Friday, November 8, 2013

வாமன புராணம் - 06

வாமன புராணம் - 06

குருக்ஷேத்ர வரலாறு: க்ருதயுகத்தில் சந்த்ர வம்சத்து அரசனான ரிக்ஷனுக்கு ஸம்வரணன் என்றோர் மகன் பிறந்தான்.  அவன் குணத்தில் அதிசயித்த வஸிஷ்டர் அவனை விரும்பி அவனுக்கு புரோஹிதரானார்.  அவனது சந்தோஷத்தை விரும்பிய வஸிஷ்டர் ஒரு ஸமயம் ஸூர்யனிடம் சென்று "என் சிஷ்யன் ஸம்வரண ராஜன் உன் புத்ரியான தபதியை தோழிகளுடன் வனத்தில் கண்டு, அவளை விரும்புகிறான்.  சிறந்த குணவானானதால் அவனுக்கு அவளை மணம் செய்து வைக்க வேண்டும்" என்று வேண்டினார்.  அவனும் அவருக்குத் தக்க மரியாதைகளைச் செய்து அந்த அப்ஸரஸை அவருடன் அனுப்பி வைத்தான்.  வஸிஷ்டர் விதிப்படி அவர்களுக்கு விவாஹத்தை செய்து வைத்தார்.

இவர்களுக்கு குரு எனும் குழந்தை பிறந்தான்.  அவன் சௌதாமினி என்ற கன்யகையை மணந்து, வெகுகாலம் நீதி தவறாது ஆட்சி புரிந்த போது ஒரு ஸமயம் த்வைத வனத்திற்கு வந்தான்.  பாபம் போக்கும் பல நதிகளை அங்கு கண்டான்.  அங்கு ஒரு வேள்வி செய்ய ஆசைப்பட்டு தானே தங்கக் கலப்பையால் பூமியை உழ ஆரம்பித்தான். இதைக் கண்ட தேவேந்த்ரன் எதற்காக உழுகிறீர் என்று அவனைக் கேட்டான்.  ராஜன் தபம், ஸத்யம், பொறுமை, தயை, சௌசம், தானம்,யோகம், ப்ரஹ்மசர்யம் ஆகியவைகளை அங்கு பயிரிடப்போவதாகக் கூற அவன் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.  மீண்டும் மஹாவிஷ்ணு அங்கு வந்து கேட்க, ராஜனும் அதே பதிலையே கூறினான்.  விஷ்ணு இதற்கு விதைகளை எங்கு தேடுவாய் என்று கேட்க அரசன் தன்னிடமே அவைகள் இருப்பதாக, தன் கைகளைக் காட்டினான்.  விஷ்ணு தன் சக்ரத்தால் அவைகளை பூமியில் அறுத்துத் தள்ளினார்.  இப்படி அவனது ஒவ்வொரு உறுப்புகளையுமே அறுத்துத் தள்ளினார்.  இறக்கும் தருவாயில் அரசன் தான் உழுத இந்த இடம் புண்ய பூமியாக இருக்க வேண்டும், அங்கு அனுஷ்டிக்கும் ஸத்கர்மாக்கள் அபரிமிதமான பலன்களைத் தரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டான்.

மஹாவிஷ்ணு குருராஜனின் த்யாகத்தை ஆசிர்வதித்து "இந்த பூமி குருக்ஷேத்ரம் என்ற பெயரோடே இருக்கும்.  உலகுள்ளவரை உன் புகழும் அழியாது.  இந்த க்ஷேத்ரத்தைக் காக்க யக்ஷன், வாஸுகி, சங்குகர்ணன் முதலானவர்களை நியமிக்கிறேன், ப்ருதூதகமெனும் நதியும் இங்கு ஓடும்படி செய்கிறேன்" என்று கூறி மறைந்தார்.

No comments:

Post a Comment