Monday, February 1, 2010

விஷ்ணு புராணம் - 67

04_11. யயாதியின் மூத்த மகன் யதுவின் வம்சத்தைப் பற்றிக் கூறுகிறார் மஹரிஷி. இந்த வம்சத்தில் தான் அனைவராலும் அனைத்துப் பலன்களையும் கேட்டுத் துதிக்கப்படும் மஹாவிஷ்ணு அவதரித்தார். பரம பாவனமான இந்த வம்சத்தைக் கேட்பவர்கள் பாவங்களிலிருந்து விடுபடுகின்றனர். யதுவின் புத்ரர்கள் ஸஹஸ்ரஜித், க்ரோஷ்டு, நளன், நஹுஷன் என்ற நால்வர். ஸஹஸ்ரஜித்துக்கு சதஜித்தும், அவனுக்கு ஹைஹயன், ஹேஹயன், வேணுஹயன் என்ற மூன்று புதல்வர்கள். ஹைஹனுக்குத் தர்மனும், அவனுக்குத் தர்மேந்த்ரனும், அவனுக்குக் குந்தி என்பவனும், அவனுக்கு ஸஹஜித் என்பவனும், அவனுக்கு மாஹிஷ்மதீ நகரை நிர்மாணித்த மஹிஷ்மானும், அவனுக்கு பத்ரச்ரேண்யனும், அவனுக்கு துர்தமனும், அவனுக்குத் தனகனும், அவனுக்கு க்ருதவீர்யன், க்ருதாக்னி, க்ருததர்மன், க்ருதௌஜஸ் என்ற நால்வரும் பிறந்தனர்.

இந்த க்ருதவீர்யனுக்குப் பிறந்த அர்ஜுனன் ஆயிரம் கைகளுடன், ஏழு த்வீபங்களுக்கும் அதிபதியாக விளங்கினான். அத்ரி மஹரிஷியின் குலத்துதித்த தத்தாத்ரேயரைத் துதித்து ஆயிரம் கைகள், அதர்மத்தில் இஷ்டமில்லாமை, ஸ்வதர்மப் பற்று, யுத்த வெற்றி, தர்ம ஆட்சி, அனைத்துலகங்களிலும் புகழ் பெற்றவனிடமிருந்து மரணம் எனப் பல வரங்களைப் பெற்றிருந்தான். பத்தாயிரம் யாகங்களைச் செய்து, தானம், தவம், பணிவு, கேள்வி, அறிவு என்று எதிலும் எவரும் தனக்கு ஈடின்றி அனைத்துலகிலும் நல்லாட்சி புரிந்தான். ராஜா என்ற சொல் அப்போது வேறெவரையும் குறிக்காது இவனுக்கு உரித்ததாக இருந்தது. எவரும் தன் பொருளை இழந்ததில்லை இவன் காலத்தில். ஆரோக்யம், செல்வம், யோகம், பலம், வீர்யங்களுடன் எண்பத்தையாயிர வருஷ காலம் இவன் அரசாண்டான்.

ஒரு ஸமயம் மாஹீஷ்மதியில் நர்மதையில் மனைவிகளோடும், மதுவோடும் களித்திருந்த போது தேவ, தைத்ய, கந்தர்வர்களை வென்றிருந்த ராவணன் திக் விஜயமாக அங்கு வந்து இவனோடு யுத்தம் புரிந்தான். அவனை விளையாட்டாகச் சிறையிலிட்டான் இந்த கார்த்தவீர்யார்ஜுனன். இவன் விடுவிக்கும் வரை சிறையிலேயே வருந்தினான் ராவணேச்வரன். இறுதியில் பரசுராமரால் கொல்லப்பட்ட இவனுக்கு சூரன், சூரஸேனன், வ்ருஷஸேனன், மது, ஜயத்வஜன் என்பவர் முதலாக நூறு புத்ரர்கள். ஜயத்வஜனுக்குத் தாளஜங்கன் என்பவனும், அவனுக்கு வீதிஹோத்ரன், பரதன் முதலான தாளஜங்கர் என்ற நூறு பிள்ளைகளும் பிறந்தனர். பரதனுக்கு வ்ருஷனும், அவனுக்கு மதுவும், அவனுக்கு வ்ருஷ்ணியும் பிறந்தனர். இவனாலேயே இந்தக் குலத்தவர்க்கு வ்ருஷ்ணிகள் என்ற பெயர் வந்தது. மதுவின் வம்சம் என்பதால் மதுக்கள் என்றும், யதுவின் வம்சத்தவர் என்பதால் யாதவர் என்ற பெயரும் வந்தது.

No comments:

Post a Comment