Thursday, December 17, 2009

விஷ்ணு புராணம் - 7

01_07. ப்ரஹ்மன் எதிர்பார்த்தபடி அவன் ஸ்ருஷ்டித்த ஸ்ரோதஸ்ஸுகள் ஸ்ருஷ்டியடையவில்லை. எனவே ஸ்ருஷ்டியில் உதவ ப்ரஹ்மன் நவப்ரஜாபதிகளான ப்ருகு, புலஸ்த்யர், புலஹர், க்ரது, அங்கிரஸ், மரீசி, தக்ஷர், அத்ரி, வஸிஷ்டர் ஆகியோர்களைப் படைத்தார்.

இதற்கு முன்பே இதே காரணத்திற்காகப் படைக்கப்பட்ட ப்ரஹ்மனின் மானஸ புத்ரர்களான ஸனக, ஸனந்தன, ஸனத்குமார, ஸனத்ஸுஜாதர்கள் எந்த பொருட்களிலும் பற்றின்றி பகவத்பக்தியில் திளைத்து, ஞானிகளாவேயிருந்தனர். ஸ்ருஷ்டியில் உதவவில்லை. அந்த கோபத்தினால் மிகுந்திருந்த ப்ரஹ்மனின் நெற்றியிலிருந்து அர்த்த நாரீச்வரராக ருத்ரர் தோன்றினார். இதில் புருஷ உருவத்திலிருந்து சாந்த, கோர, வெளுப்பு, கறுப்பு எனப் பதினோரு வித உருவங்களும், ஸ்த்ரீ பாகத்திலிருந்து பல ஸ்த்ரீ உருவங்களும் தோன்றின.

பின் ப்ரஹ்மனின் உடலிலிருந்து தோன்றிய ஸ்வாயம்புவமனு என்பவர், அதேபோலுண்டான சதரூபை என்ற பெண்ணை தனக்குப் பத்னியாக்கிக் கொண்டார். இதிலிருந்து ஆண், பெண் இருவரும் சேர்ந்து மக்களை உண்டுபண்ணுவதென்பது தொடங்கியது. இவர்களுக்கு ப்ரயவ்ரதன், உத்தானபாதனென்ற புத்ரர்களும், ப்ரஸூதி, ஆஹூதியென்ற பெண்களும் பிறந்தனர். ப்ரஸூதியை தக்ஷனுக்கும், ஆஹூதியை ருசி என்பவனுக்கும் மணம் முடித்தார் மனு. ருசிக்கும், ஆஹூதிக்கும் பிறந்த யக்ஞன் என்பவன், உடன் பிறந்த தக்ஷிணை என்பவளை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த பன்னிரெண்டு பிள்ளைகள் ஸ்வாம்புவ மன்வந்தரத்தில் யாமர் என்ற தேவர்களாக விளங்கினர்.

இதைப்போல் ப்ரஸூதி, தக்ஷனுக்கு இருபத்து நான்கு பெண்கள் பிறந்தனர். இவர்களில் ச்ரத்தை (faith), லக்ஷ்மீ (prosperity), த்ருதி (steadiness), துஷ்டி(resignation), புஷ்டி(thriving), மேதை(intelligence), க்ரியை(action), புத்தி(intellect), லஜ்ஜை(modesty), வபுஸ்(body), சாந்தி(expiation), ஸித்தி(perfection), கீர்த்தி(fame) என்ற பதின்மூன்று பெண்களை ப்ரஹ்மபுத்ரனான தர்மனும், க்யாதியை(celebrity) ப்ருஹுவும், ஸதீயை(truth) ருத்ரனும், ஸம்பூதியை(fitness) மரீசியும், ஸ்ம்ருதியை(memory) அங்கிரஸ்ஸும், ப்ரீதியை(affection) புலஸ்த்யரும், க்ஷமையை(patience) புலஹரும், ஸந்நதியை(humility) க்ரதுவும், அனஸூயை(charity) அத்ரியும், ஊர்ஜையை(energy) வஸிஷ்டரும், ஸ்வாஹாவை(offering) அக்னியும், ஸ்வதையை(oblation) பித்ருக்களும் மணம் புரிந்தனர். ச்ரத்தைக்குக் காமனும்(desire), லக்ஷ்மீக்கு தர்ப்பனும்(செருக்கு,pride), த்ருதி நியமத்தையும்(precept), துஷ்டி ஸந்தோஷத்தையும்(content), புஷ்டி லோபத்தையும்(cupidity), மேதை ச்ருதத்தையும்(sacred tradition), க்ரியா தண்ட(correction), நய(polity), வினயங்களையும்(prudence), புத்தி போதனையையும்(understanding), லஜ்ஜா வினயத்தையும்(good behaviour), வபு வ்யவசாயத்தையும்(perseverance), சாந்தி க்ஷேமத்தையும்(prosperity), ஸித்தி ஸுகத்தையும் (enjoyment), கீர்த்தி யசஸையும்(reputation) ஸந்ததிகளாகப் பெற்றனர். இதில் காமத்திற்கும் நந்திக்கும்(delight) பிறந்தது ஹெர்ஷ(joy). இவ்வாறு தர்ம வம்சம் வ்ருத்தியடைகிறது.

அதர்மன் ஹிம்ஸையை(violence) மணந்து அன்ருதம் (பொய்,falsehood) என்ற புத்ரனையும், நிக்ருதி(வஞ்சனை,immortality) என்ற புத்ரியையும் பெற்றனர். இவர்கள் தம்பதிகளாகி பயம்(fear), நரகம்(hell) என்ற பிள்ளைகளையும் மாயை(deceit), வேதனை(torture) என்ற புத்ரிகளையும் பெற்றனர். பயத்திற்கும், மாயைக்கும் ம்ருத்யுவும் (death), நரகத்திற்கும், வேதனைக்கும் துக்கமும் (pain) பிள்ளைகளாயினர். ம்ருத்யுவின் பிள்ளைகள் வ்யாதி(disease), ஜரை (மூப்பு,decay), சோகம்(sorrow), த்ருஷ்ணை(greediness), க்ரோதம்(wrath) என்பவை. இவர்களில் தக்ஷர் முதலானோர் நித்யஸர்கத்திற்கும், மனுவும், மனுபுத்ரர்களும் நித்யஸ்திதிக்கும், வ்யாதி முதலானவைகள் நித்யப்ரளயத்திற்கும் காரணங்கள்.

நைமித்திக, ப்ராக்ருத, ஆத்யந்திக, நித்ய என ப்ரளயம் நால்வகைப்படும். ப்ரஹ்மனின் ஒவ்வொரு தினத்தின் முடிவிலும் எங்கும் நீர் சூழ்ந்திருக்க, பரமன் சயனித்திருக்கும்போதுண்டாகும் ப்ரளயம் நைமித்திகம். ப்ரஹ்மனின் ஆயுஸ் முடிவில் அனைத்தும் ப்ரக்ருதியில் லயமடைவது ப்ராக்ருதம். ப்ரஹ்மோபாஸிகள் கர்மங்கள் தொலையப்பெற்று பரமாத்மாவையடைதல் ஆத்யந்திகம். ப்ராணிகளின் மரணம் நித்யப்ரளயம்.

இவ்வாறே ஸ்ருஷ்டியும் ப்ராக்ருத, நைமித்திக, நித்ய என மூன்றாகும். ப்ரஹ்மனுக்கும் முன்பே ப்ரக்ருதியைக் கொண்டு செய்யப்படும் மஹதஹங்கார ஸ்ருஷ்டி ப்ராக்ருதம். நைமித்திக ப்ரளயத்திற்குப் பின்னுண்டாவது நைமித்திக ஸ்ருஷ்டி. அவ்வாறே தத்தம் நல்வினை, தீவினைகளுக்கேற்ப ஸ்வர்க, நரகங்களையனுபவித்துவிட்டு ப்ராணிகள் மீண்டும் பசு, பக்ஷி, மனுஷ்யர்களாகப் பிறப்பது நித்யஸ்ருஷ்டியாகும்.

ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரமென்பவை ஸத்வ, ரஜ, தமோ குணங்களின் வெளிப்பாடே. இவைகளுக்குட்படாமலிருப்பவன், இவைகளைக் கடந்து ப்ரஹ்மானந்தத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டேயிருக்கிறான். மீண்டும் பிறப்பதில்லை.

No comments:

Post a Comment