எட்டு ஸ்தானங்களையும், பத்னிகளையும் கொடுத்தார் ப்ரஹ்மன். இதனால் அஷ்டமூர்த்தி என்றும் ருத்ரன் அழைக்கப்படுகிறார். ஸூர்யன், ஜலம், பூமி, வாயு, அக்னி,ஆகாசம், தீக்ஷிதன், சந்த்ரன் என்பவைகளே அந்த எட்டு ஸ்தானங்கள்.

ஸுவர்ச்சலை, உஷை, ஸுகேசி, சிவை, ஸ்வாஹாதேவி, திசை, தீக்ஷை மற்றும் ரோஹிணியும் முறையே இந்த மூர்த்திகளின் பத்னிகள். சனி, சுக்ரன், அங்காரகன், மனோஜவன், ஸ்கந்தன், ஸர்கன், ஸந்தானன், புதன் ஆகிய எண்மர் முறையே இந்த மூர்த்திகளின் புத்ரர்கள். அஷ்டமூர்த்தியான ருத்ரன் தக்ஷப்ரஜாபதியின் மகளான ஸதீயையும் மணந்தார். ஆனால், அவள் ஒரு சில காரணங்களால் தந்தையின் மீதான வருத்தத்தாலும், கோபத்தாலும் உயிரை விட்டாள். இவ்வாறு தக்ஷயக்ஞத்தில் சரீரத்தை விட்ட ஸதீதேவி, பின் ஹிமவானுக்கும், மேனைக்கும் உமாவாகப் பிறந்து, பெருந்தவம் புரிந்து மீண்டும் சிவபெருமானையே மணந்தாள்.

ப்ருஹுவிற்கும், க்யாதிக்கும் தாதா, விதாதா என்ற இரு குமாரர்களும், ஸ்ரீ என்ற ஒரு பெண்ணும் பிறந்தனர். இந்த ஸ்ரீயே நாராயணனுக்குப் பத்னியாவாள். இதைக்கேட்ட மைத்ரேயர் ஸ்ரீ பாற்கடலைக் கடைந்தபோது தோன்றினாள் என உள்ளதே, அப்படியானால், இப்போது ஸ்ரீ எப்படி ப்ருஹுவின் குமாரியாக முடியும் எனக்கேட்டார். அதற்குப் பராசரர், "உலகிற்கு பகவான் பிதா என்பதுபோல், லக்ஷ்மி தாயாகிறாள். அவள் பகவானைப் பிரியாதவள். எங்கும் நிறைந்திருப்பவள்.

மஹாலக்ஷ்மி நித்யை. பகவானைப்போலவே ஆதியந்தமில்லாதவள். பகவானைப் போலவே சிற்சமயம் எங்கிருந்தாவது தோன்றுகிறாள். முதலில் ப்ருகுவினிடத்தில் ஸ்வேச்சையால் ஆவிர்பவித்தாள். பின் இந்த்ரனுக்கு நேர்ந்த துர்வாசரின் சாபத்தால் மறைந்தாள். மறுபடி க்ஷீரஸாகரத்தில் தோன்றினாள். விஷ்ணு பொருளென்றால், லக்ஷ்மீயே வாக்கு. லக்ஷ்மீ புத்தி என்றால், விஷ்ணுவே அறிவு. அவளே கரு, விஷ்ணுவே கர்த்தா. ஸ்ரீயே பூமி, ஹரியே அதைக்காப்பவர். விஷ்ணுவே யாகம், லக்ஷ்மீயே தக்ஷிணை. அவளே கௌரி, அவரே சங்கரன், கேசவனே ஸூர்யன், ஸ்ரீயே அதன் கதிர்கள்.

ஸ்ரீயே ஸ்வர்க்கங்களென்றால், விஷ்ணுவே வெளி. ஸ்ரீபதி சந்த்ரனென்றால், ஸ்ரீயே அதன் ஒளி. கோவிந்தன் கடலென்றால், லக்ஷ்மீ அதன் கரை. ஸ்ரீயே இந்த்ராணி, மதுஸூதனரே இந்த்ரன். லக்ஷ்மீயே செல்வமென்றால், ஸ்ரீதரனே குபேரன். ஹரியே நிமிஷமென்றால், லக்ஷ்மீ முஹூர்த்தம். அவள் இரவென்றால் அவன் பகல். அவள் மணமகள், அவனே மணமகன் என பல கூறலாம். முடிவாக தேவ, திர்யக், மனுஷ்ய இந்த ஜாதிகளில் உள்ள ஆண்பாலினத்தைச் சேர்ந்தவையனைத்தும் பகவத் ஆக்ஞைக்குட்பட்டது. அதேபோல் பெண்பாலினத்தைச் சார்ந்த அனைத்தும் லக்ஷ்மீயின் ஆக்ஞைக்குட்பட்டது. இவ்விருவர்களுக்கு மேலாக ஒன்றுமில்லையென்றார்.

No comments:

Post a Comment