Tuesday, January 19, 2010

விஷ்ணு புராணம் - 44

03_06. ஜைமினி தான் பெற்ற ஸாமத்தை தன் புத்ரன் ஸுமந்துவுக்கும், அவர் தன் புத்ரர் ஸுத்வாவிற்கும், ஸுத்வா அவர் புத்ரர் ஸுகர்மாவிற்கும் உபதேஸித்தார். ஸுகர்மா அதை ஆயிரமாகப் பிரித்து ஹிரண்யநாபன், பௌஷ்பிஞ்சி என்ற தன் இரு சிஷ்யர்களுக்குக் கொடுத்தார். இதில் ஹிரண்யநாபர் (கௌஸல்யர்) தன் சிஷ்யர்களான வட திசையைச் சேர்ந்த ஐனூறு பேர்களுக்கு ஐனூறு ஸம்ஹிதைகளை உபதேஸித்தார். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டுக் கீழ்த் திசைக்குச் சென்று அத்யயனம் செய்து வந்தனர். எனவே இவர்கள் கீழ்த்திசை ஸாமகர் எனப்படுகின்றனர். பௌஷ்பிஞ்சியிடம் லோகாக்ஷி, கௌமுதி, கக்ஷீவான், லாங்கலி முதலான பல சிஷ்யர்கள் ஸம்ஹிதைகளைக் கற்று அதை மேலும் பலவாறுப் பிரித்தனர். ஹிரண்ய நாபருடைய சிஷ்யர்களில் ஒருவரான க்ருத நாமா என்பவர் தான் கற்றதை இருபத்து நான்கு ஸம்ஹிதைகளாகப் பிரித்துத் தன் சிஷ்யர்களுக்குக் கொடுத்தார்.

அதர்வத்தைப் பெற்ற ஸுமந்து தன் சிஷ்யன் கபந்தனுக்கு அதை உபதேஸித்தார். அவர் அதை இரண்டாகப் பிரித்துத் தன் சிஷ்யர்கள் தேவதர்சனுக்கும், பத்யனுக்கும் ஓதுவித்தார். தேவதர்சன் அதை நான்காக்கி அவர் சிஷ்யர்களான மேதன், ப்ரஹ்மபலி, சௌக்லாயனி, பிப்பலாதன் என்பவர்களுக்குத் தந்தார். பத்யர் பிரித்த மூன்று சாகைகளை அவர் சிஷ்யர்கள் ஜாபாலி, குமுதாதி, சௌனகர் மூவரும் பெற்றனர். சௌனகர் தான் பெற்றதை இரண்டாக்கி பப்ரு, ஸைந்தவர் இருவருக்கும் தந்தார். ஸைந்தவர் மஞ்சுகேசருக்குத் தந்ததை அவர் இரண்டாக்கினார். ஆனால் அதைப் பெற்றவர்கள் பற்றித் தெரியவில்லை. இந்த இரு ஸம்ஹிதைகளில் தான் முக்யமான ஐந்து அம்சங்கள் உள்ளன.

நக்ஷத்ர கல்பம் என்பது நக்ஷத்ரம் முதலானவைகளின் ஸ்வரூபம், குணங்களைப் பற்றியது. வேத கல்பம் என்பது ப்ரஹ்ம தத்வமான ப்ரோஹித கார்யங்களைப் பற்றியது. ஸம்ஹிதா கல்பம் மந்த்ரங்களின் உபயோக முறைப் பற்றியது. ஆங்கிரஸ கல்பம் ஸதம்பனம்(கட்டுதல்), மோஹனம்(மயக்குதல்), மாரணம்(கொல்லுதல்) முதலான அபிசார ப்ரயோகங்களைப் பற்றியது. சாந்தி கல்பம் யானை, குதிரை முதலான பதினெட்டு சாந்திகளைப் பற்றியது. அதர்வ வேதத்தின் முக்ய பாகங்கள் இவை.

மைத்ரேயா! சாஸ்த்ரங்களில் முதன்மை பெற்ற புராணமே முதலில் ப்ரஹ்மாவின் முகத்திலிருந்து வெளிவந்தது. அதன் பிறகே வேதங்கள் வெளியாயின. ப்ராஹ்மம் என்ற பெயரில் முதலில் நூறு கோடி க்ரந்தங்களுடன் இருந்த இந்த புராணம், த்ரேதா யுகத்தில் ப்ரஹ்மா முதலான பதினெட்டு ரிஷிகளால் ப்ராஹ்மம், பாத்மம் முதலான பதினெட்டு புராணங்களாக ஒவ்வொரு கோடி க்ரந்த அளவில் சுருக்கிப் பிறிக்கப்பட்டது. த்வாபரத்தின் முடிவில் பின் வ்யாஸரால் இதன் ஸாரங்கள் மட்டும் நான்கு லக்ஷ க்ரந்தங்களாகச் சுருக்கப்பட்டு, பாரதம், ருபுநிதாகர் முதலானோர் கதைகள், ப்ருத்வி கீதை, பித்ரு கீதை, வராஹ முதலான கல்ப வரலாறுகள், ஸ்ருஷ்டி, மன்வந்த்ராதிகள், வம்ச சரிதங்கள் முதலானவற்றை விளக்கும் பதினெட்டு புராணங்களாக்கப்பட்டது.

வ்யாஸரிடம் ஸூதவம்சத்தில் சிறந்த ரோமஹர்ஷணர் இவைகளைப் பெற்றுத் தன் ஆறு சிஷ்யர்களான ஸுமதி, அக்னிவர்சஸ், மித்ராயுஸ், சாம்ஸபாயனர், அக்ருதவ்ரணர், ஸாவர்ணி என்பவர்களுக்குத் தந்தார். அக்ருதவ்ரணர்(காச்யபர்), ஸாவர்ணி, சாம்ஸபாயனர் இம்மூவரும் வ்யாஸர் செய்த புராண ஸம்ஹிதைகளைக் கொண்டு தாங்களும் சிலவற்றைச் செய்தனர். இம்மூன்றுக்கும் மூலமாக ரோமஹர்ஷணரும் ஒன்றைச் செய்தார். இந்த நான்கு ஸம்ஹிதைகளின் ஸாரத்தைக் கொண்டே நான் இந்த விஷ்ணு புராணத்தைச் செய்தேன் என்றார் பராசரர். ப்ராஹ்மம், பாத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்கண்டேயம், ஆக்னேயம், பவிஷ்யம், ப்ரஹ்மவைவர்த்தம், லிங்கம், வராஹம், ஸ்காந்தம், வாமனம், கௌர்தமம், மாத்ஸ்யம், காருடம், பரஹ்மாண்டம் என்பன இந்த பதினெட்டு புராணங்கள்.

எல்லா புராணங்களிலும் ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம், வம்சம், மன்வந்த்ரம் என அனைத்திற்கும் விஷ்ணுவே கர்த்தாவாகக் கூறப்படுகிறார். அனைத்தும் அவர் செயலல்லவா. இந்த புராணங்கள் அனைத்தும் உலகிற்கு அவச்யமான தர்மங்களையே கூறுகின்றன. எனவேதான் இவைகள் வித்யாஸ்தானங்களில் சேர்கின்றன. சிக்ஷை முதலான வேதாங்கங்கள் ஆறு, வேதங்கள் நான்கு, மீமாம்ஸை, ந்யாயம், புராணம், தர்ம சாஸ்த்ரம் இவையே வித்யாஸ்தானங்கள் ஆகும். இதிஹாஸங்கள் புராணங்களிலேயே சேரும். இவற்றுடன் ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வம், அர்த்த சாஸ்த்ரம் இவைகளையும் சேர்த்து வித்யாஸ்தானங்களைப் பதினெட்டாகவும் கூறுவர். இந்த சாஸ்த்ரங்களை உலகில் ப்ரஹ்ம, தேவ, ராஜ எனும் மூவகை ரிஷிகள் ப்ரசாரம் செய்கின்றனர்.

No comments:

Post a Comment