Sunday, November 24, 2013

வாமன புராணம் - 15

வாமன புராணம் - 15

புத்ரன் யார்? சிஷ்யன் யார்?: ஸனத்குமாரர் ஒரு ஸமயம் பகவத் ஸ்வரூபத்தைத் தனக்கு விளக்கிக் கூறுமாறு ப்ரஹ்மனிடம் வேண்டினார்.  ப்ரஹ்மன் "அது பரம ரஹஸ்யம். ரஹஸ்யத்தை புத்ரனுக்கே உபதேஸிக்க வேண்டும்.  நீயோ தர்மத்திற்கும், அஹிம்ஸைக்கும் பிறந்த நால்வரில் மூத்தோன். உனக்கு அதை எப்படி உபதேஸிப்பது?" என்று கேட்டார்.  ஸனத்குமாரர் தன்னை புத்ரனாக பாவித்து உபதேஸிக்குமாறு வேண்ட, ப்ரஹ்மா "புத் எனும் நரகத்திலிருந்து காப்பவனே புத்ரன், நீ சேஷ நரகங்களிலிருந்து காக்கும் சிஷ்யன், நீ புத்ரனாகமாட்டாய்" என்று கூற, ஸனத்குமாரர் உடனே அந்நரகங்களைப் பற்றி விவரித்துக் கூறுமாறு ப்ரஹ்மனைக் கேட்டார்.

புத் எனும் 16 நரகங்கள்: ப்ரஹ்மா கீழ்வரும் பதினாறு நரகங்களை வரிசைப்படுத்தி, "இவைகளே புத் எனும் நரகங்கள். இவைகளிலிருந்து பிதாவைக் காப்பவனே புத்ரன் எனப்படுகிறான்" என்று கூறினார். 1. பிறன் மனைவியைப் புணர்வது, பாபிகளின் சேர்க்கை, க்ரூரகுணம். 2. பழங்களைத் திருடுவது, வீணாய் அலைவது, பச்சைமரங்களை வெட்டுவது. 3. தகாதோரிடம் தானம் வாங்குதல், ப்ராணிகளைக் கூண்டிலடைப்பது, கொல்வது, பந்துக்களல்லாதோரிடத்தில் மணம் செய்து கொள்வது 4. பிறரை பயமுறுத்துதல், இறை நிந்தனை, ஸ்வதர்மத்தை விடுதல். 5. நண்பர்களை ஏமாற்றுவது, அபவாதம் சொல்வது, ருசியான பதார்த்தத்தைத் தானொருவனாக புஜிப்பது.  6. வண்டியில் யாத்ரை செல்வது, பழத்தைப் பிடுங்குவது, யோகத்தைக் கெடுப்பது, வண்டி மாட்டைத் திருடுவது. 7. வருமானத்தில் அரசனுடைய பாகத்தைக் கொடாதிருத்தல், ராஜஸ்த்ரீயைக் கெடுப்பது, அரசனுக்கு அப்ரியத்தைச் செய்தல்.  8. கஞ்சனாயிருத்தல், ஸ்த்ரீலோலனாயிருத்தல், வாயிலிருந்து எப்போதும் நீரைப் பெருக்குதல்.  9.  வேதத்தைத் திருடுதல், ப்ராஹ்மணர்களை நிந்திப்பது, உறவினர்களை பகைத்துக் கொள்வது.  10. சிஷ்டாசாரத்தை நிந்திப்பது, கெடுப்பது, சாஸ்த்ரத்தைத் திருடுவது, குழந்தைக் கொலை.  11. வேதாங்கங்களை அழித்தல், பகவத்குண நிந்தனை.  12. ஸாதுக்களையும், அவர்களுடைய ஆசாரத்தையும் நிந்திப்பது, துராசாரங்களை கைகொள்வது, வைதிக ஸம்ஸ்காரங்களில்லாமை
  13. ரஹஸ்யங்களை வெளிவிடுவது, தர்ம, அர்த்த, காமங்களை விடுதல்.  14. முறையில்லாத ஸன்யாஸம், வீட்டிற்கு நெருப்பு வைத்தல்.  15. சுத்தமில்லாமை, பொய் சொல்லுதல், அக்ஞானம், சோம்பேறித்தனம்.  16. கோபமும், தேவையில்லாத டம்பமும், அலட்டலும்.

சேஷ பாபங்கள்: தேவ, ரிஷி, பித்ரு கார்யங்களைத் தடுப்பது, அடுத்தவர் பொருளில் ஆசைப்படுவது, அனைத்து வர்ணங்களும் ஒன்றென்று நினைப்பது, ஜபம் செய்யாமை, குருவோடு வாதிப்பது, தன் குற்றத்தை மறைத்து, பிறர் குற்றத்தை வெளிவிடுவது, பொறாமை, கடுமையான சொற்கள், முறட்டுத்தனம் இவைகளே சேஷ பாபங்கள் என்பவை. இவைகளிலிருந்து குருவைக் காப்பவதாலேயே ஒருவன் சிஷ்யனாகிறான்.

ஔரஸ புத்ரனும், தத்துக் கொடுக்கப்பட்டவனுமே கலியுகத்தில் சிறந்தவர்களாவார்கள்.  தன் வயிற்றில் பிறந்தால் ஔரஸன். குழந்தையில்லாதவர்களுக்குப் பெற்றோரால் தானம் கொடுக்கப்பட்டவன் தத்தன்.  புருஷன் அலியாகவோ, பைத்யமாகவோ இருந்தால் ஒரே ஒரு முறை மஹர்ஷியோடோ அல்லது மைத்துனனோடோ சேர்ந்து குழந்தை உண்டானால் அவன் க்ஷேத்ரஜன்.  நண்பனின் புத்ரனைத் தன் புதல்வனைப் போல் பாவிப்பது க்ருத்ரிமன்.  மனைவி இருக்கும்போது யார் மூலம் உண்டானான் என்பதே தெரியாமல் உண்டானவன் கூடஜன்.  அனாதை அபவித்தன்.  கன்யகையாயிருக்கும்போதே பிறந்தவன் கானீகன்.  திருமணத்தின் போதே கர்ப்பமாயிருந்தவளுக்குப் பிறந்தவன் ஸஹோடஜன்.  விலைக்கு வாங்கப்பட்டவன் க்ரீதன்.  இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன் பௌனர்பூ.  ப்ராம்மணனுக்கும், சூத்ரஸ்த்ரீக்கும் பிறந்தவன் பாரசவன்.  இந்த பதினோறு புத்ரர்களில் ஔரஸனையும், தத்தனையும் தவிர வேறெதையும் கலியில் மனதாலும் நினைக்கக்கூடாது."

இப்படி ப்ரஹ்மா கூறியதும், ஸனத்குமாரர் தன் பெற்றோர்களால் தன்னை ப்ரஹ்மாவிற்குத் தத்துக் கொடுக்கச் சொன்னார்.  தத்தனாகிவிட்டபடியால் தனக்கு இப்போது பகவத் ஸ்வரூபத்தை விளக்குமாறு அவர் ப்ரஹ்மனிடம் வேண்டினார்.                                             

No comments:

Post a Comment