Sunday, November 10, 2013

வாமன புராணம் - 07

வாமன புராணம் - 07

வாமனாவதாரம்: தைத்யேந்த்ரனான ஹிரண்யாக்ஷனின் மகன் ப்ரஹ்லாதன். அவன் மகன் விரோசனன். விரோசனன் மகன் பலி.  இந்த பலி சக்ரவர்த்தி தாத்தாவின் உபதேசங்களால் உயர்ந்த தர்மங்களைக் கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்து வரலானான்.  ராக்ஷஸர் யாவரும் இவன் வழியிலேயே தேவ தர்மங்களில் ஈடுபட, தர்மம் நான்கு பாதங்களோடு நன்கு தழைத்தோங்கியது.  லக்ஷ்மியும் இதனால் தேவேந்த்ரனை விட்டு இவன் உடலில் ஆவிர்பவித்து வஸித்து வரலானாள்.  மூவுலகையும் பலி சக்ரவர்த்தியே ஆண்டு வரலானான்.

பதவியை இழந்த இந்த்ரன் மேருமலையில் இருக்கும் தன் தாயான அதிதி தேவியைக் கண்டு தன் நிலையைக் கூறினான்.  அவன் தந்தையான கச்யபர் அவனையும், தேவர்களையும் அழைத்துக் கொண்டு ப்ரஹ்மலோகத்திற்குச் சென்றார்.  வேத, இதிஹாஸங்களால் ஸ்வரூபத்துடன் துதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ப்ரஹ்மதேவர் இவர்கள் குறைகளைக் கேட்டு, ச்வேத த்வீபத்தில் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமனிடம் செல்லுமாறு கூறினார்.  அங்கு அனந்த சயனத்தில் இருந்த மஹாவிஷ்ணு கச்யபர் ஸ்துதிகளில் மகிழ்ந்து அவர் முன் தோன்றினார்.  மஹாவிஷ்ணுவே தனக்குக் குழந்தையாக அவதரிக்க வேண்டும் என்று கச்யபர் வரம் வேண்டினார்.  அவரும் அவ்வாறே தோன்றி, தேவேந்த்ரனுக்கு அவன் பதவியை மீட்டுக் கொடுப்பதாக வரமளித்தார்.

அதிதியும் பல்லாண்டுகள் தவம் செய்தபின், அவள் கர்ப்பத்தில் பகவான் கருவானார். அவளால் உலகமே அதிர்ந்தது.  அதிதி கால் வைத்த இடமெல்லாம் தாழ்ந்தது.  இந்த சகுனங்களைக் கண்ட பலி, தாத்தாவிடம் இதன் காரணத்தைக் கேட்டான்.  அவர் தன் ஞான த்ருஷ்டியால் நடக்கப் போவதையெல்லாம் கூறினார்.  தன் ராஜ்யம் கைவிட்டுப் போகப்போவதைக் கேட்ட ராஜன் கோபம் கொண்டு பகவானை நிந்தித்து, அவரைக் கொல்லப்போவதாகக் கூறினான்.  இந்த நிந்தைகளைப் பொறுக்காத ப்ரஹ்லாதர், தன் காதுகளை மூடிக் கொண்டார்.  தன் இஷ்ட தேவதையை நிந்தித்த அவனை விட்டு நிச்சயம் ராஜ்யம் அகன்று விடும் என்று சபித்து விட்டுக் கிளம்பலானார்.  தன் தவறுகளுக்கு வருந்திய பலி அவரை மன்னித்து விடுமாறு வேண்டினான்.  ப்ரஹ்லாதனும் தன் சாபத்தை நினைத்து வருந்தி, ஹரியையே சரணமடையுமாறு அவனுக்கு போதித்து விட்டு தீர்த்த யாத்ரைக்குச் சென்று விட்டார்.

பத்து மாதங்களில் அதிதி வாமனரைப் பெற்றாள்.  தேவ வாத்யங்கள் முழங்க, தேவர்கள் பூமாரி பொழிய, சாதுக்கள் ஜயஜய என்று கோஷிக்க கச்யபர் குழந்தைக்கு ஜாத கர்மம் முதலாக உபநயனத்தையும் செய்து வைத்தார்.  ப்ரஹ்மா குழந்தைக்கு மான் தோலையும், ப்ருஹஸ்பதி பூணூலையும், மரீசி தண்டத்தையும், வஸிஷ்டர் கமண்டலத்தையும், ஆங்கிரஸ் தர்ப்பையையும், புலஹர் ஆஸனத்தையும், இன்னும் பலர் பல பொருள்களையும் தந்தனர். வேத, சாஸ்த்ரங்கள் உருக்கொண்டு வாமனரைப் போற்ற, ப்ருஹஸ்பதியை முன்னிட்டுக் கொண்டு, முனிவர்களோடு அவர் புவியதிர பலி சக்ரவர்த்தியின் யாகசாலைக்குப் புறப்பட்டார்.

பூமி அதிர்வதற்குக் காரணம் என்ன என்று யாகசாலையில் பலி சுக்ராச்சார்யரைக் கேட்க அவர் தன் த்ருஷ்டியால் வாமனர் வருவதை அறிந்து, "தேவர்களுக்குப் பாகம் அளிக்காமல் நடக்கும் இந்த யக்ஞம் விஷ்ணுவுக்கு ப்ரியமானதல்ல.  எனவே உன் ராஜ்யத்தைப் பறித்து தேவேந்த்ரனுக்கு அளிப்பதற்காக அவரே வாமனராக இங்கு வந்து கொண்டிருக்கிறார்.  அவருக்குத் தகுந்த மரியாதைகளை அளித்து அவரைத் திருப்பி அனுப்பி விடு.  சிறு பொருளைக் கூட அவருக்குத் தானம் கொடுப்பதாக ப்ரதிக்ஞை செய்து விடாதே" என்று பலியை எச்சரித்தார்.  அவனோ தன் தர்மத்தால், "சாமான்யர் கேட்டாலே நான் கொடுத்து விடுவேன். அப்படி இருக்க, எந்த பரம புருஷனைக் காண சாதுக்களும் பூஜை, வ்ரதம், யக்ஞம், தவம் இவைகளால் தங்களை வருத்திக் கொள்கிறார்களோ, அந்த புருஷோத்தமனே என்னிடம் வரும்போது அவருக்கு எதையும் அளிப்பேன்.   அனைத்துயிர்க்கும் படியளக்கும் அவரே என்னிடம் யாசிக்கையில் என் உயிரையும் அவருக்குக் கொடுப்பேன்.  இதை விட எனக்கு வேண்டியது வேறெதுவுமே இல்லை.  ஒருவன் தான் ஒரு பொருளை அனுபவிப்பதை விட, பிறருக்கு அதைக் கொடுப்பதிலேயே பல மடங்கு மகிழ்வான்.  அவர் என்னிடம் யாசித்துப் பெற்றாலும் சரி, அல்லது என்னைக் கொன்றாலும் சரி, எதுவும் எனக்கு சிறப்பே" என்று கூறினான்.

யாகசாலையில் நுழைந்த வாமனரை அனைவரும் எழுந்து பூஜித்தனர்.  பலியும் அவரிடம் மெய் மறந்து அவருக்கு நீரளித்து, ஆஸனமிட்டு நமஸ்கரித்து, தன் ராஜ்யமுட்பட எதையும் அவருக்குத் தானமளிக்க சித்தமாக இருப்பதாகக் கூறி, எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொண்டு தன்னை தன்யனாக்க வேண்டுமென்றுக் கேட்டுக் கொண்டான். வாமனரோ தான் அக்னி பூஜை செய்ய தன் காலால் மூன்றடி மண் வேண்டுமென்று அவனைக் கேட்டார்.  இதைக் கேட்டுச் சிரித்த பலிச்சக்ரவர்த்தி இன்னும் வேண்டுமளவு, வேண்டியவைகளைக் கேட்கவேண்டுமென்று ப்ரார்த்தித்தான்.  பகவான் "அவைகளைக் கேட்பவர்களுக்கு அவைகளைக் கொடு, எனக்கு இதை மட்டும் கொடு, போதும்" என்றார்.  பலியும் அவ்வாறே ஆகட்டும் என்று அவர் கைகளில் தீர்த்தத்தை விடலானான்.  உடனேயே வாமனர் தன் விச்வரூபத்தை அவனுக்குக் காட்டி, ஸகல லோகங்களையும் தன் கால்களால் அளந்து தேவேந்த்ரனுக்குக் கொடுத்தார்.

பலிச்சக்ரவர்த்தியை ஆசிர்வதித்து அவனை பாதாள லோகத்தில் சென்று வஸிக்குமாறு கூறினார்.  தனக்கு அளித்த தான மஹிமையால் ஒரு கல்ப காலத்திற்கு அவனுக்கு ஆயுள் இருக்குமென்றும், ஸாவர்ணிக மன்வந்த்ரத்தில் அவனே தேவேந்த்ர பதவியையும் அடைவான் என்றும், ப்ராஹ்மணர்களையும், தேவர்களையும் ஹிம்ஸிக்காத வரை ஸகல செல்வங்களையும் அடைவான் என்றும் ஆசிர்வதித்து அனுப்பினார்.  பலி பாதாள லோகத்தில் தனக்கு உணவை வேண்ட, வாமனர் "விதிப்படி செய்யாத தானமும், ச்ரத்தை, நெய் இவைகளில்லாத ஹோமமும், தக்ஷிணையில்லாத யாகமும், தீர்த்தமில்லாத பூஜையும் உனக்கு உணவாகும்" என்று கூறி அருளினார். 

மேலும், ஆடி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் உபவாஸமிருந்து, த்வாதசியில் தனது இந்த அவதாரத்தைப் பூஜிப்போர் வைகுண்டததை அடைவர் என்று கூறி மஹாவிஷ்ணு மறைந்தார்.  இந்த வாமன சரிதத்தைப் படிப்பவர்களது ஸகல பாவங்களும் அகலும், கேட்பவர் நினைத்த பலனை அடைவர் என்று சூதரும் சரிதத்தை முடித்தார்.

1 comment: