Friday, January 22, 2010

விஷ்ணு புராணம் - 50

03_12. க்ருஹஸ்தன் தேவதைகள், பசுக்கள், ப்ராஹ்மணர்கள், ஸித்தி பெற்றவர், பெரியோர் இவர்களை எப்போது பூஜிக்க வேண்டும். ஸந்த்யோபாஸனை செய்ய வேண்டும். அக்னி பூஜை செய்ய வேண்டும். நல்ல வஸ்த்ரங்களையே அணிய வேண்டும். விஷத்தைப் போக்கும் மூலிகைகளையும், ரத்னம் முதலானவைகளையும் அணிய வேண்டும். தலைமயிரையும், சரீரத்தையும் அழுக்கின்றி அலங்கரித்துக் கொள்ள வேண்டும். மல்லிகை போன்ற அழகிய வெண்ணிறம் கொண்ட பூக்களை அணிந்திருக்க வேண்டும். பிறர் பொருளை அபகரிக்கக்கூடாது. ப்ரியமான, உண்மையான பேச்சுக்களையே பேச வேண்டும். குறை கூறக்கூடாது. பிறர் மனைவியையும், அடுத்தவருடன் பகையையும் விலக்க வேண்டும். துஷ்ட வாகனம், வெள்ளம் அரித்த ஆற்றங்கரை, பகைவன், தாழ்ந்தவன், பித்தன், பலருக்குப் பகைவன், துன்புறுத்துபவன், துஷ்ட பெண்களோடு சேர்ந்தவன், அற்பன், பொய்யன், அதிக செலவு செய்பவன், கோள் சொல்பவன், இல்லாதவரைப் பேசுபவன், வஞ்சகன் இவற்றையும் விலக்க வேண்டும். துணையின்றி செல்லக்கூடாது.

வெள்ளத்திற்கு எதிராக நீந்துதல், எரியும் வீட்டில் நுழைதல், மரத்தின் உச்சி, பற்களைக் கடித்தல், மூக்கை உயரத்தேய்த்தல், வாயைத் திறந்து கொட்டாவி விடுதல், பெருமூச்சு விடுதல், இருமல், சப்தம் போட்டு சிரித்தல், ஓசையோடு அபானன் வெளியிடுதல், நகம் கடித்தல், துரும்புகளைக் கிள்ளுதல், தரையில் எழுதுதல், மீசையைக் கடித்தல், உதட்டைக் கசக்குதல் இவற்றையும் விலக்க வேண்டும். அசுத்தமான, கெடுதல் தரும் வெளிச்சங்கங்களைப் பார்க்கக்கூடாது. அம்மணமாயிருக்கும் பெண்களைப் பார்க்கக் கூடாது. உதயாஸ்தமய காலங்களில் ஸூர்யனைப் பார்க்கக்கூடாது.

பிணத்தையும், பிணப்புகையையும் அருவருக்கக் கூடாது. சரீரம் சுக்ல, சோணிதமயம். இதில் சுக்லம் எனும் உஷ்ணம் அக்னியின் அம்சம். சோணிதம் எனும் ரஸம் சந்த்ரனின் அம்சம். அக்னியின் அம்சமான சுக்லம் இறக்கும் போது ப்ராணனோடு சென்று விடுகிறது. மீதமிருக்கும் சோணிதம் எரிக்கும் போது வாஸனையாக வருகிறது. எனவே அதை அருவருக்கக் கூடாது. இரவில் நாற்சந்தி, மேடை கட்டி பூஜிக்கப்படும் வேம்பு, அரசு முதலான மரங்கள், சுடுகாடு, உத்யான வனம்(பூங்கா), துஷ்ட ஸ்த்ரீ இவைகளை விலக்க வேண்டும். பூஜைக்குரியவர், தேவதை, ப்ராஹ்மணர்கள், நெருப்பு இவற்றின் நிழலைக் குறுக்காகத் தாண்டிச் செல்லக் கூடாது. பாழுங்காடு, பாழும் வீடு இவற்றில் வஸிக்கக் கூடாது.

மயிர், எலும்பு, முள், அசுத்தம், பலியிட்ட பொருள்களில் சாம்பல், உமி இவைகளை மிதிக்கக் கூடாது. ஸ்னானம் செய்த நீரால் நனைந்த தரையை மிதிக்கக் கூடாது. அயோக்யர் ஸஹவாஸம் கூடாது. சூது முதலானதை மனதாலும் நினைக்கக்கூடாது. மதம் பிடித்த யானை, பாம்புகளை பின் தொடரக்கூடாது. அவற்றின் எதிரேயும் நிற்கக்கூடாது. அதிகமாகக் கண் விழிப்பது, அதிகம் தூங்குவது, நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நின்று கொண்டிருப்பது, படுத்திருப்பது, அதிகம் வருந்தி வேலை செய்வது இவைகளை விலக்க வேண்டும். பல்லாலும், கொம்பாலும் துன்புறுத்தும் ப்ராணிகள், பனி, எதிர் காற்று, எதிர் வெயில் இவைகளை விலக்க வேண்டும். அம்மணமாகவோ, கச்சமின்றியோ, ஒற்றைத் துணியோடோ நீராடவோ, உறங்குவோ, ஆசமனம் செய்யவோ, பூஜை செய்யவோ கூடாது. இவைகளைக் கச்சத்துடனும், மேல் வஸ்த்ரத்தோடுமே செய்ய வேண்டும்.

நல்லவரோடு அரை நிமிஷம் கூடியிருத்தலும் நலமே. உயர்ந்தவர்களோடும், தாழ்ந்தவர்களோடும் பகை கொள்ளக் கூடாது. விவாஹமும், விவாதமும் சம அந்தஸ்து உடையவருடனேயே செய்ய வேண்டும். கலகத்தை ஆரம்பிக்கக் கூடாது. லாபம் கருதிக் கூட விரோதம் பாராட்டக்கூடாது. பகையால் வரும் நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். லாபம் வருமென்றாலும் பகையை கொள்ளக்கூடாது. ஸ்னானத்திற்குப் பின் துண்டினால் உடம்பைத் துடைத்துக் கொள்ள வேண்டும். மயிரை அடுத்தவர் மேல் நீர் படும் படி உதறக்கூடாது. நின்று கொண்டு ஆசமனம் செய்யக் கூடாது. ஒருகாலால் மற்றொரு காலை மிதிக்கக்கூடாது. பெரியவர் முன் கால் நீட்டக்கூடாது.

குருவின் முன்னிலையில் உட்காரவோ, படுக்கவோ கூடாது. அவர் அமர்ந்த பின் அனுமதி பெற்று தாழ்ந்த ஆஸனத்தில் அமரலாம். கோவில், நாற்சந்தி, மங்களப் பொருள்கள் இவைகளைக் கண்டால் ப்ரதக்ஷிணமாகச் செல்ல வேண்டும். மற்றவற்றை ப்ரதக்ஷிணமாகச் செல்லக்கூடாது. ஸூர்யன், சந்த்ரன், அக்னி, நீர், காற்று, பெரியவர்கள் இவர்களுக்கு எதிரில் காறி உமிழவோ, மல ஜல விஸர்ஜனமோ கூடாது. நின்று கொண்டோ, வழியிலோ மல ஜல விஸர்ஜனம் கூடாது. கோழை, மல ஜலம், ரத்தம் இவைகளை மிதிக்கக்கூடாது. போஜன காலம், பலி காலம், ஹோம, ஜப காலம், மங்கள காலம், ஜனங்கள் திரண்டிருக்கும் காலம் இவைகளிலும் துப்புதல் முதலியன கூடாது.

பெண்களை இகழவோ, நம்பவோ, பொறாமை கொள்ளவோ, அனாதரவு செய்யவோ கூடாது. ஏழைகளுக்கு உதவ வேண்டும், பெரியோர்களைச் சார்ந்திருக்க வேண்டும். மனவடக்கத்தோடும், இதமாகவும், ப்ரியமாகவும் தகுந்த காலத்தில் அளவோடு சொல்ல வேண்டும். பகுத்தறிவு, தகாத கார்யங்களைச் செய்வதில் வெட்கம், பொறுமை, வேதத்தில் நம்பிக்கை, கல்வியாலும் குலத்தாலும் மேன்மை, மேம்பட்டவர்களிடம் அடக்கம் இவைகள் வேண்டும். அகாலத்தில் இடி இடிக்கும் போதும், அமாவாஸ்யை, பௌர்ணமி, தீட்டு காலங்களிலும் வேதம் ஓதாமல் இருக்க வேண்டும்.

கோபம் கொண்டவர்களை மேலும் கிளப்பி விடாமல் (உசுப்பேத்தறது) சாந்தி அடையச் செய்தல், பொறாமை முதலான குணங்களின்றி எவரிடமும் உறவு கொள்ளுதல், அஞ்சியவர்களுக்கு ஆறுதல் அளித்தல் இவைகளைச் செய்தால் ஸ்வர்கத்திலும் சிறப்பை அடையலாம். இந்தச் செயல்களுக்கு ஸ்வர்கமும் ஈடாகாது. குடை, தடி, செருப்பு முதலியவைகளை காலங்களில் உபயோகிக்க வேண்டும். மேலேயோ, பக்க வாட்டிலோ, வெகு தூரத்திலோ வேடிக்கை பார்த்துக் கொண்டு நடக்கக்கூடாது. ஒரு நுகத்தடி (மாட்டு வண்டி சக்கரத்தின் மையத்திலிருந்து கட்டியிருக்கும் மாட்டின் கழுத்து வரையிலான தூரம், எப்டி சொல்றேன் பாத்தீங்களா) வரையிலான வழியை நன்கு பார்த்து கொண்டு செல்ல வேண்டும்.

இப்படிச் சிறந்த அறிவோடு, நல்லொழுக்கத்தோடு, கல்வி, கேள்விகளில் சிறந்திருந்து தனக்குத் தீங்கு நினைப்பவருக்கும், கோள் சொல்பவருக்கும், கடுஞ்சொல் சொல்பவருக்கும் நட்பு பாராட்டி, இனிய சொல் கூறி நடந்து வருபவனுக்கு மோக்ஷம் கையில் உள்ளது. இவர்களாலேயே உலகம் இன்னும் நிலை பெற்றிருக்கிறது. உண்மையைக் கூற வேண்டும், அதுவும் அடுத்தவருக்கு ப்ரியமாக, நன்மை தரக்கூடியதாய் இருக்க வேண்டும், அதையும் இனிமையாகக் கூற வேண்டும். இதையே படித்தவன் மனதாலும், வாக்காலும், உடலாலும் செய்ய வேண்டும். இதில் எதாவது ஒன்று தவறுமானால், அந்த சமயத்தில் (கருத்து கூறாமல்) பேசாமல் இருப்பதே மேல்.

No comments:

Post a Comment