Tuesday, November 19, 2013

வாமன புராணம் - 13

வாமன புராணம் - 13

கார்த்திகேய ஜனனம்: சிவதேஜஸ்ஸை ஐயாயிரமாண்டு சுமந்திருந்த அக்னி பகவான் உடல் இளைத்து, தேவர்களுடன் சென்று ப்ரஹ்மனிடம் வழி கேட்க,  இதற்காகவே கடுந்தவம் புரிந்து கொண்டிருந்த பார்வதி தேவியின் ஸஹோதரி குடிலை இந்த தேஜஸைத் தான் சுமப்பதாகப் பெற்றுக் கொண்டாள்.  அவளுக்கும் ஐயாயிரம் ஆண்டுகள் கழிந்தும் குழந்தை தோன்றாது போகவே மீண்டும் ப்ரஹ்மாவிடம் வந்தாள்.  அவர் சொற்படி அதனை உதயகிரியில் இருக்கும் நூறு யோஜனை விசாலம் கொண்ட சரவணப் பொய்கையில் விட்டாள்.  அங்கிருந்த புல், பூண்டுகளும், அக்னியும், குடிலையும் சிவதேஜஸை சுமந்ததால் பொன் போல் ஜ்வலித்தனர்.  ஆயிரமாண்டுகள் கழிந்த பின் பொய்கையில் கோடி ஸுர்யர்களுடைய ப்ரகாசத்தோடு ஒரு அழகான குழந்தை தோன்றி கால் கட்டை விரலைத் தன் வாயில் வைத்துக் கொண்டு அழுதது.

அப்போது அங்கு வந்த ஆறு க்ருத்திகா நக்ஷத்ரங்களும் அழுது கொண்டிருக்கும் குழந்தையைக் கண்டதும், போட்டியிட்டுக் கொண்டு பால் கொடுக்கச் சென்றனர்.  குழந்தை அவர்களிடம் கருணை கொண்டு ஆறு உருவம் கொண்டு அறுவரிடமும் பால் குடித்தது.  குழந்தைப் பிறந்திருப்பதை ப்ரஹ்மனிடமிருந்து அறிந்து கொண்ட அக்னி அதனைக் காண்பதற்காக ஓடினார்.  அவரிடமிருந்து விஷயத்தை அறிந்து கொண்ட குடிலையும் தன் மகனைக் காண்பதற்காக சரவணப் பொய்கைக்கு ஓடினாள்.  இவர்கள் குழந்தைக்கு உரிமை கொண்டு சண்டையிடுவதைக் கண்ட ப்ரஹ்மா பரமேச்வரனிடமே சென்று குழந்தை யாருடையது என்று அறிந்து கொள்ளுங்கள் என்றார்.  அங்கு ஈசனும், ஈச்வரியுமே குழந்தை தன்னுடையது, தன்னுடையது என்று போட்டி போடலாயினர்.  தேவி உடனே குழந்தையிடமே சென்று கேட்போம், அது கூறுவதை ஏற்றுக் கொள்வோம் என்று கூற அனைவரும் பொய்கைக்குச் சென்றனர். 

குழந்தை இவர்கள் எண்ணத்தை அறிந்து நான்கு ரூபங்கொண்டு இந்த நால்வரிடமும் சென்றது.  தேவதேவன் அறுவர் ஸம்பந்தமுமிருப்பதால் ஷண்முகன் எனவும், க்ருத்திகைகள் பால் கொடுத்ததால் கார்த்திகேயன், குடிலையின் தொடர்பால் குமரன், கௌரியால் ஸ்கந்தன், என்னால் குஹன், அக்னியால் மஹாஸேனன், சரவணத்தால் ஸாரஸ்வதன் என்றும் திருநாமங்கள் கொண்டு இவன் அழைக்கப்படுவான் என்று அருளினார்.  தேவர்கள் அவரைப் பணிந்து, குழந்தையைக் கொண்டாடி, குருக்ஷேத்ரத்தில் தேவஸேனாபதியாகப் பட்டாபிஷேகம் செய்தனர்.

பரமேச்வரன் குழந்தைக்கு கண்டாகர்ணன்,லோஹிதாக்ஷன், நந்திஷேணன், குமுதமாலி என்ற நான்கு ப்ரதம கணங்களையும், கொடியையும் காணிக்கையாக்கினார். கருடன் தன் புத்ரனான மயிலையும், அருணன் தாம்ப்ரசூடனனையும், அக்னி சக்தியையும், பார்வதி வஸ்த்ரத்தையும், ப்ருஹஸ்பதி தண்டத்தையும், குடிலா கமண்டலத்தையும், விஷ்ணு மாலையையும், இந்த்ரன் தான் அணிந்திருந்த ஹாரத்தையும் அளித்தனர். இன்னும் ப்ரம்மனும், மற்ற தேவர்களும், வஸுக்களும், பித்ருக்கள், ஸித்தர், மாத்ருகணங்கள், கந்தர்வ, கின்னர, கிம்புருஷர், மலைகள், நதிகள், பக்ஷிகள், நாகங்கள் என அனைவரும் எண்ணிலடங்கா கணங்களை அவனுக்களித்தன.

தேவஸேனாபதி உமா மஹேச்வரன், குடிலை, அக்னி, க்ருத்திகைகளை நமஸ்கரித்து, கணங்கள் புடைசூழ அஸுரர்களை எதிர்த்து யுத்தம் செய்ய ப்ரயாணித்தான். பார்வதி மஹாவிஷ்ணுவை நமஸ்கரித்து அவர் ஆசிகளையும் பெற்றுக் கொள்ளச் சொன்னாள்.  ஸ்கந்தன் அவர் யார் என்று கேட்க,  தேவதேவர் அவர் நம்மைத் தவிர வேறில்லை என்று என்று எனக்குக் கூறி இருக்கிறார் என்று தேவி பதிலளிக்க, ஷண்முகன் மஹாவிஷ்ணுவைப் பணிந்தான்.  அவர் வெற்றியோடு திரும்புமாறு ஸ்வஸ்திவசனம் கூறி அனுப்பினார்.  ஜய கோஷமும், வாத்யங்களின் ஒலியும் உலகெங்கும் ஒலிக்க ஸேனை புறப்பட்டபோது மஹிஷன், தாரகன், விரோசனன், அந்தகன், கும்ப, நிகும்பன் என ராக்ஷஸர் அனைவரும் பயந்து ஒன்று கூடி இந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்று ஆலோசிக்கலாயினர்.

அப்போது பாதாளகேது எனுமரக்கன் ஓடிவந்து "நான் பன்றி வேஷங்கொண்டு காலவ ரிஷியினுடைய ஆச்ரமத்தை நாசஞ்செய்ய சென்றபோது ஒருவன் வில்லுடன் என்னைத் துரத்திக் கொண்டு வந்தான்.  நான் தென் ஸமுத்ரக் கரைக்கு ஓடினேன்.  அங்கு ஒரு பெரும் ஸேனை "நான் மஹிஷனைக் கொல்வேன், நான் அந்தகனைக் கொல்கிறேன், நான் தாரகனைக் கொல்வேன்" என்று பலவாறு கோஷமிட்டுக் கொண்டிருந்தது.  நான் அதைக் கவனிப்பதற்குள் துரத்தி வந்தவன் என் மேல் பாணத்தை விட நான் வலி பொறுக்காமல் ஹிரண்யபுரத்தை விட்டு உங்களிடம் சேதி கூற ஓடி வந்து விட்டேன்" என்றான்.  இதைக் கேட்டதும் அஸுர ஸேனை கோபம் கொண்டு அந்தகன், மஹிஷன் முதலானோர் தலைமையில் போருக்குப் புறப்பட்டது.

உலகங்கள் நடு, நடுங்க பூலோகத்தில் கடும் போர் நிகழ்ந்தது. ராக்ஷஸர்களை பெருமளவில் கொன்று குவித்த மாத்ரு கணங்களைத் தன் கதையால் அடித்துத் தள்ளி மஹிஷன் ஸ்கந்தனை நோக்கி முன்னேறினான்.  வழியில் சக்ராக்ஷன் எனும் கணாதிபன் அவனை எதிர்க்க, ஸ்கந்தன் அப்போது கத்தியோடு வந்த தாரகனை சக்தியாயுதத்தால் கொன்றார்.  ஸஹோதரன் இறந்ததும் மஹிஷன் பயந்தோடி க்ரௌஞ்ச பர்வதத்தின் குஹையில் தஞ்சம் புகுந்தான்.  ஏனையோர் கடலில் குதித்து பாதாளத்திற்கு ஓடினர்.  க்ரௌஞ்ச கிரி பார்வதி தேவியின் ஸஹோதரனான ஸுநாபனின் மகனாதலால், மும்மூர்த்திகளும், தேவர்களும் எடுத்துக் கூறியும் ஸுப்ரமண்யர் "சாஸ்த்ரத்தின் படி பசு, ப்ராஹ்மணன், வயோதிகன், தனிகன், குழந்தைகள், ஸ்வபந்து, பெண்கள் இவர்கள் குற்றமே செய்யினும் கொல்லக்கூடாதவர் அன்றோ? எனவே என் மாமனுக்கு வருத்தம் உண்டாக, க்ரௌஞ்சனைக் கொல்ல மாட்டேன்" என்றார்.

க்ரௌஞ்சன் பல ராக்ஷஸர்களுக்கு இடமளித்திருப்பதால் அவனும் கொல்லப்பட வேண்டியவனே, குஹனாலன்றி வேறொருவராலும் அவனைக் கொல்லவும் முடியாது என்று தேவர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், தேவேந்த்ரன் தான் தன் ஸஹோதரன் நமுசியைக் கொன்றதை எடுத்துக் கூறி, "தாங்கள் உண்மையான வீரனானால் க்ரௌஞ்ச கிரியோடு சேர்த்து, மஹிஷனை வீழ்த்துங்கள்" என்று கூற, குஹன் தேவேந்த்ரன் மீது கோபங்கொண்டு "நீயே பலசாலி, பலத்தைப் பரீக்ஷித்துக் கொள்வோம், வா யுத்தத்திற்கு" என்று அழைத்தார்.  அவன் "இந்த க்ரௌஞ்சத்தை யார் முதலில் சுற்றி வருகிறாரோ அவரே பலசாலி" என்று கூற இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.  முடிவில் தானே முன் வந்ததாக இருவரும் வாதிட, மும்மூர்த்திகளும் தேவ கார்யத்தை முன்னிட்டு தாங்கள் பதில் கூறாது, அம்மலையையே கேட்போம் என்றனர்.  க்ரௌஞ்சம் தேவேந்த்ரனே முன்னால் வந்தான் என்று கூற, ஸ்கந்தன் பெருங்கோபங்கொண்டு சக்தியை அதன் மேல் ஏவ, க்ரௌஞ்சத்தோடு, மஹிஷனும் வீழ்ந்தழிந்தான்.  தேவஸேனை தங்கள் கார்யம் முடிந்ததென பேரானந்தம் கொண்டது.

தன் புதல்வனை குஹன் கொன்றதை அறிந்து ஸுநாபன் கோபத்தோடு வர, குஹன் அவன் மேலும் சக்தியை ஏவினார்.  மஹாவிஷ்ணு உடனே ஓடிவந்து "மாமனைக் கொல்வது ந்யாயமன்று, சக்தியை நிறுத்து" என்று கூற, ஷண்முகனும் சக்தியைத் திருப்பிப் பெற்றுக் கொண்டார்.  பந்துவைக் கொன்றதற்காக வருந்திய குஹப்பெருமான் பின்னர் "மோஹத்தினாலன்றோ இவ்வாறு செய்து விட்டேன், உபவாசமிருந்து உடலை வருத்தி பாபத்தைப் போக்கிக் கொள்வேன்" என்றார்.  மஹாவிஷ்ணு "உபவாஸம் செய்யாதே, பூலோகத்தில் ப்ருதூதகம் எனும் தீர்த்தம் ஒன்று உள்ளது, அது ஸகல பாபங்களையும் போக்கவல்லது.  அதில் ஸ்நானஞ்செய்து கரையில் ஈச்வர பூஜை செய்" என்று கூற, அப்படியே செய்தார் ஸ்வாமி.  ஈச்வரன் உடனே ஓடிவந்துக் குழந்தையைக் கட்டித் தழுவி, வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னார்.  ஸ்கந்தன் "உங்களைப் போல பலமுள்ளவனாயினும், அவன் கைகள் மலைபோல வளர்ந்து வந்தாலும் அவனை அறுத்து வெற்றிக் கொள்ள அருள வேண்டும்" என்று வரம் கோர, இறைவனும் அப்படியே ஆகுக என்றருளிச் சென்றார்.

முன்பு பாதாளகேதுவின் மீது பாணத்தை எறிந்தவன் ரிதத்வஜன் எனும் சூர்ய வம்சத்தரசன்.  இவன் தந்தை சத்ருஜித்.  பாதாளகேது பன்றி உருவமெடுத்து முனிவர்களை கொன்றது மட்டுமல்லாது விச்வாவஸு என்ற கந்தர்வராஜனின் பெண்ணான மதாலஸையையும் கடத்திச் சென்று பாதாளத்தில் வைத்திருந்தான்.  தவவலிமை குறைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தால் காலவர் அவனைத் தான் கொல்லாது பரம்பொருளிடம் வேண்டினார்.  அப்போது அசரீரி தோன்றி ஒரு பகலில் பத்தாயிரம் யோஜனை தூரம் ஓடும் விச்வாவஸுவின் குதிரையை அவரிடம் தந்து ரிதத்வஜனை அதன் மீதேறிச் சென்று பாதாளகேதுவைக் கொல்லமாறு கூறச் சொல்லியது.  காலவரின் வேண்டுதலின் பேரில் ரிதத்வஜனும் அந்த குதிரையின் மேலேறி பாதாளகேதுவைத் துரத்திச் சென்று பாணத்தை எறிந்தான்.  இந்த விஷயத்தைப் பின்னர் அறிந்ததாக பாதாளகேது அந்தகாஸுரனிடம் கூறினான்.

No comments:

Post a Comment