Wednesday, November 27, 2013

வாமன புராணம் - 19

வாமன புராணம் - 19

நளன் பிறப்பு:வானரமாய்த் திரிந்து கொண்டிருந்த விச்வகர்மாவைக் கண்டதும் ஜாபாலி தன்னைக் கட்டிய குரங்கு அது தான் என்று ரிதத்வஜரிடம் கூறினான்.  இதைக் கேட்டதும் சகுனி அதைக் கொன்று விடுவதற்கு மஹரிஷியிடம் உத்தரவு கேட்டான்.  ஆனால் ரிதத்வஜரோ "சகுனியே! இக்குரங்கு ஒரு நிமித்தம் மட்டுமே.  அவரவர் செய்த வினைகளன்றோ அவர்கள் படும் இன்ப, துன்பங்களுக்குக் காரணமாகும். இதைத் தண்டிப்பதால் ஜாபாலியின் துன்பம் இல்லையென்றாகிவிடுமா?" என்று தடுத்து, அந்தக் குரங்கிடமே அதன் கட்டை அவிழ்த்து விடுமாறு கூறினார்.  அதுவும் அப்படியே ஜாபாலியைக் கிளையிலிருந்து விடுவித்தது.  மனம் மகிழ்ந்த ரிஷி அதனை வேண்டிய வரத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.  விச்வகர்மா தன் ஸ்வரூபத்தை மீண்டும் வேண்டினான்.  மஹர்ஷி அவனை, க்ருதாசீயுடன் கூடி ஒரு புத்ரனைப் பெற்றுக் கொள்ளுமாறும், அதன் பின் அவன் தன் பழைய உருவத்தைப் பெறுவான் என்றும் ஆசிர்வதித்தார்.  நளன் பிறந்தான். 

விச்வகர்மாவிடம் மஹரிஷி மற்ற மூன்று பெண்களின் தந்தைகளையும், காலவரையும் அழைத்து வருமாறு பணித்தார்.  அனைவரும் சேர்ந்து ஸப்தகோதாவரத்தில் குளித்து, ஹடகேச்வரரைப் பூஜித்தனர்.  சித்ராங்கதை ஸுரதனையும், தேவவதி ஜாபாலியையும், வேதவதியை இந்த்ரத்யும்னனும், தமயந்தி சகுனியையும் மணந்தனர்.  ஒரு மாத காலம் ஹடகேச்வரரைப் பூஜித்து, இருப்பிடம் சென்றனர்." என்று கதையை முடித்த தண்டன் அப்படியே தன்னை மணந்து சுகம் பெறுமாறு வ்ரஜையைக் கோரினான்.  அவள் தந்தை உத்தரவின்றி மணக்க மறுக்கவே, தண்டன் அவளை பலாத்காரம் செய்தான்.  அவன் சென்ற பின் அங்கு வந்த சுக்ரர் அழுது கொண்டிருந்த தன் பெண்ணிடம் விபரங்களை அறிந்தார்.  கடுங்கோபம் கொண்டு "இன்னும் ஏழே நாளில் தண்டன் தன் ராஜ்யத்துடனும், பரிவாரங்களுடனும் சாம்பலாவான்" என்று சபித்து விட்டு, பெண்ணையும் பாபமகலும் வரை அங்கேயே தவம் செய்யுமாறு கூறிவிட்டு, பாதாளம் சென்றார்.  இன்றும் எவரையும் எச்சரிக்கும் வகையில் இருக்கும் அந்த இடம் தண்டகாரண்யமே.  சாமான்ய பெண்ணை விரும்பியவனுக்கே இந்த கதி, நீயோ ஜகன்மாதாவையே விரும்புகிறாய்" என்று கூறி ப்ரஹ்லாதன் அந்தகனுக்கு உரைத்தார்.

அந்தகன் அழிவு:  விதி வலியால் ப்ரஹ்லாதர் கூறிய எதுவும் அந்தகன் காதுகளில் ஏறவில்லை.  அவர் ஹஸிதர், அகஸ்த்யர், மனு, விபு, நமுசி, ஹிரண்யாக்ஷன் என மேலும் பலரைப் பற்றிக் கூறி, தர்மத்தை கைக்கொள்ளுமாறு கூறினார்.  அவன் "உங்கள் தர்மம் உங்களிடமே இருக்கட்டும், தண்டனும் நானும் ஒன்றா? ஒற்றைக் காளையில் சென்று பிச்சைக் கேட்டுத் திரிந்து கொண்டிருக்கும் அந்த சிவன், சகல புவனங்களும் நடுங்கும் எனக்கு ஈடாவானோ?" என்று ஏசி, சம்பரனை அழைத்து, "உலகமே என்னுடையது.  இந்த கைலாசம் யாருனக்குத் தந்தது என்று சர்வேச்வரனிடம் சென்று கேட்குமாறு கூறி, பார்வதையை தனக்குத் தந்து விட்டால் கைலாசத்தில் சிவன் இருந்து கொள்ளலாம்" என்று கூறுமாறு அனுப்பினான்.  அப்படியே அவனும் சென்று கேட்க "இம்மலை இந்த்ரன் எனக்குத் தந்தது.  அவன் உத்தரவின்றி இதை நான் தரமுடியாது.  நீ வேண்டுமானால் பார்வதியை வேறிடம் அழைத்துச் செல்" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.  அவன் தேவியிடம் சென்று அந்தகனை மணக்குமாறு வேண்டினான்.  தேவி தான் பாதசாரியாக வருவேன் என்றும், தன்னை சேனைகளோடு கூடி அந்த அந்தகன் ஜயித்தால், பின்னர் அதைப் பற்றிப் பேசலாம் என்று அவனை அனுப்பினாள்.

துர்யோதனன், ஜம்பன், குஜம்பன், ஹுண்டன், துஹுண்டன், சம்பரன், பலி, பாணன், ம்ஹோதரன், விரோசனன் என மேலும் பல ராக்ஷஸர்களோடு கூடி பெரும் சேனையோடு கைலையை நோக்கிப் புறப்பட்டான்.  ஈசன் ஆணைப்படி நந்தியும் ஸ்நானம் செய்து ஸகல கணங்களையும் மனதால் நினைத்தார்.  குரங்கு முகத்தோடு பதினோரு கோடி ருத்ரர்களும் தங்கள் த்வாரபாலர்களோடு உடனே அங்கு தோன்றினர்.  மேலும் ஸ்கந்தனின் அறுபத்தாறு கோடி கணமும், எழுபது கோடி சிவகணமும், பைரவ, பாசுபத, திகம்பர என்று பல எண்ணிறந்த கணங்கள் அங்கு தோன்றின.  நந்தி கணாதிபதிகளை இறைவனுக்கு அறிவித்தார்.  அவரவர் தகுதிக்கேற்ப அவர்களை ஆசிர்வதித்த ஆண்டவன் பாசுபத கணங்களை மட்டும் தழுவி ஆசிர்வதித்தார்.  தன்னையும், ஹரியையும் ஒன்றென பூஜித்ததே அவர்களுக்குத் தன் ஆலிங்கனம் கிடைத்ததற்குக் காரணம் என்று கூறி, தானே ஸ்தானுவாகவும், திருமாலாகவும், அயனாகவும் தோன்றி, தன்னிடமே ஹரிஹர ஸ்வரூபத்தையும் அனைவர்க்கும் காண்பித்தார்.  மற்ற கணங்களும் இதைக் கண்டு தேவதேவனை பூஜித்து, இதுவரை ஹரி, ஹர பேதங்கொண்டு விஷ்ணுவை பூஜிக்காமலிருந்ததற்கான பாபமகல வேண்டுமென்று ப்ரார்த்தித்தன.

சுக்ரர் பெயர் பெற்றது: பின்னர் பரமேச்வரன் பார்வதியை ஜயை, விமலை முதலிய தோழிகளிடம் ஒப்புவித்து, கணங்களோடு கூடி மந்திரமலைக்குப் புறப்பட்டார்.  பெரும் போர் மூண்டது.  தண்டனெனும் தைத்யனை விநாயகர் கொன்றார். நந்தி குஜம்பன் முதலான பல சேனாதிபதிகளை அவர் படைகளோடு அழித்தார்.  ஆனால், சுக்ரர் அந்தகன் விருப்பப்படி இறந்த அஸுரர் அனைவரையும் ஸஞ்சீவினீ மந்த்ரத்தை ஜபித்து உயிர்ப்பித்தார்.  இதையறிந்த ஈச்வரன் சுக்ரரைக் கொண்டு வருமாறு நந்தியை ஏவினார்.  வழியில் அவரையும், விநாயகரையும் அஸுர கணங்கள் வழி மறித்துத் தாக்கின.  ப்ரஹ்மா உடனே தேவர்களோடு கூடி இந்த்ரனை அங்கு செல்லச் சொன்னார்.  அடங்கியிருந்த தேவர்கள் இப்போது போருக்கு வருவதைக் கண்ட அஸுர கணங்கள் உடனே அவர்களோடு போரிடத் தொடங்கின.  இந்த ஸமயத்தில் நந்தி சென்று சுக்ரரைத் தூக்கி வந்து விட, இறைவன் அவரை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.  பல காலம் தேவதேவனைத் துதித்தும் சுக்ரரால் வெளியே வரமுடியவில்லை.  முடிவில் அவரிடம் கருணை கொண்ட இறைவன் அவரை புத்ரனாக பாவித்து, புத்ரன் வெளியே வரும் வழியாலே வருமாறு கூறினார்.  அப்படி வந்ததாலே அவருக்கு சுக்ரர் எனும் பெயர் ஏற்பட்டது.

அஸுரகணங்கள் அந்தப் போரில் பல தேவ கணங்களை விழுங்க, மந்த்ரமலையில் தேவ கணங்களே இல்லாதவாறு  ஆயிற்று.  உடனே ஈச்வரன் ஜ்ரும்பாம்பிகை எனும் சக்தியை அஸுரர் மீது ஏவினார்.  அதனால் அஸுரர்கள் கொட்டாவி விட, மீண்டும் தேவ கணங்கள் வெளி வந்து கடும் போரிட ஆரம்பித்தன.  ப்ரதோஷ காலத்தில் காலகாலன் அனுஷ்டானம் செய்து சிவகணங்களோடு கூடி பதினெட்டு கைகளோடும் ஆனந்தத் தாண்டவமாடினார்.  பல்லாண்டுகள் கழிந்தும் போரில் வெற்றி கிட்டாத அந்தகன் ஸுந்தனென்பவனை நந்தியாக வரும்படி கூறி, தானே சிவ வேடம் பூண்டு தேவியிடம் சென்றான்.  தன்னாலேதான் இறைவன் உடலில் காயங்கள் உண்டானதென்று, தேவியும் அவைகளை ஆற்ற நெய், பழைய துணி, உப்பு, தயிர் முதலியவைகளைக் கொண்டு வருமாறு தன் தோழிகளைப் பணித்தாள்.  அவர்கள் இல்லாதபோது வந்திருப்பவன் அஸுரன் என்பதையறிந்த தேவி வெள்ளெருக்கில் ஓடி மறைந்தாள்.  அந்தகனும் மீண்டும் போர்க்களத்திற்கே வந்தான்.

அங்காரகன் பெயர் பெற்றது: சமீகர் என்ற முனிவரது புதல்வனான மாதலியை சாரதியாகக் கொண்டு தேவேந்த்ரனும், கருடாரூடராய் மஹாவிஷ்ணுவும், இன்னும் தேவர்களும் போரில் ஈடுபட்டனர்.  மஹாவிஷ்ணு ஜம்பனைக் கொன்றார்.  பரமேச்வரன் அந்தகனது தேரிலிருந்த ஆயிரம் குதிரைகளையும், சாரதியையும் கொன்றார்.  அந்தகன் கதையையெடுத்துக் கொண்டு சேனைகளைத் தடுத்துத் தான் ஒருவனாகவே ஈச்வரனோடு போரிடச் சென்றான்.  காலகாலனும் தன் சேனைகளைத் தன்னுள் ஒடுக்கிக் கொண்டு, அவனோடு போர் புரிந்தார்.  சூலத்தால் அவன் மார்பைப் பிளந்தார்.  அவன் அதை மதியாமல் அவரைத் தன் கதை கொண்டு தாக்கினான்.  ஈச்வரன் உடம்பிலிருந்து இரத்தம் பெருகி, அதிலிருந்து பைரவன், லலிதராஜன், விக்னராஜன், வித்யாராஜன் முதலிய சிவகணங்கள் தோன்றின.  அந்தகன் உடலிலிருந்து பெருகிய இரத்தத்தை ஒரு சிவ கணம் பருகியதும், அதன் உடல் வெந்த கட்டை போலானது.  ஈச்வரன் அதற்கு அங்காரகன் என்று பெயரிட்டு, நவக்ரஹங்களில் ஒன்றாய்ச் செய்தார். 

சூலத்தில் இருந்த அந்தகனை ஆயிரமாண்டுகள் தன் மூன்றாம் கண்ணால் எரித்தார்.  இரத்தம் குன்றி, காய்ந்த அந்தகன் தன் செயலை நினைத்து வெட்கி,  ஈச்வரனைத் துதித்தான்.  அவனிடம் கருணை கொண்ட தேவன் அவனை சூலத்திலிருந்து இறக்கினார்.  அவன் தேவதேவனை நமஸ்கரித்துத் துதித்தான்.  ப்ரிங்கிரிடர் என்ற பெயரிட்டு அவனைத் தன் ஒரு கணத்திற்குத் தலைவனாகச் செய்தார் ஸர்வேசன்.  இரண்டாயிரமாண்டுகள் கழித்து தேவியிடம் சென்ற இறைவனோடு வரும் புதிய கணாதிபனைக் கண்ட பார்வதி தேவி அவனை யாரென்று ஈச்வரனிடம் கேட்டு அறிந்து கொண்டாள்.  அவனும் தான் அந்தகனாய் இருந்து செய்த பாவங்களைப் பொறுத்துக் கொள்ள வேணுமென்று ப்ரார்த்திக்க தேவியும் அவனை மன்னித்து ஆசிர்வதித்தாள்.

No comments:

Post a Comment