Tuesday, January 19, 2010

விஷ்ணு புராணம் - 42

03_04. ஆதியில் ப்ரஹ்மாவினால் அத்யயனம் செய்யப்பட்ட வேதம் நான்கு பாதங்களுடன், அனேகமாயிரம் சாகைகளுடனிருந்தது. இந்த வேதத்தினால் தான் தேவ, பித்ரு, பூத, மனுஷ்ய, ப்ரஹ்ம என்ற பஞ்ச மஹா யக்ஞங்களும், அக்னி ஹோத்ரம், தர்ச பூர்ண மாஸம், சாதுர்மாஸ்யம், பசுபந்தம், ஸோமம் என்ற ஐந்து யக்ஞங்களும், த்ரவ்யம், தேசம், பலம்,காலம், ஞானம், கர்மம், காரகம், ச்ரத்தா, அவஸ்தை(நிலைமை), ஆக்ருதி, நிஷ்டை என்ற யக்ஞ அவயவங்களும் உலகத்தில் பரவின. அப்படியிருந்த வேதத்தை என் புத்ரன், மஹாத்மா க்ருஷ்ண த்வைபாயனன் எப்படிப் பிரித்தானோ அப்படியே தான் நானும், மற்றவர்களும் செய்திருந்தோம்.

என் மகன் இத்தகைய சிறப்புறக் காரணம் அவன் நாராயணனின் அம்சமாதலால்தான். நாராயணனே என் மகன் என்றறிவாயாக. நாராயணனைத் தவிர வேறொருவன் இல்லை மஹாபாரதத்தைச் செய்ய. இதிலிருந்தே அவன் நாராயணனின் அம்சம் என்பது ஐயமின்றி விளங்கும். ஒவ்வொரு வேத சாகையையும் அத்யயனம் செய்ய ஏற்றவர்களை ஆராய்ந்து நியமித்தான் பேரறிவாளனான என் புதல்வன். ரிக் வேதத்தை பைலருக்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனருக்கும், ஸாமத்திற்கு ஜைமினிக்கும், அதர்வ வேதத்தை ஸுமந்துவுக்கும் பிரித்துக் கொடுத்தான். இதேபோல் இதிஹாஸ புராணங்களுக்கும். அவற்றை ப்ரசாரம் செய்பவர்களுக்கு ஆற்றல் அதிகம் வேண்டும். கேட்பவர் மனதில் நன்கு அர்த்தங்கள் பதியும்படி, நேரில் நடப்பது போல், அவர்களுக்கு மயிர் கூச்சல் ஏற்படுமாறு சொல்ல ரோமஹர்ஷணர் என்ற ஸூதரை ஏற்படுத்தினான். தேர்ந்தெடுத்த வ்யாஸனும் மஹா புத்திசாலி, மஹா முனிவர். ஸூதனும் அப்படியே மஹா புத்திசாலி, மஹா முனிவன்.

யாகத்தில் அத்வர்யு, உத்காதா, ஹோதா, ப்ரஹ்மா என்ற நால்வர் இருப்பர். இவர்களுடைய வேலைகளுக்கு சாதுர்ஹோத்ரம் என்று பெயர். இவையாவும் வேதத்தில் இருப்பதால் தான் ஒன்றாக இருந்த வேதத்தை நான்காகப் பிரித்தார். யஜுர்வேதம் அத்வர்யுவின் கார்யத்தையும், ரிக் வேதம் ஹோதாவின் கார்யத்தையும், ஸாம வேதம் உத்காதாவின் கார்யத்தையும், இந்த மூன்று வேதங்களிலும் ப்ரஹ்மாவின் கார்யத்தையும், அதர்வத்தில் அரசர்களுக்கு வேண்டிய சாந்தி, புஷ்டி, அபிசார புரோஹிதம் முதலானவைகளையும் ஏற்படுத்தினார். இப்படி நான்காகப் பிரிக்கப் பட்ட வேதமரமே பின்பு காடாக மாறியது.

ரிக் வேதத்தைப் பெற்ற பைலர் அதை இரு ஸம்ஹிதைகளாகப் பிரித்து இந்த்ரப்ரமிதிக்கு ஒன்றையும், பாஷ்கலருக்கு மற்றொன்றையும் தந்தார். பாஷ்கலர் தன்னுடையதை நான்காக்கி போதி, அக்னிமாடகர், யாக்ஞவல்க்யர், பராசரர் (இவர் வேறு) என்ற நால்வருக்களித்தார். இந்த்ரப்ரமிதி தன்னுடையதை மாண்டுகேயர் என்ற தன் புதல்வனுக்கு ஓதுவித்தார். இப்படி குரு, சிஷ்ய பரம்பரையில் வந்து கொண்டிருந்த இந்த்ரப்ரமிதி ஸம்ஹிதையை வேதமித்ரன் என்ற சாகல்யர் அத்யயனம் செய்து, பின் அதை ஐந்தாகப் பிரித்து முத்கலன், கோமுகன், வாத்ஸ்யன், சாலீயன், சைசிரன் என்ற தன் ஐந்து சிஷ்யர்களுக்குக் கொடுத்தார். சாகல்யருடன் படித்த சாகபூர்ணர் இந்த்ரப்ரமிதி ஸம்ஹிதையை மூன்றாகப் பிரித்து, வேதாங்கமான ந்ருக்தத்தையும் செய்து முறையே அவற்றை க்ரௌஞ்சன், வைதாளிகி, பலாகன், ந்ருக்தன் என்பவர்களுக்குக் கொடுத்தார். சாகல்யருடன் படித்த இன்னொருவர் பாஷ்கலி என்பவர். அவர் அதையே மூன்றாக்கி காலாயனி, கார்க்யர், ஜபன் என்ற தன் சிஷ்யர்களுக்குக் கொடுத்தார். இப்படியே ரிக் வேதம் சாகை, ப்ரதிசாகை, அனுசாகை என பலவாறு பிரிந்தது.

No comments:

Post a Comment