Thursday, January 21, 2010

விஷ்ணு புராணம் - 47

03_09. இளமையில் உபனயனம் செய்யப்பெற்று, வேதாத்யயனம் செய்வதற்காக குருகுலம் சென்று வசிப்பவனே ப்ரஹ்மசாரி ஆகிறான். இவன் மனதையடக்கி, தூய்மை, நல்லொழுக்கங்களுடன், குரு சிஷ்ரூஷை செய்து வரவேண்டும். கள், மாம்ஸங்களை விலக்கி, ப்ராஜாபத்ய முதலான வ்ரதங்களுடன் வேதங்களைக் கற்க வேண்டும். இரண்டு ஸந்த்யைகளிலும் ஸூர்யனையும், அக்னியையும் அடக்கத்துடன் வணங்க வேண்டும். பின் ஆசார்யனை நமஸ்கரிக்க வேண்டும். ஆசார்யன் நிற்கையில் தான் அமரக்கூடாது. ஆசார்யன் அமர்ந்த பின் அதைவிடத் தாழ்ந்த ஆசனத்தில் தான் அமர வேண்டும். ஆசார்யனுக்கு எதிர்க்கருத்துக்களைக் கூறக்கூடாது. ஆசார்யன் உத்தரவு பெற்று அவன் எதிரிலேயே அத்யயனம் செய்ய வேண்டும். குருவின் உத்தரவுடன் பிக்ஷை பெற்றே, குருவின் அனுமதியினுடனேயே உண்ண வேண்டும். ஆசார்யன் நீராடிய பின் அவர் நீராடிய நீரிலேயே தான் நீராட வேண்டும். ஆசார்யனுக்குத் தேவையான ஸமித், நீர் முதலான பொருள்களை வேளையில் ஏற்படுத்தித் தரவேண்டும். வேதார்த்தங்களை அறியும் வரை அத்யயனம் செய்து விட்டு, குருதக்ஷிணையைக் கொடுத்து விட்டு, குருவின் அனுமதியினுடனேயே கார்ஹஸ்த்யம் செல்ல வேண்டும்.

குருவின் அனுமதி பெற்ற ப்ரஹ்மசாரி விதிப்படி ஒரு பெண்ணை மணக்க வேண்டும். தனக்குரிய தர்ம வழியில் தர்மங்களை அனுஷ்டிப்பதற்காக பணம் சம்பாதிக்க வேண்டும். எள்ளுடன் நீர் கலந்தும், பிண்ட தானத்தாலும் பித்ருக்களைப் பூஜிக்க வேண்டும். வேத யாகங்களால் தேவதைகளைப் பூஜிக்க வேண்டும். அதிதிகளை அன்னமிட்டு பூஜிக்க வேண்டும். வேதங்களை ஓதுவதால் ரிஷிகளை பூஜிக்க வேண்டும். நன்மக்களைப் படைப்பதால் ப்ரஹ்மாவைப் பூஜிக்க வேண்டும். வைச்வதேவ பலியால் ஸர்வ பூதங்களையும் பூஜிக்க வேண்டும். அன்பினால் அனைவரையும் கவர வேண்டும். இத்தகைய க்ருஹஸ்தன் பல நல்ல லோகங்களை அடைகிறான்.

ப்ரஹ்மசாரிகளும், ஸன்யாஸிகளும் க்ருஹஸ்தர்களையே அண்டியிருக்கிறார்கள். க்ருஹஸ்தர்கள் இல்லையேல் இவர்கள் இல்லை. பலருக்கும் உதவுவதால் இந்த ஆச்ரமமே உயர்ந்தது. பலர் படிப்பதற்காகவும், தீர்த்த, க்ஷேத்ராடனத்திற்காகவும், யாத்ரைக்காகவும் உலகைச் சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு வஸிக்க இடமோ, உணவோ நிலையாக இல்லை. இவர்களை இவையெல்லாவற்றையும் அளித்துத் தாய் போல் காப்பது இந்த க்ருஹஸ்தர்களே. விருந்தினர்களுக்கு நல்வரவு கூறி, உபசரித்து, நீர், உணவு, ஆசனம், படுக்கை முதலானவைகளை இவர்களே செய்துத் தர வேண்டும். அப்படிச் செய்யாமல் அதிதி அத்ருப்தியுடன் சென்றால் அவன் தன்னுடைய பாபங்களை இந்த க்ருஹஸ்தனுக்குக் கொடுத்து விட்டு, க்ருஹஸ்தனின் புண்யங்களை எடுத்துச் சென்று விடுகிறான். எனவே அதிதியை அவமதிக்கக் கூடாது, அஹங்காரம் காட்டக் கூடாது, கொடுத்துவிட்டு வீணாகிப் போனதே என்று நினைக்கக் கூடாது. விருந்தினர்களை விரட்டக் கூடாது. கடுஞ்சொல் கூறக்கூடாது.

இப்படிக் காலத்தைக் கழித்த க்ருஹஸ்தன் வயது முதிர்ந்ததும், சடங்குகளை முடித்தபின் கடைசி காலத்தைக் கழிக்க பத்னியோடோ, அல்லது பத்னியைப் புத்ரர்களிடம் ஒப்படைத்துவிட்டோ காடு தேடி செல்ல வேண்டும். இலை, கிழங்கு, பழங்களையே உண்ண வேண்டும். தாடி, ஜடைகளைத் தரிக்க வேண்டும். தரையிலேயே படுக்க வேண்டும். பற்றற்றவனாயிருத்தல் பரமனையே நினைத்து (முனி) இருக்க வேண்டும். ம்ருகங்களின் தோலையோ, மரவுரியையோ, புல், தர்ப்பங்களையோ தரிக்க வேண்டும். மூன்று வேலையும் நீராடி, தேவதா பூஜை, ஹோமங்கள், அதிதி பூஜை, பிக்ஷை இடுதல், பூதபலி இவைகளைச் செய்ய வேண்டும். காட்டில் கிடைக்கும் எண்ணையையே தேய்த்துக் கொள்ள வேண்டும். வெயில், குளிர் என அனைத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். இப்படியிருக்கும் வானப்ரஸ்தன் அக்னி குப்பைகளைக் கொளுத்துவது போல் பாபங்களைத் தொலைத்து பரிசுத்தனாகி நிலைத்த லோகங்களுக்குச் செல்கிறான்.

மனைவி, மக்கள், செல்வம் முதலானவைகளில் பற்றுதலை விட்டே ஸன்யாஸம் பெற வேண்டும். காம, க்ரோத முதலியவைகளை ஒழித்து, தர்ம, அர்த்த முதலானவைகளையும் விடுத்து, ப்ரஹ்ம ஞானத்திலேயே பற்றுதலோடிருக்க வேண்டும். எந்த பாகுபாடுமின்றி எவரிடமும் ஸமத்வ பாவத்தோடிருக்க வேண்டும். ம்ருகம், பறவை இவைகளுக்குக் கூட மனது, வாக்கு, செயல்களால் தீங்கிழைக்காமலிருக்க வேண்டும். எதிலும் ஸம்பந்தமின்றி இருக்க வேண்டும். க்ராமத்தில் ஓரிரவும், பட்டணங்களில் ஐந்திரவுகளும் தங்கலாம். ஒருவருக்கும் தன்னிடம் அன்போ, த்வேஷமோ வராமல் நடந்து கொள்ள வேண்டும். ப்ராணனைக் காப்பதற்காக மட்டுமே பிக்ஷை எடுக்க வேண்டும். குலத்தாலும், ஆசாரத்தாலும் உயர்ந்தவர்களின் இல்லத்திலும் அடுப்பு அடங்கி, அனைவரும் சாப்பிட்ட வீட்டிற்கே பிக்ஷைக்குச் செல்ல வேண்டும். பசிக்கு உண்பதாக நினைக்காமல் தன்னுடலில் ஜாடராக்னியில் செய்யும் அக்னிஹோத்ரமாகவே நினைத்து முகமாகிய குண்டத்தில் அன்னமாகிற ஹவிஸ்ஸை இடுவதாக நினைத்துண்ண வேண்டும். அஹங்கார(நான்), மமகாரங்களை(என்னுடையது) விடுக்க வேண்டும். எல்லா உயிர்க்கும் அபயம் அளிப்பவனாயிருக்க வேண்டும். அப்பொழுதான் எந்த உயிர்க்கும் அவனிடம் பயமுண்டாகாது.

No comments:

Post a Comment