Friday, January 8, 2010

விஷ்ணு புராணம் - 28

02_06. பூமியின் தென் திசையின் கீழே இருளும், நீரும் நிறைந்த பள்ளத்தாக்குகள் பல உள்ளன. இதற்கும் கீழேதான் நரகங்கள் உள்ளன. ரௌரவம், ஸூகரம், ரோதம், தாலம், விசஸனம், மஹாஜ்வாலம், தப்தகும்பம், லவணம், விலோஹிதம், ருத்ராம்பஸ், வைதரணி, க்ருமிசம், க்ருமிபோஜனம், அஸிபத்ரவனம், க்ருஷ்ணம், லாலாபக்ஷம், பூயவஹம், அக்னிஜ்வாலம், அதச்சிரஸ், ஸந்தம்சம், க்ருஷ்ணஸூத்ரம், தமஸ், அவீசி, ச்வபோஜனம், அப்ரதிஷ்டம் முதலிய பல நரகங்கள் யமனுடைய ஆளுகையில் இங்கு இருக்கின்றன.

உண்மை தெரிந்திருந்தும் ஸாக்ஷி சொல்லாமலோ, மாறாக சொன்னாலோ அவன் கூடஸாக்ஷி எனப்படுகிறான். இவர்களும், பேதமாக நீதிவழங்குபவர்களும் ருரு என்ற ம்ருகத்தால் கடிக்கச் செய்யும் ரௌரவத்தையடைகின்றனர். கர்ப்பத்தை அழிப்பவர்கள், நகரத்தை நாசம் செய்பவர்கள், பசுவைக் கொல்பவர்கள், மூச்சு விட முடியாமல் பிறரைத் துன்புறுத்துபவர்கள் அசைய முடியாமல் தூண்களைப் போல நிற்க வைத்துத் துன்புறுத்தப்படும் ரோதம் என்னும் நரகத்தையடைகின்றனர். மது அருந்துபவர், ப்ராஹ்மணனைக் கொல்பவர், தங்கத்தைத் திருடியவன், இவர்களோடு ஒரு வருஷமாவது வஸித்தல், உட்காருதல், இவர்களுக்கு யாகம் செய்வித்தல், வேதம் சொல்லுதல் என எந்த வகையிலாவது இவர்களோடு தொடர்பு கொண்டவர்களும் பன்றிகளால் கடிக்கச் செய்யப்படும் ஸூகரமென்னும் நரகத்தையடைவர்.

க்ஷத்ரியன், வைச்யன், தூதுவன் இவர்களைக் கொல்பவர்கள், குரு பத்னியைக் கூடியவன், ஸகோதரியுடன் கூடியவன் ஆகியவர்கள் தப்தகும்பம் (அல்லது கும்பீபாகம்) என்னும் நரகத்தையடைவர். இதில் கொதிக்கும் எண்ணெய் நிறைந்த தாம்ரச்சட்டியிலிட்டோ அல்லது தாம்ரத்தாலான ஒரு பெண் சிலையைப் பழுக்கக் காய்ச்சி அதைத் தழுவச்செய்தோ சித்ரவதை செய்வது தப்தகும்பம். உலோகத்தைக் காய்ச்சி அதில் போட்டு வதைக்கப்படும் தப்தலோஹம் என்னும் நரகம் மனைவியை விற்றவனுக்கும், சிறைச்சாலை அதிகாரி, குதிரை விற்பவன், அடைக்கலமடைந்தவனைக் கைவிட்டவன் ஆகியோருக்கு. மகளுடனோ, மருமகளுடனோ களிப்பவனும், பெரியோர்களையும்,ப்ராஹ்மணர்களையும் நிந்திப்பவனும், அவமதிப்பவனும் பெரும் நெருப்பில் இட்டு வாட்டப்படும் மஹாஜ்வாலத்தையடைவர்.

வேதத்தை நிந்திப்பவன், விலைக்கு விற்பவன் (பணத்துக்கு சொல்லிக் கொடுப்பது), கூடத்தகாத பெண்களுடன் கூடுபவன், வேதத்தை மறந்தவன் இவர்கள் உடலை துண்டு, துண்டாக வெட்டி காய்ச்சிய உப்பிலிட்டு வாட்டப்படும் லவணத்தையடைகின்றனர். திருடுபவனும், மத தர்மங்களை அழிப்பவர்களும் ரத்தத்தை உறிஞ்சும் விலோஹம் (அல்லது விலோஹிதம்) எனும் நரகத்தையடைவர். தேவர்கள், அந்தணர்களைப் பகைப்பவர்கள், உயர் வஸ்த்துக்களைத் தூஷிப்பவர்கள் க்ருமியை உண்ணச்செய்யும் க்ருமிபோஜனத்தையும், பிறர் மீது சூன்யம் முதலானவற்றை ஏவுபவர்கள் க்ருமிகள் மீது படுத்துக்கொள்ளும் க்ருமிசத்தையும் அடைகின்றனர்.

அதிதிகள், தேவர்கள், பித்ருக்களுக்கு முதலில் உணவளிக்காமல் தான் உண்பவன், வேடர் முதலியவர்களுக்கு ஆயுதங்களைச் செய்து கொடுப்பவன் இவர்கள் எச்சிலை (லாலா) உண்ண வைக்கும் லாலாபக்ஷத்தை அடைகின்றனர். கர்ணீ எனும் பாணத்தையும், கத்திகளையும் செய்து கொடுக்கும் தொழில் செய்பவன் கைவாளால் அறுக்கப்படும் விசஸனத்தையடைவர். அதோமுகம் என்னும் நரகத்தை தீயவர்களிடமிருந்து தானம் வாங்குபவனும், தகுதியில்லாதோருக்கு யாகம் செய்து வைப்பவனும், ஜோதிடம் தெரியாமலே சொல்பவனும் (நக்ஷத்ரஸூசகன்) அடைகின்றனர். ஸாஹஸம் செய்பவனும், சுவையுணவுகளைத் தனியே உண்பவர்களும், அரக்கு, மாம்ஸம், தேன், எள், உப்பு இவற்றை விற்கும் ப்ராஹ்மணர்களும், பூனை, கோழி, ஆடு, நாய், பன்றி, பறவைகளை கொஞ்சி வளர்ப்பவனும் துர்நாற்றம் வீசும் இடத்தில் நின்று ஸ்வாசிக்கச் செய்யும் பூயவஹத்தை அடைகின்றனர்.

நாடகத் தொழில், மீன்பிடித்தல், மல்யுத்தம் இவைகளைச் செய்யும் ப்ராஹ்மணன், கள்ளப்புருஷனுக்குப் பிறந்தவனிடம் உணவை வாங்கி உண்பவன், விஷம் வைப்பவன், கோள் மூட்டுபவன், மனைவியைப் பிறருக்கு விட்டு அதனால் வாழ்பவன், அமாவாஸ்யை, பௌர்ணமியில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல், மாம்ஸம் சாப்பிடுதல், மனைவியைக் கூடுதல் இவைகளைச் செய்பவன், பருவச்சடங்குகளைத் தவறிச் செய்பவன், நெருப்பு வைப்பவன், நண்பனைக் கொல்பவன், பறவைகளைக் கொண்டு குறி சொல்லி வாழ்பவன், ஊருக்காக யாகம் செய்பவன், ஸோமலதையை விற்பவன் இவர்கள் கொதிக்கும் ரத்தம் நிறைந்த ருதிராம்பஸ் (அல்லது ருதிராபம்) எனும் நரகத்திற்குச் செல்கின்றனர்.

யாகத்தை அழிப்பவனும், ஊருக்குத் தீங்கு செய்பவனும், ரத்தம் நிறைந்த கடக்கமுடியாத ஆறு உள்ள வைதரணியை அடைவர். செல்வத்தாலோ, பருவத்தாலோ செருக்குற்று எல்லைகளை மாற்றுபவர்களும், தூய்மையாக இல்லாதவர்களும், ஏமாற்றுபவர்களும் இரும்பு முட்கள் மேல் நடக்கச் செய்யும் க்ருஷ்ணத்தை அடைகின்றனர். தேவையில்லாமல் செடி, கொடி, தாவரங்களை அழிப்பவர்கள் உடலை அறுக்கும் இலைகள் உள்ள மரங்கள் நிறைந்த அஸிபத்ரவனத்தையடைவர். ஆடு விற்றுப் பிழைப்பவனும், ம்ருகங்களைக் கொல்பவனும், கொளுத்தக் கூடாதவைகளைக் கொளுத்துபவனும் அக்னிஜ்வாலத்தையடைகின்றனர்.

வ்ரதத்தைக் கைவிடுபவனும், ஆச்ரம தர்மங்களிலிருந்து நழுவினவனும் இடுக்கியினால் (ஸந்தம்சினீ) நாக்கைப் பிடுங்கும் ஸந்தம்சம் எனும் நரகத்தையடைகின்றனர். பகலிலும், கனவுகளிலும் சுக்லத்தை விடும் ப்ரஹ்மசாரிகளும், பிள்ளையிடம் உபதேசம் பெறுபவர்களும் நாய் மாம்ஸத்தை உண்ணச் செய்யும் ச்வபோஜனத்தை அடைகின்றனர். ஸ்வர்கத்திலிருப்பவர்கள் புண்யம் தீர்ந்ததும் இந்த மாதிரி நரகத்தை நாமும் அனுபவிக்கக் கூடுமே என்றும், நரகத்திலிருப்பவர்கள் ஸ்வர்கத்திலிருப்பவர்களைப் பார்த்து இதற்குப் புண்யங்கள் செய்யாமல் போனோமே என்று வருந்துவார்கள். இதன் பின் மீண்டும் தாவரமாகவும், புழுவாகவும், நீரில் வாழ்வன, பறப்பன, பசுக்கள், மனிதர்களில் பல வகைகள் எனப் பிறக்கின்றனர்.

பாபம் தவறிச் செய்து விட்டால் இதைச் செய்து விட்டோமே என்ற வருத்தமாவது இருக்க வேண்டும். மேலும் பாபங்களுக்கு தகுந்த ப்ராயச்சித்தங்கள் உண்டு. ஆனால் அவைகளை அறிந்து முறையாகச் செய்தாலும் அதற்குரிய பாபத்தை மட்டுமே போக்கும், மேலும் பாவம் செய்யாத எண்ணத்தையெல்லாம் அது உண்டாக்காது. செய்த பாபங்கள் தீரவும், இனி பாபங்கள் செய்யாத மனநிலை அடையவும் க்ருஷ்ணனிடம் நம்மை அர்ப்பணித்து கொள்வதொன்றேயாகும். இடம், பொருள் தேர்ச்சி இன்றி எங்கும், எப்போதும் அவனை நினைத்துக் கொண்டேயிருக்கலாம். அவனை நினைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு ஸ்வர்கமும் இடையூறே. சுக ஸாதனங்களும், துக்க ஸாதனங்களும் எல்லோருக்கும் பொதுவாயிருப்பதில்லை. நம் வினைகளுக்குத் தகுந்தவாறே பொருள்களில் நம் பார்வையும் இருக்கிறது. பயனை விரும்பிச் செய்யும் வினைகளே ஸ்வர்கத்தும், நரகத்திற்கும் நம்மை இட்டுச் செல்கின்றன. பயன் கருதாது கடமையென செய்யும் வினை ஞானத்தையும், பின் மோக்ஷத்தையும் அளிக்கும்.

No comments:

Post a Comment