Thursday, November 28, 2013

வாமன புராணம் - 22

வாமன புராணம் - 22

ச்ரவண த்வாதசீ வ்ரதமும், புரூரவஸ் சரிதமும்: த்ரிவிக்ரமரைத் தர்சித்து விட்டு அதன் பின்னர் கேதாரம், பத்ரிகாச்ரமம், பத்ரகர்ணம் முதலான பல க்ஷேத்ரங்களைத் தர்சித்துக் கொண்டு, புரூரவஸ்ஸுக்கு சுபிக்ஷங்களை அருளிய ஜகன்னாதரின் இராவதி க்ஷேத்ரத்தை அடைந்தார். த்ரேதாயுகத்தில் மத்ர தேசத்தில் சாகல நகரில் தர்மன் என்று ஒரு வைச்யன் இருந்தான்.  மிகவும் தர்மிஷ்டனான அவன் வ்யாபாரத்திற்காக தன் குழுவினரோடு வெளியே சென்றிருந்தபோது வழியில் காட்டில் திருடர்கள் அவர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.  தர்மன் மட்டும் உயிரோடு எஞ்சியிருந்தான்.  தனியாக ஒரு பாலைவனத்தில் நீரின்றி, உணவின்றி, எந்த பொருளும் இன்றி தவித்துக் கொண்டிருந்தான்.  பல காலம் திரிந்த அவன் ஒரு சமீமரத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்து அதனடியில் சென்று இளைப்பாறினான்.  அப்போது பல ப்ரேதங்கள் தங்களுக்குள் ஒரு ப்ரேதத்தைத் தலைவனாக பல்லக்கில் வைத்து அந்த மரத்தடிக்குக் கொண்டு வந்து கொண்டிருந்தன.  அவைகளைக் கண்டதும் இவனுக்குப் பசி, தாகம் எல்லாம் போய் பயம் பற்றிக் கொண்டது.  தான் எப்படியும் இவைகளுக்கு உணவாகப் போகிறோம் என்று இவன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே இவனருகிலேயே அந்த பல்லக்கு இறக்கப்பட்டது.

அந்த ப்ரேதராஜா இவனை வரவேற்று இவனைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்து கொண்டான்.  அவனைத் தங்கள் விருந்தினன் என்று ஆறுதல் கூறி, தன் குழுவிற்குக் கட்டளைகளைப் பிறப்பித்தான்.  உடனே மற்ற ப்ரேதங்களும் அவனிடம் அன்பு கொண்டு அவனுக்கு ஒரு மண் பாத்ரத்தில் நீர் கொடுத்தன.  அவன் அதை அம்ருதமாய் நினைத்து, அதில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, அனுஷ்டானங்களைச் செய்து கொண்டான்.  மற்றொரு ப்ரேதம் இன்னொரு மண் பாண்டத்தில் தயிர் சாதம் கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தது.  மிகவும் ருசியாய் இருந்த அதை அவன் விரும்பிப் புசித்துத் தன் பசியையும் போக்கிக் கொண்டான்.  அதன் பின் ப்ரேதராஜன் மற்ற ப்ரேதங்களுக்கு வேண்டிய மட்டும் நீர், தயிர் சாதத்தை அந்த மண் பாண்டங்களிலிருந்து கொடுத்து, அதன் பின் தானும் உண்டு முடித்தான்.  அவன் உண்டதும் அந்த சாதமும், நீரும் அங்கிருந்து மறைந்தன.  அதைக் கண்டதும் வியந்த தர்மன் ப்ரேதராஜாவிடம் "ஐயா! தாங்கள் யார்?  இவைகள் யார்? புல், பூண்டுகள் இல்லாத இந்த பாலைவனத்தில் எங்கிருந்து இந்த தயிர் சாதமும், நீரும் தங்களுக்குக் கிடைக்கின்றன?" என்று வினவினான்.

ப்ரேதராஜன் "நான் ஸோமசர்மா என்ற வைச்யன், சாகல நகரத்திலே பெரும் வசதிகளிருந்தும் நானும் எதையும் அனுபவிக்காது, ஒரு தான, தர்மமும் செய்யாது கருமியாக இருந்து வந்தேன்.  விலை குறைந்த கீரை, புண்ணாக்குகளையே புஜித்து வந்த நான், என்றாவது தயிர், பால் என்று விரும்பி உண்டு விட்டால் ஜீர்ணிக்காது, நோய் உண்டாகி விடும்.  அப்போது ஒரு ஸமயம் ச்ரவண த்வாதசீயை முன்னிட்டு ஊரில் எல்லோரும் வ்ரதமிருந்து மறுநாள் வெகுவாக தான, தர்மங்களைச் செய்தனர்.  கருமியான நானும் மனமின்றி, கௌரவத்திற்காக வாழ்நாளிலேயே முதல் தடவையாக அப்போது ஒரு ப்ராஹ்மணனுக்கு தயிர் சாதத்தை மண் பாத்ரத்தில் வைத்துக் கொடுத்து, ஒரு ஜோடி செருப்பும், குடையும் கொடுத்தேன்.  அவர் ஒரு சிறந்த ப்ராஹ்மணர்.  அந்த ச்ரவண த்வாதசி வ்ரதத்தில் நான் கொடுத்த பாதுகையும், தயிர் சாதமும், கொடையுமே இப்படி பல்லக்காகவும், தயிர் சாதமாகவும், இந்த சமீ மரமாகவும் இங்கு கிடைக்கின்றன.  இந்த ப்ரேதங்களும் அப்படி பொருளிருந்தும் தானங்கள் செய்யாமல் இருந்தவைகளே.  நான் உண்டதும் ஒரு பருக்கையும் வராது.  எனவேதான், அனைவரும் உண்டபின் நான் உண்கிறேன்" என்று கூறி தர்மனிடம் தங்களுக்காக ஒரு தடவை கயை சென்று ச்ராத்தம் செய்யுமாறு வேண்டினான்.  தர்மனும் அங்கிருந்து புறப்பட்டு, அவ்வாறே நன்றி மறவாது கயை சென்று அவைகளைக் குறித்து ச்ராத்தம் செய்தான்.  அந்த ப்ரேதங்களும் தங்கள் பாபமகன்று ஸ்வர்க்கம் சேர்ந்தன.

தர்மன் தானும் ச்ரவண த்வாதசீ வ்ரதத்தை அனுஷ்டித்து கந்தர்வ லோகம் சென்றான்.  அங்கு பல போகங்களை அனுபவித்து அடுத்த பிறப்பில் மன்னனாகப் பிறந்தான்.  மீண்டும் அந்த வ்ரதத்தை அனுஷ்டித்து சாகல நகரத்தில் ஒரு அந்தணனாகப் பிறந்தான்.  முற்பிறப்பில் செய்த சில பாபங்களால் இந்த பிறப்பில் அவனுக்கு அழகான உருவம் கிடைக்கவில்லை.  அதனால் அவன் மனைவி அவனிடம் அதிக ப்ரேமை கொள்ளாது இருந்தாள்.  அழகிய உருவத்தை வேண்டி அவன், இராவதீ நதிக்கரையில் நக்ஷத்ர புருஷனாக இறைவனைப் பூஜித்து, மன்மதனாக உருப்பெற்றான்.  அவனே அடுத்த பிறப்பில் சந்த்ர வம்சத்தில் புரூரவஸ் என்ற சக்ரவர்த்தியாகத் தோன்றினான்.

நக்ஷத்ர புருஷ பூஜா: மஹாவிஷ்ணுவின் அவயவங்களில் நக்ஷத்ரங்களை உருவகித்து, எந்த நக்ஷத்ரம் ஒவ்வொரு மாத பௌர்ணமியில் வருகிறதோ, அந்த அவயவத்தை அன்று பூஜித்து, பாரணை செய்வது நக்ஷத்ர புருஷ பூஜா ஆகும். பாதங்கள் மூலம், முழங்கால் ரோஹிணீ, தொடைகள் அச்வினீ, மலவழி பூராடம், ஜலவழி பூரம், இடை க்ருத்திகை, இடை முன்புறம் அனூராதா, இடை பின்புறம் அவிட்டம், தோள்கள் விசாகா, கைகள் ஹஸ்தம், புறங்கை புனர்வஸு, நகங்கள் ஆச்லேஷா, கழுத்து கேட்டை, காதுகள் திருவோணம், உதடுகள் பூரம், பற்கள் ஸ்வாதி, கன்னம் புனர்வஸு, மூக்கு மகம், கண்கள் ம்ருகசீர்ஷம், மயிர்கள் திருவாதிரை.  இந்த பூஜையால் அருந்ததி பெரும் கீர்த்தியையும், ஆதித்யன் புத்ரனையும், ரம்பை அழகையும், திலோத்தமை மதுரமான வாக்கையும், புரூரவஸ் அகண்ட ஸாம்ராஜ்யத்தையும், அழகையும் அடைந்தார்கள்.

No comments:

Post a Comment