Wednesday, January 27, 2010

விஷ்ணு புராணம் - 53

03_15. இரண்டாம் காடகத்தில் அயம் வாவய: பவதே என்பது முதலான மூன்று நசிகேத அனுவாகங்களையும், மூன்று மது ரிக்குகளையும், ப்ரஹ்மமேது மா முதலான த்ரிஸுபர்ண அனுவாகங்களையும் அத்யயனம் செய்து அதன் படி நடப்பவனும், ஆறு அங்கங்களோடு வேதாத்யயனம் செய்தவனும், வேதத்தின் பொருளை அறிந்தவனும், அதன்படி நடப்பவனும், ப்ரப்ரஹ்ம த்யானம் செய்பவனும், ஜ்யேஷ்டமென்னும் ஸாமத்தைப் பாடுபவனுமே ச்ராத்தத்தில் ப்ராஹ்மணனாக வரிக்கத் தக்கவன். இவர்கள் கிடைக்காவிடில் ரித்விக், ஸஹோதரியின் புத்ரன், தௌஹித்ரன், மாப்பிள்ளை, மாமனார், மாமா, தவம் செய்வோர், பஞ்சாக்னி உபாஸகர், சிஷ்யர், ஸம்பந்தி, பெற்றோரைப் பூஜிப்பவன் இவர்களை வரிக்கலாம்.

மித்ர த்ரோஹம் செய்தவன், பிறவியிலேயே சொத்தை நகம் உடையவன், நபும்ஸகன், இயற்கையிலேயே சொத்தையான, கரும்பற்களை உடையவன், கன்னியைக் கெடுத்தவன், காரணமின்றி வேதத்தையும் அக்னியையும் விட்டவன், ஸோம விக்ரயம் செய்தவன், பதிதன், திருடன், கோள் சொல்பவன், க்ராமத்திற்காகக் கூலி வாங்கிக் கொண்டு யாகம் செய்பவன், கூலிக்கு வேதம் ஓதுபவன், கூலிக்கு வேதம் ஓதுவிப்பவன், விதவையை மணந்தவன், பெற்றோரை விட்டவன், சூத்ர ஸ்த்ரீயின் குழந்தைகளை வளர்ப்பவன், சூத்ர ஸ்த்ரீயை மணந்தவன், தேவதைகளைப் பூஜிப்பதால் பிழைப்பு நடத்துபவன் (குருக்கள், மாந்த்ரீகன், பட்டர் முதலானோர்) இவர்களை ச்ராத்தத்தில் ப்ராஹ்மணனாக வரிக்கக் கூடாது.

கர்த்தா முதல் நாளே தகுதியுள்ளவர்களை தேவ, பித்ருக்களுக்கு வரித்து சிறிது நேரம் பொறுத்திருக்குமாறு ப்ரார்த்திக்க வேண்டும். இதற்குப் பின் இருவரும் கோபத்தையும், ஸ்த்ரீ போகத்தையும், களைப்பையும் தவிர்க்க வேண்டும். ஸ்தீரீ போகம் கொண்டால் தங்களின் பித்ருக்களை ரேதஸ்ஸின் குழியில் தள்ளிய பாபத்தைச் செய்தவர்கள் ஆகிறார்கள். இந்த்ரிய நிக்ரஹம் செய்த யதிகள் ச்ராத்தத்தன்று தற்செய்லாக கர்த்தாவின் க்ருஹத்திற்கு வந்தால் அவர்களை நிமந்த்ரணம் (வரித்தல்) செய்ய ப்ரார்த்திக்க வேண்டும். இப்படி க்ருஹத்திற்கு வந்த ப்ராஹ்மணர்களை கால் அலம்ப நீர் கொடுத்து, உபசரித்து, ஆசனம் தந்து போஜனம் செய்விக்க வேண்டும். பித்ருக்கள் ஸ்தானத்தில் ஒற்றையாகவும், தேவர்கள் ஸ்தானத்தில் இரட்டையாகவும் அல்லது இரண்டிலும் ஒவ்வொருவராகவும் வரிக்கலாம்.

பித்ரு வர்க்கத்தைச் சேர்ந்த தேவர்களின் ஸ்தானத்தில் வரிக்கப்பட்டவர்களை கிழக்கு முகமாகவும், பித்ருக்களாக வரிக்கப்பட்டவர்களை வடக்கு முகமாகவும் போஜனம் செய்விக்க வேண்டும். இவர்களுக்கு தனித்தனியே அல்லது சேர்த்தே ச்ராத்தமும், பாகமும் செய்யலாம் என்பது ரிஷிகளின் அபிப்ராயம். தேவஸ்தானத்தில் வரிக்கப்பட்டவர்களுக்கு ஆஸனத்திற்காக தர்ப்பைகளைக் கொடுத்து, அர்ச்சித்து அர்க்யம் கொடுத்து அவர்கள் அனுக்ஞையுடன் தேவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். யவ உதகத்தால் அர்க்யம் கொடுத்து, புஷ்பம், சந்தனம், தூப, தீபங்களால் உபசரிக்க வேண்டும். இப்படியே பித்ருக்களுக்கு அப்ரதக்ஷிணமாக அனைத்தையும் செய்ய வேண்டும். அனுமதி பெற்று தர்ப்பங்களை இரட்டிப்பாகத் தர வேண்டும். தில உதகத்தால் அர்க்யம் தர வேண்டும்.

இந்த சமயத்தில் அன்னத்தை விரும்பி அதிதிகள், ப்ராஹ்மணர்கள் யாரேனும் வந்தால் வரித்தவர்களின் அனுமதியோடு அவர்களுக்கும் போஜனம் செய்விக்க வேண்டும். அர்ச்சிக்கப்படாத அதிதி ச்ராத்த பலனை அழித்து விடுகிறான். பின் பக்வம் செய்த காய், உப்பு காரம் கலக்காத அன்னம் இவைகளை வரித்தவர்களின் அனுமதியோடு அக்னி, ஸோமன், யமன் இவர்களுக்காக மூன்று முறை ஆஹுதி செய்ய வேண்டும். அதில் மிகுந்த அன்னத்தில் ஒரு பாகத்தை வரித்தவர்களின் இலையில் பரிமாற வேண்டும். ப்ராஹ்மண போஜனத்திற்கு செய்த அன்னம் நன்கு பக்வம் செய்யப்பட்டு, ருசியோடு, இஷ்டமானதாக, நிறைய, கர்த்தா இன்சொல்லோடு, அவசரமின்றி, கோபமின்றி இருக்க வேண்டும். ப்ராஹ்மணர்களும் இசைந்து, பேசாமல், மலர்ச்சியோடு உண்ண வேண்டும்.

உண்ணும் போது ரக்ஷோக்த மந்த்ரங்களைப் படித்து, பூமியில் எள் பரப்பி, அந்த ப்ராஹ்மணர்களையே தன் பித்ருக்களாக பாவிக்க வேண்டும். பூஜிக்க வேண்டும். உண்டபின் பூமியில் விகிராந்தம் இட வேண்டும். அவர்கள் கை, கால்கள் சுத்தி செய்து ஆசமனம் செய்ய தனித்தனியே தீர்த்தம் தர வேண்டும். அவர்கள் அனுமதியோடு பின்னே அன்ன பிண்டங்களை எள்ளோடும், சாகத்தோடும் தர வேண்டும். திலோதகத்தை பித்ரு தீர்த்தத்தால் தர வேண்டும். ப்ராஹ்மணர்கள் உண்ட பாத்ரங்களுக்குப் பக்கமாக தெற்கு நுனியாகப் பரப்பிய தர்ப்பைகளில் அர்ச்சித்த பிண்டத்தை முதலில் பிதா, பின், பிதாமஹர், பின் ப்ரபிதாமஹர் எனத் தரவேண்டும். தர்ப்பைகளின் அடியில் நாலாமவரான பித்ருக்கள் முதலானோருக்கு பாத்ரங்கள், தர்வியில் ஒட்டியிருப்பதைத் துடைத்துக் கொடுத்தல் முதலானவைகளால் த்ருப்தி செய்ய வேண்டும்.

பின் இப்படியே மாத்ரு வர்க்கத்தார்க்கும் செய்ய வேண்டும். பின் பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் தக்ஷிணை செய்து, ஆசி பெற்று, விஸர்ஜனம் செய்ய வேண்டும். அர்ச்சிக்கும் போது முதலில் தேவர்கள், பித்ரு வர்க்கம், மாதாமஹ வர்க்கம் எனச் செய்து விஸர்ஜனத்தில் பித்ருக்கள், மாதாமஹர், விச்வேதேவர்கள் எனச் செய்ய வேண்டும். ப்ராஹ்மணர்கள் செல்லும் போது நன்கு உபசரித்து, வாசல் வரை சென்று, விடை பெற்று உள்ளே வரவேண்டும். பின் வைச்வதேவம் செய்து, அனைவருடன் சேர்ந்து புஜிக்க வேண்டும். தௌஹித்ரன், குதபகாலம் (தினத்தின் எட்டாவது முஹூர்த்தம், பதினான்கு நாழிகைக்கு மேல், பதினாறு நாழிகைக்குள்), எள் இவை மூன்றும் ச்ராத்தத்திற்குச் சிறந்தது. எனவே கோபம், அவஸரம் இவைகளை விடுத்து பித்ரு, மாதாமஹ ச்ராத்தங்களைச் செய்பவனை விச்வேதேவர்கள், பித்ருக்கள் யாவரும் வ்ருத்தி செய்கின்றனர். பித்ருக்களின் கனம் சந்த்ரனை ஆதாரமாய்க் கொண்டது. சந்த்ரன் யோகத்தை ஆதாரமாய்க் கொண்டவன். எனவே யோகியை உபசரித்தால் அனைவரும் மகிழ்வார்.

No comments:

Post a Comment