Tuesday, November 5, 2013

வாமன புராணம் - 04

வாமன புராணம் - 04

தேவர்கள் உறங்கும் காலம்: மஹாவிஷ்ணு ஆடி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டு த்வாதசியன்று ப்ராஹ்மணர்களிடம் விடை பெற்றுக் கொண்டு உறங்குகிறார்.  த்ரயோதசியில் மன்மதன் புஷ்பங்களின் மீதும், சதுர்த்தசியில் யக்ஷர்கள் தங்கத் தாமரையிலும், பௌர்ணமியில் சிவன் புலித்தோலிலும், ப்ரதமையில் ப்ரஹ்மா நீலோத்பலத்திலும், த்விதீயையில் விச்வகர்மாவும், த்ருதீயையில் பார்வதியும், சதுர்த்தியில் பிள்ளையாரும், பஞ்சமியில் யமனும், ஷஷ்டியில் முருகனும், ஸப்தமியில் ஸூர்யனும், அஷ்டமியில் காத்யாயனியும், நவமியில் லக்ஷ்மியும், தசமியில் பாம்புகளும், ஏகாதசியில் ஸாத்யர்களும் உறங்குகின்றனர்.

த்விதீயையில் விஷ்ணுவை லக்ஷ்மியோடு தங்கக் கட்டிலில் படுக்க வைத்து பூஜிப்பது அசூன்ய சயன த்விதீயை வ்ரதமாகும்.  ஆச்வயுஜ அஷ்டமியில் உபவாஸமிருந்து நவமியில் சிவபூஜை செய்வது காலாஷ்டமி வ்ரதமாகும்.

ஊர்வசி தோன்றியது: ஒரு ஸமயம் நர, நாராயணர்களது தவத்தைப் பொறுக்காத தேவேந்த்ரன் அவர்களது தவத்தைக் கலைக்க, தேவலோகத்தின் சிறந்த அப்ஸரஸ்ஸுகளையும், காமனையும், வஸந்த ருதுவையும் அனுப்பி வைத்தான்.  இவர்கள் வருகையின் நிமித்தத்தை அறிந்த, நாராயணர் அவர்களும் மயங்கும்படியான ஒரு அழகியை தன் தொடையைத் தட்டி உருவாக்கினா.  அவளும் அவர்களை வரவேற்று, நன்கு உபசரித்தாள்.  நாராயணரது வலிமையைக் கண்ட அவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.  தன் தொடையிலிருந்து தோன்றிய அவளை ஊர்வசி என்று அவர்களுக்கு (ஊரு=தொடை)அறிவித்து, அவளையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.  இந்த்ரனும் அவளழகைக் கண்டு, நர, நாராயணர்களது பராக்ரமத்தை அறிந்தான்.

No comments:

Post a Comment