Wednesday, February 24, 2010

விஷ்ணு புராணம் - 102

05_22. கம்ஸனின் மாமனார் ஜராஸந்தன் மகத தேசத்து அரசன். அவனது பெண்களான அஸ்தி, ப்ராஸ்தி இருவரையும் கம்ஸன் மணந்திருந்தான். தன் மருமகன் கம்ஸன் கொல்லப்பட்டதை அறிந்த இவன் கண்ணன் மீது கடுங்கோபங்கொண்டு அவனையும், மற்ற யாதவர்களையும் அழிக்க முற்பட்டான். இருபத்து மூன்று அக்ஷௌஹிணீ ஸேனையுடன் அவன் வருவதையறிந்த ராம, க்ருஷ்ணர்கள் தங்கள் பலத்தையே நம்பி, ஒர் சிறு படையோடு மதுரைக்கு வெளியே யுத்தத்திற்குத் தயாராக வந்தனர். எடுக்க, எடுக்கக் குறையாத இரு அம்பறாத் தூணிகளும், சார்ங்கமும், கௌமோதகியும்(கதை), அதேபோல் கலப்பையும், உலக்கையும் க்ருஷ்ணனுக்கும், ராமனுக்கும் நினைத்த மாத்ரத்தில் வானிலிருந்து வந்து சேர்ந்தன. பழைய திவ்யாஸ்த்ரங்களான இவைகளைக் கொண்டு ஜராஸந்தனின் படைகளை அழித்து, அவனை விரட்டி விட்டு, வெற்றியோடு மதுரைக்குள் புகுந்தனர் இருவரும்.

ஆனால், ஜராஸந்தன் மட்டும் உயிரோடு தப்பி ஓடிவிட்டதால், க்ருஷ்ணன் இதைக் கொண்டாடவில்லை. ஜராஸந்தனே வென்றதாக நினைத்தான். அவ்வாறே அவனும் சில நாளில் மீண்டும் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, மதுரை மீது படையெடுத்தான். இப்படிப் பதினெட்டு முறை மதுரை மீது படையெடுத்து, ஒவ்வொரு முறையும் ராம, க்ருஷ்ணர்கள் தலைமையிலான யாதவர்களிடம் தோற்றோடினான் ஜராஸந்தன். சக்ரதாரியான விஷ்ணுவின் அம்சம் தங்களிடம் இருப்பதனாலேயே போர் முறை எதுவும் அறியாத யாதவர்களும் பெரும் பலம் பொருந்திய ஜராஸந்தனை வென்று கொண்டிருக்கின்றனர். தன் ஸங்கல்பம் ஒன்றாலேயே எதையும் உண்டாக்கவும், அழிக்கவும் வல்லமை கொண்ட அவன் மனிதர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணப்படியே ஸாம, தான, பேத, தண்ட என்ற முறையில் ஒவ்வொரு இடத்திலும் நடந்து கொள்கிறான். சில இடங்களில் பகைவர்களைக் கண்டு பயந்து ஒளிந்து கொள்ளவும் செய்கிறான். இதெல்லாம் மனிதர்களைப் போல நடந்து கொள்ளும் அவனது லீலைகளே.

No comments:

Post a Comment