Friday, January 8, 2010

விஷ்ணு புராணம் - 25

02_03. பழம்பெருங்கடலுக்கு வடக்கேயும், இமயத்திற்குத் தெற்கேயும் உள்ளது பரதனாண்ட ஜம்பூ த்வீபத்தினொரு பகுதியான பாரத வர்ஷம். இதன் விஸ்தாரம் ஒன்பதினாயிரம் யோஜனைகள். இது கர்ம பூமி. மஹேந்த்ர, மலய, ஸஹ்ய, சுக்திமான், ரிக்ஷம், விந்த்ய, பாரியாத்ர பர்வதங்கள் இங்கே இருக்கின்றன. இந்த்ரத்வீப, சுசேரு, தாம்ரபர்ண, கபஸ்திமான், நாகத்வீபம், ஸௌம்யத்வீபம், காந்தர்வம், வாருணம், பாரதமென்ற ஒன்பது கண்டங்கள் பாரத வர்ஷத்தினுடையவை. ஸகரபுத்ரர்கள் தோண்டிய கடலால் இந்த பாரத கண்டமும், அவ்வாறே மற்ற கண்டங்களும் சூழப்பட்டுள்ளன. இந்த த்வீபம் தென் வடக்கில் ஆயிரம் யோஜனை அளவுள்ளது. இதன் கிழக்கில் க்ராதர்களும், மேற்கில் யவனர்களும், நடுவில் நான்கு வர்ணத்தாரும் உள்ளனர்.

சதத்ரூ, சந்த்ரபாகா நதிகள் இமயத்திலிருந்தும், வேதஸ்ம்ருதி முதலியவை பாரியாத்ரத்திலிருந்தும், நர்மதா, ஸுரஸா விந்த்யத்திலிருந்தும், தாபீ, பயோஷ்ணீ ரிக்ஷத்திலிருந்தும், கோதாவரி, பீமரதீ, க்ருஷணவேணீ ஸஹ்யத்திலிருந்தும், க்ருதமாலை, தாம்ரபர்ணீ மலயத்திலிருந்தும், த்ரிஸாமா, ரிஷிகுல்யா மஹேந்த்ரத்திலிருந்தும், குமாரீ சுக்திமானிலிருந்தும் உண்டாகின்றன. யுக, ஸ்வர்க, நரக, பாதாள பேதங்களும் இங்கு உண்டு. மற்ற தீவுகளில் ஸோமன், வாயு முதலானோருருவில் ஆராதிக்கப்படும் விஷ்ணு இங்கு யக்ஞ ரூபனாக இருக்கிறான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் புண்யம் செய்தவர்களே இங்கு பிறக்கின்றனர். இவர்கள் புண்யம் செய்தவர்கள் என்று தேவர்களே பாடுகின்றனர். ஸ்வர்கத்தில் புண்யம் தீர்ந்தாலும் இங்கே பிறக்க புண்யம் செய்திருக்க வேண்டும். இந்த ஜம்பூ த்வீபத்தை லக்ஷ யோஜனை அளவுள்ள உப்புக் கடல் சூழ்ந்துள்ளது.

No comments:

Post a Comment