Thursday, December 31, 2009

விஷ்ணு புராணம் - 14

01_14. அந்தர்தானன், வாதீ என்ற இருவர் ப்ருதுவின் பிள்ளைகள். அந்தர்தானனுக்கும், சிகண்டினீக்கும் ஹவிர்தானன் பிறந்தான். இவன் அக்னியின் புத்ரியான திஷணையை மணந்து ப்ராசீனபர்ஹி, சுக்ரன், கயன், க்ருஷணன், வ்ருஜினன், அஜினன் என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான். இந்த ப்ராசீனபர்ஹி உலகெங்கிலும் தர்ப்பைகளை கிழக்கு நுனியாக பரப்பி பல யாகங்களைச் செய்து இந்த பெயரைப் பெற்றான். இவன் பல ப்ரஜைகளை உண்டு பண்ணி அவர்களுக்கு ஈச்வரனான இருந்தான். ஸமுத்ரனின் புத்ரியான ஸ்வர்ணா என்பவள் இவன் மனைவி. இவர்களுக்குப் பிறந்த பத்து பிள்ளைகள் தனுர் வேதத்தில் தலை சிறந்த ப்ரசேதஸ் என்பவர்கள்.

தந்தை இவர்களிடம் தான் ப்ரஹ்மனின் விருப்பப்படியே ப்ரஜா வ்ருத்தி செய்ததாகவும், அவர்களும் அதையே செய்து தன்னையும், ப்ரஹ்மனையும் மகிழ்வித்து நோக்கத்தை நிறைவேற்றவும் கூறுகிறான். ப்ரசேதஸ்ஸுகள் ப்ரஜா வ்ருத்திக்கான சக்தியைப் பெற என்ன வழி என்று கேட்க ப்ராசீனபர்ஹி விஷ்ணுவின் பெருமைகளைப் பலவாறு புகழ்ந்துரைத்து அவரையே துதித்து சந்தோஷப்படுத்துமாறு கூறுகிறார். இந்த பத்து பிள்ளைகளும் வேறு சிந்தையின்றி ஒன்றுபட்டு பரமனையே நினைத்து கடல் நீரில் மூழ்கி பத்தாயிரம் ஆண்டுகள் போற்றித் துதித்துத் தவமிருந்தனர். இந்த முழுத்துதியையும் மைத்ரேயர் அருளுமாறு கேட்க பராசரரும் அருளுகிறார். இது பல சாஸ்த்ரங்களையும், ஸித்தாந்தங்களையும் உள்ளடக்கியதாகும். இவர்களின் துதியில் மகிழ்ந்து மஹாவிஷ்ணுவும் தோன்றினார். ப்ரசேதஸ்ஸுகள் விழுந்து பக்தியுடன் வணங்கினர். ப்ரஜா வ்ருத்திக்கான ஆற்றலையும் வேண்டிப் பெற்றுக் கொண்டு நீரிலிருந்து வெளி வந்தனர்.

No comments:

Post a Comment