Monday, January 18, 2010

விஷ்ணு புராணம் - 40

03_02. மேல்வரும் மன்வந்த்ரங்களின் வரலாறு. ஸூர்யனுக்கும், விச்வகர்மாவின் புதல்வி ஸம்ஞ்ஞா என்பவளுக்கும் பிறந்தவர்களே ச்ராத்ததேவன் (தற்போதைய மனு), யமன், யமுனா நதி ஆகியோர். ஒரு சமயம் கணவனின் தேஜஸ்ஸைத் தாங்க முடியாத இவள் அவனுக்கு பயந்தும், அவனுக்குப் பணிவிடை செய்யவும் தன் நிழலைப் போன்ற சாயா என்பவளைப் படைத்து விட்டுக் கானகம் சென்று தவமியற்றத் தொடங்கி விட்டாள். சாயாவிற்கும், ஸூர்யனுக்கும் சனி பகவானும், இன்னொரு மனுவும், தபதி என்ற பெண்ணும் தோன்றினர்.

ஒரு சமயம் யமன் விளையாட்டாகத் தன் தாயென நினைத்து சாயாவை உதைக்க முற்பட்டான். அவள் கோபித்து உன் கால் அறுந்து விழ வேண்டும் என சபித்து விட்டாள். இதைக் கேட்டதும் ஸூர்யனும், யமனும் ஸந்தேஹமடைந்தார்கள். ஸூர்யன் நீ யமனுடைய உண்மைத் தாயில்லை. வேறொருத்தி. நீ யார் என்பதைச் சொல் என்ற கேட்க, சாயா அனைத்தையும் கூறிவிட்டாள். உடனே தன் யோகத்தால் உண்மையான ஸம்ஞ்ஞா உத்தர குரு க்ஷேத்ரத்தில் குதிரையுருவில் தவம் செய்வதையறிந்த ஸூர்யன் தானும் தன் தேஜஸ்ஸைக் குறைத்து ஆண் குதிரை வடிவில் அவளைத் தேடிச் சென்று சேர்ந்தான். அச்வினீ தேவர்களைப் பெற்றான். ரேதஸ்ஸின் கடைசிப் பகுதியினால் ரேவந்தன் என்பவனையும் பெற்றான். மீண்டும் ஸம்ஞ்ஞாவைத் தன்னிடம் அழைத்துச் சென்றான்.

தன் பெண் ஸம்ஞ்ஞா ஸூர்யனின் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் அவதிப்படுவதையறிந்த விச்வகர்மா கோபம் கொண்டு ஸூர்யனின் தேஜஸ்ஸைக் குறைக்க, அவனைப் (ஸூர்ய மண்டலத்தை)பிடித்து சாணையில் தேய்த்தான். அப்போது ஸூர்யனின் தேஜஸ்ஸில் எட்டில் ஒரு பங்கு பூமியில் மிகுந்த ஒளியுடன் தெறித்து விழுந்தது. அதைக் கொண்டு சக்ராயுதம் செய்து விஷ்ணுவிற்குக் கொடுத்தான் விச்வகர்மா. சிவனுக்கும் த்ரிசூலம் செய்து கொடுத்தான். குபேரனுக்குப் புஷ்பக விமானத்தையும், முருகனுக்கு வேலையும், மற்ற தேவர்களுக்கும் இப்படி ஆயுதங்களையும் செய்து கொடுத்தான்.

இப்படி ஸூர்யனுக்கும், சாயாதேவிக்கும் பிறந்தவனே எட்டாவது மன்வந்த்ரத்தின் அதிபதியான ஸாவர்ணி மனு. இவன் ச்ராத்த தேவனை ஒத்திருந்ததால் ஸாவர்ணி என்றழைக்கப்பட்டான். இந்த எட்டாவதான ஸாவர்ணிக மன்வந்த்ரத்தில் பாதாள லோகத்தில் வஸித்துவரும் மஹாபலி இந்த்ரன். விரஜஸ், சார்வரீவான், நிர்மோகன் முதலானோர் ஸாவர்ணிக்கு மகன்களாகி அரசாள்வர். இருபது பேர் உடைய ஸுதபர், அமிதாபர், முக்யர் என்பன தேவ கணங்கள். தீப்திமான், காலவர், ராமன், க்ருபர், அச்வத்தாமா, என் குமாரன் (வ்யாஸர்), ரிஷ்யச்ருங்கர் ஆகியோர் ஸப்தரிஷிகள். ஒன்பதாவதான தக்ஷஸாவர்ணி மனுவின் புதல்வர்கள் பஞ்சஹஸ்தன், நிராமயன், ப்ருதுச்ரவன் முதலானோர். அத்புதன் இந்த்ரன். பன்னிரண்டு பேர் கொண்ட வாரர், மரீசிகர்ப்பர், ஸுதர்மாக்கள் ஆகியோர் தேவ கணங்கள். ஸவனன், த்யுதிமான், ஹவ்யன், வஸு, மேதாதிதி, ஜ்யோதிஷ்மான், ஸத்யன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

ஸுக்ஷேத்ரன், உத்தமௌஜஸ், பூரிஷேணன் முதலான பத்து அரசர்களைப் பிள்ளைகளைப் பெறும் ப்ரஹ்மஸாவர்ணி பத்தாவது மனு. அப்போது ஸுதாமாக்கள், வீருதர்கள் என்ற நூறு பேர் கொண்ட தேவ கணத்திற்கு சாந்தி என்பவன் இந்த்ரன். ஹவிஷ்மான், ஸுக்ருதன், ஸத்யன், தபோமூர்த்தி, நாபாகன், ப்ரதிமௌஜஸ், ஸத்யகேது ஆகியோர் ஸப்தரிஷிகள். அடுத்ததான பதினோறாவது மன்வந்த்ரத்திற்கு தர்மஸாவர்ணிகர் மனு. ஸர்வத்ரகன், ஸ்வதர்மா, தேவாநீகன் முதலான அரசர்கள் அவனுடைய பிள்ளைகள். காமகமர், நிர்வாணர், ருசிகள் என்ற முப்பது பேர் கொண்ட தேவ கணங்களுக்கு வ்ருஷா என்பவன் இந்த்ரன். நிச்சரன், அக்னிதேஜஸ், வபுஷ்மான், க்ருணி, ஆருணி, ஹவிஷ்மான், அனகன் ஸப்தரிஷிகள்.

ருத்ரபுத்ரன் ருத்ரஸாவர்ணி அடுத்ததான பன்னிரண்டாவது மன்வந்த்ரத்தில் மனு. தேவவான், உபதேவன், தேவச்ரேஷ்டன் முதலானோர் இவன் புதல்வர்கள். ருதுதாமா இந்த்ரன். ஹரிதர், ரோஹிதர், ஸுமனஸ்ஸுக்கள், ஸுகர்மர், ஸுராபர் என்ற பத்து பேர்களைக் கொண்ட தேவ கணங்கள். தபஸ்வீ, ஸுதபஸ், தபோமூர்த்தி, தபோரதி, தபோத்ருதி, தபோத்யுதி, தபோதனன் என்பவர் ஸப்தரிஷிகள். ரௌச்யன் பதிமூன்றாவது மன்வந்த்ரத்தில் மனு. ஸுத்ராமர், ஸுதர்மர், ஸுகர்மர் என்று முப்பத்து மூன்று பேரைக் கொண்ட தேவ கணங்கள். திவஸ்பதி இந்த்ரன். நிர்மோகன், தத்வதர்சி, நிஷ்ப்ரகம்ப்யன், ந்ருத்ஸுகன், த்ருதிமான், அவ்யயன், ஸுதபஸ் ஸப்தரிஷிகள். சித்ரஸேனன், விசித்ரன் முதலானோர் மனுவின் பிள்ளைகள்.

பதினான்காவதான பௌம மனுவிற்கு உரு, கம்பீரபுத்தி முதலானோர் புத்ரர்கள். அப்போது சுசி என்பவன் சாக்ஷுஷர், பவித்ரர், கனிஷ்டர், ப்ராஜிதர், வாசாவ்ருத்தர் என்ற ஐந்து தேவ கணங்களுக்கு இந்த்ரன். அக்னிபாஹு, சுசி, சுக்ரன், மாகதன், ஆக்னீத்ரன், யுக்தன், ததாஜிதன் ஆகியோர் ஸப்தரிஷிகள். இப்படி பதினான்கு மன்வந்த்ரங்களின் அதிகாரிகளும் அந்தந்த மன்வந்த்ரங்களில் ஒரே ஸமயத்தில் அதிகாரங்களைப் பெற்று, அதிகாரங்களை இழக்கவும் செய்கின்றனர். இந்த பதினான்கு மன்வந்த்ரங்களும் ப்ரஹ்மாவின் பகல் பொழுது.

நான்கு யுகங்களின் முடிவில் வேதம் அத்யயனம் இன்றி அழிகின்றது. அப்போது ஸப்தரிஷிகள் ஸ்வர்கத்திலிருந்து அவதரித்து மீண்டும் அவைகளை அத்யயனம் பண்ணும்படி செய்கின்றனர். மனுக்கள் ஒவ்வொரு யுகத்தின் போது ஸ்வாயம்புவர், தக்ஷர் முதலானோர் செய்த ஸ்ம்ருதிகளைச் செய்கின்றனர். தேவர்கள் மன்வந்த்ர இறுதி வரை யாக, ஹோமங்களில் கிடைக்கும் ஹவிர்பாகங்களைப் பெற்று வாழ்கிறார்கள். மனுவின் புத்ரர்களும், அவர்களின் வம்சங்களும் அரசாள்கிறார்கள். இப்படிப் பதினான்கு மன்வந்த்ரங்கள் (ஆயிரம் யுகங்கள்) கொண்ட ஒரு கல்பமும், அடுத்த இரவுப் பொழுதான மற்றொரு கல்பமும் கழிந்ததும் விஷ்ணு உலகை தன்னுதரத்துள் விழுங்கி, பாம்பின் மேல் ப்ரளய வெள்ளத்தில் யோக நித்ரை புரிகிறார். பின் மீண்டும் ஸ்ருஷ்டியை, ஸ்திதியையும் செய்கிறான்.

க்ருத யுகத்தில் அவரே கபிலர் முதலான முனிவர்களின் உருவில் ஞானோபதேசம் செய்கிறார். த்ரேதா யுகத்தில் சக்ரவர்த்திகளாக அவதரித்து துஷ்டர்களை சிக்ஷித்தும், சிஷ்டர்களை ரக்ஷித்தும் அருள்கிறார். த்வாபரத்தில் வேதவ்யாஸராய் அவதரித்து ஒன்றான வேதத்தை ரிக், யஜுர், ஸாம, அதர்வணம் முதலான பல பிரிவுகளாகப் பிரித்து உலகைக் காக்கிறார். கலியின் இறுதியில் கல்கியாக அவதரித்து வேதங்களையும், வேத தர்மங்களையும் மீறும் துஷ்டர்களை நல்வழிப்படுத்துகிறான்.

No comments:

Post a Comment