Monday, November 18, 2013

வாமன புராணம் - 11

வாமன புராணம் - 11

விநாயகர் வரலாறு: உமா மஹேச்வர விவாஹம் முடிந்து, இறைவன் ஆணைப்படி விச்வகர்மா நிர்மாணித்த நாற்பத்தாறு யோஜனை விசாலமுள்ள அரண்மனையில் ஆதிதம்பதிகள் அனுஷ்டானங்களுடன் ஸுகமாய் இருந்தனர்.  ஒரு ஸமயம் ஸ்வாமி தேவியை கருப்பாய் இருக்கிறாயே என்று பரிஹஸிக்க, அன்னை கோபம் கொண்டு ஹிமாசலத்தில் சென்று தவமிருக்கச் ஆரம்பித்து விட்டாள்.  ஜயா, விஜயா, ஜயந்தீ, அபராஜிதா என்ற தோழிகள் பணிவிடை செய்ய, தேவி நூறாண்டுகள் ஒற்றைக் காலில் நின்று கடுந்தவம் செய்து கொண்டிருந்தாள்.  அவள் எங்கே கீழே விழுந்து விடுவாளோ என்று தாங்கிக் கொள்வதற்காக ஒரு புலியும் அன்னையினருகிலேயே நூறாண்டும்  நின்று கொண்டிருந்தது.  அப்போது அங்கே தோன்றிய ப்ரஹ்மா தேவியின் விருப்பப்படி அந்தப் புலியை கணங்களுக்குப் பதியாகச் செய்து, தேவிக்கும் ஸ்வர்ண மயமான சரீரத்தை அளித்தார்.  தேவியின் கருப்பு உடல் கௌசிகீ என்ற பெயரோடு கிளம்பி, தேவேந்த்ரன் ப்ரார்த்தித்தபடி விந்த்யாசலத்தில் காத்யாயனி, விந்த்யாசல நிவாஸினீ என்று பல பெயர்களோடு வஸிக்கலாயிற்று.

ஸ்வர்ணவர்ணத்தில் கௌரீ என்ற நாமத்தோடு தேவியும், பரமனும் அதன் பின் ஆயிரமாண்டுகள் இல்லற ஸுகத்தில் ஆழ்ந்திருக்க, அனைத்துலகும் அதனால் நடுங்கலாயிற்று.  தேவேந்த்ரன் பயந்து தேவர்களோடு ப்ரஹ்மனிடம் ஓட, அவர் தேவியின் வயிற்றில் தேவதேவன் அம்சத்துடன் ஒரு குழந்தை பிறந்தால் அது நிச்சயம் தேவேந்த்ரன் பட்டணத்தைப் பிடித்துக் கொள்ளும் என்று கூறினார்.  அனைவரும் அங்கிருந்து கைலாஸம் சென்றனர்.  நந்திக்குப் பயந்து அனைவரும் சேர்ந்து அக்னியை உள்ளே செல்லுமாறு பணித்தனர்.  அவர் ஹம்ஸ ரூபங்கொண்டு உள்ளே சென்று மஹாதேவன் காதில் சென்று தேவர்கள் வெளியில் காத்துக் கொண்டிருப்பதாகக் கூற, ஈச்வரன் வெளியே வந்தார்.  தன் வீர்யத்தை யார் வஹிக்கப் போகிறீர்கள் என்று கங்காதரன் கேட்க, எல்லோரும் பயந்து நிற்க அக்னி, தான் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.  இறைவனும் அப்படியே செய்து விட்டு, அம்பிகையிடம் வந்து நடந்ததைக் கூறினார்.  அம்பிகை தன்னைக் கர்ப்பமில்லாமல் செய்து தேவர்களுக்கும் குழந்தைகள் பிறக்காது என்று கோபத்தில் சபித்து விட்டாள்.

தேவி அதன் பின் ஸ்னானம் செய்யச் செல்கையில் தன் உடம்பிலிருந்த அழுக்கையெல்லாம் திரட்டி நான்கு கைகளும், பெரும் வயிரும், யானை முகமும் கொண்ட ஒரு பொம்மையாகச் செய்து வைத்து விட்டு, குழந்தை பிறக்க வேண்டும் என்றாசையோடு குளித்துக் கொண்டிருந்தாள்.  அதை பரமேச்வரன் வந்து ஸ்பர்சிக்க, அது உயிர்பெற்று வந்தது.  நாயகன் இன்றி பிறந்ததால் அதற்கு விநாயகன் என்று பெயரிட்டு, அதற்குத் துணையாகப் பல கணங்களையும் படைத்து கணபதியாக்கி, மஹாதேவன் தேவியிடம் உன் குழந்தையைப் பார் என்றார்.  தேவி மகிழ்ந்து குழந்தையைக் கொஞ்சி
 "உன்னைப் பூஜிப்பவர்களது விக்னங்களைப் போக்குவாயாக" என்று அருளினாள்.

No comments:

Post a Comment