Friday, January 8, 2010

விஷ்ணு புராணம் - 29

02_07. ஸூர்ய, சந்த்ரர்களால் எவ்வளவு பாகம் ப்ரகாசப்படுத்தப் படுகிறதோ அது ப்ருத்வீ ஆகும். அண்டச் சுவர் வரை இந்த பூமியின் பரப்பு எவ்வளவோ அதே அளவுடையது புவர்லோகம். பூமியின் மேல் லக்ஷ யோஜனையில் ஸூர்ய மண்டலமும், அதற்கு மேல் லக்ஷ யோஜனையில் சந்த்ர மண்டலமும், அதற்கு மேல் அதே போல் நக்ஷத்ர மண்டலமும், அதற்கு மேல் புத, சுக்ர, அங்காரக, ப்ருஹஸ்பதி, சனி, ஸப்தரிஷி, த்ருவ மண்டலங்களும் ஒவ்வொன்றும் லக்ஷ யோஜனை இடைவெளியில் த்ருவ மண்டலத்தை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. பாரத வர்ஷத்தில் அனுஷ்டிக்கும் யாகம் முதலிய கர்மங்களுக்குப் பலனாய் இருப்பது இந்த உலகங்களே.

த்ருவ மண்டலத்திற்கும் மேல் ஒரு கோடி யோஜனையில் ஒரு கல்ப காலம் வரை வாழும் ப்ருஹு முதலான மஹரிஷிகள் வஸிக்கும் மஹர்லோகமும், அதற்கு இரண்டு கோடி யோஜனையில் ப்ரஹ்மபுத்ரர்களான ஸனகர், ஸனந்தனர் முதலானோர் வஸிக்கும் ஜன லோகம் இருக்கிறது. அதற்கு எட்டு கோடி யோஜனை தூரத்தில் ப்ரளயாக்னியால் பாதிப்பில்லாத தபோ லோகம் இருக்கிறது. இங்கு வைராஜ தேவதைகள் வாழ்கின்றனர். ப்ரஹ்மா இதற்குப் பன்னிரண்டு கோடி யோஜனை தாண்டியுள்ள ஸத்யலோகத்தில் இருக்கிறார். இதையடைந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

காலால் நடந்து அடையக் கூடிய இடம் பூலோகம். அதற்கும் ஸூர்ய லோகத்திற்கும் இடைப்பட்டது ஸித்தர்கள் வாழும் புவர்லோகம். த்ருவ மண்டலத்திற்கும், ஸூர்ய மண்டலத்திற்கும் இடைப்பட்ட பதினான்கு லக்ஷ யோஜனையும் ஸ்வர்லோகம். இந்த மூன்று லோகங்களும் கல்பந்தோறும் தோன்றி, அழிவதால் க்ருதகம் எனப்படுகின்றன. ஜன, தப, ஸத்ய லோகங்கள் அக்ருதகம். மஹர்லோகம் க்ருதக அக்ருதகம். இது அழிவதில்லை. ஆனால் மக்கள் ப்ரளயத்தின் போது இங்கிருப்பதில்லை. ஜன லோகம் சென்று விடுகிறார்கள்.

இப்படி மேலுள்ள ஸப்த மஹா லோகங்களும், கீழேயுள்ள ஏழு லோகங்களும் சேர்ந்ததே ப்ரஹ்மாண்டத்தின் பரப்பு. இது கோடி யோஜனை அளவுள்ள புறச் சுவரினால் (அண்ட கடாஹம்) சூழப்பட்டுள்ளது. இது ப்ருத்வீ ஆவரணமாகும். இந்த ஆவரணம் இதை விட பத்து மடங்கு அதிகமுள்ள ஜல ஆவரணத்தாலும், அது அதைவிட பத்து மடங்கு அதிகமான அக்னியாலும், பின் வாயுவாலும், பின் ஆகாச ஆவரணத்தாலும் சூழப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் பின் பூதாதிகளாலும், மஹத்தாலும், ப்ரக்ருதி (ப்ரதானம்)யாலும் சூழப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு அல்லது ப்ரக்ருதியையும் சேர்த்து இந்த பதினான்கு லோகங்களுக்கும் எட்டு ஆவரணங்களாகும். எப்படி உப்பு நீரிலோ அல்லது இனிப்பு நீரிலோ பட்டு வரும் காற்று குணங்களை விட்டு, குளிர்ச்சியாக மட்டும் வீசுகிறதோ அதே போல் விஷ்ணுவின் சக்தியும் ப்ரக்ருதி, மஹத், ஜீவர்கள் முதலான இந்த ஜகத்தை குண தோஷங்களின்றி தாங்குகிறது.

பயிரின் வேர், தண்டு, இலை, முளை, அடிப்பாகம், கதிர், பூ, பால், அரிசி, உமி அனைத்தும் விதையிலேயே அடங்கியுள்ளன. இவைகள் எப்படி உழுதல், நீர் விடுதல், அடித்தல் எனப் பல காரணங்களைக் கொண்டு வெளிப்படுகின்றனவோ அதே போல் வினைகளால் மறைந்திருக்கும் ஜீவாத்மாக்கள் விஷ்ணு சக்தி என்ற காரணத்தால் தேவ, மனுஷ்ய, ஸ்தாவர, ம்ருகங்களாக வெளிப்படுகின்றன. அவனிடமிருந்தே ஜகத் தோன்றி, அவன் மயமாக இருந்து, மீண்டும் அவனிடமே லயிக்கிறது.

No comments:

Post a Comment