Friday, January 8, 2010

விஷ்ணு புராணம் - 23

02_01. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர்களான ப்ரியவ்ரதன், உத்தானபாதன் இருவரில் உத்தானபாதனின் வம்சம் முதலம்சத்தில் கூறப்பட்டது. ப்ரியவ்ரதனின் வம்சத்தைப் பற்றிக் கூறுமாறு மைத்ரேயர் கேட்க அதைச் சொல்லத் தொடங்குகிறார் பராசரர். ப்ரியவ்ரதன் கர்தம ப்ரஜாபதியின் மகளை மணந்து ஸம்ராட், குக்ஷி என்ற இரு பெண்களையும், ஆக்னீத்ரன், அக்னிபாஹு, வபுஷ்மான், த்யுதிமான், மேதா, மேதாதிதி, பவ்யன், ஸவனன், புத்ரன், ஜ்யோதிஷ்மான் என்ற பத்து பிள்ளைகளையும் பெற்றான். இதில் மேதா, அக்னிபாஹு, புத்ரன் மூவரும் யோகத்திலேயே ஆசையைச் செலுத்தினர். முற்பிறப்பை அறிந்தவர்களான இவர்கள் பற்றற்றவர்களாய் விதிமுறைப்படி செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து வந்தனர்.

இதை உணர்ந்த ப்ரியவ்ரதன் பூமியை மற்ற எழுவருக்கும் த்வீபங்களாகப் பிரித்துக் கொடுத்தான். ஆக்னீத்ரனுக்கு ஜம்பூ த்வீபத்தையும், மேதாதிதிக்கு ப்லக்ஷ த்வீபத்தையும், வபுஷ்மானுக்கு சால்மல த்வீபத்தையும், ஜ்யோதிஷ்மானுக்குக் குசத்வீபத்தையும், த்யுதிமானுக்கு க்ரௌஞ்ச த்வீபத்தையும், பவ்யனுக்கு சாக த்வீபத்தையும், ஸவனனுக்குப் புஷ்கர த்வீபத்தையும் கொடுத்து, அரசர்களாக முடிசூட்டினான். ஜம்பூ த்வீபத்தின் அரசன் ஆக்னீத்ரனுக்கு ப்ருகு முதலிய ப்ரஜாபதிகளுக்குச் சமமான நாபி, கிம்புருஷன், ஹரிவர்ஷன், இளாவ்ருதன், ரம்யன், ஹிரண்யவான், குரு, பத்ராச்வன், கேதுமாலன் என்ற ஒன்பது புத்ரர்கள் பிறந்தனர். இவர்களுக்கு ஜம்பூ த்வீபத்தை ஒன்பது வர்ஷங்களாகப் பிரித்துக் கொடுத்தான் ஆக்னீத்ரன்.

இமயத்திற்குத் தென்புறமுள்ள பாரத வர்ஷத்தை நாபிக்கும், ஹேமகூட வர்ஷத்தைக் கிம்புருஷனுக்கும், ஹேமகூட பர்வதத்திற்குத் தெற்கிலும், இமயத்திற்கு வடக்கிலும் உள்ள நைஷத வர்ஷத்தை ஹரிவர்ஷனுக்கும், ஹேமகூட மலைக்கு வடக்கிலும், நிஷத கிரிக்கு தெற்கிலும், மேருமலையின் நடுவிலுள்ளதுமான இளாவ்ருத வர்ஷத்தை இளாவ்ருதனுக்கும், இதற்கு வடக்கிலிருக்கும் நீலாசலத்தைச் சேர்ந்த ரம்ய வர்ஷத்தை ரம்யனுக்கும், அதற்கு வடக்கிலிருக்கும் ச்வேத வர்ஷத்தை ஹிரண்யவானுக்கும், ச்ருங்கவான் மலைக்கு வடக்கிலிருக்கும் குரு வர்ஷத்தை குருவிற்கும், மேருவிற்கு கிழக்கிலுள்ள பத்ராச்வ வர்ஷத்தை பத்ராச்வனுக்கும், மேருவிற்கு மேற்கேயுள்ள கந்தமாதன வர்ஷத்தைக் கேதுமாலனுக்கும் கொடுத்து அரசர்களாக்கி விட்டு ஆக்னீத்ரன் ஸாளக்ராமத்திற்குத் தவம் செய்யச் சென்று விட்டான்.

கிம்புருஷம் முதலான எட்டு வர்ஷங்களில் வஸிப்பவர்களுக்கு முயற்சியின்றியே எல்லா போஹங்களும் கிடைக்கின்றன. ஜரா, மரண பயங்களும், உயர்ந்தவன், மத்யமன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளும், உடற்குறைவு முதலான அவஸ்தைகளும் இங்கில்லை. இவைகள் பூலோக ஸ்வர்கங்கள். பாரத வர்ஷத்தினரசன் நாபிக்கும், மேருதேவிக்கும் ரிஷபன் என்ற பிள்ளை பிறந்தான். இவனுக்குப் பிறந்தவர்களே பரதன் முதலான நூறு பிள்ளைகள். பரதனுக்கு முடிசூட்டிய பின் ரிஷபனும் வானப்ரஸ்தனாகத் தவமும், யாஹங்களும் செய்வதற்காக புலஹருடைய ஆச்ரமமான ஸாளக்ராமத்திற்குச் சென்று விட்டான். தவத்தால் உடல் மெலிந்து, நரம்புகள் வெளிப்பட, எந்த வஸ்த்ரமுமின்றி, வாயில் பந்து போன்ற கல்லுருண்டையை வைத்துக் கொண்டு (மௌன வ்ரதமும், உபவாஸமுமிருப்பவர்கள் இவ்வாறு செய்வார்கள்) மஹா ப்ரஸ்தானம் (இறக்கும் வரை நடந்தே செல்வது) சென்று விட்டான்.

இந்த பரதனின் பெயரிலேயே ஹிமம் என்ற பெயரையுடைய இந்த வர்ஷம் பாரத வர்ஷம் என்றழைக்கப்படுகிறது. இந்த பரதனின் மகன் ஸுமதி என்பவன். இவனிடம் அரசுரிமையை விட்டு விட்டு பரதனும் ஸாளக்ராமம் சென்று யோகாப்யாஸம் செய்து ப்ராணனை விட்டான் பரதன். இந்த பரதன் மீண்டும் உயர்குலத்தில் ஒரு ப்ராஹ்மணச்ரேஷ்டராகப் பிறந்தார்.

ஸுமதிக்கு இந்த்ரத்யும்னனும், அவனுக்குப் பரமேஷ்டியும், அவனுக்குப் ப்ரதிஹரனும், அவனுக்குப் ப்ரதிஹர்த்தாவும், அவனுக்குப் பவனும், அவனுக்கு உத்கீதியும், அவனுக்குப் ப்ரஸ்தாவனும், அவனுக்குப் ப்ருதுவும், ப்ருதுவிற்கு நக்னனும், நக்னனுக்குக் கயனும்,கயனுக்கு நரனும், அவனுக்கு விரோஹணனும், அவனுக்கு மஹாவீர்யனும், அவனுக்கு தீமானும், அவனுக்கு மஹாந்தனும், அவனுக்குப் பாவனனும், அவனுக்கு த்வஷ்டாவும், அவனுக்கு விரஜஸ்ஸும், அவனுக்கு ரஜஸ்ஸும், அவனுக்கு சதஜித்தும், சதஜித்திற்கு விஷ்வக்ஜ்யோதி முதலான நூறு பிள்ளைகளும் பிறந்தனர். இவர்களாலேயே பாரத வர்ஷம் ஒன்பதாகப் பிரிக்கப்பட்டு ஆளப்படுகிறது. இந்த ப்ரியவ்ரதனின் வம்சம் எழுபத்தொரு சதுர்யுகங்கள் ஆண்டனர். அதன் பின் ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில் உத்தானபாதனின் வம்சத்தார் பாரத வர்ஷத்தை ஆண்டனர்.

No comments:

Post a Comment