Sunday, January 31, 2010

விஷ்ணு புராணம் - 61

04_05. இக்ஷ்வாகுவின் புதல்வர்களில் ஒருவனான நிமி ஆயிரம் வருடங்கள் செய்யத்தக்க ஸத்ரயாகத்தை ஆரம்பித்தான். அதில் ஹோதாவாக இருக்க வஸிஷ்டரை வேண்டிக் கொண்டான். அவர் இந்த்ரனின் ஐநூறு ஆண்டுகள் செய்யத்தக்க மற்றொரு யாகத்தில் ஏற்கனவே ரித்விக்காக இருக்க ஒப்புக் கொண்டு விட்டதாகவும், அது முடியும் வரைப் பொறுத்திருக்கும் படியும் நிமியிடம் கூறுகிறார். நிமி இதற்குப் பதிலொன்றும் கூறாமல் மௌனமாக இருக்கிறான். அவன் ஒப்புக்கொண்டு விட்டதாக நினைத்துக் கொண்ட வஸிஷ்டர் இந்த்ரனின் யாகத்திற்குச் சென்று விட்டார். ஆனால் நிமி, குலகுரு இல்லாததால் கௌதமர் முதலான மஹரிஷிகளைக் கொண்டு தன் யாகத்தை ஆரம்பித்து விட்டான்.

இந்த்ரன் யாகம் முடிந்து நிமியிடம் வந்த வஸிஷ்டர் தம்மை எங்கும் போக வேண்டாம் என்று கூறி இருந்தால் இங்கேயே இருந்திருப்போமே, அப்போது மௌனமாக இருந்து விட்டு இப்படி யாகத்தை ஆரம்பித்து விட்டானே என்று வருத்தமும், கோபமும் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த நிமியை நோக்கி இவன் உடலற்றவனாவான் (விதேஹன்) என்று சாபமிட்டார். இதையறிந்த நிமி தூங்கிக் கொண்டிருந்த போது, எதையும் கூறாமல் தனக்குச் சாபமிட்ட வஸிஷ்டரையும் விதேஹராவார் என ப்ரதி சாபமிட்டான். இருவருமே கண்ணுக்குத் தெரியாதவர்களானார்கள். இதன் பின் மித்ரா வருணர் ஊர்வசியிடம் மோஹம் கொண்ட போது அதிலிருந்து வஸிஷ்டர் வேறு தேஹம் கொண்டார்.

நிமியினுடைய தேஹத்தை யாகம் செய்து கொண்டிருந்த ரித்விக்குகள் (தனக்கு உதவியாக இருப்பதற்காக யஜமானன் தக்ஷிணைகள் கொடுத்து வரித்த அத்வர்யு, ஹோதா, உத்காதா, ப்ரஹ்மா ஆகியோர்) தைலங்களால் பதப்படுத்திக் காத்து வந்தனர். யாகம் தொடர்ந்து முடிந்தது. தங்கள் பங்கைப் பெறுவதற்காக யாகத்தின் இறுதியில் வந்த தேவர்களிடம் இந்த ரித்விக்குகள் யஜமானனுக்காக வரம் வேண்ட, அவர்களும் தர இசைந்தனர். ஆனால், நிமி தான் அந்த சரீரத்தை விரும்பவில்லையென்றும், தான் இனி அனைவரின் கண்களிலும் வஸிக்க வேண்டும் என்ற வரத்தைக் கோரிப் பெற்றான். இதனாலேயே கண்களை ஜீவராசிகள் இமைக்கின்றன. அரசனில்லாமல் ராஜ்யம் கெட்டு விடக்கூடாது என்று நிமியின் உடலைக் கடைந்து ஜனகன் (வைதேஹன், மிதி) என்ற புத்ரனை உண்டாக்கினர் மஹரிஷிகள்.

இந்த மிதியின் வம்சம் உதாவஸு, நந்திவர்த்தனன், ஸுகேது, தேவராதன், ப்ருஹதுக்தன், மஹாவீர்யன், ஸுத்ருதி, த்ருஷ்டகேது, ஹர்யச்வன், மரு, ப்ரதிகன், க்ருதிரதன், தேவமீடன், விபுதன், மஹாத்ருதி, க்ருதராதன், மஹாரோமா, ஸ்வர்ணரோமா, ஹ்ரஸ்வரோமா என்று வளர்ந்தது. இந்த ஹ்ரஸ்வரோமாவிற்கு ஸீரத்வஜனும், குசத்வஜனும் பிறந்தனர். இந்த ஸீரத்வஜன் தான் பிள்ளைப் பேறுக்காக யாகம் செய்ய பூமியை உழுத போது, ஸீதை தோன்றினாள். குசத்வஜன் ஸாங்கர்ய தேசத்திற்கு அதிபதியாக இருந்தான். ஸீரத்வஜனுக்குப் பின் பானுமான், சதத்யும்னன், சுசி, ஊர்ஜன், சதத்வஜன், க்ருதி, ரஞ்ஜனன், புருஜித், அரிஷ்டநேமி, ச்ருதாயுஸ், ஸுபார்ச்வன், ஸ்ருஞ்ஜயன், க்ஷேமாவி, அநேநஸ், பௌமதன், ஸத்யரதன், உபகு, உபகுப்தன், ஸ்வாகதன், ஸ்வாங்கன், ஸ்வாபனன், ஸுவர்சஸ், ஸுபாஷன், ஸுச்ருதன், ஜயன், விஜயன், ருதன், ஸுநயநன், வீதஹவ்யன், த்ருதி, பஹுளாச்வன், க்ருதி என்று வளர்ந்தது. பெரும்பாலும் ஆத்ம வித்யையில் நிலை பெற்ற இந்த ஜனக (மிதி, விதேஹ) வம்சம் மிதிலா நகரை ஆண்டது.

No comments:

Post a Comment