Friday, January 8, 2010

விஷ்ணு புராணம் - 26

02_04. ஒரு த்வீபம், அதைச் சுற்றி ஒரு ஸமுத்ரம், அதைச் சுற்றி அடுத்த த்வீபம், அதைச் சுற்றி அதன் ஸமுத்ரம் என்று அமைந்திருக்கிறது. இப்படி ஜம்பூ த்வீபத்தின் லவண ஸமுத்ரத்தைச் சூழ்ந்திருக்கிறது ப்லக்ஷ த்வீபம். இது ஜம்பூ த்வீபத்தை விட இரண்டு மடங்கு விஸ்தாரமானது. இதனரசன் மேதாதிதிக்கு சாந்தஹயன், சிசிரன், ஸுகோதயன், ஆனந்தன், சிவன், க்ஷேமகன், த்ருவன் என்று ஏழு புத்ரர்கள். இவர்கள் பெயரிலேயே இந்த த்வீபம் பிரிந்துள்ளது. கோமேதகம், சந்த்ரம், நாரதம், துந்துபி, ஸோமகம், ஸுமனஸ், வைப்ராஜம் என்று ஏழு மலைகள் இங்குள்ளன. பெயரைக் கேட்ட போதே அனைத்து பாவங்களையும் போக்கும் அனுதப்தா, சிகீ, விபாபா, த்ரிதிவா, அக்லமா, அம்ருதா, ஸுக்ருதா என்ற ஏழு நதிகளிங்கு ஓடுகின்றன.

க்ருதயுகம் முதல் த்வாபர யுகம் வரை மக்களின் ஆயுட்காலம் வளர்ந்து (உத்ஸர்பிணீ), பின் கலியுகம் வரை குறையும். இந்த நிலைகள் இங்கில்லை. எப்போதும் த்ரேதா யுகத்திற்குச் சமமான நிலையே இருக்கும். இங்கு ஆர்யகர், குரரர், விதிச்யர், பாவினர் என்ற வர்ணத்தினர் இருக்கின்றனர். இந்த த்வீபத்தின் நடுவில் ஜம்பூ த்வீபத்தின் நாவல் மரம் அளவில் ஒரு கல்லால (ப்லக்ஷ) மரம் உள்ளது. இதன் மக்கள் ஸோமரூபியாக விஷ்ணுவைத் துதிக்கின்றனர். இது த்வீபத்தின் அளவுள்ள கருப்பஞ்சாற்றுக் கடலால் (இக்ஷு) சூழப்பட்டுள்ளது.

சால்மல த்வீபத்தின் அரசன் வபுஷ்மானுக்கு ச்வேதன், ஹரிதன், ஜீமுதன், ரோஹிதன், வைத்யுதன், மானஸன், ஸுப்ரபன் என்று ஏழு புத்ரர்கள். ப்லக்ஷ த்வீபத்தினை விட இரண்டு மடங்கான இது இக்ஷு ஸாகரத்தைச் சூழ்ந்துள்ளது. குமுதம், உன்னதம், பலாஹகம், த்ரோணம், கங்கம், மஹிஷம், கருத்மான் என்ற ஏழு வர்ஷ பர்வதங்கள். இவற்றில் பல ரத்னங்கள் உள்ளன. த்ரோணம் இவற்றில் சிறந்தது. அம்பு துளைத்த இடத்தைக் குணமாக்கும் விசல்யகரணீ, மூர்ச்சையடைந்தவனைப் பிழைப்பிக்கும் ம்ருதஸஞ்ஜீவனீ, ரணங்களால் ஆன நிற மாறுதலைச் சரி செய்யும் ஸாவர்ண்யகரணீ, ஒடிந்த எலும்புகளை சேர்க்கும் ஸந்தினீ எனப் பல மூலிகைகளை அடக்கியது இது. யோனி, தோயா, வித்ருஷ்ணா, சந்த்ரா, சுக்லா, விமோசனீ, நிவ்ருத்தி என்பவை இங்கிருக்கும் புண்ய நதிகள். கபிலர், அருணர், பீதர், க்ருஷ்ணர் என்று நான்கு வர்ணத்தவர் வாயு ரூபியாக விஷ்ணுவை ஆராதிக்கின்றனர். சால்மலீ வ்ருக்ஷம் இங்குள்ளது. கள் (ஸுரா) கடலால் சூழப்பட்டுள்ளது.

இதைச் சூழ்ந்துள்ள குச த்வீபம் இதை விட இரண்டு மடங்கு. ஜ்யோதிஷ்மான் என்ற இதன் அரசனுக்கு உத்பிதன், வேணுமான், ஸ்வைரதன், லம்பனன், த்ருதி, ப்ரபாகரன், கபிலன் என்ற ஏழு புதல்வர்கள். தமி, சுஷ்மி, தேஹர், மத்தேஹர் என்று நான்கு வர்ணத்தினர். நாணல் நிறைந்தது. ஏழு வர்ஷ பர்வங்களும், நதிகளும் உள்ளன. த்வீபத்தினளவேயுள்ள நெய்க் கடலால் இது சூழப்பட்டுள்ளது.

இந்த நெய்க் கடலைச் சூழ்ந்துள்ளது அடுத்ததான க்ரௌஞ்ச த்வீபம். இது குச த்வீபத்தை விட இரு மடங்கு (பதினாறு லக்ஷம் யோஜனை) அளவுள்ளது. இதனரசன் த்யுதிமானுக்கு குசலன், முனுகன், உஷ்ணன், ஸிவரன், அந்தகாரகன், முனி, துந்துபி என்று ஏழு புத்ரர்கள். க்ரௌஞ்சம் முதலான ஏழு வர்ஷங்களும், கௌரீ, குமுத்வதீ முதலான நதிகளும் இங்குள்ளது. புஷ்கரர், புஷ்கலர், தன்யர், திஷ்யர் என்று நான்கு வர்ணத்தவர். விஷ்ணுவை இங்கிருப்பவர்கள் ருத்ர ரூபியாக ஆராதிக்கின்றனர். இது த்வீபத்தினளவேயுள்ள தயிர்க் கடலால் சூழப்பட்டுள்ளது.

இதைச் சூழ்ந்துள்ளது முப்பத்திரண்டு லக்ஷ யோஜனையளவுள்ள சாக த்வீபம். ஜலதன் முதலான் எழுவர் இதனரசன் பவ்யனின் புத்ரர்கள். உதயகிரி முதலான ஏழு வர்ஷ பர்வங்களும், ஸுகுமாரீ முதலான புண்ய நதிகளும் இங்குள்ளது. இங்கு உட்புறம் சுரசுரப்பாகவும், வெளிப்புறம் ம்ருதுவாகவும் இருக்கும் சாக வ்ருக்ஷமுள்ளது. மங்கர், மாகதர், மானஸர், மந்தகர் என்பன இங்குள்ள வர்ணங்கள். ஸூர்ய ரூபியாக விஷ்ணு இங்கு ஆராதிக்கப் படுகிறார். இது இதனளவேயுள்ள பாற்கடலால் சூழப்பட்டுள்ளது.

இதைச் சுற்றியுள்ளது அறுபத்து நாலு லக்ஷ யோஜனை விஸ்தரித்துள்ள புஷ்கர த்வீபம். இதன் அரசன் ஸவனனுக்கு மஹாபீதன், தாதகி என்று இரு புத்ரர்கள். இந்த த்வீபத்தின் நடுவில் ஐம்பதாயிரம் யோஜனை உயரமும், பரப்பும் உடைய மானஸோத்தரம் என்ற மலை இரண்டு வர்ஷங்களையும் பிரிக்குமாறு அமைந்துள்ளது. வேறு மலையோ, நதியோ இல்லை. வர்ணங்களோ, தர்மானுஷ்டானங்களோ இங்கில்லை. மக்களே தேவர்களுக்கொப்பாக வாழ்கின்றனர். புஷ்கரம் என்ற ஆலமரம் இங்குள்ளது. ப்ரஹ்மா இந்த மரத்தில் வஸிக்கிறார். இது சுத்த நீர் நிறைந்த ஸமுத்ரத்தால் சூழப்பட்டுள்ளது.

இந்த நன்னீர்க் கடலுக்கு அடுத்ததாக ஒரு ப்ராணியும் இல்லாத ஸ்வர்ணபூமி ஒன்று பத்து கோடியே பதினான்கு லக்ஷ யோஜனை அளவில் விரிந்துள்ளது. இதைத் தாண்டி லோகாலோகம் என்ற பர்வதம் பத்தாயிர யோஜனை உயரமும், பரப்பும் கொண்டுள்ளது. இதைத் தாண்டி பேரிருளும், பின் அண்டத்தின் சுவரும் உள்ளது. மொத்தமாக முதல் த்வீபத்திலிருந்து இதுவரையுள்ள இந்த பூமியின் பரப்பு ஐம்பது கோடி யோஜனை.

1 comment:

  1. மகத்தான காரியம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete