Wednesday, February 3, 2010

விஷ்ணு புராணம் - 74

04_18. சர்மிஷ்டைக்குப் பிறந்த யயாதியின் நான்காம் புத்ரன் அனுவிற்கு ஸபாநலன், சக்ஷு, பரமேஷு என்ற மூன்று பிள்ளைகள். ஸபாநலன், காலாநலன், ஸ்ருஞ்ஜயன், புரஞ்ஜயன், ஜனமேஜயன், மஹாசாலன், மஹாமனஸ் என இவன் வம்சம் வளர்ந்தது. மஹாமனஸுக்கு உசீநரன், திதிக்ஷு என்ற இருவரும், இதில் உசீநரனுக்கு சிபி, ந்ருகன், நவன், க்ருமி, வர்மன் என்ற ஐவரும், சிபிக்கு ப்ருஷதர்பன், ஸுவீரன், கேகயன், மத்ரகன் நால்வரும் பிறந்தனர். திதிக்ஷுவுக்கு உசத்ரதனும், அவனுக்கு ஹேமனும், அவனுக்கு ஸுதபஸ்ஸும், அவனுக்குப் பலியும் பிறந்தனர். இவன் மனைவியினிடமே தீர்க்கதமஸ் என்ற மஹரிஷி அங்கன், வங்கன், களிங்கன், ஸுஹ்மன், பௌண்ட்ரன் என்ற ஐவரை உண்டாக்கினார். இவர்கள் தங்கள் பெயரிலேயே ராஜ்யங்களை ஆண்டனர்.

அங்கன், அணபானன், திவிரதன், தர்மரதன், சித்ரரதன்(ரோமபாதன்), சதுரங்கன், ப்ருதுலாக்ஷன், சம்பன், ஹர்யங்கன், பத்ரரதன், ப்ருஹத்ரதன், ப்ருஹத்கர்மா, ப்ருஹத்பானு, ப்ருஹன்மனஸ், ஜயத்ரதன், விஜயன், த்ருதி, த்ருதவ்ரதன், ஸத்யகர்மா, அதிரதன், கர்ணன், வஸுஷேணன் என அங்க வம்சம் வளர்ந்தது. இதில் ஒருவனான ரோமபாதனுக்கு(சித்ரரதன்) அஜனின் புத்ரனான தசரதன் நண்பன். எனவே குழந்தைப்பேறு இல்லாமல் வெகுகாலம் ரோமபாதன் இருந்த போது தசரதன் தன் பெண்ணான சாந்தாவை இவனுக்குப் பெண்ணாகத் தந்தான். அதேபோல் சம்பன் என்பவன் சம்பா என்ற நகரை நிர்மாணித்தவன்.

இந்த வம்சத்தில் ஒருவனான ஜயத்ரதன் ப்ராஹ்மணப் பெண்ணுக்கும், க்ஷத்ரியனுக்கும் பிறந்த ஒரு பெண்ணையே மணந்தான். ஒரு பெண் தன்னை விட மேல் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் அனுலோம ஜாதி என்றும், ஒரு பெண் தன்னை விட கீழ் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் ப்ரதிலோம ஜாதி என்றும் அழைக்கப்படும். இந்த விதத்தில் ஜயத்ரதன் மணந்த பெண் ப்ரதிலோம ஜாதியின் பிரிவான ஸூத (தேரோட்டி) ஜாதியைச் சேர்ந்தவள். இதனால் ஜயத்ரதன் வரை க்ஷத்ரிய ஜாதியாக இருந்த இந்த வம்சம், விஜயன் முதல் ஸூத ஜாதியானது. இந்த ஸூத ஜாதியைச் சேர்ந்த அதிரதன் தான் கன்னிகையாக இருந்த குந்திக்கு ஸூர்யனின் அனுக்ரஹத்தாலும், துர்வாஸரிடம் பெற்ற மந்த்ரஸித்தியாலும் பிறந்து, அவளால் கைவிடப்பட்ட கர்ணனைக் கங்கைக் கரையில் ஓர் கூடையில் கண்டெடுத்து தன் பிள்ளையாக வளர்த்தவன்.

No comments:

Post a Comment