Wednesday, January 27, 2010

விஷ்ணு புராணம் - 51

03_13. ஒருவன் புத்ரன் பிறந்ததும் உடுத்தியிருக்கும் துணியோடு ஸ்னானம் செய்ய வேண்டும். ஜாதகர்மா, அப்யுதய ச்ராத்தம் இவைகளைச் செய்ய வேண்டும். தேவர்கள், பித்ருக்கள் ஸ்தானத்தில் இரட்டையாக ப்ராஹ்மணர்களை வரித்து, கவனத்துடன் அவர்களை ப்ரதக்ஷிணமாகப் பூஜித்து, போஜனம் செய்விக்க வேண்டும். பின் இலந்தை, தயிர், அக்ஷதை இவைகள் கலந்த பிண்டங்களை கிழக்கு அல்லது வடக்கு முகமாக தேவ அல்லது ப்ரஹ்ம தீர்த்தத்தால் தர வேண்டும். இந்த ச்ராத்தத்தால் நாந்தீமுக பித்ருக்கள் த்ருப்தி அடைகின்றனர். குழந்தைகளின் கல்யாணங்களிலும், க்ருஹப்ரவேசம், நாமகரணம், சௌளம், ஸீமந்தம், உபனயனம், மற்ற சுபகாலங்கள், தேசாந்திரம் சென்று வந்த புத்ர, பௌத்ரர்களைப் பார்க்கும் போதும், வ்ருத்திகளிலும் இந்த நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.

ஒருவன் மரணமடைந்தால், சரீரத்தை தீர்த்தங்களால் நீராட்டி, மாலை முதலியவைகளால் அலங்கரித்து, க்ராமத்திற்கு வெளியில் தஹனம் செய்து நீர் நிலைகளில் கட்டியிருக்கும் துணியுடன் ஸ்னானம் செய்ய வேண்டும். பின் தெற்கு முகமாய் கோத்ரத்தையும், பெயரையும் சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். மாலையில் மாடுகள் வரும் போதோ, நக்ஷத்ரங்கள் தெரியும்போதோ வீட்டினுள் நுழைய வேண்டும். படுக்கையில் படுக்கக் கூடாது. தரையிலேயே புல் முதலியவைகளைப் பரப்பிப் படுக்க வேண்டும். தீட்டு முடியும் வரை தினமும் தரையில் பிண்டத்தை இறந்தவனுக்காக தர வேண்டும். இந்த பிண்டம் இடுகிறவன் பகலில் மட்டும் தான் உண்ண வேண்டும். மாம்சம் உண்ணக்கூடாது. உறவினர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கிணங்க உணவிட வேண்டும். அவர்கள் த்ருப்தியடைந்தால் இறந்தவனும் த்ருப்தி அடைகிறான்.

இறந்த முதல் நாள், மூன்றாம், ஏழாம், ஒன்பதாம் நாள் கட்டியிருக்கும் ஆடையை விட வேண்டும். ஊருக்கு வெளியில் ஸ்னானம் செய்து எள்ளுடன் தீர்த்தம் விட வேண்டும். நான்காம் நாள் அஸ்தி ஸஞ்சயனம் (எலும்புகளை எடுத்தல்) செய்ய வேண்டும். இதன் பின் கர்த்தா ஸபிண்டர்களைத் (ஏழு தலைமுறைக்கு உட்பட்டவர்கள்) தொட்டாலும் தோஷமில்லை. ஏழு தலைமுறைக்கு அப்பாற்பட்டவர்கள் ஸமான உதகர்கள். இவர்கள் ஔபாஸனம் முதலான எல்லா கர்மாக்களையும் செய்யலாம். ஆனால் போகங்களான அலங்கரித்துக் கொள்ளல், சந்தனம் பூசிக் கொள்ளுதல், பூச்சுடுவது முதலியன கூடாது. ஸஞ்சயனத்திற்குப் பின் ஸபிண்டர்களோடு படுத்துக்கொள்ளலாம், உட்கார்ந்துக் கொள்ளலாம். ஸ்த்ரீ போகம் கூடாது.

சிறுவன், மஹா நதி, பர்வதம், பாஷை இவைகளால் வேறுபட்ட தேசங்களிலிருப்பவன், ஜாதி மற்றும் குலாசாரங்கள் நீங்கிய பதிதன், ஸன்யாஸி இவர்கள் இறந்தால் ஸ்னானத்திலேயே தீட்டு கழிந்து விடும். அதன் பின் தீட்டு கிடையாது. தற்கொலை செய்து கொண்டாலும் இவ்வாறே. தவறி நடந்துவிட்டால் தீட்டு உண்டு. பந்துக்களுக்குப் பத்து நாளும் (க்ஷத்ரியர்களுக்குப் பனிரெண்டு நாள், வைச்யர்க்குப் பதினைந்து நாள், வேளாளர்க்கு ஒரு மாதம்)தீட்டு உண்டு. ப்ராஹ்மணர்கள் தங்களின் ஆறு செயல்களையும் இந்த காலத்தில் விட வேண்டும். இவ்வாறு தீட்டு காலம் முடிந்த மறு நாள் (பதினோறாம் நாள் முறையே) ஒற்றைப்படையில் ப்ராஹ்மணர்களைப் புஜிக்கச் செய்து, அவர்களின் இலைக்கருகில் தர்ப்பைகளைப் பரப்பி, அதில் இறந்தவனுக்காகப் பிண்டத்தை வைக்க வேண்டும். இப்படியாக ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தை முடிக்க வேண்டும்.

இதற்குப் பின் தீட்டுடையவன் தீர்த்தத்தையும்(ப்ராஹ்மணன்), ஆயுதத்தையும்(க்ஷத்ரியன்), தாற்றுக்கோலையும்(மாடு, குதிரை மேய்க்கும் சாட்டை- வைச்யர்), தடியையும் (சூத்ரன்) தொட்டு சுத்தி அடைகிறார்கள். இதன் பின் தத்தம் தர்மங்களை ஒட்டிச் செல்லலாம். இதன் பின் கர்த்தா மாதந்தோறும் இறந்த திதியில் ஏகோத்திஷ்ட முறையில் (ஆஹ்வானம், அக்னௌகரணம், வைச்வதேவிக விப்ரநிமந்த்ரணம் முதலியன விடுத்து) ச்ராத்தம் செய்ய வேண்டும். ஒரே பவித்ரத்துடன், ஒரே அர்க்யம் கொடுக்க வேண்டும். ப்ராஹ்மணர்கள் புஜித்த பின் பிண்டம் தர வேண்டும். புஜித்த ப்ராஹ்மணர்களை நோக்கி அபிரம்யதாம் (ஸந்தோஷத்தில் திளைக்கிறீர்களா) என்று கர்த்தா கேட்க, அவர்கள் அபிரதா: ஸ்ம: (ஸந்தோஷம் தான்) என்று பதில் சொல்ல வேண்டும். ச்ராத்த முடிவில் இன்னாருக்கு அக்ஷய்யம் என்று சொல்ல வேண்டும்.

இப்படி ஏகோத்தர விதிப்படி ஒரு வருஷம் முழுதும் ஒவ்வொரு மாதமும் மாஸிகம் செய்து, பின் ஸபிண்டீகரணம் (பனிரெண்டாவது நாளிலோ, ஆறாம் மாதமோ அல்லது வருஷ முடிவிலோ) செய்ய வேண்டும். இந்த ச்ராத்தத்தில் பித்ருக்களுக்கு மூன்று அர்க்ய பாத்ரங்களும், ப்ரேதனுக்கு ஒன்றும் எள், சந்தனம் இவைகளோடு வைக்க வேண்டும். ப்ரேத பாத்ரத்திலுள்ளதை பித்ரு பாத்ரங்களில் கலக்க வேண்டும். இதன் பின்னேதான் அவன் ப்ரேதத் தன்மையிலிருந்து பித்ரு தன்மையை அடைகிறான். இதன் பின் அவனை முதலாகக் கொண்டு மூன்று பித்ருக்களை ச்ராத்தத்தில் அர்ச்சிக்க வேண்டும். புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன், ஸஹோதரன், அவனுடைய ஸந்ததி, ஸபிண்டர்களுடைய ஸந்ததி, ஸமான உதகர்களுடைய ஸந்ததி, தாய் வழி ஸபிண்டர்களின் ஸந்ததி, தாய் வழி ஸமான உதகர்களின் ஸந்ததி இவர்களில் முந்தையவர்கள் இல்லாத போது பின்னிருப்பவன் முறையே கர்மாவைச் செய்யலாம்.

இரண்டு வம்சத்திலும் ஒருவரும் இல்லையெனில் ஸ்த்ரீ, கூடப்படித்தவன், இறந்தவன் பணத்தைக் கொண்டு அரசனும் கர்மாவைச் செய்யலாம். பிணத்தைக் கொளுத்துவது முதல் ஜலத்தைத் தொடுவது வரை பூர்வ க்ரியைகள் என்றும், மாதாமாதம் செய்யும் மாஸிகம் முதலியவைகள் மத்யமங்கள், ஸபிண்டீகரணத்திற்குப் பின் நடப்பவை உத்தர க்ரியைகள் என்று மூன்று வகையில் அழைக்கப்படுகின்றன. பூர்வ க்ரியைகளை தந்தை, தாய் வழி ஸபிண்ட, ஸமானோதக, ஸஹாத்யாயி, அரசன் இவர்கள் செய்யலாம். உத்தர க்ரியைகளை புத்ர, பௌத்ர, தௌஹித்ர, அவர்களின் புத்ரர்களோ தான் செய்ய வேண்டும். வேறு எவரும் செய்வதற்கு உரியவர் அல்லர். மத்யம க்ரியைகளை இருவரில் எவரும் செய்யலாம். ஸ்த்ரீகள் இறந்தாலும் இப்படியே.


No comments:

Post a Comment