Friday, January 8, 2010

விஷ்ணு புராணம் - 24

02_02. மைத்ரேயர் பூமண்டலத்தின் அளவு, எத்தனை ஸமுத்ரங்கள், த்வீபங்கள், வர்ஷங்கள், பர்வதங்கள், காடுகள், ஆறுகள் விவரங்களைப் பற்றிக் கேட்கிறார். மஹரிஷி இவற்றை நூறு வருஷங்களானாலும் விவரிக்க முடியாதென்றும், அது தேவையற்றதென்றும் கூறி சுருக்கமாகக் கூறுவதாகக் கூறுகிறார். ஜம்பு, ப்லக்ஷ, சால்மல, குச, க்ரௌஞ்ச, சாக, புஷ்கரமென்ற ஏழு த்வீபங்களும் முறையே உப்பு, கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், ஜலம் நிறைந்த ஸமுத்ரங்களால் சூழப்பட்டுள்ளது. இவற்றில் ஜம்பூ த்வீபம் நடுவிலிருக்கிறது. அதன் நடுவில் பூமியின் மட்டத்திலிருந்து எண்பத்து நான்காயிரம் யோஜனை உயரமுள்ள மேரு என்ற பொன்மலை இருக்கிறது. பூமியில் புதைந்துள்ள அதன் அடிப்பாகத்தினுயரம் பதினாறாயிரம் யோஜனைகள். தலைப்பாகத்தின் பரப்பளவு முப்பத்திரண்டாயிரம் யோஜனை. புதைந்துள்ள பகுதியின் பரப்பளவு பதினாறாயிரம் யோஜனைகள். இதன் தெற்கே இமய, ஹேமகூட, நிஷத மலைகளும், வடக்கே நீல, ச்வேத, ச்ருங்கீ மலைகளும் உள்ளன.

இருபத்து நான்கு விரல் = ஒரு கை, நான்கு கை = ஒரு தண்டம், இரண்டாயிரம் தண்டம் = ஒரு க்ரோசம், நான்கு க்ரோசம் = ஒரு யோஜனை. நீலமும், நிஷதமும் லக்ஷ யோஜனையளவு நீளமுள்ளவை. ஹேமகூடமும், ச்வேதமும் தொண்ணூராயிரம் யோஜனைகளும், இமயமும், ச்ருங்கியும் எண்பதினாயிரம் யோஜனைகளும் உடையவை. இந்த த்வீபத்தில் முதலில் பாரத வர்ஷமும், பின் கிம்புருஷமும், பின் ஹரி வர்ஷமுமாக மேருவிற்குத் தெற்கேயுள்ளன. ரம்யகம், ஹிரண்மயம், குரு வர்ஷங்கள் மேருவிற்கு வடக்கேயுள்ளன. பாரதமும், குரு வர்ஷமும் தெற்குக் கோடியிலும், வடக்குக் கோடியிலும் வில்லாக வளைந்துள்ளன. மேருவைச் சுற்றியுள்ள முப்பத்து நான்காயிரம் யோஜனை பாகம் இளாவ்ருத வர்ஷம். மேருவைத் தாங்கி நிற்பதாக அதற்குக் கிழக்கே மந்தர மலையும், தெற்கே கந்தமாதனமும், மேற்கே விபுலமும், வடக்கே ஸுபார்ச்வ மலையும் பல குளங்களை உள்ளடக்கியுள்ளது.

மேருவைச் சுற்றி பதினோராயிரம் யோஜனை அளவுடன் கதம்ப, நாவல், அத்தி, ஆல மரங்கள் த்வஜங்கள் போல இருக்கின்றன. இந்த மரங்களின் பழங்கள் தேவ லோகத்து யானையினளவாகும் (எண்ணூற்றறுபத்தொரு ஓட்டை சாண் சுற்றளவு). இந்தப் பழங்கள் விழுந்து சிதறி, அவைகளின் ரஸம் ஜம்பூ நதியாகப் பெருகி ஓடுகிறது. இதை பருகியவர்கள் வேர்வை, துர்நாற்றம், முதுமை, இந்த்ரிய சோர்வு முதலியவைகள் அடைவதில்லை. அந்த ரஸத்தில் நனைந்து, காற்றால் உலர்ந்த அந்த ஆற்றங்கரை மண் தங்கமாகிறது. இதை ஸித்தர்கள் பூசிக்கொள்கின்றனர்.

மேருவின் கிழக்கே பத்ராச்வ வர்ஷமும், மேற்கே கேதுமாலமும் இருக்கின்றன. இதனைச் சுற்றி சைத்ரரத, கந்தமாதன, வைப்ராஜ, நந்தன வனங்களும், அருணோத, மஹாபத்ர, ஸிதோந, மானஸ குளங்களும், மேலும் சில பர்வதங்களும் உள்ளன. மேருமலையின் மீது பத்தாயிரம் யோஜனை அளவிலுள்ளது ப்ரஹ்மாவின் நகரம். அதைச் சுற்றி திக்பாலகர்களின் நகரங்கள் உள்ளன. விஷ்ணுவின் பாதத்திலிருந்து கங்கை சந்த்ர மண்டலத்தைத் தாண்டி இந்த ப்ரஹ்மப் பட்டிணத்தைச் சுற்றி ஸீதா, அளகனந்தா, சக்ஷு, பத்ரா என்று நான்காகப் பிரிந்து ஓடுகிறது. ஸீதா ஆகாச மார்கமாய்ச் சென்று பத்ராச்வ வர்ஷம் வழியாகக் கடலில் கலக்கிறது. அளகனந்தாவும் தென்புற மலைகளின் வழியோடி பாரத வர்ஷம் வழியாக ஏழாகப் பிரிந்து கடலில் சேர்கிறது. சக்ஷுவும், பத்ராவும் மேற்கு, வடக்கு மலைகளில் ஓடி கேதுமால, குருவர்ஷம் வழியே கடலில் கலக்கின்றன.

ஜம்பூ த்வீபம் ஒரு தாமரையானால் மேரு அதன் மொட்டு. பாரத, கேதுமால, பத்ராச்வ, குரு வர்ஷங்கள் நான்கு புறங்களிலும் இதழ்கள். மேருவிற்கு எட்டு எல்லை மலைகள். இவைகளைத் தாண்டியே வர்ஷங்களுள்ளன. ஜடரம், ஹேமகூடம் இரண்டும் லக்ஷம் யோஜனை அளவில் தெற்கு, வடக்கிலும் உள்ளன. கந்தமாதனமும், கைலாஸமும், இமயத்திற்குத் தெற்கே எண்பதினாயிரம் யோஜனையளவில் கடலின் நடுவிலுள்ளன. நிஷதம், பாரியாத்ர மலைகள் மேற்கிலும், த்ரிச்ருங்கம், ஜாருதி வடக்கிலும் கடல் நடுவில் எல்லையாக உள்ளன. இதைப்போல் வேறு பல பர்வதங்களும், புஷ்கரிணிகளும், ஹேமசித்ரம், பூதவனம், ப்ரஹ்மபார்ச்வம், ஸுநாபகம் என்ற நகரங்களும், ஸ்ரீவனம், கிம்சுகவனம், நளவனம் முதலிய காடுகளும் உள்ளன. இங்கு லக்ஷ்மி, விஷ்ணு, அக்னி, ஸூர்யன் முதலான தேவர்களுக்கு இருப்பிடங்களும், மற்ற யக்ஷ, கந்தர்வர்கள் விளையாடுமிடங்களுமிருக்கின்றன. புண்யம் செய்தவர் மட்டுமே செல்லும் பூலோக ஸ்வர்கங்களிவைகள்.

பத்ராச்வ வர்ஷத்தில் ஹயக்ரீவராகவும், கேதுமாலத்தில் வராஹமாகவும், பாரத வர்ஷத்தில் கூர்மமாகவும், குரு வர்ஷத்தில் மத்ஸ்யமாகவும் மஹாவிஷ்ணு அவதரித்திருக்கிறார். பத்தாயிரத்திற்கும், அதற்கதிகமாகவும் ஆயுஸுள்ளவர்கள் இங்கேயிருப்பவர்கள். மழை பொழியத் தேவையேயில்லாமல் பூமியே பல ஆறுகளாகவும், நீர் நிலைகளாகவும் எப்போதும் சுரந்து கொண்டிருக்குமிங்கு. யுக அளவுகளுமில்லை.

No comments:

Post a Comment