Thursday, November 28, 2013

வாமன புராணம் - 20

வாமன புராணம் - 20

ஸப்தமருத்துக்கள்: திதி தன் புத்ரர்களனைவரும் தேவர்களால் அழிக்கப்படுவதைக் கண்டு காச்யபரிடம் சென்று தேவர்களைக் கொல்லத்தக்க ஒரு புதல்வனை வேண்டினாள்.  அவரும் ஆயிரமாண்டுகள் தூய்மையாயிருந்தால் அப்படி ஒரு புதல்வன் கிடைப்பான் என்று அருளினார்.  அவளும் அப்படியே ஆயிரமாண்டுகள் தவமிருக்கத் தொடங்கினாள்.  தவத்திற்கு உதவுவதாக பெரியம்மாவிடம் கூறிய தேவேந்த்ரன் அப்படியே அவள் நம்பிக்கையைப் பெற்றான்.  ஒரு ஸமயம் புத்ரசோகத்தால் முழங்காலில் தலையை வைத்துக் கொண்டிருந்த திதி அப்படியே உறங்கி விட, அவள் தலைமயிர் அவிழ்ந்து அவள் காலில் விழுந்தது.  மயிர் காலில் படுவது அசுத்தம் என்பதால் அது தான் ஸமயம் என்று தேவேந்த்ரனும் அவள் மூக்கில் நுழைந்து, அவள் கருவில் இருந்த சிசுவை தன் வஜ்ரத்தால் ஏழு கூறுகளாக அறுத்தான்.  விதி வலியை நினைத்து நொந்த திதியும் தேவேந்த்ரனை சபிக்காத அந்த எழுவரையும் அவன் ஸேனையிலேயே சேர்த்துக் கொள்ளச் சொன்னாள்.  அறுக்கும் போது அவைகள் அழுததால் தேவேந்த்ரன் மாருத (அழாதே) என்று கூறிக் கொண்டே அறுத்தான்.  எனவே இவைகள் ஸப்தமருத்துக்கள் எனப்படுகின்றன.

மன்வந்த்ரங்களின் மருத்துக்கள்: ஸ்வாயம்புவ மனுவின் புத்ரன் ஸவனன் குழந்தைகளின்றி இறந்தான்.  அவன் மனைவி ஸ்வேதா என்பவள் அவன் உடலைத் தராது அழுது கொண்டேயிருந்தாள்.  அப்போது ஒரு அசரீரி தோன்றி புத்ரபாக்யம் வேண்டினால், அவளையும் கணவனோடு சிதையிலேறக் கூறியது.  அப்படியே அவளும் செய்ய, தம்பதிகள் மீண்டும் உயிர்பெற்று, ஆகாயத்திலேயே இன்பத்தை அனுபவித்தனர்.  அரசன் வீர்யம் அப்போது பூமியில் ஒரு தாமரையிதழில் விழுந்தது.  ஸ்நானஞ்செய்ய வந்த ஏழு முனி பத்னிகள் அதைப் பற்றி தங்கள் பதிகளிடம் கேட்க, தேவ ரஹஸ்யமறிந்த அவர்கள் அதைப் பருகச் சொல்ல, பத்னிகளும் அப்படியே செய்தனர்.  உடனே அவர்கள் ப்ரஹ்மதேஜஸ் அவர்களை விட்டு அகன்றது.  அவர்களுக்குப் பிறந்த எழுவரே ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்திற்கு மருத்துக்கள்.

ஸ்வாரோசிஷ மனுவின் புத்ரரான ரிதத்வஜருக்கு ஏழு குழந்தைகள்.  அவர்கள் இந்த்ரபதவிக்கு ஆசைப்பட்டு தவம் செய்யும் போது, இந்த்ரனாணையால் பூதனை எனும் அப்ஸரஸ் அவர்கள் குளிக்கும் போது அவர்கள் மனதைக் கெடுக்க, அவர்கள் வீர்யம் வெளிப்பட்டது.  அதனை சங்கினீ எனும் மீன் விழுங்கியது.  மீனவர்கள் அதனைப் பிடித்து அரசர்களான அவர்களிடமே கொடுக்க, அது ஏழு குழந்தைகளைப் பெற்று விட்டு, உடலை விட்டு தேவலோகம் சென்றது.  அழுது கொண்டிருந்த குழந்தைகளை ப்ரஹ்மன் மருத்துக்களாக்கினார்.

உத்தம மன்வந்த்ரத்தில் த்ருவனுடைய வம்சத்தில் தோன்றிய வபுஷ்மானுக்கு ஜ்யோதிர்மானெனும் புதல்வனிருந்தான்.  புத்ரபாக்யத்திற்காக மனைவியோடு வனத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த அவனை ஸப்தரிஷிக்கள் ஆசிர்வதித்து ராஜ்யத்திற்கு அனுப்பினர்.  மனைவி கர்ப்பவதியாயிருக்கும் போதே அவன் காலம் முடிந்தது.  அவனோடு அவன் பத்னியும் சிதையிலேற, மழை பொழிந்து நெருப்பு அணைந்தது.  அவர்களுக்கு தோன்றிய ஏழு குழந்தைகளே அந்த மன்வந்த்ரத்திற்கு மருத்துக்கள்.

தாமஸ மனுவின் புதல்வரான தந்தத்வஜர் குழந்தைப்பேறு வேண்டி தன்னுடலை அறுத்து ஹோமஞ்செய்யலானார்.  அவருடைய ஏழு தாதுக்களும் ஏழு மருத்துக்களாயின.

ரைவதமனுவின் புத்ரனான சத்ருஜித் ஸூர்யனைப் பூஜித்து வந்தார்.  ஸுரதி என்ற கன்யகையை அவனுக்களித்த ஸூர்யன் அவள் மூலமாக அவன் ஸந்ததி வளருமென்று ஆசிர்வதித்தார்.  ஆனால் அதற்குள்ளாகவே அவன் இறந்து போக, ஸுரதியும் அவனோடு உயிர் நீத்தாள்.  அவள் அழகில் மயங்கிய ஸப்தரிஷிகள் ஏழு குழந்தைகளை மருத்துக்களாகப் படைத்தனர்.

சாக்ஷுஷ மனுவின் தனயரான மங்கி என்பவர் ஸப்தஸாரஸ்வதத்தில் தவம் செய்து கொண்டிருந்தபோது துஷிதை எனும் தேவலோகத்துப் பெண்ணால் அவர் வீர்யம் நழுவி மருத்துக்களாயிற்று.

இந்த மருத்துக்களின் சரிதங்களைக் கேட்பவர்களது பாபமகன்று தர்மம் செழிக்கும்.

No comments:

Post a Comment